Sunday, August 16, 2009

.......மலர் ஜாடையில் சிரிக்கும்......

பேட்டையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின். இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது. 1964 என்று நினைவு. உண்மையிலே பிரம்மாண்டமான ஊர்வலம். ஜங்ஷனிலிருந்து தொடங்கி டவுண் வழியாக பேட்டை செல்ல வேண்டும். ஊர்வலத்தில் ரெட்டை மாட்டு வண்டியில் தான், டேப்லோக்கள்(tableau) எல்லாம். மூட்டை தூக்குகிற, லாரி லோடு மேன் மாக்கான், ஆள் உயரமும் சதையும், உழைத்துக் கறுத்த உடம்புமாய், திண்ணென்று இருப்பார். அவர்தான் இந்தி அரக்கி, வேடம் போட்டிருந்தார்.ஒரு மாட்டு வண்டியில் அவர் ஒரு மாணவனின் கழுத்தை நெறிப்பது போல் போஸ் கொடுத்த படியே நின்றார்.இளைஞர் காங்கிரஸ் என்று ஒரு வண்டி,அதில் நாலைந்து பொக்கை வாய் ஆட்கள் அமர்ந்து வெறும் வாயை மென்ற படி வந்தார்கள்.இரண்டுக்கும்தான் அதிக வரவேற்பு இருந்தது.மாக்கனுக்கு மாநாட்டில் அண்ணா, ஒரு மோதிரம் போட்டார். ஏகப்பட்ட மாணவர்கள் ஊர்வலத்தில் ஜங்ஷனிலிருந்து வந்தோம். பெரிய கோபால் அன்று ரத்னா தியேட்டரில் ஞாயிறு காலைக் காட்சியில், MYSTERIOUS ISLAND என்று ஒரு படம் போட்டிருந்தார்கள். அதற்குப் போய்விட்டான்.அது நல்ல படம் என்று சனிக்கிழமை மதியக் காட்சி பார்த்தவர்கள் சொன்னதாகச் சொல்லியிருந்தான். ரத்னா, பார்வதியில் சனிக்கிழமை, மதியமும் ஞாயிறு காலையும், ஆங்கில இந்திப் படங்கள் போடுவார்கள்.குறைந்த கட்டணம்.தரை டிக்கெட் பதினெட்டு பைசா. படம் பாதி நடந்து கொண்டிருக்கும் போது, ஊர்வலம் தியேட்டரை தாண்டியது.ஊர்வலத்தில் இப்போது நல்ல கூட்டம் சேர்ந்திருந்தது.
என் கையில் வைத்திருந்த தி.மு.க கொடியை,புதிதாய் ஊர்வலத்தில் சேர்ந்திருந்த ஸ்ரீபுரம் மரக்கடை நாடார் பையன் வாங்கிக் கொண்டான். அவன் அப்பாவுக்கு தெரிந்தால் வீட்டில் நடையேற்ற மாட்டார்.ஏதொ உற்சாக மிகுதியில், அவன் வீட்டை கடக்கும் போது ஊர்வலத்தோடு இணைந்து கொண்டான்.அவன் என்னை விட ஒரு கிளாஸ் முந்திப் படித்தான்.பெயர் மறந்து விட்டது அவன் அண்ணன் பெயர் ஜவஹரோ, போஸோ என்று நினைவு. தியேட்டரை விட்டு எல்லோரும் வெளியே வந்து வேடிக்கை பர்க்க நின்று கொண்டிருந்தார்கள்.படத்தை நிறுத்தி விட்டார்கள், மெயின் கேட் மட்டும் அடைத்திருந்தது அதுவரை பார்வையாளர்களோ வீடுகளோ இல்லாத நிழலான நெடுஞ்சாலையில் சற்று சோர்வாய், அவ்வளவாய்க் கோஷங்கள் போடாமல் வந்து கொண்டிருந்தது. .தியேட்டர் முன்புறம் வரும் போது, ஆதிக்க இந்தி ஒழிக, அன்னைத் தமிழ் வாழ்க,விரட்டுவோம் விரட்டுவோம் இந்தி அரக்கியை விரட்டுவோம். வேண்டவே வேண்டாம் இந்தி வேண்டாம்.பிடிக்காதே பிடிக்காதே இந்திக்கு வால் பிடிக்காதே, பார்வையாளர் கூட்டம் கண்ணில் பட்டதும், இயல்பாக ஊர்வலத்தின் சத்தம் திடீரெனக் கூடியது.நாங்கள் கொஞ்சப் பேர் இந்தி வெறியன் சேத் கோவிந்த தாஸ் ஒழிக என்று கோஷமிட்டுக் கொண்டு வந்தோம்.
தியேட்டர் உள்ளிருந்து சிலர் சுவரேறிக் குதித்து ஊர்வலத்தில் சேர்ந்தது கொண்டனர். ஒரு சின்ன பரபரப்பு ஏற்பட்டது. அதே போல் சிலர் வெளியிலிருந்து உள்ளேயும் குதித்தனர். பெரிய கோபால் , படம் பிரமாதமா இருக்கு உள்ள குதிச்சுருலெ என்றான். நான் யோசனை செய்வதற்குள் தியேட்டரில் சமயோசிதமாக பெல் அடித்து விட்டார்கள்.கோபால் உள்ளே ஓடிவிட்டான்.அதே போல் அநேகமாய் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்,நிறையப் பேர் உள்ளே ஓடினர். நான் தொடர்ந்து ஊர்வலத்தில். ஊர்வலம் செல்லும் வழியான பேட்டை ரோட்டில் எங்கள் தெரு சேருமிடத்தில் சாலைக்கு ஊடாக ஒரு நீளத் தட்டியில் மஞ்சள் செவ்வந்திப் பூ ஒட்டி, நடுவில் கருப்பு- சிவப்பில் முக்கிய செவ்வந்திப் பூவில் `தமிழ் வாழ்க’ என்று எழுதிக் கட்டியிருந்தோம்.



