Wednesday, August 19, 2015



பாடல் பெறாத பாடலாசிரியர்கள்.....

                அவர் யாருடனும் பேசி யாரும் பார்த்ததில்லை. மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் படிக்கிறார் என்பார்கள். பாதியில் விட்டு விட்டார் என்பார்கள். வருவதும் தெரியாது போவதும் தெரியாது. சந்திப் பிள்ளையார் முக்கில் இருந்த மூன்று நான்கு ஷாப் கடைகளில் ஆண்டியப்ப அண்ணாச்சி கடையில் மட்டும் எல்லா புத்தகங்களும் வரும். ஒரு அணா விலையில் கலைமகள் கம்பெனியின் சினிமா பாட்டுப் புஸ்தகங்களும் கிடைக்கும். புத்தகங்களையும், பாட்டுப் புஸ்தகங்களையும் நாலுக்கு நாலு மரச்சட்டம் ஒன்றில் நூல் கட்டித் தொங்க விட்டு கிளிப் போட்டிருப்பார். அதற்கு அருகில்தான் வெற்றிலை அடுக்கிய தட்டும் இருக்கும். தினமும் வெற்றிலைக்காரர் வந்து தேவைப்படுகிற கவுளிகளை (கட்டுகளை)  எடை போட்டு – அது என்னவோ 60களில்க் கூட பழைய சேர், வீசை கணக்கில்தான் எடை போடுவார் அண்ணாச்சி- ஒன்னு போல வெற்றிலையக் காம்பு அரிந்து, கை கொள்ளும் அளவு இலகளை எடுத்து தண்ணீரில் முக்கி, அதிகத் தண்ணீரை உதறி,  சின்னத் தாம்பாளம் போன்ற தட்டில் வட்டமாக அடுக்குவதே அவ்வளவு நறுவிசாய், பெண்கள் சேலைக் கொசுவம் மடிப்பது போல் அழகாயிருக்கும். நைசாக நேற்றைய வெத்திலையையும் நடுவில் நுழைத்து அடுக்கி விடுவார். அவர் அடுக்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றால் என் மேல் கொஞ்சம் உதறுவார், ‘ வேய் மைனரு எதையும் பெரிசாப் பார்த்து பயந்து சீர் தட்டியிருந்தாலும்  சரியாப் போய்ரும் வே என்பார். அது என்ன பெருசு..என்று கேட்டால், அருகே ரொம்ப காலமாகத் தொங்கும் என்னைப்பார்படப் பாட்டுப் புஸ்தகத்தில் மார்பு காட்டி நிற்கும் எல்.விஜயலட்சுமியைக் கண்ணால் காட்டுவார். அண்னாச்சி, நீ நகரு போ போ, என்று என்னை விரட்டுவார். கூடவே, யோவ் வெத்தலக்காரரே தெனமும் அந்தப் பாட்டுப் புஸ்தவத்தில பூராவும் தண்ணியத் தெளிச்சு வைச்சா நான் என்னன்னு வித்து அழட்டும்..ஒரணா புஸ்தவத்தை வித்தா காலணா கெடைக்கும் .”  என்று புலம்புவார். அநேகமாக லாயர் அண்ணாச்சி வருகிற நேரமும் அதுவாகத்தான் இருக்கும்.
     நாலரைமணி வாக்கில் போத்தி ஓட்டலில் காஃபி சாப்பிட்டு விட்டு வருவார். புத்தகங்கள் வாங்கிக் கொண்டு போவார். பாட்டு புஸ்தகங்களும் வாங்குவார். நான் பார்த்த அளவில் அவர்  வழக்கமாக விகடன், குமுதம், கல்கண்டு வாங்குவார். ஒரு நாள் மட்டும் தாளில் பொதிந்து ஒரு புத்தகம் வாங்கிப் போனார். புத்தகச் சட்டத்தைப் பார்த்தவுடன் அங்கே எது ‘மிஸ்ஆகியிருக்கிறது என்று கண்டு பிடித்து விட்டேன். ‘கலைப்பொன்னி’. பதின் பருவ வயசு இருக்கும் எனக்கு. ஆனால் எங்களுக்கு ஞானஸ்னானம் எப்போதோ நடந்து விட்டது. ஆச்சரியமாய் தெருவுக்கு வந்து சொன்னேன்,நம்ம லாயர் அண்ணாச்சி கலைப்பொன்னி வாங்கிட்டுப் போறாருடா,”. சபையிலேயே மூத்தவரான் ஒருவர், “ அப்படியா, வாங்கலே என்று அழைத்துக்கொண்டு போய் மார்க்கெட் பக்கமிருக்கும் மகிழ்ச்சி மன்றம்’  கடையில் கலைப்பொன்னி வாங்கி வந்தார். கலைப்பொன்னி கொஞ்சம் பலான பத்திரிகை. அதில் ‘ராஜாவரையும் கவர்ச்சி ஓவியங்கள் அழகாக இருக்கும். அதில் ஆடவர் அஞ்சல் என்று ஒரு பகுதி வரும். அதில் குட்டி குட்டியாக ஆடவர்கள்தங்கள் பலான அனுபவங்களை எழுதுவார்கள். பார்த்தால்,  ஹைதராபாத் காதலிஎன்ற தலைப்பில், நான் ஹைதராபாத்தில் கட்டைப் பிரம்மச்சாரியாக வேலை பார்க்கும் போது....என்று ஆரம்பித்து, ஒரு ஆண்ட்டியை டாவ் அடித்த  கதை ஒன்றை விட்டிருந்தார்,லாயர் அண்ணாச்சி. ஏ.எஸ். சங்கரன். பி.ஏ.பி.எல், திருநெல்வேலி டவுண் என்று விலாசம் வேறு தெளிவாக. ஒருத்தர் தலை மேல் ஒருத்தர் தலை நீட்டிப் படித்தோம். ஆச்சரியம் தாங்கலை.
     லாயர் அண்ணாச்சி வீட்டில் மூன்று பேர். பெண்கள் கிடையாது. அப்பா, இரண்டு மகன்கள். அங்கே ஃபியெஸ்டா ரெக்கார்ட் ப்ளேயர் புதுசாக ஒன்று உண்டு. லாயரின் அண்ணனுக்கு அப்போதைய எலக்ட்ரிக் பொருட்களில் ஆர்வம் அதிகmmம். அநேகமாக முதல் டிரான்சிஸ்டர், டேப்ரெக்கார்டர் எல்லாம் அவர்தான் வாங்கினார்.  வீட்டுக்குள்ளிருந்து ஒரு நாள் அழகாக “தண்ணிலவு தேனிரைக்க பாடல் மறுபடி மறுபடி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டுக்கு வெளியே  அழகான திண்ணை meeமேல் க்ரீப்பர் நிழல் படர்ந்து இருக்கும். போகன் வில்லாக் கொடியும் மரம் போலப் படர்ந்து அதிகக் குளிர்ச்சி தரும். நானும் கணவதி என்கிற சேக்காளியும் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தோம். திடீரென்று தம்பிகளா உள்ள வாங்களேன்பா என்றார் லாயர். நானும் கணவதியும் அந்தப் பாட்டு யார் எழுதியது என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தோம். கண்னதாசந்தாம்ல வேற எவன்லெ என்று சொல்லிக்கொண்டிருந்தான் கணவதி. ஏனோ எனக்கு ஒப்பவில்லை. அபோதுதான் லாயர் கூப்பிட்டார். “அண்ணாச்சி அந்த ரெக்கார்ட்ல என்ன போட்ருக்கு.என்று கேட்ட படியே உள்ளே போனோம். மாயவநாதன்னு ஒருத்தர் புதுசா எழுதிருக்கார் என்றார்.
     என்ன அவன் கண்ணதாசன்னு சாதிக்கானோ... நீங்கள்ளாம் தி.மு.கா ல்லா என்னடே, என்றார். அப்போதும் கண்ணதாசன் தி.முகவில்தான் ஊசலாடிக் கொண்டிருந்தார் என்று நினைவு. சம்பத் போய் விட்டார். இதனாலோ என்னவோ திருடாதே படத்திற்குப் பின் கண்னதாசனை விட எம்.ஜி.ஆருக்கு மருதகாசி , சபாஷ் மாப்பிள்ளே மாடப்புறா என நிறையப் படங்கள் எழுதினார்.பட்டுக்கோட்டையும் அப்போது இல்லை.ஆனால் அரசிளங்குமரி போல ஏற்கெனவே பட்டுக்கோட்டை பாடல் எழுதிய படங்கள் வந்தன.கண்னதாசன் –சிவாஜி-பீம்சிங்- விஸ்வநாதன் ராமமூர்த்தி- கூட்டணி திரையிசையைக் கலக்கிக் கொண்டிருந்த காலம். ராஜாக் கதைகளை விட்டு சமூகக் கதைப்படங்களும் 1960லிருந்து தொடங்கின. சரித்திரப் படங்களிலும் சரி,சமூகப் படங்களிலும் சரி 1960களுக்கு முன் ஒரு படத்தில் நிறையப் பேர் பாடல் எழுதுவார்கள்.  பாடல்களும் பத்துக்கு குறையாமலிருக்கும். 1960-61 லிருந்து கண்ணதாசன் முழு ஆக்கிரமிப்புச் செய்தார். ஏழு பாடல்கள் என்பது செண்டிமெண்ட் மாதிரி ஆனது. திருடாதே படம் நீண்ட நாளாக தயாரானது. அந்த சரோஜாதேவிக்கும் அதற்குப்பின் தயாராகி அதற்கு முன் வந்த விடிவெள்ளி படத்தின் சரோஜாதேவிக்கும் உருவத்தில் அவ்வளவு வித்தியாசம் இருக்கும்.திருடாதே படத்தில் ஐந்து ஆறு பேர் பாடல் எழுதியிருப்பார்கள். பட்டுக் கோட்டை, கண்ணதாசன்,கு.சா. கிருஷ்ண மூர்த்தி,கு.மாபாலசுப்பிரமணியம், முத்துக் கூத்தன், எம்.கே.ஆத்மனாதன் அப்புறம் பழனிச்சாமி என்று ஒருவர். இவரெல்லாம் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது இருக்கலாம்.
