Sunday, December 7, 2008

ஆயிரம் வாசல் இதயம்.....


அம்மா தயங்கித் தயங்கிச் சொன்னாள்..அப்பா இறந்து போய், பெரிய வீட்டை விற்று விட்டு எதிரே இருந்த மங்களா வீட்டிற்கு குடி பெயந்திருந்தோம்.மங்களா வீடு என்பது பொதுவாக பெரிய, பண்னையார் வீடுகளில் ப்ண்ணையாரின் அலுவலகம் மாதிரி.பண்ணையின் கணக்கு வழக்குகளைப் பார்ர்க்கிறவர்கள் பகலில் அங்கே இருப்பார்கள்.பண்ணையாரைப் பார்க்க வருகிறவர்கள் அங்கேதான் பார்க்க வேண்டும்.பொதுவாக அந்த வீடு.. ஒரு வித குளுமையுடன் இருக்கும். சேரகுளம் பெரிய பண்ணையார் சண்முகவேலாயுதம் பிள்ளை வீட்டில், மங்களா, தெருவை ஒட்டி இருக்கும்.அதன் வழு வழு வென்ற சிமெண்ட் தரையும் நாயக்கர் மஹால் மாதிரி பெரிய தூண்களுடனான தார்சாலும் (தாழ்வாரம் !) எந்த வேனல்க் காலத்திலும் வெயிலே தோணாத மாதிரி குளுமையாய் இருக்கும்.அப்பாவும் சேரகுளம் சின்னப் பண்ணையார் தான்.ஆனால் பேர்தான் பண்ணையார்.மற்றபடி நான் பார்க்க எல்லாமே வெறும் பெருங்காய டப்பா வாழ்க்கைதான்.சேரகுளம் ஊரின் அருள் தரும் நித்யகல்யாணி உடனுறை அருள்மிகு சோமசுந்தரர் திருக் கோயிலில் ஏதோ ஒரு நித்திய கட்டளைக்கு பணம் வாங்க ஒரு ஒல்லியான ஐயர் வந்து ஐந்தோ பத்தோ வாங்கிப் போவார்.மற்றபடிபண்ணைக்கும் அவருக்கும் எனக்குத் தெரிந்து எந்த சம்பந்தமும் கிடையாது, யாரும் வருவதுமில்லை.எங்கள் மங்களா வீடு அப்படி யொன்றும் குளிர்ச்சியாகவோ பிரம்மாண்டமாகவோ இருக்காது.அதில் சிறிய குடும்பமாக யாராவது வாடகைக்கு இருப்பார்கள்.எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாய், குளத்து ஐயர் இருந்தார்.அவர் பையன் சங்கரன் என் கிளாஸ் மேட்.அவர் வங்கியொன்றில் வேலை பார்த்தார்.ஐயர் அவனை என்னுடன் அதிகம் சேர விடமாட்டார்.அவர்களுமே, நாங்கள் இரண்டு மாதம் வெளியூர் போயிருந்த போது வீட்டைக் காலி செய்து பெரிய பண்ணையாருக்குச் சொந்தமான, யாருக்குமே வாடகைக்குத் தராத ஒரு வீட்டிற்கு மாற்றிக் குடி போய்விட்டார்கள்.அதற்கு ஏதோ ரகசியமான காரணமொன்றிருப்பது போல் அப்பாவிடம் அவரது சினேகிதர் ஒருவர் நாங்கள் ஊர் போய்த் திரும்பி வந்ததும் குசு குசுத்துக் கொண்டிருந்தார் நாந்தான் பெரியவர்கள் பேசும் போது அருகில் போவதேயில்லையே.(!)நான் சங்கரனைத் தேடி அவன் புதிய வீட்டிற்கு, அது வடக்கு வாசல் காம்பவுண்டில் இருந்தது,போன போது மாமி, வாடா அம்பி என்று கதவைத் திறக்க வந்தவளை, ஐயர் சத்தம் போட்டு தடுத்து விட்டார். அவன் படிச்சுட்டு இருக்கான், போ, சாயந்தரமா விளையாட வருவான் என்றார்.சற்று அம்மந்தழும்பு விழுந்த (அம்மை வார்த்த) முகமென்றாலும் மாமி களையான முகத்துடனும் அப்படி ஒரு நிறத்துடனும் இருப்பாள்.கொஞ்ச காலத்தில் அவர் மதுரைக்கு மாறுதலாகிப் போய்விட்டார் நாங்கள் மதுரையில் சித்திரைத் திருவிழா பார்க்கப் போன போது, மிட்லண்ட் ஹோட்டலுக்கு எதிரேயுள்ள, அப்போது அது மிக பிரபலமான பெரிய ஹோட்டல்,பூக்காரச் சந்தில் குடிய்ருந்தார்கள்.

