Saturday, November 15, 2008

சித்திரத்தில் பெண்ணெழுதி..........

அன்று ஏதோ பந்த் கடைகளெல்லாம் அடைத்திருந்தது.அநேகமாய் எம்ஜியார் கட்சி அழைப்பு விடுத்த பந்த் என்று நினைவு.முந்தின நாளே ஊருக்கு கிளம்பிவிட நினைத்திருந்தேன்.இரண்டு நாள்தான் ஆகியிருந்தது ஊருக்கும் போய் வந்து. பஸ் வசதியும் மதுரையிலிருந்து இப்போது போலெல்லாம் அப்போது கிடையாது. ராத்திரி சில எக்ஸ்பிரஸ் பஸ்(திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக பஸ் வரும்..அதற்கும் அடி பிடியாக இருக்கும்.ஒரு பாஸஞ்சர் ரயில் பத்து மணிக்கு கிளம்பி விடிகாலை ஐந்து மணிக்கு திருநெல்வேலி வரும்.ஏழு எட்டு மணி நேரம் ஆகி விடும். ஐந்து ரூபாய் கட்டணம்..லக்கேஜ் கேரியரில் இடம் கிடைத்தால் நல்லது. அதிலும் மூட்டைப் பூச்சி தொல்லை தாங்க முடியாது.ஒரு பீடியைக் கொளுத்தி இண்டு இடுக்கெல்லாம் புகை போட்டு நசுக்கினால் அரை மணி நேரம் தூங்க முயற்சிக்கலாம்.
சிகரெட் சரிப்பட்டு வராது. வளைந்து நொடிந்து விடும். ஒரு இழுப்பு வேறு இழுக்கச் சொல்லும். அது வேறு சவ வாடை வீசும்
மூட்டைப் பூச்சியை கொளுத்தினதால்.யாராவது புண்ணியவான் பீடி தானம் தருகிற பொற்காலம்தான் அது.பீடி பல விஷயங்களில் சவுகரியம். அவசரமாக, மையிலோ சாயத்திலோ முக்கி தட்டி போர்டு எழுத ப்ரஷ்ஷை விட தோதுவாயிருக்கும்.67 தேர்தலுக்கு இரண்டு நாள் முந்தி தோழர், கரிக்காத்தோப்பு ஜமால் மைதீன் சொள்ள மாடன் கோயிலில் இயங்கிக் கொண்டிருந்த எங்கள் 11 வது வட்டதி.மு.க தேர்தல் காரியாலயத்திற்கு அடி பட்டு ஓடி வந்தார்.தலையிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. நாங்கள் நாலைந்து பேர் அவர் வந்த திசையில்,ரதவீதியில் ஓடி, யார்ல அது அடிச்சது என்று சத்தம் கொடுத்தோம்.திமு திமு வென்று இருட்டில் நின்று கொண்டிருந்த ஊதா நிற போலீஸ் வேனிலிருந்து சட்டிப் போலீஸ் விரட்ட ஆரம்பித்தது. தெருவுக்குள் ஓடினோம். இந்த ரிசர்வ் போலீஸ்காரர்கள் பெரும்பாலும் வெளியூர்க் காரர்கள்., விரட்டுபவர்கள் தெருவுக்குள் ரொம்ப தூரம் வர மாட்டர்கள். இது எங்களுக்கு 65 இந்தி எதிர்ப்பு போராட்டத்திலேயே பழகி விட்டது.தெருவில் ஏதாவது முடுக்குக்குள் ஓடிவிடுவோம்.போலீஸ் தயங்கியோ, போதும் என்று நினைத்து திரும்பி விடுவார்கள்.உடனேயே, தாள் ஒட்டி ரெடியாக இருந்த தட்டி போர்டில் பீடியால் எழுத ஆரம்பித்தோம். பத்த வைக்காத பீடி வசதிப் படாது. நானே பற்ற வைத்து ரெண்டு இழுப்பு இழுத்து(ஏல ஜோரா இழுக்கியே என்று பெரிய கோபால் சொன்னான்) தரையில் மட்டமாக அழுத்தி அணைத்து உலை மூடியில் தயாராக இருந்த வஜ்ஜிரம் கொதிக்க வச்ச தண்ணீரில் கரைத்த நீலக் கலரில் முக்கி எழுத ஆரம்பித்தேன். ”ஆளுங்கட்சியின் அராஜகம் பாரீர்.”...என்று.இந்த மாதிரி வாசகங்கள் எல்லாம் அத்துப் படியாகி இருந்தது.
மதுரையிலேருந்து திருநெல்வேலிக்கி வந்துட்டேன், அதுவும் ஆறு, ஏழு வருஷம் முந்தி.இதுதான் வாயு வேகம், மனோ வேகம் என்பதா, இல்லை ஜூல்ஸ் வெர்னின் டைம் மெஷின் சமாசாரமா.சரி ரயிலுக்குப் போவோம் என்று யோசிக்கும் போது நல்லதம்பி வந்து சேர்ந்தார்,செயப்பிரகாசம் மூலம் அறிமுகமானவர், மதுரையில் அலுவலாய் இருந்தார்.சரி வா சிம்மக்கல்லுக்கு என்று கூப்பிட, ஊர் போகிற ஐடியாவை கைவிட்டு அவருடன் போனேன்.கல்பனாத் தியேட்டர் முக்கில் குவார்ட்டர் மாக் டெவல் வாங்கி ஃபாண்டா கலந்து ஆளுக்கு ஒரு மடக்கு சாப்பிட்டு விட்டு கோனார் கடையில் போய் திருப்தியா முட்டைத் தோசை. கறிக் குழம்பு சாப்பிட்டு விட்டு நின்றவாறே பேசிக் கொண்டிருந்தோம்.அவர் தல்லாகுளம் வந்திருதியா ஆபிஸில் படுத்துக் கொள்ளலாம், பக்கத்திலேயே மெஸ் இருக்கு,என்றார்.முதலில் காசு இல்லையென்றவர் இன்னும் கொஞ்சம் வேண்ணா சரக்கு சாப்பிடுவோம் என்றார். யாத்தாடி நம்ம லிமிட்டு இதுதாம்ப்பா என்று ரூமிற்கு திரும்பி விட்டேன், அங்கன இல்லாத மெஸ்ஸா,என்று நினைத்தபடி.காலையில் டிஃபன், கோபால கொத்தன் தெருவில், எனக்கு அவ்வளவு பிடிக்காத ஸ்ரீ ராம் மெஸ்ஸில் கழிந்து விட்டது.அந்தக் கடை ஐயர் சொல்லவும் சொன்னார். மத்தியானத்துக்கு லெமன் சாதம், தயிர் சாதம் இருக்கு பார்ஸல் வாங்கி வச்சுக்கோங்க, கதவை அடைக்கப் போறோம். இன்னமே ராத்திரிதான் என்று. நாந்தான் போய்யா சூடாச் சாப்பிடவே நல்லாருக்காது உம்ம கடையில், என்று நினைத்துக் கொண்டேன்.பக்கத்திலேயே ராஜஸ்தானி மெஸ். அங்கே சாப்பிட்டதே இல்லை, மத்தியானம் ஒரு பிடி பிடிச்சுருவோம் என்று நினைத்துக் கொண்டேன். அங்கே சப்பாத்தியா போட்டுக் கிட்டே இருப்பானாம்ல என்று கேள்விப் பட்ட ஆசை வேறு.. நல்ல வேளை அரைப் பாக்கெட் பில்டர் வில்ஸ் வாங்கிக் கொண்டேன் அப்படி நான் வாங்கியதே இல்லை. அப்பப்ப ஒன்றோ இரண்டோ தான் அதுவும் ஒருநாளக்கி ஆறு ஏழுக்கு மேல் கிடையாது, முடியாதுங்கிறதும் ஒரு நெசம்.