இடைகால் ஊரைச் சேர்ந்த மம்மது என்ற நண்பர் மிகச்சிறந்த தமிழிசை அறிஞர். அவருடன் பேசிக் கொண்டிருந்த போது ஒரு சம்பவம் சொன்னார். அவரது நண்பர் ராஜா முகம்மது மற்றும் நண்பர்களுடன் தேர்ந்தெடுத்த அவைகளில் அவர் தமிழிசையை விளக்கும் முகமாக சில நிகழ்ச்சிகள் நடத்துவார். அப்படி மதுரை அருகே கிராமத்தில் ஒரு நிகழ்ச்சியில் தங்கரத்தினம் படத்தில் வரும், ‘சந்தனப் பொதிகையின் செந்தமிழ்ப் பெண்ணாள்......பாடலைப் பாடியதும் கடைசி வரிசையில் ஒருவர் ஆர்வமாகக் கவனித்தாராம். ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்க, சற்று இடைவெளி விட்டு அந்தப் பாடலை மறுபடி பாடிய போது அவர் முன் வரிசைக்கு வந்து விட்டாராம். நிகழ்ச்சி முடிந்ததும் மம்மதுவிடம் தன் பாராட்டுக்களைச் சொல்லிவிட்டுச் சொன்னாராம், இந்தப் பாடலை எழுதியது நான்தான் என்று. அவர் பெயர் கிருஷ்ணமூர்த்தி. அதற்குப் பிறகு அவர்பாடல் எழுதவில்லயாம். தன் ஊருக்கே வந்து, தான் எழுதிய ஒரு அற்புதமான பாடலைப் பாடிக் கேட்பது என்பது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்குமா இல்லை... பதில் சொல்வது கடினம்.
இன்னொரு கிருஷ்ணமூர்த்தி உண்டு. கு.சா.கிருஷ்ணமூர்த்தி என்று 1960களுக்கு முந்திய படங்கள் பலவற்றில் நிறைய எழுதியிருக்கிறார்..சிவாஜி எம்.ஜி.ஆர் படங்களுக்கு எழுதியிருக்கிறார். 1980 வாக்கில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலையில் நடக்கும் முதல்க் கவிதைக் கருத்தரங்கத்திற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். மேற்சொன்ன கு.சா.கி, புத்தனேரி சுப்ரமணியன், போன்றவர்களுடன் கோவை ஞானி,சி.சு செல்லப்பா, ந.காமராசன்,மீரா என்று பல பேர். இறுதி நாளின் போது கோவை ஞானி, ‘மரபுக் கவிதை செத்து விட்டது..என்று ஆரம்பித்து விளாசித் தள்ளி விட்டார். கு.சா.கி யும் சுப்ரமனியமும் கடுமையாக எதிர்த்தார்கள். அப்புறம் சந்திக்கையில் பல்கலையின் பதிவாளர் சொன்னார், “நீங்க எல்லாம் பேசிட்டுப் போயிட்டீங்க, அவர்கள் நேரா முதல்வர் எம்.ஜி.ஆரிடம் போய் புகார் செய்து விட்டார்கள். எங்க தலையை உருட்டிட்டாங்க என்றார்.

                கு.சா.கி யைப் போலவே கு.மா.பாலசுப்ரமணியம் பழைய காலத்தில் பல படங்களுக்கு எழுதியுள்ளார்.கட்டபொம்மன் படத்தின் பாடல்கள் அனைத்தும் அவரெழுதியதுதான்.கொஞ்சும் சலங்கையிலும். சிங்கார வேலனே தேவா என்ற பாடல் அவர் எழுதியதுதான். ஒரே ஒரு பாடல் எழுதிப் பிரபலமுமான பின் வாய்ப்பு கிடைக்காமலோ  எழுதாமலோ போனவர்களில் ஏற்கெனவே ஒருவரைப் பார்த்தோம். அடுத்தவர், தொழிலாளி படத்தில் ‘கலை வந்த விதம் கேளு கண்ணே...பாடலெழுதிய கூத்தன்பூண்டி சுந்தரம். அருமையான பாடல். இந்த வரிசையில் குடியிருந்த கோயிலில் ‘குங்குமப் பொட்டின் மங்கலம் ..பாடல் எழுதிய ரோஷனரா பேகம் ஒருவர். யானைப்பாகன் படத்தில் கோவை ‘குமாரதேவன்எழுதிய பதினாறும் நிறையாத பருவமங்கை..ஒரு கிளாஸிக் பாடல். அப்புறம் அவர் எழுதவேயில்லை போலும் . இன்னொரு கிளாசிக் பாடலான ‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடலை எழுதிய கவிஞர் கோவை ஆனைமுத்து. ஆனால் படத்தில் இவர் பெயர் இல்லை. எம்.ஜி.ஆர் நாடக மன்றத்திலிருந்து எழுத வந்ததில் முத்துக் கூத்தனைப்போல ஆனால் அவரை விட சீனியர், கவி.இலக்குமணதாஸ். நாடோடிமன்னன் படத்தில் இவர் எழுதிய “உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா...மிகப் பிரமாதமான,பிரபலமானபாடல்.இந்தப் பாடலை எம்.ஜி.ஆர். இன்னும் சிறப்பாக எழுதுங்கள் என்று இலக்குமண தாஸிடம் மேலும் மேலும் சொல்ல, அவர் “ அண்ணேன்  இதுக்கு மேல என்னால முடியாதுண்ணேன், வேற யாரை வேணுன்னாலும் வச்சு எழுதிக்ககங்க...என்று சொன்னாலும்.இல்லை நீங்கதான் எழுதணும்... என்று எழுத வைத்தாராம். பாடல் இவ்வளவு திருப்தியாக வந்ததும் கவிராயர் அப்படியே உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் மல்க நின்றாராம்.அவரே நாடோடி மன்னன் வெற்றி விழா மலரில் சொல்லி இருக்கிறார். நாடோடி மன்னனில் நாடோடி, மன்னனானதும் வாழ்த்திப் பாட, திராவிட மொழிகளான நான்கு மொழிப் பாடல்கள் வரும். மலையாளம்- பாஸ்கரன், தெலுங்கு – நாராயணபாபு, கன்னடம்- விஜயராகவலு, தமிழ்- சுரதா ஆகியோர் எழுதியிருப்பார்கள். பாரத விலாஸ் படத்தில் வரும் பல மொழிப்பாடல் எல்லாமே வாலிதான். நீரும் நெருப்பும் படத்தில் முறையே வயலார், கொசராஜு,விஜயநரசிம்மா. பல மொழிப் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்
ஒரு பாடல் எழுதியதாகத் தெரிய வருவோருள் ‘உன்னைப் போல் ஒருவன்’(கமல்) படத்தில் எழுதிய மனுஷ்யபுத்திரனைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அவர் தொடர்ந்து எழுதும் சாத்தியங்களும் அவசியங்களும் இன்னும் அடை பட்டு விடவில்லை. கவிஞர் சிற்பி கிழக்கே போகும் ரயில் படத்திற்காக எழுதிய  மலர்களே நாதஸ்வரங்கள்...பாடல் படத்தில் இடம் பெறவில்லை. ஆனால் அவர் எழுதிய ‘ சின்னஞ்சிறு துளியில் ஒரு உலகம் உருவாகும்....என் சிந்தை இனி கங்கா நதி பொங்கும் இடமாகும்..என்கிற வரிகள்தான் கதாநாயகனுக்கு பாடலாசிரியன் வாய்ப்பையே வாங்கித் தரும். சிற்பியின் சக வானம்பாடியான மு.மேத்தா பல படங்களுக்கு நல்ல பாடல்களெழுதினார். இயக்குநராகும் ஆசையில் அதைப் பலி கொடுத்து விட்டார். இலக்கியவாதியாக இருந்து பாடல் எழுதியவர்கள் வரிசையில் நா.காமராசன் முக்கியமானவர். ஜெயகாந்தன், பாதை தெரியுது பார் படத்தில் எழுதினார்.பின்னர் அவரது கதைகள் படம் எடுக்கப்படும் போதும் யருக்காக அழுதான், சிலநேரங்களில் சில மனிதர்கள் போன்றவற்றில் எழுதினார். கல்கி மீராவில், வசனத்துடன் காற்றினிலே வரும் கீதம் பாடல் எழுதியிருக்கிறார். புலமைப்பித்தன் எம்.ஜி.ஆர் படங்கள் மூலமாக சிறப்பாகப் பாடல் எழுதி பல்வேறு படங்களுக்கும் எழுதியது போல நா.காமராசன் எழுதவில்லை. புலமைப்பித்தன் போலவே முத்துலிங்கம் எல்லோருக்கும் எழுதினார்.இருவரும் கண்ணதாசன் போல அரசவைக் கவிஞராக வேறு இருந்தார்கள். தமிழ் நாட்டின் முதல் அரசவைக் கவிஞரான நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் பாடல், “தமிழனென்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு..... அவரது கதையை வைத்து எடுக்கப்பட்ட மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்றது. ஆர்.எம். வீரப்பன் எம்.ஜி.ஆரின் அணுக்கமானவரான வித்வான்.வே.லட்சுமணன்,ச்த்யா மூவீஸ் படங்களுக்கு உரையாடலும் பாடலும்  எழுதியிருக்கிறார். அவரே வீணை எஸ் பாலச்சந்தர் படங்களான அவனா இவன்,பொம்மைபடங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதியுள்ளார்..நீயும் பொம்மை நானும் பொம்மை...பாடல் –ஜேசுதாஸின் முதல்ப் பாடல்,பிரபலமானது.அப்புறம் அவரே மணியனுடன் சேர்ந்து தயாரிப்பாளராகி விட்டார். அதைவிட எம்.ஜி.ஆருக்கு மட்டுமே ஆஸ்தான ஜோஸ்யராக இருந்தவர் பிரபல ‘பால ஜோசியராகியும் விட்டார்.
கலைஞர் கதை வசனத்துடன் பராசக்தி தொடங்கி சில படங்களில் பாடல் எழுதியுள்ளார். காகித ஓடம் கடலலை மேலே... வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்..என்று சில முத்துகள். பின்னது மாயவனாதன் எழுத வராததால் எழுதியது என்பார்கள். அற்புதமான கவிஞனான மாயவநாதன் குடியால் அழிந்ததாகச் சொல்வார்கள்.  அப்படி ஆன இன்னொருவர் கம்பதாசன். அக்பர்- மொகலே ஆஜம் தமிழ் -  படத்தின் வசனம் பாடல்கள் அற்புதமானவை. கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சேபாடல் அப்படி உருகவைக்கும். பிரபல வசனகர்த்தா அபூர்வமாகப் பாடல் எழுதிய பட்டியலில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஒருவர். முதலில் அவர் பாட்டு எழுத்த்தான் வந்தார் என்றும் சொல்லுவார்கள். தெய்வப்பிறவி போன்ற படங்களில் வசனத்துடன் பாடலும் எழுதியுள்ளார்.