முத்துக் குமாருப்பிள்ளை பூக்கடையில் சொல்லித்தான் செய்தது. எங்கள் ஆர்வம் காரணமாக ராத்திரிப் பூராவும் அவரது பூக்கூட வீட்டில் போய் நாங்களும் கூட மாட ஒத்தாசை செய்வதாக கொஞ்ச நேரம் ஒட்டிக் கொண்டிருந்தோம்.. அவர்கள் வீட்டில் பூ, அம்பாரமாய் குவிந்து கிடந்தது.ஏதோ கல்யாணத்துக்கோ கோயிலுக்கோ பூ கட்டுகிறாகள்,
எனக்கு அமுதவல்லி சினிமா திடீரென நினைவு வந்தது... அதில், பூ பறித்துக் கொண்டிருக்கும் போது வரும், ஜோடிப் பாம்புகளில் ஆண் பாம்பை, டி ஆர். மகாலிங்கத்தின் அப்பா கொன்று விட, உன் மகனுக்கு திருமணம் ஆனதும் அவன் பாம்பு கடித்து இறந்து விடுவான் என்று சாபமிட்டு விட்டு மறைந்து விடும் பெண்பாம்பு. ஜூபிடரின் படம்.(அநேகமாய் கடைசிப் படம்). ஆர்ட் டைரெக்டர் ஏ.கே. சேகர் தான் இயக்குநர்.ஜி.ராமனாதன் இசையமைப்பு. அது கே.வி.மஹாதேவன் , விஸ்வநாதன்- ராமமூர்த்தி காலம். .ஆனாலும் ஜி ராமனாதனின் இசையில்,கண்ணிரண்டும் ஒன்றையொன்று காண முடியுமா, கொண்ட கடமையிலே காதல் இன்பம் நாட முடியுமா என்று ஒரு பாட்டும். ஆடை கட்டி வந்த நிலவோ பாடலும், சிலோன் ரேடியோவில் அடிக்கடி போடுவார்கள்.டி ஆர் மகாலிஙகமும், நாககன்னிகையாக வரும் தாம்பரம் லலிதாவும், ஆடிப் பாடுகிற பாடல்.(எம்.என் ராஜம் கதாநாயகி).சத்தியவான் சாவித்ரி மாதிரி கதை.
குளிரோடையில் மிதக்கும்
மலர் ஜாடையில் சிரிக்கும்-இவள்
காடு விட்டு வந்த மயிலோ-நெஞ்சில்
கூடு கட்டி வாழும் குயிலோ..... (வேகமான டியூன், பக்காவான வெஸ்டெர்ன் இசை,சுசீலாவின் அற்புதமான ஹம்மிங், துள்ளலான பாடல் வரிகள்.வருடம் ஐம்பது ஆனாலும் காலத்தையும் நினைவையும் காவல் காக்கும் பாட்டு)

ஏனோ அந்தப் பூவிற்குள்ளிருந்து ஒரு குட்டிப் பாம்பு வந்து விடுமென்று தோன்றியது...அதைப் பற்றி வேடிக்கையாய்ப் பேசுவதை அங்கே பூ கட்டும் பெண்கள் வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது அங்கு பூ கட்டும் அவரது வீட்டு பெண்களுக்கு பெருத்த இடைஞ்சலாயிருந்தது என்று நினத்தாரோ என்னவோ, முத்துக் குமாருப்பிள்ளை, என்ன சொல்லறது எல்லாம் பெரிய வீட்டுப் புள்ளைகளால்லா இருக்கு, ஏய், போங்கப்பா சோலிக்கு எடைஞ்சலா இருக்குல்லா என்ற பின்னரே நாங்கள் வந்தோம்.தெருவுக்கு வந்ததும் பேச்சு பாம்பைப் பற்றி மாறி, அது மண்ணுள்ளிப் பாம்பாக மாறி, வேறேங்கோ திசை மாறியது.
மிஸ்டீரியஸ் ஐலண்டைப் பற்றி பெரிய கோபால் பிரமாதமாகச் சொன்னான்.பிரமாதமான படம்ப்பா, விட்டுட்டியே என்று. இரண்டு மூன்று வாரங்கள் கழித்து, ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க மறுபடி ரத்னாவிலேயே போட்டார்கள். முதல் வேலையாகப் போய்விட்டேன்.படம் உண்மையிலேயே நன்றாயிருந்தது.ராட்சஸ நண்டு, ராட்சஸ தேனி,போன்ற மிருகங்கள் உள்ள ஒரு தீவில், சிறையிலிருந்து பலூனில் தப்பிப் போய் மாட்டிகொள்ளுகிறார்கள். வழக்கமான கதை தான். கதாநயகன், கதாநாயகி இரண்டு துணை நடிகர்கள்,(அதில் ஒருத்தன் இடையிலேயே பரிதாபமாகச் செத்துப் போகிற கதை தான்.) கடலில் மூழ்கிக் கிடக்கும் ஒரு பழைய கப்பலுக்குள் பலூனை, நுழைத்து,காற்றடைத்து அதை வெளியே கொண்டு வந்து, எரிமலை வெடித்துச் சிதறுகிற கடைசி நொடியில் எல்லாரும் தப்பி, ஊர் சேர, சுபம் போடுவதற்குப் பதிலாக ஆழமான முத்ததுடன் படம் முடியும். இதே மாதிரி ஜேசன் அண்ட் தி அர்கோநாட்ஸ் என்று ஒரு படம். கிரேக்க புராணக் கதை, நான் முதலில் பார்த்து விட்டு லாலா மணிக்குச் சொன்னேன்.இரண்டாம் முறையாக அவனுடன் அதைப் பார்த்தேன்.