மத்தியானம் நெருங்கும் போது தான் தெரிந்தது, ஒரு கடை கூட திறக்கவில்லை.அதைச் சொல்லிக் கொண்டே அறையை என்னுடன் ஆக்கிரமித்திருந்தவர், காலையிலேயே வாங்கி வைத்திருந்த பச்சைப் பழத்தை தின்று கொண்டிருந்தார்.ஒரு பேச்சுக்கு கூட இந்தாருங்க சார் ஒரு பழம் தின்னுங்க என்று சொல்லலை.தட்டாரச் சந்தில் இருந்தது, அந்த மாத வாடகை லாட்ஜ். மேன்ஷன்னு சொன்னா இப்ப உள்ள காலங்கள்ள ஈசியா உடனே புரிஞ்சுரும்.நான் தனியாத்தான் முழு வாடகை கொடுத்து தங்கியிருந்தேன். லாட்ஜை மேல்ப் பார்க்கிற தாத்தா திருநெல்வேலிகாரராம். நான் காங்கிரஸ் தியாகி சாவடி கூத்த நயினார் பிள்ளையின் சொந்தக்காரன் என்று பேச்சு வாக்கில் ஒரு நாள் சொன்னதும், ஆஹா எப்பேர்ப்பட்ட மனுஷன், காந்தியை அவர் வீட்டில்தான் பார்த்தோம்.அந்தப் பெரிய வீட்டின் அமைப்பை நான் கட்டு, கட்டாக விவரித்ததும் அவர் முகம் மலர்ந்து போச்சு.ஆமா ஆமா அங்கதான், அங்கதான் இருந்தாரென்று சந்தோஷம் தங்காமல் `ஆமா’ போட்டுக் கொண்டிருந்தார்.இது எனது இரண்டாவது குடித்தனம் இந்த லாட்ஜில். முதலில் ஒரு மூன்று மாசம் இருந்து விட்டு, மு.ராமசாமி கூட யுனிவர்ஸிட்டியில் தங்கி இருந்தேன்.இந்த லாட்ஜில் ரூமே கிடைக்காது.நல்ல வெளிச்சமான சுத்தமான லாட்ஜ்.அதனால் இரண்டாவது முறை வந்து கேட்டதும் ஒரு ரூம் இருக்கு முழு வாடகை தர முடியும்ன்னா வாங்க, அடுத்த மாசமா இன்னொரு ஆள் சேர்த்துகிடுவோம் என்று சொல்லி சாவியைத் தந்து விட்டார் அந்த தாத்தா. எல்லாருக்கும் ஆச்சரியம். அப்புறம், நான் வேண்டாமென்று சொல்லியும் இந்த ஆளை என்னுடன் தங்க வைத்தார். இந்த மாமா, மாமி கூட சண்டை போட்டு அவளை அப்பா வீட்டுக்கு அனுப்பியிருந்தார். மில்லில் வேலை.பெரும் பாலும் நைட் ஷிப்ட்தான் விரும்பிப் போவார். காலையில் அஞ்சு மணிக்கு வந்து கதவைத் தட்டி எழுப்பி விட்டு விடுவார். வந்ததும் பேண்ட் சட்டை எல்லாம் களைந்துவிட்டு , ஒரு காடாத்துணியில் தைத்த அன்டெர் வேரும் பூணூலும் தான் டிரெஸ்,.நேவி புளூ சிகரெட் வாங்கி வந்திருப்பார், பற்ற வைத்துக் கொண்டே சளசளக்க ஆரம்பித்து விடுவார்.ஜுக்னூ படம் பாத்தீங்களா சார்,
தேயோளீ ஐயங்காரிச்சி என்னமா இருக்கா என்று ஹேம மாலினியைப் பற்றிச் சொல்லி, சிகரெட்டை வேகமா இழுப்பார் அது பளீர்ன்னு கனிகிற உக்கிரத்தை வச்சே அவருக்குள்ளிருக்கும் `நீறு பூத்த நெருப்பை’, வெறியை உணர முடியும்.பொறகு ஏம் வே பொண்டாட்டிய தள்ளி வச்சுருக்கேருன்னு கேக்கத் தோனும். பர்ஸில் மனைவியின் படம் வச்சுருப்பார். அந்த அம்மா படத்தில் அவ்வளவு அழகா இருக்கு,அவரே காண்பித்து சொல்லவும் செய்வார்,பிறாமனத்தி கோச்சுண்டு போய்ட்டாளே சார்ன்னு. சொல்லும்போது ரகஸ்மாய் நம்ம முகத்தை படிக்கிறமாதிரி தோனும்.எப்படியோ தூங்கிப் போவார்.நான் ஒன்பது மணிக்கு கிளம்பிப் போகும் போது கூட முழிக்க மாட்டார். நான் கதவை வெளியே பூட்டி விட்டுப் போவேன் அவர் முழிக்கிற போது அவர் சாவியை, வெளியே நடமாடுகிற யாரிடமாவது கொடுத்து திறக்க சொல்லுவார்.