சந்திரா டாக்கீஸ் அருகே அப்பாவின் நண்பரும் உறவினருமான ராஜு அண்ணாச்சி வீட்டில் நாங்கள் தங்கி இருந்தோம். அவர் ஆள், மைனர் மாதிரி இருப்பார்.அவரது மனைவி இறந்து இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டிருந்தார்.அவரது மூத்த மனைவியின் பிள்ளைகளை அந்த அம்மா கொடுமைப் படுத்துவதைப் பார்க்க சகிக்காமல் நானெல்லாம் பயத்தில் இருந்தேன்.திருவிழா முடிந்து ஊர் திரும்புகிறதுக்கு முந்தினநாள். அதில் ஒரு பையனை அப்பா, ஊருக்கு எங்களுடன் வந்து விடுகிறாயா என்று கேட்டார்..அவன் அழுததைப் பார்த்து எனக்கு அழுகை வந்து விட்டது.அப்பாவிடம் சங்கரன் வீட்டிற்குப் போய் விடலாமா என்று கேட்ட நினைவு.
கொஞ்ச நேரத்தில் சங்கரன் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தோம்.இரண்டு மூன்று பூக்காரச் சந்துகள் இருந்தது.நாங்கள் வந்ததை ஐயர் விரும்பவில்லை மாதிரி தெரிந்தது.எங்கள் கூட ராசு அண்ணாச்சியும் வந்திருந்தார்... அது வேறு சுத்தமாக ஐயருக்குப் பிடிக்கவில்லை.மாமி ரொம்ப நாள் கழித்துப் பார்க்கிற பிரியத்துடன் உபசாரம் பண்ணிக் கொண்டிருந்தாள்.அப்போதெல்லாம் நான் தான் வகுப்பில் முதலாவது வருவேன். சங்கரன் சுமாராகப் படிப்பான். அதனால் மாமி என்னிடம் சற்று அன்பாகவே இருந்த மாதிரி நினைவு.மாமி சற்று தளர்ந்திருந்த மாதிரி இருந்தாள்.எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்த போது சங்கரன் தவிர இன்னொரு பெண் குழந்தை இருந்தது.இப்போது மூன்றாவதாக காந்திமதி என்றொரு குழந்தை பிறந்திருந்தது.அது அச்சசல் ஐயரைப் போலவே இடுங்கிய கணகளுடன் இருந்தது.ஐயரை நாங்கள் `காக்கா கண்’ என்று கேலி செய்வோம்.எப்போதும் ஒரு கண்ணை இடுக்கிக் கொண்டேதான் பேசுவார்.
ஆள் நல்லா குண்டாக கொஞ்சம் குள்ளமாக இருப்பார்.சாயந்தரம் வேலை விட்டு வந்தால் பேண்ட். சட்டையெல்லாம் மாற்றி விட்டு வேஷ்டி, சட்டை காஸ்ட்யூமிற்கு மாறி விடுவார்.ஒரு பாத ரஸம் பூசிய பள பள கண்ணாடி அணிந்து கொண்டு வெளியே கிளம்பி விடுவார்.அப்பா, அப்பாவின் நண்பர்கள் உட்கார்ந்து பேசுகிற தெருக் கச்சேரியிலெல்லாம் கலந்து கொள்ள மாட்டார்.பொதுவாக அவர்களுடன் வெளியேயும் போக மாட்டார்.அவர் எப்போதாவது அப்படி அவர்களுடன் போனார் என்றால் பொருட்காட்சி அல்லது ஏதாவது குஸ்தி மாதிரி தான் இருக்கும்.ஒரு முறை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடை பெற்றுக் கொண்டிருந்த குஸ்திக்கு அப்பாவுடன் வந்தார்.