     பிரமாதமாக வருவாரென்று எதிர்பார்க்கப்பட்ட சிலர் ஒன்றிரண்டு படங்களோடு வாய்ப்பின்றிப் போய் விடுகிறார்கள்.பூவை செங்குட்டுவன் அதில் ஒருவர். திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை போல....என சிவாஜி எம்.ஜி.ஆர் படங்களில் எழுதியும் மேலே வரமுடியாமல் போனது சோகம்தான். இதே போல் பல எம்.ஜி.ஆர்.படங்களில் பாடல்களும்,உதவி இயக்கமும் செய்த கவிஞர் நெ..ம.முத்துக்கூத்தன், நல்ல துணை நடிகரும் கூட ,சோபிக்க விடவில்லை விதி என்றுதான் சொல்ல வேண்டும். நடிகர்கள் பாடல் எழுதியதில் கே.டி.சந்தானம், - ரகசிய போலீஸ் 115 நினைவில் நிற்கும் ஒருபடம் -  முக்கியமானவர். பல பாடல்கள் ஏ.பி நாகராஜனின் பிந்திய படங்களில் நடிக்கவும் பாடல் எழுதவும் செய்துள்ளார். திருமலை தென்குமரி,வா ராஜா வா போன்றவை சில உதாரணங்கள்.ஏ.பி.என் படங்களில் கவி கா.மு. ஷெரிப் எழுதியவை மேதைமை நிறைந்தவை. திருவிளையாடலில் வருகிற பாட்டும் நானே, பார்த்தா பசுமரம் இரண்டுமே இவர் எழுதியதாக சொல்லப் படுபவை. ஏ.பி.என்,சிவாஜியை விட்டு விலக ஆரம்பித்த சமயங்களில், மேல் நாட்டு மருமகள் போன்ற படங்களில், நெல்லை அருள்மணி, உளுந்தூர்ப் பேட்டை சண்முகம் ஆகியோர்கள் பாடல்கள் எழுதினார்கள். உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் பல பக்திப் பாடல்களும் எழுதியவர். முனைவர் பட்டம் பெற்று அரசு அதிகாரியாக இருந்தவர். மேல் நாட்டு மருமகளில், உஷா உதுப் பாடிய ஒரு ஆங்கிலப் பாடலை நெல்லை அருள் மணி எழுதியிருப்பதாக நினைவு. தேவி என்றொரு படம்.மலையாளத்தில் பிரபலமான காவிய மேளா படத்தின் தமிழ்வடிவம். இசை மலையாளத்தின் அற்புதமான இசை இயக்குநர் வி.தக்ஷிணாமூர்த்தி(சுவாமிகள்) தமிழிலும் அவர் தான் . பாடல்கள் அத்தனையும் தேனாய் இனிக்கும் வரிகள் காவியத்தன்மை கொண்டவை. புலவர் வேதா போல் ஒரு பெயர். ஆனால் புலவர் வேதா என்று ஒருவர் மிகப் பிரபலமான பாடல் எழுதியிருக்கிறார். அது அ.தி.மு.க வின் இயக்க கீதம்(!) உ.சு.வாலிபன் படத்தில் வரும் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் பாடல்தான் அது. அவரது இன்னொரு (உ.சு.வா)
படத்தில் வராத பாடல்,நினைக்கும் போதே தனக்குள் சிரிக்கும் மாது..
     தமிழ்ப் படங்களில் ஆங்கிலப் பாடல்கள் எழுத வேண்டுமென்றால் உடனடியாக எல்லோரும் தேர்வது ரண்டார் கைஅவர்களைத்தான். பாடுவதற்கு உஷா உதூப், எழுதுவதற்கு ரண்டார் கய். தவப்புதல்வன், (love is  fine darling when you mind…) இதயக்கனி ( I’m gonna to tell you a story..”)  இரண்டும் அவர் எழுதியவைதான். ராண்டார் கய் ஹிண்டுவில் பழைய படங்களைப் பற்றி நிறைய எழுதுகிறவர். மதன மாளிகை படத்தில் ( under the mango tree, on the banks of Cauvery….) அழகான பாடலை எழுதியவர் அதன் இசை அமைப்பாளரான தோழர் எம்.பி. சீனிவாசன். இசையமைப்பாளர்களில் பாடல் எழுதிய இளையராஜா கங்கை அமரன் போன்ற தற்காலப் புலவர்கள் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர் வருவார் போவார் பூமியிலே வானத்து நிலவாய்ச் சிலர் இருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி என்று தொழிலாளி படத்தில் அருமையான பாடல் எழுதிய ஆலங்குடி சோமு சிறந்த பாடலாசிரியர். 1959 களிலேயே எழுதியிருக்கிறார். பத்தாம் பசலி திரைப்படம் எடுத்து வரிசையை இழந்து விட்டவர். அவினாசி மணி அடிமைப்பெண் போன்ற படங்களுக்கு பாடல் எழுதி, லேடி எம்.ஜி.ஆர் என்று கோடம்பாக்கம் அழைத்த கே.ஆர்.விஜயா தயாரித்த, நடித்த  படங்களையும் இயக்கினார். பாபனாசம் சிவன் ஆரம்பித்து இன்றைய நா.முத்துக்குமார் வரை எத்தனையோ பாடலாசிரியர்கள் தமிழ்த் திரையுலகில். சிலர் தோன்றியும் தோன்றாமலே போய் விட்டார்கள்.  பாடல் பெற்ற திருத்தலம், மங்களா சாஸனம் பெறாத தலங்கள் போல. மாயவனாதன் அப்படி ஒருவர்.
     லாயர் அண்ணாச்சி சொன்னதும்தான் தண்ணிலவு தேனிறைக்க பாடல் மாயவனாதன் பாடல் என்று தெரிந்தது.அவரை நெருக்கமாகக் கவனித்தோம். தொழிலாளி படத்தில் அவரது பாடல்கள் பிரமாதமாய் அமைந்தது.  சீக்கிரமே இறந்து விட்டார். அவரது ஊரான பூலாங்குளம் – நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரத்திற்கு அருகில் உள்ள- கிராமத்தில் அவருக்கு ஒரு சிலை வைத்திருக்கிறார்கள். லாயர்  அண்ணாச்சிக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. அவர் அறையில் ஒரு மேஜை மேல் பாட்டுப் புஸ்தகங்களை அடுக்கிக் கட்டி வைத்திருந்தார்.அது போக நியூஸ் பேப்பருக்குள் பொதிந்து கட்டுகளாகச் சில புத்தகங்கள் அலமாரியில் இருந்தன. நான்கு கண்கள் அதைக் குறும்பும் திருட்டுத்தனமும் பொங்கப் பார்த்தன. தம்பி இந்தப் பாட்டுப் புஸ்தகமெல்லாம் இடத்தை அடைச்சுட்டுக் கிடக்கு நீங்க வேணும்ன்னா எடுத்துக்குங்க, இங்க கல்யாணத்திற்கு வீட்டை ஒதுங்க வைக்கப் போறாங்க.... என்றார். அதையெல்லாம் எடுத்து வந்திருந்தால், இப்போது பெரிய பொக்கிஷமாக இருந்திருக்கும். நல்ல சான்ஸை விட்டுட்டமே என்று எங்கள் அதிகப்பிரசிங்கித் தனத்தை இப்போது நினைத்தாலும் வேடிக்கையும் ஏமாற்றமுமாய் இருக்கிறது .

 ஆனால் நாங்கள் பிஞ்சில் பழுத்தவர்களாயிற்றே..அந்த வயதிற்குள் கொஞ்ச சினிமாவா பாத்திருக்கோம். ””’’அண்ணாச்சி அப்படியே அந்த கலைப் பொன்னி புஸ்தவங்களும் தாங்களேன்..என்று சொன்னதும் அவரது முகம் சுண்டி விட்டது. ஒருகணம் தான், நாங்கள் sonnathu ஏதாவது சொல்லிச் சமாளிப்பதற்குள் ..ஏய் நீங்க  முதல்ல நடையக் கட்டுங்க... ஒங்களை வீட்டுக்குள்ள விட்டதே  தப்புல்லா...என்று விரட்டாத குறையாகச் சொன்னார். 

குழந்தையும் சினிமாவும் கொண்டாடும் இடத்தில்....


குழந்தையும் சினிமாவும் கொண்டாடும் இடத்தில்....

