Sunday, January 4, 2009

காகித ஓடம் நினைவலை மேலே....




அப்போது பஸ்களில், எத்தனை ஸீட்டுகளோ அதற்கு மேல் ஏற்ற மாட்டார்கள்.கடைசி ஸீட். சங்கப் பலகை என்று பெயர், அதில் ஆறு பேர் அமரலாம்.போனால்ப் போகிறது என்று அதிகமாக ஒருவரை கண்டக்டர் அனுமதித்தால் உண்டு.அதிலும் சுந்தரம் ஐயங்கார் பஸ்ஸில் அதுவும் கிடையாது.
எம்.ஜி.ஆர் நிச்சயம் வருகிறார் என்று தெரிந்ததும் கிளம்பி விட்டோம்.வழக்கம் போல் காசு புரட்டுவது கஷ்டமாகத்தான் இருந்தது.சரி,சிவசங்கரன் அங்கே தான் கல்லூரியில் படிக்கிறான்.அவன், அரை வருடப் பரீட்சை லீவுக்கு வரும் போது சொல்லி இருந்தான்.அங்கே வந்து விடுங்கள் மற்றதை நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என்று. அவன் எதிர் பார்த்தது, இரண்டு மூன்று பேரை.இங்கே நாலைந்து பேர் கிளம்பி விட்டோம் ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்கு நல்ல கூட்டமாயிருந்தது. எங்கள் தூரத்து உறவினர் தான் பஸ் டிரைவர்.எப்போதோ அப்பாவுடன் அவர் பேசிக் கொண்டிருந்த போது பார்த்திருக்கிறேன். அவரிடம் தயங்கித் தயங்கிப் போய் டிக்கெட் கேட்டேன். எல்லா பஸ்களுக்கும் அப்போது கவுண்டரில்தான் டிக்கெட் கொடுப்பார்கள்.வரிசையில் கனகு நின்று கொண்டான். இதிலெல்லாம் அவன் தான் சமர்த்தன்.வரிசையில் நிற்பது போலவும் இருக்கும்.தள்ளி நிற்பது போலவும் இருக்கும்.டிக்கெட் கொடுக்க ஆரம்பித்ததும் நைசாக முன்னால் போய்விடுவான்.இதே போல் நாம் போனால் பெரிய சண்டையே வந்து விடும்.அவன் ராசி அப்படி.அன்றைக்கு எல்லாமே தோழர்கள் கூட்டம்தான். அதனால் அவன் சற்று ஒழுங்காக கியூவிலேயே நின்றான்.
டிரைவரிடம் போய், மாமா உங்களுக்கு சிங்கி குளம்தானே, நான் இன்னார் மகன் என்றதும் ஏற இறங்கப் பார்த்தார்.வாய் நிறைய வெற்றிலை. அப்போதுதான் போட்டு அதக்கி விட்டு கையை, கர்ச்சிஃப் எடுத்துத் துடைத்து விட்டு கார் டயரைத் தட்டித்தட்டி காற்று சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார், என்னைக் கவனித்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை. நானும் அவருடன் பஸ்ஸைச் சுற்றி வந்தேன். ஒன்றுமே பேசாமல் கையை நீட்டினார். என் கையில் ஐந்து ரூபாய் இருந்தது. அதற்கு மூன்று டிக்கெட் தான் வரும்.அதைக் கொடுத்து மூன்று என்றேன்.வாங்கிக் கொண்டு போனார். அவசரமாக ஒடிப் போய் கனகுவிடம் மூனு டிக்கட் கிடச்சுட்டு இன்னும் ரெண்டு வாங்கு என்றேன். சரி நீ போய் இடம் போடு என்றான்.அதற்குள் டிரைவர் `மாமா’அவர் ஸீட்டூக்குப் பின்னால் இருக்கும் ஸீட்டில் எங்களுக்கு இடமும் போட்டு வைத்து விட்டார்.அப்புறம் தான் தெரிந்தது. வெற்றிலை போட்டு துப்ப, அவருக்குப் பின்னால் தெரிந்த ஆளாக இருந்தால் நல்லது என்று எங்களுக்கு அங்கே இடம் போட்டிருக்கிறார் என்று.கனகு இரண்டு டிக்கெட் எடுத்து விட்டான்.கனகு, நான், சபாபதி மூன்று பேரும் அதில் உட்கார்ந்து கொண்டோம்.பொந்தன் கந்தசாமி என் பக்கத்தில் உட்கார ஆசைப் பட்டான். நானும் தவிர்த்து விட்டேன்,மற்ற இருவரும் அதற்கு சம்மதிக்கவில்லை.பஸ் புறப்படது. சற்று நிம்மதியாய் இருந்தது.