இந்த மாதிரி சமயங்களில் எல்லாம் அப்பாவுக்குத்தான் டிக்கெட் கிடைக்கும்..பொருட் காட்சியில் நடை பெறும் நாடகங்களுக்கு அப்பா சீஸன் டிக்கெட் வாங்கி இருப்பார்.தலையில் கட்டி விடுவார் சேர்மன் பா.ரா.(இவர் தான் மணிக்கொடி பத்திரிக்கையின் கடைசிக்க்கால ஆசிரியர்).எல்லா நாடகங்களுக்கும் அப்பா போக மாட்டார். எம் ஆர். ராதா . எம் ஜி ஆர் நாடகங்களுக்குப் போக மாட்டார்.ஒருசமயம் மட்டும் எனது நடுவுள்ள அண்ணன் மீனாட்சி சுந்தரத்துடன் எம் ஜி ஆரின் அட்வகேட் அமரன் நாடகம் போனேன். இன்பக்கனவு நாடக டிக்கெட்டைக் கேட்கும் படி அண்ணன் என்னை தூண்டி விட்டான். அந்த டிக்கெட்டை தரவில்லை. அதற்கு முந்தின நாள் நாடகமான அட்வகேட் அமரன் டிக்கெட்டை வேண்டா வெறுப்பாகக் கொடுத்தார்.நாடகத்தை சரியாகப் பார்க்கக் கூட முடியவில்லை. முன்னால் இருக்கிறவர்கள் மறைத்தார்கள்.எழுந்து நின்றால் பின்னால் இருப்பவர்கள் உடகாரு என்று சத்தம் போட்டார்கள்.இன்பக் கனவு நாடகம் தான் பிரமாதமாக இருக்கும் என்று வாசமுத்து சொல்லுவான்.எனக்கு நாடகம் பார்ப்பது கூட முக்கியமில்லை. எம் ஜி ஆரை பார்க்க வேண்டும்.எல்லாவற்றிலும் முக்கியம் நாடக டிக்கெட், பாதி கிழித்தது வேண்டும்.அதை மறுநாள் வாசமுத்துவிடம் காண்பித்து பீற்றிக் கொள்ள வேண்டும். நாடகத்தில் எம் ஜி ஆர் இறந்து போவார் என்று நினைவு..இரண்டு மூன்று வருடம் கழித்து அண்ணா (கதை) வசனம் எழுதி வெளிவந்த `நல்லவன் வாழ்வான்’ படம் இந்தக் கதைதான்.ஆனால் அதில் எம் ஜி ஆர் சாக மாட்டார்.படப் பெயரிலேயே அது வந்து விடுகிறதே.நாங்கள் போன அன்று தாராசிங்கும் ரந்தாவா பயில்வானும் குஸ்திபோட்டர்கள்.தாராசிங் தான் ஜெயித்தார்.மறு நாள் கிங்காக் கிற்கும் தாரா வுக்கும் `காட்டா குஸ்தி, போட்டா போட்டி’ என்று அறிவித்தார்கள்.அன்று குஸ்தி முடிந்து திரும்பிவரும்போது ஐயர் அப்பாவிடம் பண்ணையாரே நாளைக்கு டிக்கெட் கிடைச்சா பாரும் வே, என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்ப, நானும் வருவேன் என்ற போது, .போடா நீங்கள்ளாம் பார்த்தாக்க பயப்படுவேள் என்று என்னிடம் சொன்னார்.
. ஐயரின் இரண்டாவது குழந்தை யார் ஜாடையிலோ இருந்தது பிடிபடவேயில்லை.எங்கள் வீட்டின் மற்ற பெண்களும் இது பற்றி ரகஸ்யமாகப் பேசிக் கொள்வார்கள்.தீர்க்கமான கண், மூக்கு, ஒல்லியான உடல் வாகு.இப்போது அந்தப் பெண் நன்றாக வளர்ந்திருந்தாள்.இங்கே இருக்கும் போது கைக்குழந்தையை விடச் சற்றுப் பெரியவள்.அவளும் இன்னும் மெலிவாக அவ்வப்போது இருமியபடி இருந்தாள்.நாங்கள் போனதுமே மாமி அவசர அவசரமாக ஃபில்ட்டரில் டிக்காக்‌ஷன் தயாரிக்கிற வாசனை பிரமாதமாக வந்தது.