இந்த காலை காட்சிகளுக்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும்.எம்.ஏ.சார்வா என்கிற அருணாசல சார், எனக்கும் எங்கள் வீட்டுக்கும் நெருங்கின கனிவான மனிதர்.அத்தான் முறை, அவர் காலைக் காட்சியில் நல்ல படங்கள் பார்க்க வருவார். தமிழ் வாணனின் தீவிர ரசிகர். தமிழ் வாணனின் அவ்வளவு தொடர் கதைகளையும் அழகாக பைண்ட் செய்து வைத்திருப்பார்.தமிழ்வாணன் போலவே கருப்புக் கண்ணாடி அணிந்து புகைப்படம் எடுத்து வீட்டில் மாட்டியிருக்கும்.நிறைய பேர் இப்படி படம் எடுப்பது அப்போது ஒரு ஃபேஷன். ஏப்ரல் மாதம் வந்து விட்டால் போதும் கல்கண்டு பத்திரிக்கையில், தமிழ்வாணனை கழுதை போலோ குரங்கு போலோ கர்ர்ட்டூன் வரைந்து ரசிகர்கள் அனுப்புகிற `ஏப்ரல் ஃபூல்’ படங்களைப் போடுவார்.வித்தியாசமாக் இருக்கும்.வண்ணதாசனின் அண்ணன் கணபதி அருமையாய் படம் வரைவார், அவர் அனுப்பிய படம் ஒன்று கல்கண்டில் வந்திருந்தது., அதைப் பற்றி, எம்.ஏ சார் அத்தான், கேட்டார்கள், இது யாருப்பா, சிவசங்கரண்ணாச்சி மகனா, என்று. ஆமா என்றேன்,நானும் வரைஞ்சு அனுப்பியிருக்கென் என்றேன். சிரித்துக் கொண்டார்கள். அன்றுதான் நான் ரொம்ப நாளாகக் கேட்டு, தராமலே இருந்த துப்பாக்கி முனையில் பைண்ட் வால்யூமை தந்தார்கள்.அதுவரை சங்கர்லால் , கத்திரிக்காய், கமிஷனர் வகாப் வருகிற புத்தககங்கள் மட்டுமே தருவார். துப்பாக்கி முனையில் உண்மையிலேயே அருமையான துப்பறியும் நாவல்.(இப்போது ஜெயமோகன் எழுதுகிற கன்னி நிலம் படிக்கையில் ஏனோ அது நினைவுக்கு வருகிறது.)
காலைக் காட்சிக்கு இன்னும் சில 377-வது பிரிவுக் கிழவர்கள்/ஆட்கள் யாரையாவது அகப்பட்ட பையனைத் தள்ளிக் கொண்டு வருவார்கள்.அது அநேகமாக இனக் கவர்ச்சி கொப்பளிக்கிற படங்களாய் இருக்கும். இவர்கள் அநேகமா உயர் வகுப்பு டிக்கெட் போய் விடுவார்கள். அங்கே மூட்டைப் பூச்சியும் இவர்களும் தான் இருப்பார்கள்,வசதியாக அறுக்கலாம். இது அவர்களின் பரி பாஷை. தொண்டர் சன்னதி முக்கில் ஒரு கமிஷன் மண்டிக் காரர், அவரைக் கண்டாலே,பசங்க எவ்வளவு வீரமானவனா இருந்தாலும் ஓடிருவாங்க, பாலுன்னு ஒரு அண்ணன், அவன் ஒரு தசராவுக்கு சப்பரம் பாத்துகிட்டு இருக்கும் போது, கூட்டத்தோட கூட்டமா, யாரோ தொடையத் தடவிருக்காங்க கொஞ்ச நேரம் சும்மா இருந்துட்டானாம், கை வேகமா முன்னேறினதும் தான்,பின்னால பாத்துருக்கான், கமிஷன் கடை. சாமியும் வேண்டாம் சப்பரமும் வேண்டாம்ன்னு ஓடியே வந்துட்டான். இவ்வளவுக்கும் அண்ணனுக்கு கல்யாணம் ஆகிட்டு.

கூட்டமெல்லாம். பூமி டிக்கெட்டுக்குத் தான் இருக்கும். பூமி டிக்கெட்டில் படம் பார்க்க வருகிற விஸ்வநாத தாத்தா முதலில் செய்கிற காரியம் மேனேஜர் ரூமுக்குப் போய் படப் பெட்டியுடன், படத்தைப் பற்றி வருகிற சைனாப்சிஸ் கேட்டு வாங்கிப் படிக்கிறதுதான்.அவர் சொல்லித்தான் அப்படியொரு சமாசாரமே தெரியும்.GUNS OF BLACK WITCH என்றொரு படம். ஏல பேரப்புள்ள இதாம்ல உங்க ஆயிரத்தில் ஒருவன் படம் என்றார் அவர் கூட்டுறவு அதிகாரியாய் இருந்து ஓய்வு பெற்றவர்.இப்போதும் திருநெல்வேலி நகர கோஆப்பரேடிவ் அர்பன் பாங்கில் ஏஜண்டாக இருக்கிறார். அழகான எட்டுமுழ மல் வேஷ்டியும் வெள்ளைச் சட்டையும் நைஸ் துணியில் வல்லாட்டும் போட்டுக் கொண்டு வருவார்.ஆனாலும் தரை டிக்கெட்டுக்குத் தான் வருவார்.ஏல நாம பூமியிலதானலெ இருக்கோம்,அப்புறம் பூமி டிக்கெட் போறது என்ன தப்பு என்பார்.அவர் தான் பூமி டிக்கெட் என்கிற வார்த்தையை முதலில் சொல்லிக் கொடுத்தவர்.I CONFESS.என்றொரு ஹிச்காக் படம், அநேகமா இதுதாம்ல்லெ எம்சியாரு நடிக்கிற பரம பிதாவா இருக்கணும் என்றார். படகோட்டி படத்தை அடுத்து,சரவணா பிலிம்ஸ் வேலுமணி தயாரிப்பதாக அறிவித்த படம் மேக் அப் டெஸ்ட்டோட சரி,படம் வரவே இல்லை.எடுக்கவே இல்லை.நாங்கள் ரொம்ப ஆசையா இருந்தோம்.
கடைசியில் பார்த்தால் விசு தாத்தா எங்க மங்களா வீட்டுக்கெ குடி வந்துட்டார்.அப்பாவுக்கு அவர் வந்தது பற்றி சந்தோஷம். அந்த பேங்க்கில் ஈசியா கடன் வாங்கலாமே.அவருக்கு பொங்கிப் போட ஸ்ரீவைகுண்டம் பக்கமிருந்து அவருக்கு உறவினர் ஒரு அம்மா வந்தார்கள். அவர்களும் மூன்று பிள்ளைகளும்.இரண்டு பையன்கள். ஒருவன் என்னை விட ரெண்டு மூத்தவன், திருவடி,அடுத்து, செல்லப்பா என்னை விட ரெண்டு வயது சின்னவன்.இன்னொரு பெண். ஏழு எட்டு வயதிருக்கும்.அவரது கணவர், கருங்குளமோ, சிவகளையோ, ஒரு கிராமக் கணக்குப் பிள்ளை. அவர் வாராவாரம் ஞாயிறு மட்டும் வருவார்.ரொம்ப கலகலப்பான ஆள்.
