Tuesday, August 10, 2010

ஓடும்நதி-44


வாழ்க்கையெல்லாம் வெறும் கேள்வி மயம்-இதில்

வளர்ந்தது சமுதாயம்.-இங்கு

வந்ததன் பின்னே கேள்வியிலேயே

வாழ்வதுதான் நியாயம்......என்ற பட்டுக்கோட்டையின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.

ஆம், வாழ்க்கை ஒரு புதிர். அது நமக்கு மேலும் மேலும் கேள்விகளைச் சொல்லித் தந்த வண்ணமே நகர்கிறது.தீர்வுகளைப் பதில்களாகச் சொல்லாமல் மேலும் கேள்விகள் மூலமாகவே சொல்கிறது.

ஒவ்வொருவரின் தேடலுக்கும் கேள்விக்கு இடையே அது விடைகளைத் தரத்தான் செய்கிறது. ஆனால், நாம் கவனியாமல் விட்டு விடுகிறோம்.ஒரு நாடோடிக் கதை உண்டு.ஒருத்திக்கு, நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.அவள் கடுமையான பல விரதங்கள் இருந்தாள்.இருக்கன் குடி மாரியம்மனுக்கு நேர்ந்துகொண்டு 41 நாட்கள் சுத்தமாக விரதம் இருந்து கோயில் சென்று வந்தால், குழந்தைப் பாக்கியம் கிட்டும் என்று சொன்னார்கள். அப்படியே நாற்பது நாள் விரதமிருந்து, நாற்பத்தியோராம் நாள் இருக்கன்குடிக்கு ‘மாரியம்மனைப் பார்க்க, சுத்தபத்தமாகக் கிளம்பினாள்.அந்தக் காலத்தில் பஸ் வசதியெல்லாம் இல்லை, கால்நடையாகவே சென்றாள்.வழியில் வெயில்க் களைப்பிற்காக ஒரு ஆற்றோரமாய் மர நிழலில் தங்கினாள். கையில் ஒரு குழந்தையுடன் ஒரு பெண் மரத்தடியில் ஏற்கெனவே இருந்தாள்.அவள் முகமெல்லாம் ஒரு தவிப்பு.இவளைப் பார்த்ததும், அக்கா இந்தக் குழந்தையை ஒரு நிமிடம் வைத்திருங்கள், சற்று இயற்கை உபாதையை தணித்து விட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன்என்றாள்.இவளும் சரி என்று குழந்தையை வாங்கி மடியில் வைத்துக் கொண்டாள்.

குழந்தை அழகாக சிரித்துக் கொண்டிருந்தது, இவளும் ஆசை ஆசையாகக் கொஞ்சினாள். தாய்க்கு என்ன அவசரமோ, திரும்பச் சற்று நேரமாயிற்று,குழந்தை சிணுங்க ஆரம்பித்தது.இவளுக்கு சமாதானப் படுத்த தெரியவில்லை,பொறுமை இழந்தாள். காணாததற்கு இவள் மடியிலேயே வெளிக்கிருந்தும் விட்டது.அட சனியனே எம்புட்டுச் சுத்தமா கோயிலுக்கு ஆத்தாளை நெனச்சு வந்துகிட்டு இருக்கேன், சேலையை எல்லாம் நாசமாக்கிட்டயே, என்று குழந்தையிடம் சத்தம் போட ஆரம்பித்தாள். அது சிரித்தது. ஏயம்மா பொம்பளை சீக்கிரம் வா என்று சத்தம் கொடுத்தாள். தாய் வந்ததும், “ச்சை,என்ன புள்ள இது, என் விரதமெல்லாம் வீணாப் போய்விடும் போலிருக்கே, செய்யறதையும் செஞ்சிட்டு, சிரிக்க வேற செய்யுது, மூதேவி, ச்சீ இந்தா புடி,என்று அவளையும் கடிந்து கொண்டு ஆற்றை நோக்கி ஓடினாள். மீண்டும் குளித்து சேலையை எல்லாம் சுத்தம் செய்து, ஈர உடையுடன்,கோயிலை நோக்கி நடந்தாள்.