     சிவக்கொழுந்து என்கிற கொழுந்தண்ணன், நல்ல உயரம். ஸ்கூலுக்கு போகும் போது,வழியெங்கும் வேஷ்டி கட்டிக் கொண்டுதான் வருவார். எங்களை விட வயதில் மூத்தவர். எப்போதுமே மூத்தசெட் பின்னால் வர, நாங்கள் முன்னால் போவோம். ஆனால் அவர்கள் எல்லோருமே முன்னாலேயே கிளம்பி விடுவார்கள்.வழியில் ஒரு பெட்டிக்கடையில் நின்று வருவார்கள். அதற்குள் பின்னால் கிளம்புகிற நாங்கள் முந்தி விடுவோம். எங்களுடன் வருகிற அவரது தம்பி அவர் புத்தகங்களையும் சேர்த்துத் தூக்கி வருவான். ஸ்கூலுக்கு அருகில் உள்ள பெட்ரோல்பல்க் வரும் போது, பையை வாங்கிக் கொண்டு,அதன்  பின்புறம் போய், யூனிஃபாரம் டிராயருக்கு மேலாய் கட்டிக் கொண்டிருக்கும் வேட்டியை அவிழ்த்து பைக்குள் வைத்துவிட்டு, டிராயர் மட்டும் போட்டுக் கொண்டு வருவார். வகுப்பறைக்கு,வந்ததும் விடுவிடு என்று போய் கடைசியில் அமர்ந்து கொள்வார். நடுவில் யார் கூப்பிட்டாலும்  திரும்பவே  மட்டார்.பி.டி கிளாஸ் என்கிற டிரில் கிளாசுக்கு மட்டும் வெளியே வருவார் மற்றப்படி ஸ்கூல் முடிந்ததும் முதல் ஆளாக வெளியே வந்து அதே பல்க், மறுபடி வேட்டி, மறுபடி புத்தகப்பை தம்பியிடம் அல்லது எங்களிடம்.  பாஸ்கெட் பால் மற்றும் ஜாவலின் த்ரோ என்கிற எரியீட்டியில் ஸ்கூலுக்கு எப்படியும் ஒரு கப் வாங்கி வருவதால் அவரை பள்ளியை விட்டு நீக்காமல் வைத்திருந்தார்கள். அப்படியும் டிரில் மாஸ்டரிடம் ஒரு முறை ஏதோ பிரச்னையாகி விட்டது, அடிக்க வந்த அவரது பிரம்பை வாங்கி முறித்துப் போட்டுவிட்டுப் போனவர்தான்,ஆள் எங்கே என்றே தெரியவில்லை.
aanaaஆனால் டிரில் மாஸ்டர் செல்லம் என்பதால், அவர் புதுப்படம் ரிலீஸாகிற அன்று  கிளாசுக்கே வரமாட்டார். பெட்டிக்கடையோடு ஸ்டாப். மறுநாள் காலையில் ஸ்கூல் போகும்போது அவரோடு ஒட்டிக் கொண்டு செல்லுவோம். படத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டு  வருவார். பேச ஆரம்பிக்கிறபோது, தம்பி படம் வெறும் குப்பை தம்பி, என்பார். ஆனா பாட்டு பிரமாதமா போட்ருக்காம்ப்பா, ஏழு பாட்டும் அப்படி இருக்கு, ஃபைட்டும் தூளா இருக்கு, ஏய் யாரோ ஒரு புதுக் குட்டிடே ஒரு டைட் ட்ரெஸ் போட்டுகிட்டு கிளப்டான்ஸ்ல வரா பாரு, அதுக்கே துட்டு செத்துது.’ ‘கதை  என்ன அண்ணாச்சி என்றால். நல்ல புது மாதிரி ஜாலிக் கதையா இருக்குடே’, என்பார். கண்டிசனா மூணு,  நாலு வாரம் ஓடும்டே, என்பார்.வேற என்னலே வேணும், கழுந்து மூதி..என்று யாராவது அவர் தோள் மட்ட நண்பர்கள் கேட்டால், ஒரு தரம் தாராளமாப் பாக்கலாம், என்ன பொம்பளை கூட்டம் இருக்காது, அப்படீம்ப்பார். இதுதான் அவர் அநேகப் படங்களுக்கும் சொல்லும் விமர்சனம். பெண்கள்  கூட்டம் வரும் படம் என்றால் அவருக்குக் கன கொண்டாட்டம். தரை டிக்கெட்டில் பெண்கள் பகுதியை பிரித்திருக்கும் மரத்தட்டியை ஒட்டி உட்கார்ந்து விடுவார். ஒட்டகச் சிவிங்கி மாதிரி யாராவது அரை இருளில் தியேட்டரில் பெண்கள் பகுதி அருகாகத் தெரிந்தால் சொல்லி விடலாம். சிவக்கொழுந்து வந்திருக்கார்லே என்று. அவர் அதிகம் பார்த்த படம் கற்பகம். பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து கே ஆர். விஜயாவுக்காக கண்ணீரைக் கொட்டி,முந்தானையால் துடைத்துக் கொண்டிருதார்கள். இவர் கண்கொட்டாமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். தரை டிக்கெட் முழுவதும் பெண்களுக்கு என்று ஞாயிற்றுக் கிழமை மாலைக் காட்சிக்கு ஒதுக்கிய ஒரு ஞாயிறு அன்று அவருக்கு வருத்தமோ வருத்தம். ஏன் அண்ணாச்சி படம் தான் நெறைய தரம் பார்த்தாச்சே பொறவு என்ன வருத்தம், என்றால்,ச்சே சகிலாப்புள்ளை நடிப்பு பிரமாதம்ப்பா, யார் பையன் டெய்சிராணிக்குப் பொறவு இந்தப் புள்ளை வெளுத்து வாங்கியிருக்குல்லா என்பார்.  பேபி ஷகிலா,அதில்தான் விஜயாவுடன் அறிமுகமான நினைவு.
பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் சிறுவர்கள் பேண் வேடமிட்டது போக,சினிமாவில் பெரும்பாலும் பெண்குழந்தைகள் ஆண் வேடமிட்டு நடிப்பது வழக்கம். யார் பையன், ஸ்ரீதரின் ஒரு அற்புதக் காமெடிப் படம். ஒரு வங்காளக் கதையைத் தழுவியது. என்.எஸ்.கிருஷ்ணன் சகோதரர் திரவியம் தயாரித்தது.இதில் டெய்ஸி ராணி ‘பூரிஎன்ற பையனாக நடித்திருப்பார். உண்மையில் அந்தக் குழந்தையின் பெயர் டெய்சி இரானி என்பதுதான்.ஆனால் அதை தமிழ்க் குழந்தையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமூகம் டெய்சி ராணி என்றே அழைத்தது. என்.எஸ்.கே., ஜெமினி,சாவித்ரி என்று நட்சத்திரப் பட்டாளமே இருந்தாலும் ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டது, டெய்சி ராணிதான். அவ்வப்போது குழந்தை நட்சத்திரங்கள் முக்கியத்துவம் பெறும் படங்கள் சிறப்பாக ஓடிவிடும்.ஆனால் அதே பச்சை மண்ணை வைத்து பிள்ளையார் பிடித்தால் குரங்காகி விடும். டெய்சி ராணியுடன் அவர் தங்கை ஹனி இரானியும் சேர்ந்து நடித்த ‘நான் வளர்த்த தங்கைவெற்றி பெறவில்லை. ஒரு படத்தின் வெற்றி என்பதே முதல் நாள் மாட்னி பார்த்து வரும் ரசிகன் சொல்லும் வாக்கில்தான் இருக்கிறது. ஆனால் அவன் பாமரனாக இருப்பது முக்கியமென்று படுகிறது. என்னதான் முடிவு படம் பார்த்து விட்டு வரும்போது, செண்ட்ரல் தியேட்டர் மேனேஜர் கூப்பிடுவதாக அழைத்தார்கள்.கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அன்று அங்கு வந்திருந்தார். மேனேஜர் எங்களை அறிமுகப் படுத்தினார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஏம்ப்பா தம்பிகளா படம் எப்படி இருக்கு, என்றார். நானும் சபாபதி என்கிற நண்பனும்,பிரமாதமாருக்கு, என்றோம், சபாபதி, இந்த வருடம் தங்கப்பதக்கம் கிடைச்சாலும் ஆச்சரியமில்லை,என்றான். அவருக்கும் மகிழ்ச்சிதான்,ஆனால் அடுத்து அவர் கேட்டது எங்களை  கஷ்டத்திற்குள்ளாக்கியது, “படத்தோட கருத்து புடிபட்டுதா,” என்றார். நான் வாயைத் திறக்கும்முன்,ஒரு பாமர ரசிகன், “ சார், அதெல்லாம் புரியுது,காணாததுக்கு, அதைப் பாட்டுப் புஸ்தகத்திலேயே தான் போட்ருக்கீங்களே... படம், பாலையா நடிப்பு எல்லாம் நல்லாருக்கு, பாராட்டுப் பத்திரம் வேணும்ன்னா கிடைக்கும்,பதக்கமெல்லாம் வராது, என்று தேங்காய் உடைச்ச மாதிரி சொன்னான்.அவர் முகம் தொங்கிப்போய் விட்டது.ஆனால் உண்மையில் அதுதான் நடந்தது.என்னதான் முடிவின் முடிவு அதுதான்.
மகாதேவி படத்தில் மாஸ்டர் முரளி என்றொரு பையன் இளவரசனாக அழகாக நடித்திருப்பான்.அப்போதைய ரசிகர்களின் செல்லம் அவன். ஆனால் அதற்கு முன்பே எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த குழந்தைகள் படம் ‘ஜெய கோபி’.என் அண்ணனுடன் போனேன்.ஐந்து வயது இருக்கும். அதில் கடைசிக் காட்சியில்,கோபி ஒரு (சிகப்புத்) துணியுடன் ரயில்வே டிராக்கில் ஓடி வந்து ரயிலை நிறுத்தி பெரிய விபத்திலிருந்து காப்பாத்தி ‘ஜெய கோபிஆவான். மா கோபி என்ற கன்னடப்படம் ஒன்றின் டப்பிங்.அநேகமாக டப்பிங் படங்கள் அல்லது பிற மொழியில் வெற்றிபெற்ற குழந்தை நட்சத்திரங்கள் நடித்த படங்களே தமிழில் ரீமேக் ஆகும். அப்போது ‘ஜேசூஸ் பச்சே’- ’துப்பறியும் குழந்தைகள் என்று ஒரு ஜப்பானியப் படத்தின் ஹிந்தி டப்பிங் படம், அடிக்கடி சனி ஞாயிறு காலைக்காட்சிகளில் போடுவார்கள். எங்கே போட்டாலும் தவறாமல்ப் போய்விடுவோம். நல்ல சிரிப்பாக இருக்கும். ஜெய கோபி படம் போலவே அல்லது அதே கதையுடன் பந்துலு ‘ஷகிலாவை வைத்து ‘எங்க பாப்பா எடுத்தார். பேபி ஷகிலா-கற்பகம் படத்தில் ஹிட் நடிகையான பின் ‘வேட்டைக்காரன் படத்தில் எம்.ஜிஆரின் மகனாக நடித்தார். அதற்குப் பின் எ.வீ.பிள்ளை ஒரு மகத்தான வெற்றி. தொடர்ந்து ஷகிலாவில் மையம் கொண்டது தமிழ் சினிமா.  கன்னித்தாய் படம் ஷகிலாவைச்சுற்றி பின்னப்பட்ட படம்.அது ஒரு ஆங்கிலப்படத்தின் விலகிய தழுவல் என்றார்கள்.பாவம் ஆங்கிலப்படம். தொடர்ந்து நாடோடி படத்திலும் ஷகிலாவுக்கு கேரக்டர் உருவாக்கப் பட்டது.சரோஜாதேவியின் தங்கையாக. சரோஜாதேவிக்கே மகளாகப் போட வேண்டிய குழந்தை, வி.கே. ராமசாமியின் மகளாக. ஆனால் அந்தக்காலத்தில் ஐம்பது வயதில்கூட குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களும் உண்டு. அம்மா எங்கே என்ற மாடர்ன் தியேட்டர்ஸ் படத்திலும் ஷகிலாவுக்கு நல்ல ரோல்.இந்திப் படத்தின் தழுவல்.சில பாடல்கள் உட்பட.