ஊரில் நான் பள்ளிக் கூடம் போகாத நாட்களில் பார்த்திருக்கிறேன். காலை பதினோரு மணி வாக்கில் அப்பா எதிர் வீட்டு (மங்களா வீட்டு)த் திண்ணையில் அமர்ந்து மாமி போட்டுத் தருகிற ஃபில்ட்டர் காஃபியை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.அல்லது மாமி வார்த்துத் தருகிற தோசையை அடுப்படியில் அமர்ந்து சாப்பிடுவார்.அப்போது நான் அப்பாவுடன் இருந்தால் அக்காவோ அம்மாவோ என்னை எதற்கோ வேலையாய்க் கூப்பிடுகிறமாதிரி கூப்பிட்டு விடுவார்கள்.மாமி வீட்டில் சமையல் எல்லாமே குமுட்டி அடுப்பில்தான்.இரண்டு மூன்று சைசில் அடுப்பு இருக்கும்.மாமி குமுட்டி அடுப்பை அவ்வளவு சீக்கிரம், சுலபமாய்ப் பற்ற வைப்பதே எங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பொறாமையாய் இருக்கும். அதெப்படி மாமி நாங்க கரியைப் போட்டு வீசு வீசுன்னு வீசினாலும் சரி, குழலை வச்சு ஊதினாலும் சரி, பத்த வைக்கவே நேரம் சரியாயிருக்கு.. நீங்க அதுக்குள்ள சமையலையே முடிச்சுருதீங்க.. என்று கேட்டால் அதெல்லாம் இல்லடீ கொழந்தே நாங்க இதிலேயே பழகிட்டோம் என்பாள். மாமி சதுர்த்திக்கு
மோதகம் செய்தால்., மாவு தகடு போல, அவ்வளவு மெல்லிசாக இருக்கும்.பூரணமும் ஏலக்காய் மணத்தோடு ருசியாய் இருக்கும். பாகு சரியான பதத்தில் இருக்கும்.முருகியும் போயிருக்காது, பச்சைச் சர்க்கரை (வெல்லம்) வாசனையும் இருக்காது.ஆனால் மாமிக்கு கூட்டாஞ்சோறு மட்டும் வரவே வராது.கொடுத்தாலும் கொடுத்தவர் நிற்கிற போது ருசி பார்த்துப் புகழ்வதோடு சரி. முழுதும் சாப்பிட மாட்டாள்.அதை அப்படியே வேலைக்காரியிடம் ரகசியமாகக் கொடுத்து விட்டு விடுவாள்.இது தெரிய வந்த போது அம்மா அப்பாவிடம், நீங்க அங்க போய் வெக்கமில்லாம் வட்டச் சம்மணம் போட்டு தின்னுட்டு வாங்க,என்று சத்தம் போட்டாள்.அதற்குச் சில மாதங்கள் கழித்துத் தான் வீடு மாற்றிப் போனதும் நிகழ்ந்தது.அம்மா அப்பாவிடம் அதிர்ந்து கூடப் பேச மாட்டாள்.இதைக் கூட சற்று மெதுவாய்த்தான் சொன்னாள்.அவளுக்கு எப்பவுமே``நாசியால போற சீவனை ஏன் கோடாலியால வெட்டணும்’’ ங்கிற சொலவடை. தான் வாழ்க்கையே.அவள் எவ்வளவோ சொத்துக்களை அப்பாவிடம் கொடுத்து, எல்லாவற்றையும் எல்லாரும் தின்றே தீர்த்த நிலையிலும் சத்தமின்றி சகித்துக் கொண்டவள்.பிற்காலத்தில் என் ஏச்சு பேச்சுகளையும்.