``சந்திப்போம், சந்திப்போம் அறுபத்தியேழில் சந்திப்போம்’’, சததம் வண்டியை நிறைத்தது.என் பையிலிருந்த இரு வண்ணக் கொடியை எடுத்து பஸ்ஸின் சன்னலில் கட்டினேன். பஸ்ஸை சட்டென்று நிப்பாட்டி(நிறுத்தி)னார் `மாமா`. அதை அவுருலே என்றார்.நான் சற்றுப் பயந்து போனேன்.அவிழ்த்து விடலாமா, டிக்கெட் எடுத்துக் கொடுத்திருக்காரே என்று நினைத்தபடி எழுந்திருக்க முயன்றேன்.ஓரத்தில் உட்கார்ந்திருந்த கனகு, பேசாம உக்காருல என்று அதட்டினான்.அவன் எப்பொழுதும் ஜன்னல் அருகே தான் உட்காருவான்.அதை அவன் எடுத்துக் கொள்ளுவான் என்றுதான் சொல்லவேண்டும். சினிமா போனாலும், படம் ஆரம்பிக்கிறவரை வெளியே வெராண்டவில் தான் நிற்பான், நாம் தான் அவன் இடத்தைப் பர்த்துக் கொள்ள வேண்டும், வருகிற ஆளிடமெல்லாம் `ஆள் இருக்கு, ஆள் இருக்கு ‘ என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
பஸ் நிற்கும் காரணம் தெரிந்ததும், எல்லாரும் சேர்ந்து கொண்டார்கள். பஸ், காங்கிரஸ் காரருக்குச் சொந்தமானது.டிரைவர் மாமாவும் அப்படித்தான் போலிருக்கிறது என்று நினைத்தேன். `அவுக்காத, அவுக்காத ‘, என்று ஒரே கூக்குரல்.புளிச்சென்று வெற்றிலையை வெளியே துப்பி விட்டு வண்டியை வேகமாக எடுத்தார்.திரும்பவும் கூக்குரல்.இதில் வெற்றிக் களிப்பு தெரிந்தது ``நெல்லை மாவட்ட தி மு க மாநாடு வாழ்க, அண்ணா வாழ்க,கலைஞர் வாழ்க, எம்ஜியார் வாழ்க’’,என்று ஏக உற்சாகமாய் இருந்தது.இதற்குள் யாரோ நாகூர் அனிபா குரலில் பாட முயன்றார்கள், `அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா, அருமை மிகும் திராவிடத்தின் துயர் துடைக்க என்றே..’பாட்டுக் கேட்டு, பஸ்ஸினுள் சத்தம் சற்று குறைந்தது.அது யாரு மேலப்பாளையம் யூசுப் அண்ணனா பாடறது, என்று யாரோ கேட்க, ஒரு சிரிப்பலை பரவி பஸ் சுத்தமாக அமைதியானது.இது தாம்ல மணியோட புது மில்லு, என்று கனகு சுட்டிக் காட்டினான்.சரியாக எட்டிப் பார்க்கும் முன் மில் கடந்து விட்டிருந்தது.தலைய உள்ள இழுல,தலைவரைப் பாக்க தலை இருக்காது.,என்று டிரைவர் மாமா கடிந்து கொண்டார்.இன்னும் கடுப்பு தணியவில்லையே என்று தோன்றியது.தவிரவும், திரும்பும் போது டிக்கெட் எடுக்க அவர் தேவைப் பட்டா என்ன செய்யறது.என்று வேறு தோன்றத் தொடங்கி விட்டது.இந்தக் கவலையெல்லாம் மற்றவர்களுக்கு இருக்கா, இருக்குமா என்று தெரியவில்லை.என் சுபாவமே அப்படி.கூனியூர் வர்றதுக்கு முன்னாலேயே குனிஞ்சு கிட்டே போறது.இதனால் பலரிடம் கெட்ட பேர் வாங்கியிருக்கிறேன்.