மாடர்ன் தியேட்டர்ஸ் கைதி நம்பர் 911 படத்தை கைதி கண்ணாயிரம் என்ற பேரில் படமாக்கினார்கள். பேபி சாவித்திரி என்ற பெண்குழந்தை குமரன் என்ற ஆண் குழந்தை ரோலில் நடித்தது. இந்திப்படத்தின் டியூனிலேயேமகாதேவன் போட்ட ‘கொஞ்சிக் கொஞ்சிப் பேசி  மதிமயக்கும்...பாடலுடன் படம் சூப்பர்ட் டூப்பர் ஹிட்.இதன் ஹிந்திப் பதிப்பில் டெய்சி இரானி, கடத்தப்படும் பையனாக நடித்தது. பேபி சாவித்ரி,ஜாவர்சீதாரமன் மகள் என்று கூட ஒரு பேச்சு அடிபட்டது அது உண்மையில்லை என்றும் சொல்லுவார்கள். உண்மையில் ஜாவர் சீதாராமனே ஒரு குழந்தை மாதிரித்தான் இருப்பார். அவருக்கு குழந்தைகள் சப்ஜெக்ட் ரொம்பப் பிடிக்கும். களத்தூர் கண்ணம்மா, குழந்தையும் தெய்வமும், ராமு எல்லாம் அவர் கதை வசனம்தான்.இதே போல ஸ்ரீதரின் கல்யாணபரிசு படத்தில் வரும் குழந்தை நட்சத்திரம் பாபு, அப்போது காலமாகிப் போன ஸ்டண்ட் மாஸ்டர் பலராமன் அவர்களின் மகன். ஆனால் அதை படத்தின் டைட்டிலில் போடுவார்கள். தந்தையை இழந்த உண்மையான சோகத்தை, குழந்தை தாயை இழந்த சினிமா சோகமாக வெகு இயற்கையாகக் காட்டியிருக்கும்.
மாடர்ன் தியேட்டர்ஸ் 1959-60 களின் ‘உஸ்தாத்இந்தி சீரியல்களைத் தமிழில் தர ஆரம்பித்தார்கள். உஸ்தாதோன் கி உஸ்தாத் -வல்லவனுக்கு வல்லவன், தோ உஸ்தாத் - ‘இரு வல்லவர்கள் என்றும் வந்தது.இரு வல்லவர்கள் படத்தில் ஷகிலாவுக்கு, குவாகுவா பாப்பா இவ குளிக்கக் காசுகேப்பா..என்று எம்.எஸ். ராஜேஸ்வரி பாடுவார். கைதி கண்ணாயிரத்தில் சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், அம்மா எங்கே படத்தில் அம்மா அம்மா எங்கே போனே...என்று குழந்தைகள் படம் என்றாலே ராஜேஸ்வரி பாட்டு வந்து விடும். அப்படியே அந்த நல்ல பாடகியைப் பலி வாங்கியது தமிழ் சினிமா. (நல்ல வேளை எஸ்.ஜானகி தப்பிவிட்டார். சில படங்களில் எல்.ஆர் .அஞ்சலி, குழந்தைப் பாட்டு பாடுவார்.) எல்லாமே, அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...என்ற கமலஹாசனின் பால்ய முக பாவத்தில் ஆரம்பித்தது. 1960ல் ஆரம்பித்த கமலின் பயணம், பாத காணிக்கை, ஆனந்த ஜோதி, வானம்பாடி எனத் தொடர்ந்தது. களத்தூரின் அதிசயச் சிறுவன் உலகநாயகனாக மாறப் பலகாலம் காத்திருக்க வேண்டியிருந்தது.
பொதுவாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள்,வளர்ந்த பின் நடிகராகவோ நடிகையாகவோ பிரகாசித்தது கொஞ்சம் பேர்தான். கமல் ஒருவர். தேவதாஸ் படத்தில் ஜூனியர் சாவித்ரி ரோலுக்கு வரும் பேபி சரஸ்வதி,குமாரி சச்சுவாகி இன்னும் சிரஞ்சீவியாக இருக்கிறார். ஆனால் சூப்பர்ஸ்டார் ஆக முடியவில்லை. கமல் போல அப்படி ஆனது ஸ்ரீதேவிதான்.திருவிளையாடல் படத்தில் பாலமுருகனாக முதலில் வந்தார். குமுதம் இதழில் ஒரு புதிர் போட்டிருப்பார்கள். ஸ்ரீதேவி டாப்லெஸ் ஆக நடித்த படம் எது? இன்னொரு பக்கத்தில், விடை: திருவிளையாடல். குமுதத்தின் திருவிளையாடல்களில் இது ஒன்று. ஸ்ரீதேவி இங்கிருந்து இந்திப்படம் வரை சென்று கலக்கினார். இன்னொருவர் பேபி ஷாலினி. அலை பாயுதே, காதகுக்கு மரியாதை என்று அமர்க்களம் பண்ணியவர் அடங்கிப் போனார் குடும்ப பந்தத்தில்.
நெஞ்சில் ஓர் ஆலயத்தில் பெயர் வாங்கின பல கலைஞர்களில்  குட்டி பத்மினி என்கிற பேபி பத்மினி ஒருவர். அம்மா ராதாபாய் ஒரு நடிகைதான். மாணவன் படத்தில் கமலுக்கு ஜோடியாக வந்தார்.கமல் அடைந்த உயரத்தை அடைய முடியவில்லை. பொதுவாக தமிழ்ப்படக் குழந்தைகள், குழந்தைகள் போலவே பேசாது. வசனகர்த்தாக்கள்,இயக்குநர்கள் தங்கள் அறிவு பூராவையும் குழந்தைகளின் அதிகப் பிரசங்கித்தனமான நடிப்பில் தான் காண்பிப்பார்கள். அப்படியொரு  குழந்தையாகவே குட்டி பத்மினியை ரசிகர்கள் பார்த்தார்கள். வா ராஜா வா புகழ் மாஸ்டர் ஸ்ரீதரையும் அப்படித்தான்,வளரவே விடவில்லை. அவர் தங்கை சுமதியும் அண்ணன் காட்டிய வழியிலேயே போனார், போயே விட்டார். ரோஜா ரமணி நன்றாக வருவார் என்று எதிபார்த்தோம்.அவருக்கு உடல் வாகில் முதிர்ச்சியே வரவில்லை. பேபி ஷகிலா குமாஸ்தாவின் மகள் படத்தில் சிவகுமாருக்கு இணையாகவோ என்னவோ வருவார். ஆனால் அப்புறமென்ன ஆனார் என்றே தெரியவில்லை. ஆலிவர் டுவிஸ்ட்டின் தழுவல், சந்தா ஔர் பிஜிலி இந்திப்படத்தின் அப்பட்டமான காப்பியான அனாதை ஆனந்தன் படத்தில் நடித்த மாஸ்டர் சேகர் கொஞ்சம் நம்பிக்கை தருகிற குழந்தை நட்சத்திரம். குடியிருந்த கோயில் படத்தில் ஜூனியர் எம்.ஜி.ஆர் ரோல்களில் வருவான். சுவாமி ஐயப்பன் படத்தில் ஐயப்பனாகவும் நடித்தார்.
கொஞ்சம் குழந்தையாகவே நடித்த குழந்தை நட்சத்திரம் பேபி ராணி. குழந்தைக்காக படம் ஒரு மெகா ஹிட். சுந்தரராஜன்,மனோகர் போன்றவர்களின் மிகை நடிப்பையும் மீறி ராணி நன்றாக நடித்திருந்தது. தொடர்ந்து கண்ணே பாப்பா,அடிமைப்பெண்,பேசும் தெய்வம் என்று நன்றாகவே நடித்தது. குழந்தைக்காக படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் சார்பாக நம்ம குழந்தைகள் படம் வந்தது. ‘ராதையைப் பெண் பார்க்கக் கண்ணன் வந்தான் நெஞ்சின் ரகசியம் பரிமாற மன்னன் வந்தான்...என்ற அற்புதமான ஜானகியின் பாடலைத் தவிர வேறு ஒன்றுமில்லை. கண்ணே பாப்பா பாடலின் அடுத்த வரியான கனிமுத்துப் பாப்பாவைத் தலைப்பாகக் கொண்டு ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடிக்க வெளிவந்தது. அந்தாஸ் இந்திப் படத்தின் தழுவல். எஸ்.பி. முத்துராமனுக்கு பேர் வாங்கித் தந்த படம்.
மாணவன், குறத்திமகன் படங்களுக்குப் பின காணாமல்ப் போன கமல்,கே.பலசந்தரின் அரங்கேற்றம் படத்தில் மறு அரங்கேற்றம் பெற்று வந்தார். அதிலும் அவர் ஒரு வளர்ந்த குழந்தை போலவே இருந்தார்.சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் ஒரு பெரிய ப்ரேக் கிடைத்தது. கமல் மறு பிரவேசம் வந்த காலத்தில்தான் சிவக்கொழுந்து அண்ணன், அண்ணாச்சியாகத் திரும்பி வந்தார். பட்டாளத்திலிருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் அதற்கான செழிப்பு இல்லை. பழையபடி முதல்நாள் முதல்க் காட்சிக்கு தரை டிக்கெட்டில் அடிபிடி போட்டுக் கொண்டு நிற்பார். சட்டைப் பித்தான் எல்லாம் அறுந்து விழ எப்படியாவது டிக்கெட்டோடு முதல் ஆளாக வெளிவருவார் கவுண்டரை விட்டு. தயாராக அரைநாண் கயிற்றில் கொருத்திருக்கும் ஊக்கை எடுத்து சட்டையை மாட்டிக் கொள்வார். வே எப்படிவே வேட்டி மட்டும் உருவாம வந்திருதேரு,அது போனால்லா கொழுந்து, கழுந்து உலக்கை ஆகிற கதை தெரியும்என்பார்கள்,அவரது  நண்பர்கள். ராமு படத்தில் மாஸ்டர் ராஜ் குமார் என்கிற பையன் நடித்தான். ஆனால் சிவக்கொழுந்து, அது நடிகை ஜெயாதான் சின்னப்புள்ளையா இருக்கையில ஆம்பிளைப்பையனா நடிச்சிருக்கா, என்று சாதிப்பார். ஜாடை அப்படித்தான் இருக்கும்.சினிமாவில் எதுவும் சாத்தியம்.