இன்றும் மாமி தோசை வார்க்கட்டா பண்ணையாரே என்று கேட்டாள்...எனக்கும் மெல்லிசு தோசை, கரி அடுப்பில் வார்த்த தோசை, சாப்பிட ஆசையாய் இருந்தது. சரி மாமி என்றேன் நான். என்னுடன் வந்திருந்த என் சின்ன அக்கா, என்னை விட ரெண்டு வயசு தான் மூத்தவள், அவளுக்கு .என்ன தெரிந்திருந்ததோ, சும்மா இருலே என்று சத்தமில்லாமல் அடக்கினாள்.ஐயரின் நிலை கொள்ளாமையும்,அக்காவின் கண்டிப்பும் ஏதேது திரும்பவும் ராசு அண்ணாச்சி வீட்டுக்கே போகனுன்னு ஆயிருமோ என்று தோன்றியது.அப்படித்தான் ஆனது. காபியைக் குடித்துவிட்டு, சங்கரன் வாங்கி வந்திருந்த காரா பூந்தியை சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம். வழியில் அப்பாவும் ராசு அண்ணாச்சியும் ஏதோ பேசிக் கொண்டு வந்தார்கள்.அநேகமாய் மாமியின் உடல் நிலை பற்றித்தான் என்று நினைக்கிறேன்.அப்பா அதிகம் பேசவில்லை.ராசு அண்ணாச்சி தான் பேசிய படி வந்தார்.ஐயரின் தவிப்பை கிண்டல் செய்கிற மாதிரி சிரித்துப் பேசிக் கொண்டு வந்தார்.
எப்படியோ அந்த இரவை அவர் வீட்டிலேயே கழித்து விட்டு.அதி காலையில் கிளம்பி ஒரு ரிக்‌ஷாவில் ஏறி ரயிலுக்கு வந்தோம்.கூடவே ராசு அண்ணாச்சியின் மூத்த பையன் வந்தான்.அவன் கையில் அப்பா ஐந்து ரூபாய் தாள் ஒன்றைக் கொடுத்தார்.அவன் அவசர அவசரமாக மறுத்தான். வழியில் திறந்திருந்த ஒரு ஓட்டலுக்கு முன் நிறுத்தி, ரிக்‌ஷாக் காரரை ஒரு காபி சாப்பிடச் சொல்லிவிட்டு நாங்கள் உள்ளே போனோம்.ரயிலில் சாப்பிட அப்பா பார்சல் வாங்கினார்.கல்லா அருகில் நின்றவாறே ஆர்டர் கொடுத்தார். அதிகமாய் இரண்டு பார்சல் வாங்கி இரண்டையும்,கைலாசத்திடம்,(ராசு அண்ணாச்சி பையன்) கொடுத்தார்.அவன் அதை அவசரமாக வாங்கி அங்கேயே தரையில் உட்கார்ந்து பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தான்.ஓட்டல் காரர், தம்பி அந்த டேபிள்ல்ல உக்காந்து சாப்பிடப்பா என்று பதட்டமாகச் சொன்னார்.அவன் கொஞ்சம் சாப்பிட்டதை, சுருட்டி எடுத்து பக்கத்தில் கிடந்த டேபிளில் வைத்து மறுபடி சாப்பிட ஆரம்பித்தான். ஓட்டல்காரர் பெல் அடித்து சப்ளையரை கூப்ப்பிட்டு சாம்பார் விடச் சொன்னார். கையும் வாயும் பொறுக்காத சூடான சாம்பாரைச் சேர்த்து இட்லியை அவன் சாப்பிட்ட விதம் என்னவோ போலிருந்தது. இப்போது அக்காவின் முறை, அவள் அழுது கொண்டிருந்தாள்.சாப்பிட்டுவிட்டு, கை கழுவ முயற்சிக்காமல் கைலாசம் இன்னொரு பார்சலையும் அப்பாவையும் பார்த்தான்.அப்பா சாப்பிடப்பா, என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து நீயும் அவன் கூட சாப்பிடுதியா என்று கேட்டார்.எனக்கு சாம்பார் ஆசையில் சரியென்றேன். அக்கா சும்மாருல, எதையாவது தின்னுட்டு எருவிக்கிட்டுக் கிடக்காத என்றாள். ரிக்‌ஷாக் காரனும் ரயிலுக்கு நேரமாயிரும் என்றான்.ஏத்தத்துல மிதிக்க கஷ்டம் சாமின்னான்,. அப்பா இன்னொரு செட் இட்லிக்கு காசு கொடுத்துவிட்டு., கைலாசத்திடம் நல்லாப் படி என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
ரயிலடியில் பழனியும் அவன் அப்பாவும் நின்று கொண்டிருந்தர்கள்..அவர்களும் சித்திரைத் திருவிழாவுக்கு வந்தவர்கள்தான். உண்மையில், பழனி மதுரை போகிறான் என்று தெரிந்து, அப்பாவிடம் அடம் பிடித்தே நானும் வந்திருந்தேன்.அவன் அவனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தான்..அப்பா தலையைப் பார்த்ததும், அவன் அப்பா யோவ் நேத்து குளத்து ஐயர் வீட்டுக்கு வந்தேராம, அடுத்த வீடுதான எம் மருமக வீடு. என்று சொல்லி விட்டு அப்பாவைத் தனியே அழைத்துப் போனார் நாங்கள் ரயிலில் ஏறி உட்கார்ந்து திருவிழா பற்றி, பெரும்பாலும் தாங்க முடியாத கூட்டம் பற்றிப் பேசத்தொடங்கினோம். ரயில் புறப்படும் சமயம் அப்பாவும் அப்பாவும் ஏறிக்கொண்டார்கள். அப்பா முகம் கல்லுப் போல் இருந்தது.அமீனாப் பிள்ளை முகத்தில் ஒரு கேலி இருந்தது.
