Wednesday, October 28, 2009

ஓடும்நதி-3


காலையிலிருந்தே நண்பரது கைப்பேசியில் அழைப்பு வரத் தொடங்கி விட்டது. இரவு நெடு நேரம் ஆகியிருந்தது, உறங்க. வழக்கம் போல் எனக்கு சீக்கிரமே விழிப்புத் தட்டி விட்டது. சார் இருக்கிறாரா, சந்திக்க வரச் சொல்லியிருந்தார். எத்தனை மணிக்கு வரட்டும் என்று கேட்டு நாலைந்து அழைப்புக்கள் வந்தன. தூங்குகிறார் எழுப்பட்டுமா என்று கேட்டால் வேண்டாம், நான் அப்புறம் அழைக்கிறேன் என்று வைத்து விட்டார்கள்.அவர் அரைத் தூக்கத்தில் இருந்தார். அதை அணைத்து வைத்து விடுங்கள், என்று சொல்லி விட்டு தூங்க ஆரம்பித்து விட்டார்.தரையில், இறைந்து சிகரெட் துண்டுகளை ஒரு ஓரமாகத் தள்ளி விட்டு, இன்னொரு இளைய நண்பர் படுத்திருந்தார். பல வாதப் பிரதி வாதங்களுடன் உற்சாகமாய்த் தொடங்கிய முன்னிரவு. நிகொடினும் ஆல்கஹாலும் புது இலக்கியச் சண்டையை ஆரம்பித்து வைத்திருந்தன. சில பழைய மனஸ்தாபங்கள் கை குலுக்கிக் கொண்டிருந்தன. யார் புகைத்த சிகரெட் என்று தெரியாமல் இப்போது அவை சேர்ந்தும் தள்ளியும் கிடந்தன.