ஒரு நாள் சாயந்திரம் வாக்கில், இவரோட அம்மாவோ என்னவோ, ஒரு கிழம், ஒரு குழந்தையை அழைத்துக்கொண்டு இவரைத் தேடி வந்து ரூமில் இருந்தது. சுட்டிப் பெண் அழகாக இருந்தது.நான் உள்ளே தயங்கியபடி நுழைந்ததும் நன்றாகச் சிரித்தது. பேச முயன்ற குழந்தையை கிழவி கண்ணாலேயே அதட்டி தடுத்து விட்டார். அதற்குள் மனுஷன் வந்துட்டார். கையில் கொஞ்சம் பொட்டலங்கள், பேண்ட் பாக்கெட்டில் என்னவோ கனமாக இருந்தது.கிழவி கையில், பொட்டலங்களை வீசாத குறையாய் கொடுத்து விட்டு, கொஞ்சம் பணம் எதுவோ கொடுத்து போய்க்கோடி என்றார்.பணம் காணாதுடா என்றவளிடம் காணாட்டா வச்சுட்டுப் போ என்று கத்தினர். நான் வெளியே கிளம்பி விடுவது நல்லது என்று நினக்கும் போது அந்த அம்மா நீங்க இருங்கோ சார். என்றது. நான் கிளம்பிவிட்டேன். `கிழம்’ங்கிறதெல்லாம் அவரோட வார்த்தைகள்.மேல மாசி வீதியில் ராஜேந்திரன் கடையில் ஒப்புக்கு ஒரு காபி குடித்துவிட்டு திரும்ப ரூமுக்கே வரும் போது எதிரே அந்த அம்மா வந்தார்கள்.பக்கத்தில் வந்ததும் அவர்களே பேசத் தொடங்கி விட்டார்கள்.பாருங்க சார்,பொண்டாட்டிய சந்தேகப் பட்டே விரட்டி விட்டுட்டான்.இந்தக் குழந்தைய நான் எப்படி காப்பாத்துவேன்,என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்.குழந்தை, ஏழு எட்டு வயசிருக்கும்.அதைப் பற்றிப் பேசுகிறோம் என்று தெரிந்தோ என்னவோ அற்புதமாக ஒரு சிரிப்பு சிரித்தது.எனக்கு ஒன்றுமே பேசத் தோனவில்லை. என்ன எதிர் விளைவு காட்ட வேண்டுமென்று கூட தெரியவில்லை.அந்த அம்மாள் பதிலுக்கு காத்திராமல் போய் விட்டது.கருக்கல் நேரம் சீக்கிரம் போகனும் என்று சொல்லிக்கொண்டே போய் விட்டது. குழந்தை, மேல மாசி வீதி ஆரவாரங்களை வேடிக்கை பார்த்த படியே போனது. இன்னும் ஒருதரம் அது சிரித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இல்லை. அவர் சந்தேகப் பட்டது மனைவியோட அத்திம் பேரைப் பத்தியாம்.அவ இவள விட ரொம்ப நன்னாருப்பா சார்.ஆனாலும் அவனுக்கு இவ மேல ஆசை சார்,இவளுக்கும்தான் சார், இப்ப அவன் கூடத் தான் இருக்கா,உங்க கிட்ட சொல்றதுக்கென்ன, என்று அறைக்குள் நுழைந்து உட்காரப் போகும் முன்பே சொல்லத் தொடங்கினார்.அறையில் ஒரு மடக்கு மேஜை. அது முழுக்க என் உபயோகத்தில் இருந்தது.என்னுடைய நோட்டு, சில புத்தகங்கள், எண்ணெய், பவுடர் என்று என் பொருட்களே இருக்கும், இன்று அவர் அதில் ஒரு ரம் பாட்டில, சாயம் போன ரோஸ் நிற அலுமினியத் தம்ளர், தண்ணீர் கூஜா, கொஞ்சம் கார வகையறா என்று கடை பரப்பி இருந்தார்.ஸ்டூலை அருகே போட்டு சம்பிரமமாக உட்கர்ந்து ஜல பானம் பண்ணிக் கொண்டிருந்தார். ஒரு அரை மணி நேரம் அவளைப் பற்றி ஏசித் தீர்த்துவிட்டார். அந்த மன்னி, ஆமாவோய் என் ஆத்துக்காரர் கூட நானே அனுப்புவேன் என்று கூட்டிப் போய் விட்டதாக முடிக்கும் போது நன்றாக குளறத் தொடங்கி சத்தமும் லாட்ஜ் முழுக்க கேட்கத் தொடங்கி விட்டது.எனக்கு நீல பத்மனாபனின் பள்ளி கொண்ட புரம் கதை நினைவில் ஓடியது.ஏற்கெனெவே அவர் வருகை எனக்கு பிடிக்கவில்லை.இந்தப் பேச்சு மூலம் அவர் என்னை நெருங்கி வந்துரக் கூடாதே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே மனுஷன் சார் நீங்க ஒரு ரவுண்டு சாப்பிடுங்கோ வேற வாங்கிட்டு வரச் சொல்றேன் என்று லாட்ஜ் பையனை அழைத்தார்,`மகேந்திரா”என்று.அவன் எங்கிருந்தோ வாரேன் சார் என்று குரல் கொடுத்தான். இது வாடிக்கைதான்.குரல் தான் வரும் ஆள் வர மாட்டான். அவனுக்கு தெரியும் யார் கூப்பிட்டா வரனும் என்று.சார் பய தளதளன்னு இருக்கான் பாத்தீங்களா சார்.பொம்பளை மாதிரி தொடை எப்படி இருக்கு, என்னா சார் என்று சொல்லி விட்டு, சார் நான் கூப்பிட்டா வர மாட்டான் நீங்க கூப்பிட்டா வருவான், நீங்க சட்டையெல்லாம் கொடுத்திருக்கீங்க போல இருக்கு என்று சொன்னதும் , சரி இது லாயக்குப் படாது என்று நினைத்து, வேண்டாம் சார், நான் சாப்பிடப் போறேன் என்று கிளம்பி விட்டேன். மகேந்திரன் ரூமிற்கு வெளியேதான் நின்றிருந்தான்.என்னிடம் பிரியமாய் இருப்பான்.சார் நீங்க கூப்பிடலேல்லா என்றான்.இல்லை நான் கூப்பிடலை என்று சாப்பிடப் போய் விட்டேன். காரணமில்லாமல் மகேந்திரனும் கூட வந்தான்.நாலணா கொடுத்தேன் வேண்டாம் சார் சும்மதான் வந்தேன். வீட்டுக்கு சாப்பிடப் போறேன்,என்று நகர்ந்தவன் சார் வீட்டுக்கு சாப்பிட வாரீங்களா சார் அம்மா, வீட்டு வாசலில் இட்லிக் கடை போட்டிருக்கு, என்றான் நான் போகவில்லை.அவன் வீடு செண்ட்ரல தியேட்டருக்கு அடுத்த சந்து. அது வழியாக திண்டுக்கல் ரோடுக்கு போய் விடலாம்.ஜி.நாகராஜன் கதையில் வருகிற தெரு.பகலில் வீடுகள் அடைத்தே இருக்கும்.இரவில் திறந்து கொள்ளும்.தெரு முழுக்க, பெரிய பாளங்களாக கல் பாவி இருக்கும் ஆனால் மாடுகள் தெருவில்தான் கட்டப் பட்டு ஒரே சாணியாய் இருக்கும்.அந்தக் கல்லுக்காகவே ஒன்றிரண்டு தரம் அந்தத் தெரு வழியாகப் போயிருக்கிறேன் .அந்த மாதிரிப் பெண்கள் நான் போகிற பகலில் தட்டுப் படவில்லை.இன்னும் ஒன்றிரண்டு முறை போனால் நாக ராஜனையே பார்த்து விடலாம் என்று தோன்றும்.ஒரு சமயம் மேலக் கோபுர வாசல் தெருவில் மீனாட்சி புத்தக நிலையத்தில் அண்ணன் மீராவைப் பார்த்த போது இப்பதான் நாகராஜன் போறார் என்றார்.