அப்பா இறக்கும் முன்னேயே பெரிய வீட்டை விலை பேசி விற்று விட்டார். பாதித் தொகையை கடனுக்கு செல்லடித்துக் கொடுத்தது போக மிஞ்சியது மங்களா வீடும் அதற்குப் பின்னால் சில குச்சு வீடுகளும் தான்..ஆனால் மங்களா வீட்டில் குடியேறும் முன்பே, அப்பா பெரிய வீட்டிலேயே இறந்து போனார்.நாங்கள் சிறிய வீட்டிற்குக் குடியேறினோம். மாமி குடியிருந்த வீடு. அந்த அடுப்படியில் அம்மா ஈர விறகுடன் தினமும் போராடத் தொடங்கியிருந்தாள்.பெரிய வீட்டின் மாடியில் மாட்டியிருந்த பெரிய, பெரிய ஃப்ரேம் போட்ட படங்கள் எல்லாம் வீட்டை அடைத்துக் கொண்டிருந்தன. ரவி வர்மா படங்கள்., கண்ணன் ராச லீலா படங்கள்.இதில் கண்ணன் பல உருவங்கள் எடுத்து. பல் கோபிகைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பான்.ஜெர்மனியில் பிரிண்ட் போட்ட படம். யாரோ வட இந்திய ஒவியனின் கை வண்ணம். ரொம்ப நாளாகப் பெயர் நினைவிருந்தது. அப்பாத் தாத்தா, அப்பாச்சியின் லைஃப் சைஸ் படங்கள் எஸ். எம். பண்டிட் வரைந்த சரஸ்வதி படம்(பண்டிட்டே வரைந்த ஒரிஜினல் டிராயிங் கோயில்பட்டியில் தம்பி மாரீஸிடம் இருக்கிறது.) என்று ஏகப்பட்ட படங்கள்.எல்லாம் இந்தச் சிறிய வீட்டில் மாட்ட இடமில்லாமல் பட்டாசலில் அடைத்துக் கிடந்தது.ஒரெயொரு சின்ன,-சசிகலா ஜாடையில் இருக்கிற- சாரதா (நடிகை சாரதா) படத்தை மாடியில் என் மேஜை அருகே மாட்டி வைத்திருந்ததை இந்த வீட்டிலும் மாட்டி வைத்திருந்தேன்.அதுவும் கூட அட்டையில் ஒட்டி கண்ணாடித்தாள் சுற்றியது.
கொஞ்ச நாள் ஆக ஆக படங்களின் எண்ணீக்கை குறையத்தொடங்கியது.படங்கள் கூட ஒன்றிரண்டு இருந்தது. .ஃப்ரேம், கண்ணாடிகள்.எல்லாம் காணாமல் போகத்தொடங்கியது.. இது பெரிய அண்ணனின் வேலையாய்த்தான் இருக்கும் என்று அவனை சத்தம் போடத் துவங்கிய போது அழுகையுடன் அம்மா வந்து நான் தான் கடையில் போடச் சொன்னேன். அரிசி வாங்கக் கூட காசில்லை.. என்றாள்.நான் தினமும் 3.ரூபாய்30பைசா ஈ.டி(டெலிபோன் டிபார்ட்மெண்டில்-எக்ஸ்ட்ரா டிப்பார்ட்மெண்டல் கூலி வேலை) வேலைக்குப் போய்க் கொண்டிருந்த நேரம். அது என் சிகரெட்டுக்கே காணாது. பல நல்ல படங்கள் போய் விட்டன.