தார்சாலில் வந்து, காலையில் உட்கார்ந்து கொள்ளுவார்.பெர்க்லி சிகரெட் குடிப்பார். சிகரெட் பெட்டியும், தீப்பெட்டியுமாகத் தான் உட்காருவார்.சிகரெட்டை இழுப்பாரே தவிர துளிப் புகை வெளியே விடமாட்டார்.ஆச்சரியமாக இருக்கும்.திருவடி இந்து காலேஜில் பி.யு.சி சேர்ந்தான். நான் ஒன்பது படித்துக் கொண்டிருந்தேன்.என்னை பார்த்ததுமே, வே தம்பியா புள்ள வாரும், செல்லப்பவுக்கு கணக்கே வர மாட்டெங்காமெ நீரு சொல்லிக் குடுமே, உம்ம பழைய நோட்டெல்லாம் வச்சுருக்கேறாமெ என்று சொல்லுவார். அப்புறம் ஒரு தம்.அது நுரையீரலுக்குள் முழுதுமாக குடியேறிய பின்னர் மறு பேச்சு. ஊரிலேர்ந்து வந்ததுமே உம்ம மதினி, உம்ம புராணத்தை ஆரமிச்சுருதாவே...நல்லவேளை வே, நான் முந்திட்டேன், இல்லென்னா உம்மத்தான் கட்டுவென்னு சொன்னாலும் சொல்லிருப்பா உங்க மதினி. என்று சொல்லிவிட்டு சிரிப்பார்.
எனக்கு கூச்சமா இருக்கும். மதினிக்கு முப்பத்திஐந்து வயதாவது இருக்கும். சுருட்டை முடி,மார்பின் ஒரு பக்கத்தை மூடவே தோன்றாதா என்று நமக்குத் தோன்றும். யாரோ சேக்காளிகள், ஒரு சமயம் `ஒன் சைடு பார்டர்’ என்று பேர் வைத்தார்கள்.அவர் சொல்லும் போதே சிரித்தபடி வாசலுக்கு வந்து விடுவாள். இப்ப கொழுந்தப் பிள்ளை ஓடீருவாரே....என்று சொல்லிய படி....புடிங்க அவரை என்பாள். அவர் சத்தமாகச் சிரிப்பார்.அவர் போட்டிருக்கும் காதுக் கடுக்கண் மின்னும். உண்மையிலெயே ஓடத்தான் தோன்றும்.அவளுக்கு காதுக்கு பின்னால் ஒரு சின்ன கட்டி மாதிரி ஒரு வீக்கம் இருக்கும். அது இல்லையென்றால் மதினி அழகுதானோ என்று சமயத்தில் தோன்றும்.அவர்கள் இருக்கும் போதுதான் சின்ன அக்கா கல்யாணம் நடந்தது. ரொம்ப ஒத்தாசை என்று வீட்டில் பேசிக் கொண்டார்கள்.அக்காவுக்கு சற்று சிறிய வயது.அந்த மதினி தான் அக்காவை சமாதானப் படுத்தியது.உன் வயசில எங்க பெரியவன் பள்ளிக்கூடம் போய்ட்டான் என்று.
திருவடியும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தீவிரமான தி.மு.க காரன்., நெல்லை நெடுமாறன், கே ஆர் பி மணிமொழியன், திருவை அண்ணாமலை, என்று எல்லா தி.மு.க பேச்சாளர்களெல்லாம் அவனுக்கு நல்ல அறிமுகம். பி.யு.சி, வழக்கம் போல் ஃபெயில். அப்புறம் கரை வேட்டியுடன் தான் அலைவான்.எப்படியோ கட்சி ஆட்சிக்கு வந்ததும், பொதுப் பணித்துறையில் ஒரு வேலை வாங்கி விட்டான். எனக்கு தெரிந்து கட்சியை வைத்து வேலை வாங்கியது அவன் ஒருத்தன் தான்.
ஒரு நாள் செல்லப்பா அம்மா, முற்றத்து மடையில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள். நான் அம்மாவிடம் போய்ச் சொன்னேன்..அம்மாவும் சமையல் சம்முவத்தாச்சியும் வேகமாய் வந்தார்கள்.அவளைக் கைத்தாங்கலாய் வீட்டுக்குள் கூட்டிப் போனார்கள்.சற்று நேரம் கழித்து நான் தயங்கித் தயங்கி உள்ளே போனேன். வாடிக் கிடந்தவள், இன்னா சித்தப்பன் வாராறே என்று சிரித்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்தாள்.எனக்குப் புரியவில்லை. மார்பே மூடவில்லை, முந்தானை மடியில் கிடந்தது வயதானவர்கள் போல, பின் கொசுவம் வைத்துத்தான் சேலை கட்டுவாள்,.நன்றாக வியர்த்திருந்தது.சம்முவத்தாச்சி விசிறிக் கொண்டிருந்தாள்.. திருவடி உள்ளேதான், நின்று கொண்டிருந்தான்.எம்மா வேண்டாம் சொன்னாக் கேளு, அப்புறம் நான் என்ன செய்வேன்னு தெரியாது என்று மெதுவாக, ஆனால் கோபமாகச் சொன்னான்.சொல்லிக் கொண்டே மிதித்து விடுவது போல் அவள் அருகே வந்தான். எனக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. என்னவென்றும் புரியவில்லை.அவள்., அம்மாவை லேசாக கட்டிக் கொண்டாள். `எத்தே’ என்று அழத் தொடங்கினாள். அம்மா எப்போதும் போல் வாயில்லாப் பூச்சியாக நின்றாள்.
திருவடி விருட்டென்று வெளியே போனான். நானும் பின்னால் போனேன்.தெருவுக்கு வந்தோம், தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை. நல்ல உச்சி வெயில்.என்னப்பா ஏன் கோவமாருக்கே என்றேன். கேவலமாருக்குப்பா, இந்த வயசில புள்ள உண்டாகியிருக்கா,கலைச்சுருன்னு சொல்லுதேன் அழுதா என்றான்.எனக்கு புரிந்த மாதிரியும் இருந்தது. புரியவும் இல்லை.மேற்கொண்டு பேசுவதற்குள், யாரோ வந்து விடவே, யார்ட்டயும் சொல்ல வேண்டாம் என்றான். சொல்லவேயில்லை.