மகேந்திரனின் அம்மாவும் அழகாக இருக்கும் என்று லாட்ஜில் சொல்லுவார்கள்.லாட்ஜில் துணை மேனேஜராக இருக்கும் பாண்டியனுக்கு மகேந்திரனைச் சத்தம் போடுவதே வேலை.அவன் அம்மா அவர் மூலமாகத்தான் மகேந்திரனை லாட்ஜில் சேர்த்த்தாளாம்.அதற்குப் பிரதியாக ஒன்றிரண்டு தரம் வந்தவள், பின்னர் மறுத்து வருவதால்த் தான் என்று அவனுடன் வேலை பார்க்கும் இன்னொரு பையன் சந்திரன் சொல்லுவான்.(இரண்டு பேரும், சார் நீங்க அவனைக் கூப்பீட்டீங்கன்னு நினைச்சேன் என்று ஏமாத்துவார்கள், பேர் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால்)
பந்த். பசி வயிற்றை ,கிள்ளத் தொடங்கியது.மகேந்திரனைக் கூப்பிட்டு சாப்பிட பழமாவது கிடைக்குமா பார் என்றேன். கடை எதுவும் இல்லாததால் அவர்களை யாரும் எதற்கும் கூப்பிடவில்லை.ரூம் மேட் பாத்தீங்களா உடனே வந்துட்டான் என்று கடுப்படித்தார்.சார் இங்க கொஞ்சம் வாங்க என்று மகேந்திரன் வெளியே அழைத்துப் போனான். சார் எங்க வீட்ல சாப்பிடுவீங்களா.. என்றான். ஆஹா அதுக்கென்ன, போவோம் என்றேன். சார், அப்ப நீங்க தெரு முனையில் நில்லுங்க, நான் இதோ வந்துருதேன்.என்றான்.நான் நின்று கொண்டிருந்தேன். சீக்கிரமே வந்து அழைத்துப் போனான்..சார் யாராவது என்னமாவது சொல்லுவாங்கன்னு தான் உங்களை இங்க நிக்க சொன்னேன். ஐயரு ரொம்ப மோசம் சார் என்றான்.வீடு வந்து விட்டது. தெரு சுத்தமாக சாணியில்லாமல் இருந்தது.ஆனாலும் வாசனை இல்லாமல் இல்லை.அவன் வீட்டு வாசலில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தது. வீடென்றால் இரண்டு கட்டு. முதல் ரூம்தான் சாப்பாட்டுக்கடை போலிருந்தது.நான் பார்க்க விரும்பிய பெண் போல்தான் இருந்தாள் வாசலில் நின்றவள்.ஆனால் சிரிப்பு மரியாதையாக இருந்தது.அவள் தானாகவே வழி விட்டாள் இரண்டாம் கட்டு நடையில் அவன் அம்மா யாரோ குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். . நான் உள்ளே நுழையத் தய்ங்கினேன்.ஜாடை அவனைப் போலவே இருந்தது.அவனை விட நிறம்.வாங்க சார் என்று சொன்ன படியே குழந்தையை மாரிலிருந்து எடுத்து வாசல்ப் பெண்ணிடம் நீட்டினாள். சரியாக மூடாத மாரிலிருந்து பால் ஒரு சொட்டு திரண்டு நீர் போல் நின்றது. மூடுவதைப் பற்றிய சிரத்தை இல்லை. அதில் தவறாக எதுவும் தோன்றவில்லை.சார் சாப்பிட வந்திருக்காங்க என்றான். அதில் ஒரு பெரிய மனுஷ தோரணை இருந்தது.உக்காருங்க சார் என்றான். தரை சற்று நீர் வற்றாக இருந்தது.தயங்கியபடி உடகார்ந்தேன். அவன் அம்மா சர்வ சகஜமாக இருந்தாள். உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு நகரவில்லை.தலைமுடியில் சற்று சடை விழுந்திருந்து, முப்பது, முப்பத்திஐந்து வயதுக்குள் இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தது. சார் டிஃபன் பண்ணித் தரட்டா, என்றாள்.அவன் சோறு பொங்கலையா என்று கேட்டான்..உனக்கு மட்டும் கொஞ்சம் பழையது இருக்கு, சார் சாப்பிடுவாங்கன்னா சாப்பிடட்டும்.என்றாள். என் முகத்தில் தயக்க ரேகையைப் பார்த்தாளோ என்னவோ சார் ஒரு நிமிசம் என்று தன் பக்கத்திலிருந்த ஸ்டவ்வைப் பற்ற வைத்து தோசைக்கல்லைப் போட்டாள். சார் பொடி வச்சு சாப்பிடுவீங்கள்ளா என்று கேட்டு முடிக்கும் முன்னேயே தலையை ஆட்டி விட்டேன்.அவன் தட்டு சோறு எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து என் பக்கத்தில் உட்கார்ந்தான்.இருடா சாருக்கு எடுத்து வச்சுட்டு சாப்பிடேன் என்றாள் நான் பரவாயில்லை என்ற சொன்ன மாதிரி இருந்தது.எனக்குப் பேச்சே வரவில்லை.ஒரு தட்டை எடுத்து தன் சேலையில் துடைத்து என் முன் வைத்தாள்.கனத்த நூல்ச் சேலை.சேலை கனமா, அழுக்கு கனமா தெரியவில்லை.தடிமனான தோசை தட்டில் விழுந்தது.மாவு நன்றாகப் புளித்த மாதிரி வாசனை மூக்கில் அடித்தது.மிளகாய்ப் பொடிக்கு எண்ணெயில்லை. பசியில் அதெல்லாம் தெரியவில்லை. என்றாலும்.,தின்னு கெட்ட நாக்கு ஆச்சே.அதையும் முகம் காட்டிக் கொடுத்ததோ என்னவோ.மோர்ச் சட்டியை என்னருகே நகர்த்தினாள். நல்ல பசும் மோர். புளிக்கவேயில்லை.அவன் அம்மா இடத்தை விட்டு அகலவே இல்லை. மூன்று தோசையே போதுமானதாயிருந்தது.நாலாவது தோசையை ஊத்தப் போன போது வேண்டாம் என்று தடுத்தேன்.நல்லால்லை போலிருக்கு, என்றாள் அய்யய்யோ நல்லா இருக்கும்மா என்றதும் என் அம்மாவென்ற விளிப்பு சிரிப்பை வரவழைத்ததோ என்னவோ,சிரித்த படியே சார் என்னா ஆளுகளோ என்றாள்.எனக்குப் புரிவதற்குள் மகேந்திரன், சார் நம்ம லாட்ஜ் தாத்தாவுக்கு பங்காளிங்க என்றான்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.சரி எதையோ அவன கற்பிதம் பண்ணியிருக்கான் என்று தொடர்ந்து அமைதி காத்தேன்.அவள் அடுப்பை அணைக்க ஒரு கை தண்ணீர் எடுத்து அதன் மேல் தெளித்தாள். குப்பென்று மண்ணெண்ணை அடுப்பு அணைகிற வாசனை பரவியதும், சரியாக இன்னொரு பெண் ஒரு குழந்தையுடன் வந்தாள். அடுப்பை நகர்த்தி விட்டு அதை வாங்கி முலையூட்ட ஆரம்பித்தாள். இந்தத் தெருவில் அநேகமா எங்க வீட்ல மட்டுந்தான் ஆம்பிளப் பையனா மகேந்திரன் மட்டும் நிக்கான், மத்ததெல்லாம் எங்க போச்சுகளோ என்றாள். இந்த குஞ்சுகளும் எங்கன உள்ளதோ. அந்தா தொட்டில்ல கிடக்கிறது இவன் தங்கச்சி.அது புண்ணியத்தில இதுகளுக்கும் சுரக்கு. காசு வேண்டான்னாலும் இதுக கேட்காது. என்று நீளமாகப் பேசிக் கொண்டே போனாள்.என்னை யோசிக்கவே விடவில்லை, என் மௌனத்தை மிகச் சரியாகப் படிப்பது போலிருந்தது.எனக்கு யோசனையும் இல்லை. ஏங் கதை மாதிரித்தான் இப்ப ஒரு சினிமால்ல பிரமிளா பால் கொடுக்கா.நடக்கறதத்தானே சினிமால காட்டுறான்.,சரி நீங்க வாங்கய்யா ஏய் இவனே, சார்ட்ட துட்டு கிட்டு வாங்கிறாத, சாப்பாடு என்னமா இருந்ததோ என்னமோ.... என்ற அவளின் குரல் பின்னால் ஒலிக்க நாங்கள் இருவரும் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினோம்..மிக சகஜமாக முலையூட்டிக் கொண்டிருந்த அவளிடம் நான் வருகிறேன் என்று சொல்லவில்லை.தைரியம் இல்லை. மகேந்திரன் பெரிதாக எதையோ சாதித்த மாதிரி பேசிக் கொண்டே வந்தான்.ஒரு வீட்டில் ஜமுனா ராணியின் பூப் போட்ட கிளாஸிலே போடய்யா ஒண்ணரை....என்ற பாட்டு கேட்டது.கண்ணதாசன் சொல்லுவார் தமிழை ஜமுனா ராணி பாடிக் கேட்க வேண்டும் என்று.அதற்காகவே அவர் சொந்தப் படங்களில்/ வசனமும் பாட்டும் எழுதுகிற படங்களில், ஜமுனா ராணியின் பாட்டு தவறாமல் இருக்கும்.இந்த யோசனையின் தொடர்ச்சியாய் மனசுக்குள் பாடினார், பூப்போட்ட கிளாஸை விட்டு வெகு தூரம் வந்த பிறகு.
”சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழ விடமாட்டாயோ..........”

Sunday, November 9, 2008

மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தின் மயங்கின ஒளியினைப்போலே.........
_________________________________________________________________________
தினமும் ஆற்றில் குளித்தால் தான் குளித்த மாதிரி இருக்கும்.ஏதாவது காரணத்தால் திடீரென்று இது நாலைந்து நாள் தடைப்பட நேர்ந்தால் அவ்வளவுதான்.அப்புறம் போகவே தோணாது.திடீரென்று ராத்திரி சபை கூடி சடவாரிக் கொண்டிருக்கையில் `ஏ நாளையிலிருந்து ஆத்துக்குப் போவோமாடெ’ என்று யாருக்காவது யோசனை உதிச்சுரும் மறுநாள் காலையில் திருப்பாவை பாடி எழுப்புகிற மாதிரி பெரிய கோபால் அல்லது கணபதி காலையில் எழுப்புவான்.தெருவின் மேல்க் கோடியில் இருக்கிற என் வீட்டில் தெருவில் நின்றவாறே சத்தம் கொடுத்துவிட்டு வேறு சேக்காளிகளை கூப்பிடப் போய்விடுவான். கால் மணி நேரத்தில் எல்லோரும் தெரு முனையில் இருக்கும் சொள்ள மாடன் கோவில் முன்பாக, அதற்கு சற்று தெற்கு வடக்காக நின்று கொண்டிருப்போம்.சுடலை மாடன் சன்னதிக்கு இரண்டு புறமும் நீளமான மேல ரதவீதி.காலை நேரமாதலால் கடைகள் எல்லாம் அடைத்திருக்கும். கீழ்ப் புறத்தின் உயரமான, நீளமான கடைப் படிகளில் வெவ்வெறு விதமான மனுஷர்கள்.தவசுப் பிள்ளைகள், பாடை தூக்குகிற உழக்குஅண்ணன், (ஆள் குள்ளமாக உழக்குப் போல் இருப்பான் அதனால் உழக்கண்ணன்) போன்றவர்கள்.வெள்ளை அடிக்கிறவர்கள், எங்களுக்கு மூத்த அண்ணாச்சிமார் அரசியலில் தீவிர ஈடுபாடு உடையவர்கள் உக்கிரமாக செய்திகளை வைத்து விவதங்கள் நடத்திக் கொண்டிருப்பார்கள்...நாங்கள் கூடுகிற ஆறரை மணி சுமாருக்கு சரியாக சாவடி வீட்டு காடினாவில் (வண்டிகள் நிறுத்திய இடம்) குடியிருக்கிற பட்டு நூல்க் காரி(சௌராஷ்ட்ர வகுப்புக்காரப் பெண் நெல் அவித்துக் கொடுப்பது, அரப்பு வெந்து காயப் போட்டு திரித்து விற்பது போன்ற காரியங்களில் ஜீவனம் நடத்துகிற வாவரசி(வாழ்வரசி). அரசன் போன இடம் தான் முப்பது வருஷமாகத் தெரியாது.) சொள்ள மாடன் கோயில் உண்டியலை அதற்கு முன்னால் உள்ள லேம்ப் போஸ்டில் கட்ட வருவாள்.முந்தின நாள் இரவில் முதல் ஆட்டம் சினிமா முடிந்து வீடு திரும்புகிறவர்களில் யாராவது ஒன்றிரண்டு பேர் காசு போடலாம் என்ற எதிர்பர்ப்பில் கோயில் நடையிலேயே ராவு பத்து பத்தரை வரை உட்கார்ந்திருந்து. உண்டியலை அவிழ்த்துக் கொண்டு போய் வீட்டுல் பத்திரமாக வைத்திருப்பாள்.அவள் வரவும் ஐம்பது அறுபது வயசு பெரிய்ய அண்னாச்சிமார், அப்பாமார்., பலசரக்குக் கடை. காசுக் கடையில் வேலை பார்க்கிறவர்கள் தங்கள் வழக்கமான பார்லிமெண்டைக் கலைத்து விட்டு `சவம் எங்க நாடு உருப்படபோது’ பாணியில் ஏதாவது திருவாய் மலர்ந்தபடியே நகரத் தொடங்குவார்கள். அதில் யாராவது ஒருத்தர் பெரும்பாலும் பச்சைக்கிளி(இவன் தான் எனக்கு சைக்கிள் சொல்லித் தந்தவன்) மணியோட அப்பா சேதுச் செட்டியாராத்தான் இருக்கும் ஐந்து பைசாவோ பத்து பைசாவோ உண்டியலில் போணி பண்ணிவிட்டுப் போவார்.அவர் நகண்டதும் பசங்க கேலி ஆரம்பிச்சுரும். ஏல என்ன, நேத்து யார்ல கனவுல வந்தா இந்தியா இலங்கை அமெரிக்கான்னு உலக மேப்பே இருக்கு லுங்கியில. என்னல இவ்வளவு கரை.ஆத்தை நாற அடிக்கதுக்குன்னே வாங்கல..என்று யாராவது யாரையாவது வம்புக்கு இழுக்கறது நிதசரி (தினசரி) வாடிக்கை.