தூத்துக்குடி போறது அது இரண்டாவது தடவை. சின்னப் பிள்ளையில் நாலோ ஐந்தோ படிக்கும் போது போனது.தூத்துக் குடியில் திருநெல்வேலி மாவட்ட திமு.க தேர்தல் மாநாடு.கே வி கே சாமி நினைவு அரங்கம், வ உ சி கல்லூரி அருகேதான் இருந்தது.அப்போது எம்.எஸ்.சிவசாமி மாவட்டச் செயலாளர் என்று நினைவு.அதனால்த் தான் திருநெல்வேலி மாவட்ட மாநாட்டை, தூத்துக்குடியில் நடத்தினார்கள்.அப்போது தூத்துக்குடி தனி மாவட்டமில்லை.கல்லூரிக்குப் போய் சிவசங்கரனைக் கூப்பிட்டு வந்தோம்.. மத்தியான சாப்பாட்டு நேரம். மாநாட்டுப் பந்தலுக்குள் ஏதோ ஒரு கடையில் பொட்டலம் கிடைத்தது.எலுமிச்சை சாதம் வாய்க்கும் காணவில்லை, கைக்கும் காணவில்லை., ருசியாயும் இல்லை.யாரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று யாரும் உண்மையைச் சொல்லவில்லை.என்னிடம் ஊருக்குப் போவதற்காக ஒளித்து வைத்த காசைத் தவிர பத்து ரூபாய் வரை தேறும்.ஹாஸ்டலில் தங்க முடியாது என்று தெரிந்தது.மாநாட்டுப் பந்தலிலேயே தங்குவது என்று முடிவு செய்தோம். ஏ.வி. பி.ஆசைத்தம்பி- தப்பி வந்த தம்பி-பேசிக் கொண்டிருந்தார் .ஈ வி கே சம்பத், கண்ணதாசனுடன் காங்கிரஸில் சேர வேண்டியவர்,நல்ல வேளையாக தப்பி விட்டார்.அது பற்றி அவரே அற்புதமாகப் பேசிக் கொண்டிருந்தார்.பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது.சாப்பிட வெளியே சென்றால் படுப்பது சிரமம், உள்ளே மறுபடி வர முடியாது.உள்ளே சாப்பாடு கிடைக்கவில்லை.பேச்சுக்களெல்லாம் முடிந்து தலைவர்களில் சிலர் முன் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்க
தேவராஜன் –கவுரி கச்சேரி ஆரம்பித்து ``காகித ஓடம் கடலலை மீது போவது போலே ....’’ பாடி பலத்த கைதட்டலும் ``ஒன்ஸ் மோரும்’’ கேட்டு மாநாட்டுப் பந்தல் கலகலப்பாய் இருந்த சமயத்தில் வெளியே போவது என்று முடிவாயிற்று.