மறுநாளே மதினி ஊர்ருக்குப் போய்விட்டாள்.தாத்தவுக்குப் பொங்கிப் போட மதினியின் தங்கை மகள், சிந்து பூந்துறையிலிருந்து வந்தாள். விசாலாட்சி மூக்கும் முழியும் அழகாக இருந்தாள். உடலில் அங்கங்கே லேசாய் வெள்ளைத் தீற்றல்.லூகொடெர்மா.என் சம வயது தான்.நான் அவளுடன் சிநேகமானதும், அப்புறம் புறமடைத் தெருவிலிருந்து இன்னொரு தங்கை மகள் வந்ததும், நான் அவளுடன் பேசின போது இரண்டு பேரும் அடி பிடிச் சண்டை போட்டதெல்லாம் பெரிய கதை.அதோடு அவள் சிந்து பூந்துறை போய் விட்டாள்.விசுத் தாத்தா பாடுதான் சங்கடமாய் இருந்தது.ஒரு வழியாய் ஒரு ஆண் குழந்தையுடன் மதினி வந்து சேர்ந்தாள்.
சம்முவத்தாச்சியும் அம்மாவும் குசு குசுவென்று பேசிக் கொண்டிருந்தார்கள், யாச்சி, அன்னக்கே சொன்னாக நான் நம்பலை, இப்படி நடக்கும்ன்னு கேள்விப் பட்டிருக்கேன். ஆனா நெசந்தான் போல்ருக்கு.நான் அடுக்களைக்குள் நுழைந்ததும் பேச்சை நிறுத்தி விட்டார்கள்.
நான் வாசலுக்கு வந்த போது திருவடியின் அப்பா திண்ணையில் உட்கார்ந்திருந்தார். வே தம்பியாபுள்ள, குட்டி விஸ்வத்தைப் பாத்தேரா, உம்ம நினச்சுகிட்டே பெத்துருக்கா உங்க மதினி, உம்ம சாடைதாங்காங்க எல்லாரும், என்று சத்தமாக கடுக்கண் மின்ன சிரித்தார். எனக்கு திருவடி என்ன சொல்லுவானோன்னு இருந்தது. அவன் வீட்டுக்குள்ள இருக்கானா வெளியில போயிருக்கானா தெரியலை.இந்தாரும், ரெண்டு பயலுகளையும் காணலை, ஒரு பாக்கெட் பெர்க்லி சிகரெட் வாங்கீட்டு வாரும், என்று ஒரு ரூபாய்த் தாளை நீட்டினார்.வாங்கிக் கொண்டு தெருவைப் பார்த்து ஓடினேன், ஏதோ தப்பித்த மாதிரியில்..

Saturday, August 8, 2009

தீயிந்த உயிர்க் கூட்டை எரித்தாலும்......



ஓய்வின் முதல் வாரம் ஒரு நண்பர் சொன்னார் , எங்கள் இருவருக்கும் பொதுவான மிகச்சிறந்த கலைஞரொருவர், ஓய்வு பெற்ற பின் என்னைப் போலவே ஏகப்பட்ட திட்டங்கள் வைத்திருந்து, மதியத்தூக்கம், சற்று பேச்சு,இலக்கியக் கூட்டங்கள் என்று பொழுது கழிப்பதாக.அவர் மீண்டு வந்து விடுவார் என்று எனக்கு தெரியும்.இரண்டு நாளாய் மத்தியானம் பழைய படங்கள் டி.வி.யில் போடுகிறார்கள்.அதைப் பார்ப்பதில் மதியத் தூக்கத்தை விரட்ட முயற்சிக்கிறேன்.திடீரென்று ஒரு சேனலில் டி.ஆர் மகாலிங்கமும் ஈ.வி சரோஜாவும் மழையில் நனைந்து கொண்டு ஒரு பாட்டைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.அது பட்டுக் கோட்டையின் வரிகள் போலவே இருக்கிறது.ஆனால் அது அ.மருதகாசி எழுதியது. படத்தின் பாடல்கள் எல்லாமே மருதகாசி எழுதியதாக நினைவு.மருதகாசி எழுதிய பல பாடல்கள், பட்டுக்கோட்டை எழுதியது போலவே இருக்கும். ஆனால், மருதகாசி பட்டுக் கோட்டைக்கு முந்தியவர். அந்தப் படம் ஏதோ ஒரு திருநாள் அன்று வந்தது,அதில் கடைசியாக ஒரு சுசீலா பாடுகிற பாடல் ஒன்று வரும்,
‘நிலையாக என் நெஞ்சில் ஒளி வீசும் தீபம்,
நீயே எந்நாளும் என் காதல் கீதம்’.
பிரமாதமான பாடல்.என் பழைய கவிதை நோட்டுகளிலெல்லாம் அங்கங்கே எழுதி வைத்திருப்பேன்.அதில் கடைசி வரிகள் அற்புதத்தின் உச்சம்.
‘தீயிந்த உயிர்க் கூட்டை எரித்தாலும்-அது
நீ இருக்கும் என் நெஞ்சை நெருங்காது
நீ என்றும் வாழ வேண்டுமே-அதுதான்
இன்பமே....’
என் நடுவுள்ள அண்ணன் கூட்டிப் போயிருந்தான். பெயர் தி.க.மீனாட்சி சுந்தரம்.அவன் பள்ளிக்கூட மேகசீன் ஒன்றில் ‘காலத்தின் அருமை’ என்று ஒரு கட்டுரை எழுதியிருப்பான். அந்தப் பிரதியை அவன் பீரோலில் பத்திரமாக வைத்திருப்பான்.