கோயிலுக்கு கொஞ்சம் வடக்க தள்ளி ஒம்பதாம் நம்பர் பஸ் நிக்கிற இடம்.அது என்னவோ எழுதப் படாத சட்டம் மாதிரி அந்த பஸ் மட்டும் அங்கேயே நிற்கும்.அந்த பஸ் ராஜவல்லிபுரம் போற பஸ். (வல்லிக்கண்ணன் அண்ணாச்சியின் ஊர்).அது மேற்கு ஓரம் என்பதால் காலை வெயில் அந்தப் பக்கம் லேசாக விழும்.ஒரு நாள் வெயில் பாதி, நிழல் பாதி தன் சிவந்த மேனியில் விழ மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தின் மயங்கிய ஒளியினைப் போல ..ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள் .நல்ல அளவான உயரம். நறுவிசாய்க் கட்டிய சேலை.உயரத்திற்கேற்ற மாதிரி நீளமான கைகளில் ஒன்றிரண்டு புத்தகம், டிஃபன் பாக்ஸ் ஆகியவற்றை மார்போடு அணைத்தபடி கோயில்ச் சிலை மாதிரி சற்றே கழுத்தைச் சாய்த்து நின்றாள். முதல்த் தரம் பார்த்த போதே எல்லாருக்கும் மூச்சு நின்று போனது. அந்த இளங்காலை நேரத்திற்கே ஒரு அர்த்தம் வந்தது போலிருந்தது மறு நாளும் அவளைப் பார்த்த போது.ஒரு நாலைந்து விடலை வயசுப் பசங்க தன்னையே பார்க்கிற குறு குறுப்போ கடு கடுப்போ இல்லாத,. சிரிப்பை அப்போதுதான் விழுங்கின மாதிரியான முகம்.ஆற்று வழி நெடுக அவளைப் பற்றிய பேச்சுத்தான். ஒருத்தன் வைஜயந்தி மாலா என்றான். ஒருத்தன் ப்ரவின் சுல்தானா என்றான். போங்கடா மும்தாஜ் தாண்டா. உதட்டைப் பாத்தியாடா (அந்தக் கால இந்தி நடிகை, ராம் அவுர் ஷ்யாம், கிலோனா, பூந்த் ஜோ பன் கயே மோத்தி,சச்சா ஜூத்தா. ஜிக்ரி தோஸ்த் என்று இந்திசினிமாவை மும்மு கலக்கிக் கொண்டிருந்த நேரம் அது.)என்றான் கணபதி.வீடு வந்ததும் முதல் வேலையாக ஆம்ரபாலி வைஜயந்தி படம் போட்ட ஈகிள் ஃப்ளாஸ்கை நான் எடுத்து வந்து காட்டியதும் ஆமடெ அப்படித்தான் தோனுது ஆனா பொட்டு இல்லையே என்ற அதிருப்தியும் இருந்தது.எல்லாருமே போங்கடா இவங்க இவங்க தான்,.என்று தீர்மானம் போட்டோம் நாங்கள் அவளை எங்களைப் பார்க்கிலும் சற்று வயது கூடிய பெண்ணாகவே முடிவு கட்டியிருந்தோம். அது சரியென்று காந்திராஜன் செய்தி திரட்டிக் கொண்டு, அவசர அவசரமாக அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த பொறுப்போடு ஒரு நாள் இரவு அரட்டைக் கச்சேரியின் நடுவில் வந்து சொன்னான்.எவம்ல அது வைஜயந்தின்னவன், அவங்க பேர் கதிஜா, சங்கர் நகர் ஸ்கூலில் டீச்சரா இருக்காங்க, வீடு பாப்புலர் டாக்கீஸ் பக்கம், ஆனா ரோட்டிலேருந்து பார்த்தா வீடு தெரியலை, ஒரு முடுக்குக்குள்ள இருக்கு என்றான்.
இதிலெல்லாம் அவன் கில்லாடி.அவன் அப்பா கிறித்தவப் பாதிரியார். செல்லமா பொந்துக் கண்ணன் என்று கூப்பிடுவோம்.கண்கள் சற்று குழி விழுந்திருக்கும்.ரொம்ப ரொம்ப நல்லபையன் சூது வாதே தெரியாதவன்.என்ன கேலி பண்ணினாலும் கோவமே வராது..ரொம்ப அதிகமும் பேச மாட்டன். பேசினாலும் உளறல் திலகம்தான்.எங்க வீட்டுப் பிள்ளை நாகேஷ்தான் .ஒரே ஸ்பூனரிசம்.. ஒருசமயம், .அதேகண்கள் படம் போய்விட்டு வந்தான், அவன் போகும் போது படம் ஆரம்பித்துவிட்டது, எந்தக் கட்டத்துக்க்கில (ஸீன்) போனே என்று கேட்டதும் `அவ தோக்குல தூங்குவால்ல’ அந்தக் கட்டத்துக்கு போனேன். என்றான்.ஏல தோக்குலயா, தோப்புலயா என்னல சொல்லுத என்று கேட்டால் அதாம்ல ஜி.சகுந்தலா பார்ப்பால்லா, அப்பத்தான். ஏ மூதேவி உணர்ச்சி வசப்படாம சொல்லுலெ என்றதும் சற்று நேரம் ஊமையாகி விட்டான்.கொஞ்ச நேரம் கழித்து மெதுவா ஆரம்பிச்சான், அதாம்ல அவன் கயத்தில தொங்குவாம்ல அப்ப என்றான். எடு வாரியல, மூதேவி, தூக்கில தொங்குறதை தோக்குல தூங்க வச்சிட்டயேல என்றதும் சிரிப்பு வெடி ஒன்று பரவியது.இப்படித்தான் எதையாவது உளறுவான் கொடிய மடிச்சு வேட்டில போடு என்பான்.சலாவே சளாமி ,என்பான்(சவாலே சமாளி) . ஆனால் பொம்பளப் பிள்ளைங்க பேருன்னா உளறல் இருக்காது. ஏல அந்தா போறால்லா அவ பேரு என்னன்னா , மாலா என்பான், ஜீவா என்பான். ஏல, எப்ப கேட்டாலும் கரெக்டா ரெண்டெழுத்துப் பேராவே சொல்லுதியே, அவ அப்பன் வச்ச பேரா இல்ல நீ வச்ச பேரால என்றால் சிரிப்பான்.அநேகமாக சரியாய்த்தான் சொல்லுவான்.கிறிஸ்துமஸ் தோறும் அவன் வீட்டில் பிரியாணி சாப்பாடு. மெர்ரி கிறிஸ்மஸா கறி கிறிஸ்மசா என்று தோன்றுகிற அளவுக்கு செழிக்க செழிக்க திம்போம். அவங்க அம்மாவே இதுகள்ளாம் என்ன வெள்ளாளப் புள்ளைகளா என்னது. ஒரு ஆடு அறுத்தாலும் காணாது போல இருக்கெ, நான் வேலைக்காரங்களுக்கெல்லாம் என்னத்த கொடுக்க, சட்டி தான் இருக்கு என்று விளையாட்டாய்ச் சலித்துக் கொள்ளுவார்கள். ஆறு ஏழு வருஷ பழக்கத்தில் அவங்க பேசியதே இந்த வார்த்தைகளாத்தான் இருக்கும்.அவளவு அமைதியான சுபாவம் .ஒரு சமயம் எங்க ராஜனுக்கு கொஞ்சம் இங்கிலீஷ் கத்துக் கொடேன் அவன் அதால தான் பாஸே பண்ணமாட்டேங்கான். என்று சொன்னர்கள். அவன் கடைசி வரை பாஸ் பண்ணவே இல்லை.இப்போ எங்க என்ன `உறளி’ க்கொண்டிருக்கிறானோ இல்லை உருப்படியாய் இருக்கிறானோ. நிச்சயம் நல்லாத்தான் இருப்பான். ரொம்ப நல்ல பையன்.