ஊருக்குள் செல்லும் சாலை வழியோரங்களில் பந்தல் போட்டு ஓட்டல்கள் முளைத்திருந்தது.வாங்க வாங்க மல்லியப் பூ இட்லி என்று சத்தம் போட்டு அழைத்துக் கொண்டிருந்தார்கள்.அதில் ஒரு பெண்ணும் அழைத்துக் கொண்டிருந்த கடைக்குள் நுழைந்தோம். நிறையப் பேர் மண் தரையில் வரிசையாய் நீளமான பந்தியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.இட்லி அவ்வளவு கனமாய் இருந்தது.இரண்டு இட்லியை சாப்பிடுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.அதை ஊற வைத்து தின்பதற்கும், அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்கும் என்று சாம்பார் கேட்டு அலுத்துப் போயிற்று. சற்றே சேலையைத் தூக்கிச் சொருகியபடி வேகமாகச் சுழன்று கொண்டிருந்த அந்தப் பெண்ணையும் அதன் கறுத்த காலில் அணிந்திருந்த கொலுசையும் பற்றிப் பேசிக் கிண்டலடித்தபடியே ஊருக்குள் வந்தோம்.வழியில் என்.ஜி.ஓ சங்க கட்டிடம் ஒன்று. அந்த வெராண்டாவில் . ஏற்கெனெவே சிலர் படுத்திருந்தார்கள்.நாங்கள் வருவதைப் பர்த்ததும் அதுவரை திறந்திருந்த கட்டிடத்தின் ஹால்க் கதவை உள்ளிருந்தவர்கள் சாத்தி விட்டார்கள்.சரி வெராண்டாவிலேயே படுத்துக் கொள்ளலாம் என்று கையில் வைத்திருந்த பையைத் தலைக்கு வைத்துப் படுத்தோம் தூக்கம் கண்ணைச் சுற்றுகையில் பொந்தன் கந்த சாமி பக்கத்தில் வந்து படுத்தான்.யாத்தா இது ஆபத்துல்லா என்று எழுந்ததுதான் தாமதம்,வேறு யாரோ நின்று கொண்டிருந்தவர்கள், அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.இருட்டில் யார் யார் எங்கே என்றே தெரியவில்லை. கட்டிடத்தின் முன்னால் நிறைய இடமும் மணலுமாய் இருந்தது. அங்கே போய்ப் பார்க்கலாம் என்று போனால், அங்கே கனகும் பெரிய கோபாலும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.அநேகமாகச்சொறிந்து கொண்டிருந்தார்கள். மணலில் புழு உண்ணி. ``ஏலே பொந்தன் எழுப்பி விட்டுட்டானா கே ஆர் விஜயா மாதிரி இருக்கான்னுட்டு புலம்பிக்கிட்டே இருந்தானே’’ தப்பிச்சு வந்திட்டியா என்று கிண்டலாக வரவேற்றார்கள்.அப்போது சிவசங்கரன் வந்தான்.இன்னும் கொஞ்சம் தூரம் போனா கோயில் இருக்காம், அங்கன போவோம் என்று கூப்பிட்டான்.கோயிலும் தெரியவில்லை ஒன்றும் தெரியவில்லை ஒரு தெப்பக் குளமும் சுற்றி வீடுகளூம் இருந்தது.ஒரு வீட்டின் படிக்கட்டுகள், திண்ணை போல் கொஞ்சம் அகலமாய் இருந்தது.
கொஞ்ச நேரம் தான் படுத்திருப்போம், யாரோ, ஏல தூப்புக்காரி கொலுசை ரசிச்சவன் யாருல, தாயோளி மல்லியப்பூ இட்டிலியாம். மயிரைப் புடுங்கினது. என்று சிரிப்பும் ஏச்சுமாகச் சொல்ல கக் கக்கென்று சத்தமாய்ச் சிரிப்பு வெடித்தது.இதைக் கேட்டு வீட்டிற்குள்ளிருந்து டேய் அம்பிகளா ஏந்திருந்து போறேளா இல்லே தண்ணியக் கோதி விடவா என்று சத்தம் போட்டார்கள்.இதற்குள் மணி ஐந்து போல் ஆகி விட்டது.சரி வாங்க விடியதுக்கு முன்னால ஹாஸ்டல் போயி குளிச்சு முடிச்சிருவோம். என்று சிவசங்கரன் சொல்லவே ஹாஸ்டலுக்கு கிளம்பினோம்.ஏதோ ஏதோ ஒரு சுற்று வழியில், சற்று திருட்டுத் தனமாகத்தான் ஹாஸ்டலுக்குள் போன நினைவு.ஆனால் குளிக்க, கொள்ள, வசதியாய் இருந்தது.காலைக் கடன் கழிஞ்சதே ஒரு தெளிச்சியத் தந்தது. தூங்காதது பெரிய சங்கடமாகத் தெரியவில்லை.