பகலில் ஒரு இரவு படத்தின் ஸ்டில்கள் எல்லாம் கன கவர்ச்சியாக இருக்குடே என்று ஸ்ரீ தேவியைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் முந்தின இரவு. ஏய் பஸ்ஸில, ரயிலில பிரசவமாகிற குழந்தைகள் மாதிரி இதெல்லாம் ஸ்டுடியோவிலேயே பொறந்ததா இருக்கும்ப்பா... அதான் சூப்பரா நடிக்கிதுக...16 வயசிலே பார்த்தீங்களா...., என்று. அன்றுதான் முதன் முறையாகக் கேட்டார் சபாபதியிடம், தம்பி நாளைக்கு நமக்கு ஒரு டிக்கெட்டுக்கு காசு சேங்ஷன் பண்ணனும்,வள்ளிசாகக் காசில்லை கையில. அவன், பார்ப்போம் அண்ணாச்சி என்றான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த  அவரது தம்பி அவரைக் கடுமையாகச் சத்தம் போட்டான்,ஏன் இப்படி மானத்தை வாங்குதேரு,என்று.அவன் போலீசுக்கு செலக்ட் ஆகியிருந்தான். சபாபதியும் பார்க்கலாம் அண்ணாச்சி,என்று சொல்லி விட்டான்.  மறுநாள் வழக்கம் போல தரை டிக்கெட் கூட்டத்தில் தலை தெரிந்தது. கவுண்டரில் இருந்து அவர் வெளி வருவதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தோம், நாங்கள் இரண்டு மூன்று பேர். நாங்கள் சேர் டிக்கெட் எடுத்திருந்தோம். அவர் வெளியே வரவும் அவரை இரண்டு பேர் கையைப் பட்டென்று பிடித்து அழைத்துப் போனார்கள். கையை விடுங்க வாரேன் என்று கையை உதறினார். விட்டு விட்டாலும் அணைத்தபடியே போனார்கள்.  அவர்களைப் பார்த்தாலே தெரிந்து விட்டது, போலீஸ் என்று. என்ன ஆச்சு.. என்று யாருக்கும் புரியாத போது, டிக்கெட் எடுத்தபடி வந்த சிவக்கொழுந்துவின் சேக்காளி சொன்னார்,மாட்டிக்கிட்டானா மிலிட்டரிலேருந்து சொல்லாமக் கொள்ளாம வந்தா விடுவாங்களா, ஏம்ல வந்தேன்னா சினிமா பாக்காம இருக்க முடியுமாங்கான்,என்று. மாட்னி ஷோ கூட்டம் பூராவும் வேடிக்கை பார்க்க, தலையைக் குனிந்தபடி சிவக்கொழுந்து கையில் பச்சைக்கலர் தரை டிக்கெட்டை இறுகப் பிடித்தபடியே போய்க் கொண்டிருந்தார்.

செய்கூலி, சேதாரம், சினிமாக் கம்பெனிகள்




செய்கூலி, சேதாரம், சினிமாக் கம்பெனிகள்
இரண்டாம் வகுப்பு படிக்கிற என்னையும்,மூன்றாம் வகுப்பு படிக்கிற  அக்காவையும் உடன் அழைத்துக் கொண்டு அம்மா, அப்பா தவசுப்பிள்ளை பழனி ஆகியோருடன் ஆசாரிப்பள்ளம் மிஷன் ஆஸ்பத்திரியில் இரண்டு, மூன்று மாதம் தங்கியிருந்தோம், உறவினர் ஒருவரின் சிகிச்சைக்காக. ஆறு வயது எனக்கு.எங்களை ஊரில்,அண்ணன்கள் பொறுப்பில் விட்டுச் செல்ல அப்பாவுக்கு இஷ்டமில்லை. இரண்டு மாதங்கள் பள்ளிக் கூடத்திற்கு லீவு. பள்ளிக் கூடத்தில், ரெண்டு மாசம் லீவு எடுத்தேன்னா பாடம் மண்ணாப் போயிருமெலெ, என்ற ஹெட் மாஸ்டர் அம்மாவின் ஏச்சு அப்பாவைப் பார்த்த உடன் மாறி விட்டது. ஸ்கூல் பெயர் சி.எம்.எஸ் எலிமெண்டரி ஸ்கூல் என்றிருந்தாலும், அது சுவரில் சிமெண்டால் தடித்த எழுத்துகளால் பொறிக்கப் பட்டிருந்தாலும், கூப்பிடுகிறதென்னவோ குட்டை வாத்தியார் பள்ளிக்கூடம்தான். எந்தக் காலத்தில் எந்த வாத்தியார் குட்டையாக இருந்தாரோ தெரியவில்லை. இந்த ஹெட் மாஸ்டர் அம்மா உயரமானவர்தான்.ஹெட் மிஸ்ட்ரெஸ் என்று சொல்கிற பழக்கமெல்லாம் கிடையாது.வாத்தியாராய்யா என்றால் சார், வாத்தியாரம்மா என்றால் ‘அம்மாங்க’ .இது அஞ்சாப்பு அம்மாங்க. அவங்க கண்டிப்பானவங்க. தலை சீவாமல் வந்த ஒரு பெண் குழந்தையின் தலையில், சொல்லிச் சொல்லிக் கேட்காதததால் மண்ணெண்னையையோ வேப்பெண்ணையையோ தேய்த்து விட அது கொஞ்சம் பிரச்னையாகி விட்ட்து அப்பாதான் அஞ்சாப்பு ‘அம்மாங்கவைக் காப்பாத்தி விட்டார்கள்.அதனால் அப்பாவைப் பார்த்ததும்அவன் ஸ்கூலுக்கே வரல்லேன்னாலும் பாஸாயிருவானே ‘ என்று பேச்சையே மாற்றி விட்டார்கள். இப்படீ உசுப்பேத்தி உசுப்பேத்தி எவ்வளவு இழந்து இருக்கிறேன் என்று சமயத்தில் யோசித்தால் கஷ்டமாக இருக்கும்.
     அது ஆகஸ்ட் மாசமாக இருக்கும். சட்டி பெட்டிகளுடன் கிளம்பினோம். ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரி நாகர் கோயிலில் இருந்து பத்து மைல் தூரமாவது இருக்கும். வேப்பமூடு ஜங்ஷனிலிருந்து போகவும் வரவும்  ஒரே பஸ்தானென்று நினைவு. ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் டச்சுக் காரரோ என்னவோ. அதற்கடுத்த இடத்தில் இருப்பவர் ‘சின்ன டாக்டர்’.அது என்ன மிஷனரி என்று மறந்து விட்டது.ஆனால் கறுப்பு அங்கி அணிந்திருப்பார்,ஃபாதர். ஃபாதரை ‘ஐய்யர்என்று அழைப்பதுதான் திருநெல்வேலி வழக்கம். இவருக்கு கறுப்பு ஐயர் என்று பெயர் வைத்தோம் நானும் அக்காவும். அவர் வேகமாக நடப்பார். எதிரில் வரும் யாரையும் பார்க்க மாட்டார்.வணங்கினால் பார்க்காமலே வணக்கம் மட்டும் போடுவார். இதெல்லாம் நமக்கான விஷயமில்லை. மதியம் பனிரண்டரை மணி வாக்கில் நாகர்கோயில் போகிற பஸ் ஒன்று வரும். அது ஆஸ்பத்திரியின் பிரம்மாண்ட  வளாகத்தின் நுழைவு வாயில் அருகே நிற்கும். அங்கிருந்து ஆஸ்பத்திரியும் நாங்கள் தங்கியிருக்கும் Pay ward –க்கும் ஒரு கிலோமீட்டராவது இருக்கும். வாரத்தில் இரண்டு நாளாவது அப்பாவுடன் நாகர்கோயில் போய் விடுவேன். மருந்து வாங்க,வீட்டுச் சாமான்கள் வாங்க அப்பாவும் நானும் போவோம். நாகர் கோயில் போகிற போது புதுப்படம் வந்திருந்தால் மாட்னி போய் விடுவோம். அப்பாவுக்கு திருநெல்வேலியின் சினிமா கம்பெனிகளான ‘இந்தியா டாக்கி டிஸ்ட்ரீயூட்டர்ஸ்,பாப்புலர் டாக்கீஸ்,எஸ்.கே எல்லோரும் பழக்கம். பாப்புலர் டாக்கீஸில் கொஞ்சம் பங்கு இருந்ததாகச் சொல்வார்கள். அதே பழக்கத்தில் அங்கும் பயனியர் பிக்சர் பாலஸ்,  லக்ஷ்மி,  ஒழுகினசேரி சரஸ்வதி என்று பல தியேட்டரிலும் முதலாளிகளோ, விநியோகஸ்தரின் ‘ரெப்ரசெண்டேட்டிவோதெரிந்தவர்களாக இருப்பார்கள்.