பாப்புலர் டாக்கிஸ் பக்கம்தான, நாளைக்கே ரூட்டைப் பிடிச்சுருவோம். என்று முடிவாகியது. காலையில், ஆறாவது ஒண்ணாவது., முத வேலையா பாப்புலர் டாக்கீஸ் போகிற வழியிலிருக்கும் சிவா தெருவில் துப்பு வெட்டப் புறப்பட்டேன். தெரு முக்கில் சங்கரின் எண்ணைக் கடை.அவன் எண்ணைச் செட்டியார்.ஆள் நன்றாயிருப்பான்.சுருண்ட முடி கூரான நாசி .என்னைப் போல் நெற்றியில் குங்குமம் தீற்றியிருப்பான்.எனக்கு அந்தப் பழக்கம் 70 களில் தான் வந்தது.கடைக்கு வருகிற பெண்களிடம் அவனுக்கு ஏக மரியாதை. அற்புதமான கிண்டலுக்குச் சொந்தக்காரன்.அதற்காகவே, அவனுக்காகவே மற்ற பலசரக்கு சாமான்களை மற்ற கடையில் வாங்கினாலும் ஐம்பதோ நூறு மில்லியோ, எண்ணை வாங்க மட்டுமே(!) அவன் கடைக்கு வரும் பெண்கள் சிலரை எனக்கு நன்றாகத் தெரியும்.எங்கள் தெருப் பெண்ணே குழந்தையை பக்கத்துப் பள்ளியில் விட்டு விட்டு அவனிடம் சடவாரிக் கொண்டிருப்பதை ஒரு நாள் பார்த்தது ஆச்சரியமாய் இருந்தது. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று நினத்துக் கொண்டிருக்கும் போதே லாலா மணி வந்தவன், . அவனுக்கு அந்தத் தெருதான், சொன்னான் சரி சரி விடு. தர்ம காரியம் நடக்கட்டும், தள்ளி வா என்று.எனக்கு ஆச்சரியம் தாங்க வில்லை, அந்தப் பெரிய இடத்துப் பெண்ணோ அதற்கப்புறம் என்னைப் பார்க்கும் போது கொஞ்சங்கூட கலைந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை.பெரிய செட்டியார், பையனை விட இந்த விஷயத்தில் கில்லாடி என்று கேள்வி. அது கிடக்கட்டும், சங்கர் கடை முன்னால் பொதுவாய்ப் பசங்களைக் கூடி நிற்க விடமாட்டான்.லாலா மணி நிற்பான்.ஆனால் அவன் ஆள் வந்தால் நகர்ந்து விடுவான். நானும் நிற்பேன், என்னை சற்று அனுமதிப்பான். காரணம், செட்டியார் தலை முழுக்க தும்பைப் பூ. அவ்வளவுக்கும் சாயம் அடிக்கும் போது நான் பார்த்து விட்டேன்.
அவன் அப்பத்தான் கடை திறந்திருந்தான். வே, என்னவே காலையிலேயே இந்தப் பக்கம் என்றான். அன்றைய தினத் தந்தியில், அப்போதெல்லாம் மதுரைப் பதிப்புதான் திருநெல் வேலிக்கும், படகோட்டி நவராத்திரி, முரடன் முத்து, படங்களின் நூறாவது நாள் விளம்பரம் வந்திருந்தது.மதுரை சென்ட்ரலில் எங்க வீட்டுப் பிள்ளை போடு போடென்று போட்டுக் கொண்டிருந்தது. நான்கு வாரத்தில் ஒரு லட்சம் ரூபாய் வசூலைத்தாண்டி ஒடிக் கொண்டிருந்தது .நாடோடி மன்னனுக்குப் பிறகு இதுதான் இந்த சாதனையை செய்திருக்கிறது.அது மிகப் பெரிய தங்கம் தியேட்டரில் வந்தது. இது சென்ட்ரல். இரவும் பகலும் படமும் அப்பொழுதுதான் வந்து நன்றாகவே ஓடிக் கொண்டிருந்தது.கடைசிப் பக்கம் பூராவும் அநேகமாக இரண்டு பத்தி ஆறு செ.மீ சினிமா விளம்பரங்களாகவே இருக்கும் அதில் படத்தில் வருகிற வசனம் , பாடல்வரிகள்., கை தட்டல் வாங்கும் காட்சிகள்(’”காதல் என்றால் தேன் கூடு/அதைக் கட்டுவதென்றால் பெரும்பாடு”-ராஜ சேகர், என்று இரவும் பகலும் படத்திற்கு தினமும் பாடலின் இரண்டு வரிகளை எடுத்துப் போடுவார்கள்.)யார் அந்த திகில் அழகி விளம்பரத்தில் “கூட விலையானாலும் கொடுத்து வாங்குவோர் –திருச்சி சோலை பிலிம்ஸ்-வெளியீடு”)அதிகப் பக்கங்களுடன் வரும் மதுரைப் பதிப்பின் இந்த மாதிரி சுவாரஸ்யங்களுக்காகவே தந்திபடிக்க சங்கரன் கடைப் பக்கம் காலையில் தவறாமல் வருவான் லாலா மணி.எல்லாருக்குமே இந்த மாதிரி விளம்பரங்கள் பிடிக்கத்தான் செய்யும். கொஞ்ச நாளில் திருநெல்வேலிப் பதிப்பு வரத்தொடங்கிய போது மணிதான் ரொம்ப வருத்தப்பட்டான்.
கொஞ்ச நேரம் இந்த சினிமா சமாச்சாரங்களைப் பேசி விட்டு நைசாக கதிஜா பற்றி விசாரித்த போது ஒரு அம்மா வந்தாங்க அம்மான்னும் சொல்ல முடியாது. முப்பது முப்பத்தி ஐந்து வயது அத்தை.அந்தச் சிரிப்பும் சாயலும் யாரையோ நினைவு படுத்தியது.