அம்மா தயங்கித் தயங்கிச் சொன்னாள்.வேலைக்கு போய் வந்த ஒரு சாயந்தரம்,காலையில் நீ போனப்பறம் குளத்து ஐயர் மகன் வந்திருந்தான்.அவன் அம்மா கேன்சர் வந்து செத்துப் போய் விட்டாளாம்.தங்கை காந்திமதிக்கு கல்யாணம் வைத்திருக்கிறதாம்.அவன் அய்யரின் வங்கியிலேயே வேலை கிடைத்து, மதுரைக்கு பக்கத்தில் வேலை பார்க்கிறானாம்.அதைச் சொல்லுகையில் அம்மா அழுதாள்.சரி எதுக்கு வந்தானாம் என்று கேட்டேன். அவனுடைய அம்மா படம் ஒன்று கூட இல்லையாம்.இங்கே இருக்கிறதா, அக்காவுடன், அம்மாவுடன் பொருட் காட்சியில் எடுத்த போட்டோ ஏதாவது இருக்கா என்று கேட்டானாம்.அப்படி ஒரு பொருட்காட்சியில் எடுத்த போட்டோககள் பல இருந்தன. லைட் ஹவுஸ் ஸ்டுடியோ காதர் பாய் அப்பாவுக்கு சினேகம். அவர் பொருட்காட்சியில் எப்படியும் ஸ்டால் போடுவார்.சும்மா எட்டிப்பார்க்கிற சாக்கில் நிறய படம் எடுத்து விடுவோம். அப்படி யொரு பொருட்காட்சியில் மாமி, அக்கா, எல்லாம் எடுத்த படம் உண்டுதான்.அப்பா கூட ஐயரின் சாதாரணக் கண்ணாடியை மாட்டி ஒரு போட்டோ எடுத்தார் அன்று. நான் தூக்கக் கலக்கத்தில் இருந்தேன் அதுதான் அப்பாவின் ஒரே படமாக வீட்டில் இருக்கிறது.கண்ணாடி யெல்லாம் கழற்றி விற்ற பிறகு ராம பாணப் பூச்சி அரித்ததால் அங்கங்கே சற்று வெள்ளை விழுந்த அப்பாத்தாத்தா படம் ஒன்றிருந்தது.படம் இருந்தா கொடுத்திர வேண்டியதுதானே என்றேன்.செல்லம்மா,அப்பாவுடனும் ஐயர் கூடவும் எடுத்த படம் ஒன்னு தான் அப்பா பெட்டியில இருக்கு என்றாள். அப்பா தன் காலத்திலேயே தன் அழகான பீரோ, இரும்பு பெட்டி எல்லாம் விற்ற பிறகு. தன் `ஆஸ்திகளை’ ஒரு சின்ன டிரங்குப் பெட்டியில் வைத்திருந்தார்.அதில் தான் அந்த போட்டோவும் இருந்தது.அப்பா ஐயர், நடுவில் மாமி.அது வரை நான் அந்தப் படத்தை பார்த்ததில்லை.அம்மா அழுகைக்கிடையே சொன்னாள்.இதக் கொடுக்க வேண்டாம்ப்பா. உனக்கு வேணுமா என்றேன். வேண்டாம் என்றாள். கிழிச்சுரட்டா என்றேன். சரிஎன்றாள்.படம், அது ஒட்டியிருந்த மவுண்ட் எல்லாவற்றையும் கிழித்து அம்மாவிடம் கொடுத்தேன்.அம்மா அடுப்படிக்கு நகர்ந்தாள். .கிழித்திருக்க வேண்டாமோ என்று தோன்றியது.வாசலில் நிழலாடியது.கல்யாணியண்ணன், நம்பி, லயனலுடன், வந்து கொண்டிருந்தார். வர வேண்டாமே என்றிருந்தது.

Visitors