     நல்ல மதியம் தகரக் கொட்டகை வெக்கையைக் கக்க  உடலெல்லாம் வியர்த்து ஊத்த ‘தாய்க்குப்பின் தாரம்பார்த்தோம்.அன்றுதான் படம் ரிலீஸ்.முதலில் எம்.ஜி.ஆர் ரேக்ளாவில் ‘மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே.. என்று பாடியபடி வருகிற காட்சி நினைவுக்கு வருகிறது. ‘தம்பிப்பயலேஎன்ற வார்த்தை சிரிப்பையும் எம்.ஜி.ஆர் மேல் ஒரு நெருக்கத்தையும் உண்டு பண்ணிய உணர்வு கூடப் பசுமையாய் இருக்கிறது. அதையே பாடிக் கொண்டு திரிந்ததாக பக்கத்து வார்டில் உள்ளவர்கள் கிண்டல் செய்வார்கள்.  அது போதாதென்று தனியாக, தனக்குத்தானே, தாழ்வான புன்னை மரக்கிளையொன்றைப் பிடித்துக் கொண்டு மாட்டை அடக்குவதாக நடிப்பதையும் கூடக் கேலி செய்வார்கள். குறிப்பாக ‘சின்னடாக்டர். அவரது குடும்பத்துடன் பழகியபின் எல்லோருமாக, மாலை ஆறு மணிக் காட்சிக்கு ‘பயனியர் பிக்சர் பாலஸில் குலதெய்வம் படம் போனோம்.பஸ் கிடைத்து போவதற்குள் படம் போட்டு விட்டார்கள். சீட்டுகளில் கயிறு கட்டி ரிசர்வ் செய்து வைத்திருந்தார்கள். அந்தப்படம் அப்பாவின் நண்பரான எஸ்.கே பிக்சர்ஸ் படம். ஏவிஎம் இணைத் தயாரிப்பு. ஹாலிவுட் கம்பெனிகளான எம்.ஜி.எம், டுவெண்டியெத் செஞ்சுரி ஃபாக்ஸ் போல,ஏ.வி.எம் நிறுவனம் எஸ்.கே பிக்சர்ஸ்,புத்தா பிக்சர்ஸ்,கமால் பிரதர்ஸ் ஆகியோருடன் படம் தயாரிப்பார்கள்.புத்தா பிக்சர்ஸ் பீம்சிங் கம்பெனி. என்றாலும் ஏ.வி.எம் மின்  பின்னணியும் இருக்கும், அவற்றை அங்கே எடிட்டிங்கில் பணியாற்றிய பீம்சிங் இயக்கினார். எஸ்.கே.பிக்சர்ஸ் ‘குலதெய்வம் படத்தை கிருஷ்ணன் பஞ்சுவும், ‘பொன்னு விளையும் பூமிபடத்தை பீம்சிங்கும் இயக்கினர்.    
நாகர்கோயில் காலத்தில் பாசவலை, வான ரதம் இரண்டும் பார்த்த நினைவும் இருக்கிறது.இரண்டும் அப்படியொரு சோகம். படம் பிடிக்கவில்லை. வான ரதம் பார்க்கையில் அமைதியாய் அழுது கொண்டிருந்தேன்.தற்செயலாகக் கவனித்த அப்பா,அடப்பைத்தியாரா படம் புடிக்கலைன்னா சொல்ல வேண்டியதுதானலே, என்று அழைத்துக்கொண்டு வெளியே வந்தார். தியேட்டர் மானேஜரோ யாரோ, நான் அழுவதைப் பார்த்து விட்டு கலரெல்லாம் வாங்கிக் கொடுத்தார். ஆனால் வேடிக்கை என்னவென்றால், என் நடுவுள்ள அண்ணன், பெயர் சீனி அண்ணன்,சினிமா அண்ணன் என்று சொல்லலாம்,அவரிடம் கற்றதுதான் சினிமா அறிவெல்லாம்,  எங்களைப் பார்க்க வந்திருந்தவர் அங்குள்ள போஸ்ட்மேன் நடராஜன் என்பவருடன் நன்றாகப் பழகி விட்டார்.இருவரும் வான ரதம் பார்க்கக் கிளம்பினார்கள். அவர், நௌஷத் படம்  மியூசிக் பாட்டு எல்லாம் பிரமாதம் என்று சொல்லிப் போஸ்ட் மேனைக் கிளப்பிக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் தியேட்டர்காரர்கள் எழுதும் தட்டி விளம்பரங்களில், இந்திப் படத்தின் நடிக நடிகையர் பெயரை எழுதுகிறார்களோ இல்லையோ இசை: ஓபி.நய்யார், நௌஷத், சங்கர்-ஜெய்கிஷன், சித்ரகுப்தா, சி.ராமச்சந்திரா என்று தவறாமல் எழுதுவார்கள். அண்ணனுடன் நானும் வருவேன் என்று அழுதேன். அப்பா முதலில் சத்தம் போட்டுப் பார்த்தார், அப்புறம் கண்டிப்பாக ஒரே வார்த்தையில் நாளைக்கு ‘ரங்கோன் ராதாபோகலாண்டா என்று சொல்லி விட்டு மதியத் தூக்கத்திற்குக் கிளம்பி விட்டார். வீட்டில் இருந்தால் அப்பா நிச்சயம் மத்தியானம் ஒரு மணி நேரமாவது தூங்குவார். அப்போது எழுப்பினாலோ இடைஞ்சல் செய்தாலோ ‘சண்டாளமாய்க் கோபம் வந்து விடும். அதனால் நான் முரண்டு அழுகையை நிறுத்தி விட்டு புன்னை மரத்தடியில் போய் மாட்டுச் சண்டையைத் தொடர ஆரம்பித்து விட்டேன். பிற்காலத்தில் கடன்காரர்கள் தேடி வரும்போது கூட அப்பாவின் மதியத் தூக்க நேரத்திற்கு வரமாட்டார்கள். அவ்வளவு பிரசித்தம் ‘பண்ணையாரின் தூக்கம்’.
     ரங்கோன் ராதா, ‘நேஷனல் பிக்சர்ஸ் பராசக்தி பெருமாள் செட்டியார் தயாரித்தது.ஏ.வி.எம் பின்னணி உண்டா நினைவில்லை. நேஷனல் பிக்சர்ஸ் பராசக்தி ஏ.வி.எம் பின்னணியுடன் வந்தது. ஏ.வி.எம் கூட்டுத் தயாரிப்பு அல்லது தயாரித்துக் கொடுத்த படங்கள்,கம்பெனிகள் நிறைய உண்டு. கலைஞர்கள், ஸ்டுடியோ, விநியோகம் எல்லாம் ஏ.வி.எம். பார்த்துக் கொள்வார்கள். அப்படி வெளி வந்தவை, நேஷனல் பிக்சர்சுக்காக- பராசக்தி,ரத்தக்கண்ணீர்.கமால்பிரதர்ஸுக்காக - தெய்வப்பிறவி, புதையல், வாழ்க்கை வாழ்வதற்கே. ஜி.கே.புரொடக்‌ஷன்ஸுக்காக-சகோதரி, பார்த்தால் பசி தீரும்.- எஸ்.கே பிக்சர்சுக்காக குலதெய்வம்,பொன்னு விளையும் பூமி, புத்தா பிக்சர்ஸுக்க்காக பதி பக்தி,பாவமன்னிப்பு. பின்னால் ஜேயார் மூவீசுக்காக முத்து வேல்மூவிஸ் பேனரில்- அனாதை ஆனந்தன், கண்மணி ராஜா..போன்றவை. வேறு எந்த நிறுவனமும் இவ்வளவு தயாரித்ததாக நினைவில்லை.ஏவிஎம் சகோதரர்கள் முருகன்,சரவணன், குமரன் ஆகியோர் முருகன் பிரதர்ஸ் என்று புதிய பேனர் உருவாக்கி வீரத்திருமகன்,நானும் ஒரு பெண், காக்கும்கரங்கள் என்று எடுத்தார்கள். அன்பேவா கூட பால சுப்ரமணியம் & கோ வழங்கும் ஏ.வி.எம் மின் அன்பே வா என்றே வெளி வந்தது.எம்.ஜி.ஆருக்கு அதற்காக 28 லட்சம் ஒரே பேமெண்ட்டாக பால சுப்ரமணியம் & கோ கொடுத்த்தாகப் பரவலாகப் பேச்சு அடி பட்டது.
     ஏவி.எம் நிறுவனத்தை விட அதிகம் படம் தயாரித்தது, மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். 120 படங்கள் வரை தயாரித்தது.100 வது படமான கொஞ்சும் குமரி தயாரிக்கும் போதே அதிபர் டி.ஆர் சுந்தரம் இறந்து விட்டார். அந்தப் படத்தின் இடைவேளையின் போது ‘அவரது  இறுதி ஊர்வலம்நிகழ்ச்சியும்  அவரைப் பற்றிய சிறு டாகுமெண்டரியும் போடுவார்கள். இறுதி ஊர்வலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டு சேலம் நகர மக்களுக்கு துயரத்துக்கிடையே மகிழ்ச்சியை வழங்கினார்கள். அந்த இறுதி ஊர்வலத்தைப் பார்ப்பதற்காகவே கொஞ்சும்குமரியை-கதாநாயகன் மனோகர், கதாநாயகி மனோரமா- இடைவேளை வரை சகித்துக்கொண்டார்கள். படம் ஓடிய ஒன்றிரண்டு வாரங்களில் ரசிகர்களின் கட்டாயமான வேண்டுகோளுக்கேற்ப படம் ஆரம்பித்து இருபது நிமிடங்கள் கழித்து அந்த இறுதி ஊர்வலம் காட்டப்பட்டது. அதற்காகக் கூட கொஞ்சும் குமரியை ஒரு தரம் 20 நிமிடம் பார்த்து வந்தோம். அந்தக் கால ரசிகர்களின் சினிமாப் பாசம் மகாத்தானது. மாடர்ன் தியேட்டர்ஸில் பணியாற்றிய எம்.ஏ.வேணு, எம்.ஏ.வி பிக்சர்ஸென்று ஆரம்பித்து ரத்னா ஸ்டுடியோவும் ஆரம்பித்து நிறையப் படங்கள் எடுத்தார். ஏ.பி.நாகராஜன்,டி.என்.சிவதாணு, கே.சோமு என்று தமிழரசுக்கழக அனுதாபிகளான ஒத்த மனதுடையோர் அங்கே இணைந்து நல்ல படங்களாக டவுன் பஸ், முதலாளி,சம்பூர்ண ராமாயணம் ,பணம்பந்தியிலே, செங்கமலத்தீவு என்றும் சிறுசிறு நடிகர்களான ஆனால் சிறந்த கலைஞர்களான வி.கோபாலகிருஷ்ண, சாரதா,சந்திரகாந்தா போன்றோரை வைத்து மாதவி,பாஞ்சாலி என்றும் பலபடங்கள் எடுத்தார்கள்.