ஏதோ சில்லரை கேட்டார்கள் சின்னச் செட்டியார், சில்லரை சேரவில்லைஎன்று ஒரு ரூபாயோ ரெண்டு ரூபாயோ காசாய் தந்து அப்புறம் கொடுங்க மாமி என்றான்.சரி என்று சிரிப்பிலேயே சொல்லி அவங்க நகர்ந்தது.ம் புதிரை விடுவித்தான்.இவங்க பொண்ணுதான் நீ ரூட் போடறதும் என்று.ரூட்டெல்லாம் போடலை, .ஒரு மரியாதை நிறைந்த பார்வைதான் அவங்க மேல என்கிற மாதிரி அசடு வழியப் பேசின நினைவு..சங்கரனுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை வரவில்லை, விளக்கினாலும் புரியாது. ஏன்னா அவன் ரூட் அப்படி.அதற்கு காரணம் இருந்தது.சரிவே அவங்க அம்மா யாரு தெரியுமா, சாமிசன்னதியில நம்ம மேடை வீட்டு முதலியார் வச்சுருக்காரே ஒரு டீச்சரை அவதான் என்றதும் யாரு ரங்கமணியா என்று சொன்னதும், அவளேதான் .அவ அக்காதான் இது.. அக்காவா என்று வாய் பிளந்து நிற்கையிலேயே சொன்னான். உம்ம மாதிரித்தான் நானும் ஆச்சரியப் பட்ட காலம் உண்டு.சரிப்பா ஆனா அந்தப் பெண் பேரு கதிஜான்னுல்லா சொன்னாங்க என்றதும், ஆமாவே அப்பா முஸ்லிம்தான். இதுவும் செட் அப் கேஸ்தான்.கேட்கக் கேட்க ஆச்சரியமாவும் இருந்தது. ச்சேய், இதுக்குப் போயா இவ்வளவு `பிரியாலம்’ காட்டினோம் என்றுமிருந்தது.தகவலகளை ராத்திரி, சபையில் பகிர்ந்து கொண்டோம்.அதுனால என்னல இப்ப என்பதுதான் எல்லாரின் முடிவாயிருந்தது. நல்லதுதானே எனபது சிலரின் அபிப்ராயமாயிருந்ததுஆனாலும் எனக்கும் பெரிய கோபாலுக்கும் மனசு கேட்கலை. இவ்வளவு அழகான, அம்சமான பொண்ணோட பிண்ணனியில் இப்படி ஒரு சோகமா என்று நாங்களாகவே அதற்கு ஒரு சோக பாவம் சேர்த்துப் பார்க்கத் தொடங்கினோம்
கொஞ்ச நாள், காலையில் அந்தப் பக்கம் லேசாகத் திரும்பி இன்னும் மரியாதை கலந்த பார்வை பார்ப்பதோட சரி. அந்தப் பெண்ணின் முகத்திலோ, ஆனால், அதே புஞ்சிரிப்பு, கனிவான முதிர்ச்சி.. வழக்கம் போல் முழுப் பரீட்சை(அன்யுவல் எக்ஸாம்) வந்து., ஆத்துக்கு போற பழக்கம் தற்காலிகமா நின்னுட்டு.அவங்களையும் பாக்கலை.பரீட்சையெல்லாம் முடிஞ்சு லீவு ஆரம்பித்ததும். மறுபடி ஆத்துக்குப் போற வழக்கம் ஆரம்பிச்சுது..ரத வீதிக்கு வந்த மறு நிமிடமே பார்வை அந்த பஸ் ஸ்டாண்ட் பக்கம் திரும்பியது..இல்லை அவளைக் காணவில்லை எல்லார் முகத்திலும் அதே கேள்வி”எங்கலெ காணும்?” பதில் யாருக்கும் தெரியவில்லை.அவள் நிற்கும் இடத்தில் கோடை வெயில் உக்கிரமாய் அடித்த மாதிரி இருந்தது.
குமார் அண்ணாச்சி,சங்கர் பாலிடெக்னிக்கில் வேலை பார்ப்பவர்., எப்போதும் டிரெயினில் தான் போவார். எப்போதாவது ஒன்பதாம் நம்பர் பஸ்ஸில் போவார்.அவருக்கு செல்லப் பெயர் இஞ்சிக் குமார். தினமும் ஜிஞ்சர் பரீஸ் சாப்பிடுகிற ஒரு சிலரில் அவரும் ஒருத்தர். மது விலக்கு அமலில் இருந்த நேரம். அது.ரொம்ப ஜாலியாகப் பேசுவார்.அவர் இறந்த பிறகுதான் தெரிந்தது, அவரும் எங்கள் தெருவில் இருந்து இன்னொரு தெருவிற்குப் போன ரோஜா விற்கும் (பேருக்கு ஏத்த மாதிரி ரோஜாதான்) இணை பிரியாத அன்பு என்று. அது நிறைவேறாமல்த்தான் அவர் தேவதாஸ் ஆனார் என்று. குமார் அண்ணாச்சி பஸ்ஸிலிருந்தவாறே கேட்டார், ஏலே கள்ளப் பயலுகளா டீச்சரைக் காணுமேன்னு தேடுதீங்களா, என்று. எங்கள் முகத்தில், அகப்பட்டுக் கொண்ட சிரிப்பு.. யாரோ சொன்னோம், ஆமா ஆண்ணாச்சி. டீச்சரா அவங்க ? என்று தெரியாத மாதிரி நான் கேட்டேன். பொடியனைப் பாருலே, நீ எங்கேல்லாம் விசாரிச்சேங்கறது எனக்குத் தெரியும்டே..என்று கேலியாய்ச் சிரித்தார்.சரி, செட்டியார் சொல்லிருப்பாரு என்று நினைத்துக் கொண்டேன்.. கள்ளி, ஆள் இல்லை தெரியுமாப்பா என்று பொதுவாகச் சொன்னார்.அவர் எல்லாப் பெண்களையும் அநேகமா, கள்ளி என்று அடை மொழி சேர்த்துதான் சொல்லுவார். `கள்ளி ராஜம்மா’ எங்கடே போய்ட்டு வாரா, ஏ அது யாருடே `கள்ளி சரோஜினி’ கூட என்று தான் பேசுவார். .அவரே தொடர்ந்து சொன்னார். கள்ளி, டீச்சர் தீ வச்சுக்கிட்டு செத்துப் போச்சு.அம்மாவோட தகராறு..அதற்குள் பஸ் நகர்ந்து விட்டது.
அந்த ஒரு பஸ்தான் அங்கே நிற்கும். அதுவும் போன பின்பு அந்த இடம் சுத்தமாய் வெறுமையாய் இருந்தது.நாங்கள் ஆற்றுக்குப் போகாமலேயே தெருவுக்குள் வந்தோம்.ரொம்ப நேரம் பேசாமலேயே நின்று கொண்டிருந்தோம்.அப்படியே கலைந்து வீட்டுக்குப் போய்விட்டோம்.
அப்பாவிடம் நீ இந்த வீட்டுக்கு இனிமேல் வர வேண்டாம் என்று சண்டை போட்டிருக்கிறாள்.வேலை கிடைத்த திமிரா என்று
அவர் கழுத்தைப் பிடித்து தள்ளினாராம். அம்மியில் மோதி ஆள் காலி. ஆனா தானாவே தீ வச்சுக்கிட்டு செத்துப் போனது மாதிரி கதை பண்ணிட்டாங்க.இது எண்ணெய்க் கடை சங்கரன் சொன்ன சங்கதி.எது உண்மையோயோ தெரியாது. தீயில் கருக வேண்டிய அழகா அது என்று அங்கலாய்த்து மாளவில்லை எங்களுக்கு. காலைச் சூரிய ஒளியினை எதிர்ச் சாரி கட்டிடம் பாதி மறைக்க
நிழல் பாதி வெளிச்சம் பாதி விழுங்கும் அழகைப் பார்த்த அன்றே எனக்குள் பி.பி ஸ்ரீனிவாஸ் பாடினார்.,பாசம் படத்தின் நாங்கள் ரசிக்கிற பாடலை.இப்போதும் ஜானகியின் அற்புதமான குரலுடன் இழைந்து வரும் அந்தப் பாடலைக் கேட்கிற போது தவறாமல் நினைவில் வந்து போகிறாள்.

”திங்கள் முகத்தில் ஒளியேந்தி
செவ்வாய் இதழில் நகையேந்தி
இளமை என்னும் படை கொண்டு
என்னை வென்றாய் நீ இன்று.”
(மகா கவி கண்ணதாசன்)

Visitors