கனகுதான், கல்யாணி அண்ணன் ரூமுக்குப் போவோம் என்று கூட்டிப் போனான். அண்ணன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.நான் தான் தொட்டு எழுப்பினேன்.அன்றையக் காலைச் சாப்பாட்டை அவர்கள்தான் வாங்கித் தந்தார்கள்.,பஸ் ஸ்டாண்டுக்கு எதிர்த்த ஒரு நல்ல ஹோட்டலில் திருப்தியான சாப்பாடு. காலையில் திரும்பவும் மாநாடு. மத்தியான வாக்கில் கலைஞர், மாலையில் அண்ணாவின் அருமையான பேச்சு.எல்லாம் அன்றையப் பசியை உணரவிடாமல்ச் செய்தது.
அண்ணா பேசி முடிக்கும் வரை எம் ஜி ஆர் வருவார் என்று நம்பிக் கொண்டிருந்தோம்.வரவில்லை.அதே திருட்டு வழியில் ஹாஸ்டலுக்குப் போய் அன்றைய இரவைச் சவுகரியமாகக் கழித்தோம். யாரோ நாகர் கோயில் பக்கத்துப் பிள்ளைவாள் தான் வார்டன்,பாக்கியம் பிள்ளையோ என்னவோ பேர். ரொம்பக் கண்டிப்பான ஆள்.காலேஜே அவரைக் கண்டு நடுங்குமாம்.ஆனால் சிவசங்கரன் அசாத்தியத் துணிச்சல் காரன். அவன் தான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது அன்றைய எம்.பி, முத்தையா பிள்ளை வீட்டில் கறுப்புக் கொடி கட்டினான்.போலீஸும் பெரிய மாணவர் ஊர்வலமும் பர்த்துக் கொண்டிருக்கும் போதே விறு விறுவென்று குழாய் வழியாக ஏறி தெரு முகப்பு மாடியில் கறுப்புக் கொடியைக் கட்டினான்.கூட்டம் ஆர்ப்பரித்தது.
மறுநாள்க் காலையில் காபி குடித்ததோடு சரி பஸ் ஏறி விட்டோம்.நினைத்தபடியே அதே பஸ்.அதே கண்டக்டர். ஆனால் அவர் சிவசங்கரனுக்கு ரொம்ப நெருக்கமான் உறவு. அவரிடம் எப்படியோ சொல்லி டிக்கெட் வாங்கி அனுப்பி வைத்துவிட்டான்.
நாங்கள் மூன்று பேர்தான் இருந்தோம். மற்றவர்கள் எங்கே எப்படிப் போனார்கள் என்று தெரியவில்லை.யாரைப் பற்றிக் கவலைப் படவும் நேரமில்லை.கனகுதான் சொன்னான், எப்பா குசுவிக் குசுவி முடியலை ஊருக்குப் போய் நிம்மதியா கொல்லக்கிப் போனாத்தான் நிம்மதி, என்று.அவன் அவ்வளவு தூரம் அரசியல் ஈடுபாடு இல்லாதவன்.எம்.ஜி ஆர் வராதது அவனுக்குப் பெரிய வருத்தம்.கொஞ்ச நேர அமைதிக்குப்பின், கேட்டேன்``ஏய் எங்கப்பா மத்த ரெண்டு பேரையும், வரும் போதும் நம்ம மூனு பேர்தான், போகும் போதும் நம்ம மூனு பேர்தான்....’’ கனகு பாடினான்.,காகித ஓடம் கடலலை மேலே போவது போலே மூவரும் போவோம்....’’பாட்டை நிறுத்தி விட்டுச் சொன்னான், ஏன் உங்க டிரைவர் மாம்மாவை விட்டுட்டே...

Visitors