அவன் தான், என்னை பல சினிமாக்களுக்கு கூட்டிக் கொண்டு போவான். மாயா பஜார், அலிபாபா,மிஸ்ஸியம்மா என்று பல சினிமாக்கள். அவன் ம.பொ.சி யின் தமிழரசுக் கழக அபிமானி.சேலம் எம் ஏ வி பிக்சர்ஸ் படமென்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எம் ஏ வி பிக்சர்ஸ்’ சம்பூர்ன ராமாயணம் படத்திற்கும் அழைத்துப் போனான்.கே சோமு இயக்கம். ஏ.பி.நாகராஜன் வசனம்.அதற்கடுத்து அவர்களே சிவலீலா என்று பிரம்மாண்டத் தயாரிப்பாக ஒன்றை அறிவித்தார்க்ள், அது வரவில்லை. ஆனால் அதுதான் பின்னாளில், திருவிளையாடல் பெயரில் ஏ பி என் தயாரித்து இயக்கி, மாபெரும் வெற்றி கண்டது. ம.பொ.சி கண்ணகிக்கு ஒப்ப‘மாதவி’யை, மேடைகளில் பிரபலப் படுத்திய போது எம். ஏ வி பிக்சர்ஸ் மாதவி என்று ஒரு படம் எடுத்திருந்தார்கள். வி.கோபாலகிருஷ்ணன் அவர்களது ஆஸ்தான நடிகர். அதில் அற்புதமான பாடல்கள் உண்டு.ஏ.எல் ராகவன் பாடுகிற ‘ஒரு முறை பார்த்தாலே போதும், உன் உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்’ என்ற பாட்டு., அற்புதமாயிருக்கும்.எஸ்.சி கிருஷ்ணன் குழுவினர் பாடுகிற பாட்டில் தமிழ் நாட்டின் பல மறக்கப் பட்ட தலைவர்கள் பற்றி வரும்.’ நல்லறிவாளர் திரு வி க, தமிழ்நாட்டின் செல்வம் திருவிக, தொல்லை படும் பாட்டாளியின் தோழனாக வந்துதித்த நல்லறிவாளர் திருவிக....என்று வில்லுப்பாட்ட்டு பாடுகிறது போல் வரும். ‘இந்த நாட்டின் பெருமைகளை எடுத்து மேற்பேசி வருபவர் யாரென யோசி, அவர்தான் சிலம்புச் செல்வர் ம பொ சி’ என்கிற மாதிரியில் முடியும்.
எம்.ஏ. வேணு ஒரு தமிழரசுக் கழக அனுதாபி., ஜி உமாபதி, டி என் சிவதானு என்று மபொ.சிக்கு திரையுலகில் கொஞ்சப் பேர் உண்டு. ம.பொ சி வெளிநாடு போன போது அவருக்கு இவர்கள் தான் கோட் சூட் எல்லாம் தைத்து வழங்கினார்கள் என்று செய்தி. அண்ணன் எழுத்துப் போடும் போதே பல விஷ்யங்களைச் சொல்லுவான். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள், நூற்றுக்கும் மேற்பட்டவை, ஒவ்வொன்றிலும் எழுத்து (டைட்டில்) போடுவது புதுமையாக இருக்கும்.அதற்காகவே மாடர்ன் தியேட்டர்ஸ் படங்கள் என்றால் எழுத்துப் போட்டுவிட்டர்களா என்று கேட்டு விட்டு டிக்கெட் எடுப்பது வழக்கம்.தரை டிக்கெட்டுக்கு அலை மோதி,டிக்கெட் ஜன்னலுக்கு நெருங்குவதற்குள்,படம் போட பெல் அடித்து விடுவார்கள். மனோன்மணி படத்தில் ஒரு பெரிய மணி, ஆராய்ச்சி மணி போல்., ஒலிக்க அதிலிருந்து எழுத்துகள் வரும்..காட்டு ரோஜா படத்தில் தரையில் பூக்களால், படத்தில் இடம் பெறும் கலைஞர்களின் பெயர்களை அமைத்திருப்பார்கள். அலிபாபா படத்தின் எழுத்துக்கள் பூராவும் ஆங்கிலத்திலேயே இருக்கும். இந்திப் படங்களின் பாணி அது.அந்தக் காலத்தில் நடிகர்கள் பெயரும், அவர்கள் ஏற்றுள்ள பாத்திரத்தின் பெயரும் டைட்டிலில் போடுவார்கள்.எல்லாமே ஆங்கிலப் படங்களின் பாதிப்பு.மர்ம யோகி (முதல் அடல்ட்ஸ் ஒன்லி தமிழ்ப் படம்.) படத்தில் வேடிக்கையாக இருக்கும். ராஜா & மர்மயோகி – செருகளத்தூர் சாமா என்று போடுவார்கள்.படத்தில் ‘மர்ம’யோகி, யார் எனபதுதான் சஸ்பென்ஸ்.
ஹாதிம்தாய் அல்லது மாயமோகினி என்று ஒரு இந்தி டப்பிங் படம். அராபியன் நைட்ஸ் கதை, ஏழு வாக்கியங்களுக்கு, அலைந்து திரிந்து பொருள் தேடவேண்டும், அப்போதுதான் சிலையாக மாறிய இளவரசி உயிர் பெறுவாள்.அந்தப் படத்தின் எழுத்தில், எடிட்டிங் உதவி- எம். ஏ. திருமுகம் என்றிருந்தது. சாண்டோ சின்னப்பா தேவரின் (சகோதரர்) படங்களை இயக்கியவர்.படம் ரொம்ப ந்ன்றாக இருக்கும். ‘நல்லதை செய்து நதியில் போடு’ என்று ஒரு வாக்கியம், மட்டும் நினவிருக்கிறது. இப்படி வாக்கியங்களின் அர்த்தத்தை தேடிப் போவது போன்ற தூக்குத் தூக்கி, தங்கமலை ரகசியம், வா ராஜா வா போன்ற படங்களுக்கு இதுதான் மூலம் என்று நினைக்கிறேன்.பஸந்த் பிக்சர்ஸ் தயாரிப்பு என்று நினைவு. மஹிபால் கதாநாயகனா என்று நினைவில்லை.பஸந்த் பிக்சர்ஸ் படங்கள் ஒளிப்பதிவு, தந்திரக் காட்சிகள், இயக்கம் எல்லாம் அநேகமாக பாபுபாய் மிஸ்திரி என்று போடுவார்கள்.தயாரிப்பு ஹோமிவாடியா.ஹதிம்தாய் அதற்கப்புறம் பல தயாரிப்புகள் வந்துள்ளது. ஒன்றில் ஜிதேந்திரா நடித்திருப்பார்.அறுபதுகளில் ஹோமி வாடியா தயாரிப்பாக,பெரோஸ்கான் நடித்து, ரிப்போர்ட்டர் ராஜு என்று ஒரு படம் வந்தது. அதன் நகல் தான் ஜாவர் சீதாரமன் கதை வசனம் எழுதிய ‘ஆனந்த ஜோதி’ எம்ஜியார் நடித்தது. எம்ஜியாரும் தேவிகாவும் சேர்ந்து நடித்த ஒரே படம்.