கோயிலில் ஆளே இல்லை, அம்மன் மட்டும் தூங்கா விளக்குகளுக்குப் போட்டியாக, மூக்குத்தி மின்ன அழகாய்ச் சிரித்துக் கொண்டிருந்தாள். யேழா தாயே, என்னமா நான் உன்னைக் கும்பிடுதேன், எப்படியெல்லாம் விரதம் இருந்து கஷ்டப்படுதேன், ஒரு புள்ளையத் தரக்கூடாதா,என்று வாய் விட்டு அரற்றினாள்.யாரோ சிரிக்கிற மாதிரி சத்தம் கேட்டது. இவள் சுற்று முற்றும் பார்த்தாள். சிரிப்பு, கருவறையிலிருந்துதான் வந்தது.உனக்கு சிரிப்பா இருக்கா, என் கஷ்டத்தைப் பார்த்து ஒரு பச்சை மண்ணைத் தந்தா என்ன”, என்றாள். அசரீரியாகக் குரல் வந்தது, “நாந்தான் கொடுத்தேனே, நீதான் மூதேவி, சனியன் என்று திருப்பிக் கொடுத்து விட்டாய், என்று.

இப்படித்தான் நாம் நமக்கு வாழ்க்கை ஏற்படுத்தித் தரும் சந்தர்ப்பங்களை கண்டுகொள்ளாமல், அளிக்கும் விடைகளைப் புரிந்து கொள்ளாமல், பல வாய்ப்புகளை நழுவ விட்டு விடுகிறோம். வாழ்க்கையின் பக்கங்களில், சந்தர்ப்பங்கள் எழுதிச் செல்லும் வரிகளை நாம் முழுதுமாக வாசிப்பதே இல்லை. மாறாக வரிகளுக்கு இடையில் வாசித்து பொழுதையும்,விதியையும் நொந்து கொள்கிறோம்.

ஒரு ஆளுமை வளர்ப்புப் பயிற்சி முகாமிற்குச் சென்றிருந்தேன்.என்னுடன் இன்னொரு நண்பர், சக ஊழியர், வந்திருந்தார். அவர் நன்றாகப் பணியெல்லாம் செய்வார். ஆனால் அவ்வளவு புத்தி கூர்மையானவர் என்று சொல்ல முடியாது. எதையும் கேட்டுக் கேட்டுச் செய்வார், ஆனால் திருத்தமாகச் செய்வார். காலையில் முதன் முதலாக எல்லோருக்கும் ஒரு வினா நிரல் கொடுத்து விட்டு அமைதியாய் மேடையில் அமர்ந்து கொண்டார் பயிற்சியாளர். அதில் பெயர், வயது,பணி புரியும் கிளை, என்று வழக்கமான கேள்விகள் இருந்தன.வாங்கியதுதான் தாமதம், எல்லோரும் கடகடவென்று நிரப்ப ஆரம்பித்தோம்.ஐந்து நிமிடத்தில், நிரப்பி விட்டு நான் சுற்று முற்றும் பார்த்தேன்.நண்பர் விழித்துக் கொண்டு நிரப்பாமல் இருந்தார்,சற்று தூரத்து இருக்கையில். நிரலை பூர்த்தி செய்யாமலே கொடுத்து விட்டார். எனக்கு, “என்ன, இதற்குக் கூட உதவி தேவையா என்று தோன்றியது. ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்த பயிற்சியாளர், நண்பரைப் பெரிதும் பாராட்ட ஆரம்பித்தார்.எனக்குப் புரியவில்லை. அவர் நிரல்களை மறுபடி கொடுத்து,முதலில் நிரலை நன்றாக வாசியுங்கள் என்றார்.தலைப்பில், கொட்டை எழுத்தில். நிரப்பும் முன், வழிகாட்டி நெறிமுறைகளை நன்கு படிக்கவும் என்றிருந்தது.நெறி முறைகளுக்காக பின் புறம் திருப்பினோம்.முதல் நெறிமுறையில் முன்பக்கத்தின் எந்தக் கேள்விக்கும், விடையளிக்க வேண்டாம்என்றிருந்தது. நண்பரைத் தவிர எல்லோர் முகத்திலும் அசடு வழிந்தது.

Visitors