     மிகப்பெரிய நிறுவனங்களான ஏ.வி.எம்,மாடர்ன் தியேட்டர்ஸ் இவையிரண்டைப் போலவே தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமானது ஜெமினி ஸ்டுடியோ. ஜெமினி தன் தயாரிப்புகள் தவிர வாசனின் மருமகனான ஜி.எஸ்.மணி தயாரிப்பில் ஜெம் புரொடக்‌ஷன்ஸ் படங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ஜெமினியின் கதாசிரியர்களில் ஒருவரான – வஞ்சிக்கோட்டை வாலிபன்,ஆயிரத்தில் ஒருவன் ஆகியவற்றின் மூலக் கதையாசிரியர்- கே.ஜே.மகாதேவன் தயாரித்து இயக்கிய அவள் யார், ஹல்லோ மிஸ்டர் ஜமீந்தார் போன்ற படங்களுக்கு ஜெமினி துணை நின்றது. அது போலவே மணிஜே சினி ப்ரொடக்‌ஷன்சுக்ககாக இருமலர்கள்,நீரும் நெருப்பும் ஆகியவற்றிற்கும் துணைநின்றது. ஜெமினி. உதயம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளரான ஆனந்த விகடன் மணியன் படங்களுக்கும் ஜெமினி உதவியது. கே.பாலசந்தரின் எதிர்நீச்சல் இருகோடுகள், வெள்ளி விழா போன்ற படங்களுக்கும் ஜெமினி விநியோகப் பொறுப்பைப் பார்த்துக் கொண்டது. ஏ.வி.எம்,ஜெமினி,மாடர்ன் தியேட்டர்ஸ் விநியோகத்தை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.அவர்களின் பெரும்பாலான நகரின் வினியோக அலுவலகங்களின் மேனேஜர்கள் எல்லோருக்கும் ஒரு ‘புராணிக சாயல் இருக்கும். எல்லோருமே கம்பெனி ஆரம்பித்ததிலிருந்து இருப்பவர்கள்.
     ஏ.வி.எம்,ஜெமினி தவிர நிறைய ஸ்டுடியோ அதிபர்கள் அவர்கள் ஸ்டுடியோ பெயரிலேயே படங்கள் தயாரித்தனர். மெஜஸ்டிக் ஸ்டுடியோ( நாட்டுக்கொரு நல்லவள்)  (பின்னாளில் சாரதா/கற்பகம்) நரசு ஸ்டுடியோ( ஸ்ரீ வள்ளி,கூடி வாழ்ந்தால் கோடி நன்மை) என்று பல நிறுவனங்கள் படங்கள் தயாரித்தனர். ஏ.வி.எம்மிலிருந்து பிரிந்த வாசு மேனன் வாசு ஸ்டுடியோ என்று ஆரம்பித்து ஒரேவழி, கைராசி பூவும்பொட்டும் படங்கள் எடுத்தார். கே.சங்கர் இயக்குநராகப் பிரபலமானது கைராசியில்தான். குறிப்பாக ஏ.கே.வேலன் அருணாசலம் ஸ்டுடியோஸ் சார்பில் தை பிறந்தால் வழி பிறக்கும், காவேரியின் கணவன், பொன்னித் திருநாள்,பெரிய கோயில் என்று பலபடங்கள் தயாரித்தார். தமிழ் மீது பற்றுக் கொண்டவர். எம்.ஜி.ஆருக்காக ஒரு கதை எழுதி அவரிடம் எடுத்துக் கொண்டு போனாராம்.அவர் இந்தக் கதை சரியில்லை என்று சொல்லிவிட்டாராம். அதை எப்படியோ இந்திக்கு விற்று அங்கே ஜிக்ரி தோஸ்த்என்று சக்கைப்போடு போட்டு,மறுபடி இங்கே மாட்டுக்கார வேலன் ஆக வந்து வெள்ளி விழாக் கொண்டாடியது. எல்லாம் அவரவர் நேரம்.
     விஜயா ஸ்டுடியோவை வீனஸ் பிக்சர்ஸ் மற்றும் பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் குத்தகை எடுத்து தங்கள் படங்களை எடுத்தனர். விஜயா ஸ்டுடியோ நாகிரெட்டியும் சக்ரபாணியும் விஜயா ஃபிலிம்ஸ் என்ற பெயரிலும் விஜயா கம்பைன்ஸ் புரொடக்‌ஷன்ஸ் பெயரிலும்,( எங்க வீட்டுப் பிள்ளை, எங்க வீட்டுப்பெண், ராம் அவுர் ஷ்யாம்,வாணி ராணி) பின்னர் டி.ராமாநாயுடுவுடன் சேர்ந்து விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் ஆக குழந்தைக்காக நம்ம குழந்தைகள், பிரம்மாண்டமாக வசந்த மாளிகை என்றெல்லாம் வந்தது. ராமாநாயுடு பின்னர் தனியாக சுரேஷ் கம்பைன்ஸ் என்று படங்கள் எடுக்க ஆரம்பித்து விட்டார். ஸ்டுடியோ இல்லாமல் நிறையப் படங்கள் எடுத்தவர்கள் ஜூபிடர் பிக்சர்ஸ்,ஸ்ரீதர், வீனஸ் பிக்சர்ஸுடன் இணைந்து உத்தமபுத்திரன், கல்யாண பரிசு போன்ற படங்கள் எடுத்து விட்டு சித்ராலயா கம்பெனியை “அலைகடலில் சிறிய தோணி,கலை உலகில் புதிய பாணி” ( WE KNOW ART IS AN OCEAN.WE ROW FOR  NOVEL CREATION”  என்ற ‘முழக்கத்துடன்ஆரம்பித்தார். பல நல்ல படங்களையும் தந்தார். ஸ்ரீதருக்கு இணையாக கே.எஸ் கோபாலகிருஷ்ணன் ‘சித்ரா ப்ரொடக்‌ஷன்ஸ்என்று ஆரம்பித்து படங்கள் எடுத்தார்.கற்பகம் வெற்றிக்குப் பிறகு ஒரு பழைய ஸ்டுடியோவை (சாரதா ஸ்டுடியோ?) வாங்கி கற்பகம் ஸ்டுடியோ என்று பெயரிட்டார்.ஆனால் அந்தப் பேரில் படம் எடுக்கவில்லை.
1956 தாய்க்குப்பின் தாரம் படத்தின் மாபெரும் வெற்றியின்  மூலம் திரையுலகிற்குள்  வந்த சாண்டோ சின்னப்பா தேவர், தேவர் பிலிம்ஸ் பேனரில் படங்களாகக் குவித்தார். வருடத்திற்கு இரண்டு படம், வீதம் ஒன்று ஜனவரி பிப்ரவரி அறுவடை நாட்களை ஒட்டி,மற்றொன்று ஆகஸ்ட் செப்டம்பர் அறுவடை சீசனை ஒட்டி வெளியிடுவார். முதல்ப் படத்திலேயே எம்.ஜி.ஆரிடமிருந்து விலகி நீலமலைத் திருடன்- ரஞ்சன், செங்கோட்டைசிங்கம்,யானைப்பாகன் – கன்னட நடிகர் உதயகுமார் ( அசப்பில் சிவாஜி போலிருப்பார்) வாழ்வைத்த தெய்வம்-ஜெமினிகணேசன் என்று போனவர் ஐந்து வருடங்களுக்குப்பின் ‘தாய் சொல்லைத் தட்டாதேபடத்தில் மறுபடி எம்ஜி.ஆருடன் இணைந்து நல்லநேரம் வரை 15 படங்கள் அவர்தான் தேவர்பிலிம்ஸ் கதாநாயகன். தேவர் இந்திக்குப் போன பின் ஹாத்திமேரா சாத்தியில், அதுவரை தேவர் ஃபிலிம்ஸ் சின்னமாக இருந்த தா.பி. தாரம் காளை மாடு  யானையாக மாறியது. நல்ல வேளை ஆட்டுக்கார அலமேலுக்குப் பிறகு ஆடு வரவில்லை. வந்திருந்தால் கம்பெனி மூழ்கியிருக்காதோ என்னவோ. பீம்சிங் ஒரு எம்.ஜி.ஆர் படம்கூட இயக்கவில்லை . எம்.ஏ.திருமுகம் ஒரே ஒரு சிவாஜி படம்,தர்மராஜா இயக்கியிருக்கிறார். எம்.ஜி.ஆர் அநேகமாக  எல்லா பேனரிலும் நடித்திருந்தாலும் சிவாஜி தேவர் ஃபிலிம்ஸ் படங்களில் நடிக்கவில்லை. இது இரண்டு ரசிகளுக்கிடையே நடக்கும் சண்டையில் பிரயோகிக்கப்படும் வார்த்தை ஆயுதங்கள். தேவர் தண்டாயுதபாணி பிலிம்ஸ் பேரிலும் ஏகப்பட்ட படங்கள் எடுத்தார்.
ஏ.பி.என்  வி.கே ராமசாமியுடன் கூட்டணியாக லக்ஷ்மி பிக்சர்ஸ் சார்பில் மக்களைப்பெற்ற மகராசி, வடிவுக்கு வளைகாப்பு தயாரித்தவர், பின்னர் பிரிந்து விஜயலட்சுமிபிக்சர்ஸ் சார்பாக நவராத்திரி தொடங்கி சிவாஜியுடன் பத்து படங்கள் வரை எடுத்தார். அந்த பேனரில் எம்.ஜி.ஆரும் நடிக்கவில்லை. நவரத்னம் படம் கூட சி.என்.வி மூவிஸ் தயாரிப்பு. சித்ராலயா போலவே கே.பாலசந்தர், கவிதாலயா ஆரம்பித்தார்.60 படங்கள் வரை எடுத்தார். இன்னொரு வெற்றிகரமான தயாரிப்பாளர் இயக்குநர் இராம நாராயணன். தனியொருவராக 100 படங்களுக்கு மேல் எடுத்திருப்பார்.

இவர் போல ஓரிருவர்தான் சினிமாவில் செய்கூலி கிடைத்துச் சேதாரமாகமல் தப்பித்தவர்கள் என்று நினைக்கிறேன். பெரும்பாலும் எல்லோருமே சேதாரமுற்று தங்கள் இருப்பையே நகை பாலீஷ் போட வந்தவர்களிடம் ஏமாந்து தொலைத்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். நான் கூட சினிமா அண்ணன் என்கிற சீனி அண்ணனைத் தொலைத்து விட்டு நிற்கிறவன்தான்.

Visitors