இதைத் தொடர்ந்து ஃப்ரெண்ட் ராமசாமி தயாரித்த காஞ்சனா பிக்சர்ஸ்’ உடன் பிறப்பு என்று ஒரு படம் எம்ஜியார் தேவிகா நடிப்பதாக விளம்பரமெல்லாம் வந்து, படம் பாதியிலேயே நின்று போனது.ஃப்ரெண்ட் ராமசாமி என்ன ஆனாரென்றே தெரியவில்லை. அண்ணனின் பீரோலில், அவனது தூத்துக்குடி நண்பன், சேது அனுப்பிய பல பொங்கல் வாழ்த்துக்கள் இருக்கும். திராவிட நாடு திராவிடருக்கே, என்று எல்லாவற்றிலும் எழுதியிருப்பார், நிறைய இருக்கும். எல்லாம் கே மாதவன் வரைந்த ஓவியங்கள்.சகுந்தலையின் குழந்தை பரதன் சிங்கக் குட்டிகளோடு விளையாடுவது போல ஒரு படம் போட்ட பொங்கல் வாழ்த்து, அப்புறம் எம்ஜியார் ஓவியம் போட்ட ஒன்று. அதுவும் மாதவன் வரைந்ததா நினைவில்லை.அது போக பழைய நடிகன் குரல் பத்திரிக்கைகள் நாலைந்து இருக்கும்.
எம்ஜியார் அதன் பதிப்பாசிரியர்.அதில் அவரது சுய சரிதை வந்து கொண்டிருந்தது.இதையெல்லாம் அவனது மேக்சீன் கட்டுரையை காண்பிக்கும் போது கண்ணில் காட்டுவான்.தவிரவும் பெரிய அண்ணன் கல்யாணத்திற்கு பரிசாக வந்த வந்த பல புத்தகங்களும் இருக்கும். அண்ணா, கருணாநிதி, கே.ஜி ராதாமணாளன், நாரண துரைக்கண்ணனின், (ஜீவா) உயிரோவியம்,ரகுநாதனின் கன்னிகா.உயிரோவியம் அருமையான நாவல். கே எஸ் கோபாலகிருஷ்ணனின் சாரதா படம் இதை உல்ட்டா பண்ணியது.அப்போது திருமணத்திற்கு பரிசாக புத்தகங்களைத் தருவது வழக்கம்.பெரிய அண்ணன் திருமணத்திற்கு வந்த மற்ற பணம் பரிசுகளை விட புத்தகங்களே அதிகம். அதை அழகாக ஒரு நோட்டில் எழுதி வைத்திருக்கிறார்கள், புத்தககம்-ஆசிரியர்-அன்பளீப்பு வழங்கியவர்-விலை என்று விவரமாக, குறித்து வைத்திருக்கிறார்கள். அவன் திருமணமாகி ராஜவல்லிபுரத்தில் கர்ணம் வேலைக்கு போனபோது, என்னிடம் எல்லாவற்றையும் தந்து விட்டான்.அது 1961-62 வாக்கில் இருக்கும். அதையும் தந்து நாலணாவும் தந்தான், யானைப் பாகன் படம் பார்த்து வரும்படி அனுப்பினான்.ஆறரை மணி படத்துக்கு ஐந்து மணிக்கே போய் காத்திருந்தேன்.அதிலும் பாடல்கள் மருதகாசி. பிரமாதமான பாடல்கள்.

பதினாறும் நிறையாத பருவ மங்கை-காதல்
பசியூட்டி வசமாக்கும் ரதியின் தங்கை

வண்டுகளே கண்டிடாத வசந்த முல்லை-அவள்
வந்ததுமே பற்ந்தோடும் காதல்த் தொல்லை
எண்ணம் போல வாய்த்து விட்டால் ஈடு இல்லை-இனி
இனபத்திற்கு என்றைக்குமே ஏழை இல்லை

வண்ண முகக் கண்ணிரண்டும் நட்சத்திரமோ=அது
வாவென்று அழைப்பதென்ன விசித்திரமோ
மின்னுகின்ற பல்வரிசை முத்துச் சரமோ-யாரும்
மெச்சுகின்ற குணங்களேதான் சொத்து சுகமோ

இன்னொரு சரணம் இப்போதைக்கு நினைவில்லை. இதை, இன்றைய பாடலாசிரியர் நா.முத்துக்குமாரிடம், அவர் அறையில் வைத்து ஒரு கொண்டாட்டமான மன நிலையில் பாடிக் காண்பித்த போது, ஆடிப் போய் விட்டார். லலிதானந்த் உடனிருந்தான். இன்னொரு டூயட்,சீர்காழியும் சுசிலாவும் ‘செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய், தித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே...’ டூயட், சோலோ, ஹம்மிங், விருத்தம் எல்லாம் அண்ணன் தி.க.மீ சொல்லித் தந்தது.
கர்ணம் (கிராம நிர்வாக கணக்குப் பிள்ளை) பதவியை, எம் ஜி ஆர் அரசு ஒழித்த போது வேலையில்லாமல் பெரிதும் கஷ்டப் பட்டான். அப்பாவுக்கு அவனை அதிகம் பிடிக்காது, ஏன் என்று இன்று வரை புரியவில்லை. ஆனால் அப்பா இறந்த சமயத்தில் அவன்தான் குடும்பத்தை தாங்கிக் கொண்டான்.அவன் வேலையிலிருந்த சமயம்,ராஜவல்லிபுரம் வீட்டில் இருக்க வேண்டாம் என்று அப்பா சொல்லிவிட்டதால், மீனட்சி புரத்தில் வாடகைக்கு குடி இருந்தான்.நாங்கள் நண்பர்களெல்லாம் யார் பையன் படத்திற்கு,அது எத்தனையாவது முறையோ, ஜங்ஷன் பூர்ணகலா திய்யேட்டரில் ஒரு செகண்ட் ஷோ, பார்க்கப் போயிருந்தோம். அது வந்த புதிதில்,அண்ணன்தான் கூட்டிப் போயிருந்தான்.ஒண்ணாம் நம்பர் நகைச் சுவைப் படம். ஸ்ரீதர் கதை வசனம், டெய்சி ராணி, பையனாக(!) நடித்திருப்பாள்.இன்னொரு படம் ஜெய கோபி, அதற்கும் அவன் தான் கூட்டிக் கொண்டு போனான்.இன்று யார்பையன் படத்திற்கு நண்பர்களை, அது பிரமாதமான படம் என்று சொல்லி நான் தான் கூட்டி வந்தேன்.அதில் முதல் காட்சியில், ஒரு டாகடர் வருவார். அது பின்னாளில் பிரபலமான இயக்குநர் பி. மாதவன், ஸ்ரீதரின் உதவியாளராயிருந்தவர் அவர்.அதைப் பார்த்ததுமே நண்பர்களுக்கு சிரிப்பு வந்து விட்டது. படத்தை வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
இடைவேளையின் போது வெளியே நின்று தம்மடித்துக் கொண்டிருந்தோம். ஒரு சிகரெட்டை ரெண்டு மூன்று பேர் மாற்றி மாற்றி இழுத்துக் கொண்டிருந்தோம்.சண்முக நாதன் என்னிடமிருந்து அவசர அவசரமாக சிகரெட்டை வாங்கினான். ரொம்ப கெட்டிக்காரன் அவன். அவன் கேட்டால் ஏதாவது அர்த்தமிருக்கும் என்று அவனிடம் வேண்டாவெறுப்பாய்க் கொடுத்தேன்.உங்க அண்ணன் நிக்காருப்பா அந்தா பாரு, என்றான்.சண்முகநாதனுக்கு, குடும்ப நிலைமை எல்லாம் நன்றாகத் தெரியும்.அண்ணனைப் பார்த்த பிறகு அவனை நோக்கிப் போனேன். பார், நீ அழைத்துச் சென்று காண்பித்த படம், என்று சொல்லாமல் சொல்வது போல அவனருகே சென்று பேசாமல் நின்றேன். பக்கத்தில் நின்ற ஒருவரிடம், அவர் படத்தை எண்ணி சிரித்த படி இருந்தார், அநேகமாய் தியேட்டர் வளாகத்தில் எல்லார் முகமும் சிரிப்பாய் இருந்தது, எங்கும் சிரிப்பாணி நிறைந்திருந்தது.அவரிடம், தம்பி என்று அறிமுகப் படுத்தினான்.அம்மா எப்படியிருக்கா என்றான்.நான் தலையை மட்டும் ஆட்டினேன்.உன்னை வரச் சொன்னாள் என்று ஏதோ பேச்சுக்குச் சொன்னேன்.சரி வாரேன்னு சொல்லு,என்று சொல்லிவிட்டு, அந்தப் புதிய நண்பரிடம் ஏதோ சொன்னான், அவர் சட்டைப் பை, கை மடிப்பு என்று எங்கிருந்தெல்லாமோ ரூபாயை எடுத்தார், ஏழு ஒரு ரூபாய் நோட்டுகள்.வாங்கி என்னிடம் கொடுத்தான்.வாங்கிக் கொண்டேன்.போகும் போது சுல்தானியா ஓட்டலிலொரு டீ குடிக்க வேண்டும் சண்முகநாதனுடன் என்று நினைத்துக் கொண்டேன்.அவன், வேண்டாம் நிறைய பேர் இருக்கிறோம் என்று தடுத்து விட்டான்.
மறு நாள் சீட்டாட்டத்தில், அதில் இரண்டு ரூபாய் தோற்றதும், அடுத்த ஆட்டத்தில் சேரும் முன், சண்முக நாதன், வா டீ குடிக்கப் போவோம்,என்று அழைத்துப் போனான். இந்தக் காசை வைத்து இன்னமெ விளையாட வேண்டாம், என்று டீ குடித்து முடித்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்த படி சொன்னான்.மட்டமான நேவி ப்ளூ சிகரெட். ஐந்து பைசாவோ என்னவோ விலை.நான் அவன் முகத்தைப் பார்த்த படி பேசாதிருந்தேன்.இந்தா என்று ஒரு இழுப்பு இழுத்து விட்டு கனிகிற சிகரெட்டை நீட்டினான்.அழுகை வரும் போலிருந்தது, சற்றே நடுங்குகிற கையோடு சிகரெட்டை வாங்கும் போது.
கடைசியாய் அண்ணன், நெல்லையப்பர் கோயிலில் நவக்கிரக சன்னதியில் சனீஸ்வரனுக்கு எள்ளுப் பொட்டலமும் எண்ணெயும் விற்கும் குத்தகை எடுத்திருப்பவரிடம் வேலைக்கு இருந்தான்.அதைக்கூடத் தற்செயலாய்த் தான் பார்த்தேன். அப்போது வேலை கிடைத்து, திருமணமாகி இடைகால் வந்து விட்டேன்.பல இடங்களில் வேலைக்கு முயற்சிக்கிறான் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஒரு வார்த்தை கூட பணம் வேண்டுமென்று கேட்டதில்லை.நானும் வேண்டுமா என்று கொடுத்ததில்லை.அதே சன்னதியில் நான் ஒரு காலத்தில் சுற்றிச் சுற்றி வருவேன்.அவன் ஒரு எள்ளுப் பொட்டலத்தை அமைதியாய் நீட்டினான்.வாங்கி பொருத்தி வைத்தேன். எந்த வேண்டுதலும் இருக்க வில்லை.ஊர் திரும்பிய இரண்டு மூன்று நாள் கழித்து கண்டக்டர் ராமையா அதி காலையில் வந்தான். வா, ஊருக்கு புறப்படு., 'கணக்காப் பிள்ளை' அண்ணாச்சி செத்துப் போயிட்டாரு,கடுமையான நெஞ்சு வலி.