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற மாதிரி ஆகிவிட்டது அந்த இரவு. நண்பர் மிகச் சிறந்த வாசிப்பாளர். அருமையாக உரை நிகழ்த்துபவர். அவரது உடல் நிலை கருதி என் அறையில் என் பொறுப்பில் விட்டுப் போயிருந்தார்கள்.நண்பரும், ‘’எங்க ஊர்க்காரர் நாங்க பேசிக் கொண்டே தூங்கி விடுவோம்’’ என்று சொல்லியிருந்தார்.மணி பத்துக்கு மேல் ஆகி விட்டது.பேச்சு, வால்காவிலிருந்து கங்கை வரை நூல் பற்றி அருமையாகத் தொடங்கியது. அதில் வருகிற ‘பிரபா’ கதையில், தன் அழகாலும் இளமையான காதலாலும் கவி அஸ்வகோஷின் எழுத்துக்களுக்கு இறவாப் புகழ் கூடுதலாய்க் கிட்டும் என்று உணர்கிறாள் அவன் காதலி ‘பிரபா’. அஸ்வகோஷ், வயது முதிர்ந்து, கூன் விழுந்து, பல் போன தன்னுடன் வாழ நேர்ந்தால், அவன் கவிதையின் இளமை காணாமல்ப் போய்விடக் கூடும் என்றும் அஞ்சி சரயூ நதியின் வெள்ளத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்து உயிர் விடுகிறாள். ‘’என்னைப் பொறுத்தவரை உன் இதயத்தின் பாராட்டுதலே சகலமும்’’ என்று தட்டழிகிற அஸ்வகோஷ் தன்னைத் தேற்றிக் கொண்டு சாகாப்புகழ் பெற்ற காவியங்களை எழுதி அவள் தியாகத்தை நியாயப் படுத்தியது வரலாறு.
பேச்சின் சுவாரஸ்யம், இருக்கிற போதையைக் குறைத்து விட்டது. நண்பருக்கும் அப்படித்தான் இருக்கவேண்டும். லாட்ஜ் பையனை அழைத்து ஏதாவது கிடைக்குமா என்று கேட்டார். அவன், மணி பத்தரைக்கு மேல் ஆயிட்டு அதெல்லாம் ஒன்னும் கிடைக்காது என்று சொல்லிக் கொண்டே போய்விட்டான்.வாங்க தம்பி எனக்குத் தெரியாத மதுரையா, எங்க தட்டினா என்ன கெடைக்கும்ன்னு தெரியும் என்று சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டார்.சொன்னது போலவே, லாட்ஜுக்குப் பக்கத்தில் இருந்த சந்தில் நுழைந்து, தட்டுங்கள் திறக்கப் படும் என்று உணமையிலேயே எழுதி வைத்திருந்த ஒரு கதவைத் தட்டிச் சரக்கை வாங்கிக் கொண்டே அறைக்குத் திரும்பினோம்.மறுபடி பேச்சு சுவாரஸ்யம் பிடித்தது. இப்போது ஸ்வாசம் என்ற இந்திப் படம் பற்றி. அதில் ஒரு சிறுவனும் தாத்தாவும். சிறுவனுக்கு கண்ணில் வந்திருக்கிற புற்று நோயை அகற்றா விட்டால் உயிருக்கே ஆபத்து என்கிற நிலை.நாளை அறுவை சிகிச்சை, தாத்தாவும் பேரனும் ஆஸ்பத்திரியை விட்டு அன்று மாலை காணாமல் போகிறார்கள்.
மருத்துவனை அல்லோலகல்லோலப் படுகிறது. இரவில் தாத்தாவும் பேரனும் அமைதியாகத் திரும்பி வருகிறார்கள். பத்திரிக்கைக் காரர்களின் கேள்வியில் அரண்டு போயிருக்கிற டாக்டர் சத்தம் போடுகிறார், கிராமத்து தாத்தாவை. சிறுவனை தூங்க வைத்து விட்டு அவர் அமைதியாகச் சொல்லுகிறார், நாளை முதல் அவனுக்குப் பார்வை இருக்காது அவன் கடைசிப் பார்வையில் பதிபவை ஏன் இந்த மருத்துவமனையின் சுவர்களாகவும், ஜன்னலாகவும், மருந்து பாட்டில்களாகவும் இருக்க வேண்டும். கொஞ்ச நேரம் பூங்கா,மரம், செடி, கொடி அங்கே விளையாடும் குழந்தைகள், என்று அவன் நினைவு நல்லவைகளாலேயே நிரப்பப் பட்டிருக்கட்டுமே என்று தான் அவனை பூங்காவுக்கு அழைத்துச் சென்றதாகச் சொல்லுவார். இதை நான் சொன்னதும் நண்பர் சொன்னார், உங்களுக்குத் தெரியுமா, கொஞ்ச வருடங்களுக்கு முன் எனக்கு கண்ணில் ஒரு சீக்கு வந்தது. எனக்கு பார்வை போய் விடுமோ என்று பயம் வந்து விட்டது. பார்வை போவதற்குள் சிலப்பதிகாரம் முழுவதையும் மனப்பாடம் பண்ணி விடவேண்டுமென்ற வெறியுடன், வலியைப் பொருட்படுத்தாமல், மனைவி, குழந்தைகளின் அறிவுரையையும் பொருட் படுத்தாமல் ராவாப் பகலா முயற்சித்தேன் தெரியுமா, என்று..எனக்கும் இளைய நண்பருக்கும் புல்லரித்தது.இளைய நண்பர் என்னிடம் மிச்சமிருக்கா என்று கேட்டார்.என் கையில் கொஞ்சம் இருந்தது. பேராசிரியர் இந்தாருங்கள், என்று அவர் தம்ளரை நீட்டினார்.இளைய நண்பர் உபயோகித்து எறிந்த தமளரைத் தேடினார், சும்மா இதிலேயே சாப்பிடுங்கள் என்று நீட்டினார். நான் இளைய நண்பரிடம் கேட்டேன்
இந்த, மூத்த கிழவனின் கவிதை வரிகளைக் கேட்டிருக்கிறாயா,

‘’என்னுடைய இளஞ்சாராயத்தை
என் கோப்பையுடனேயே
ஏற்றுக்கொள்
இன்னொன்றிற்கு மாற்றுகையில்
இந்த நுரைகள் மறைந்து விடலாம்’’

யாரு அண்ணாச்சி அது என்று அவர் அதிசயித்துக் கேட்கும் முன்பே பேராசிரியர் சொன்னார், ‘’தாகூர்’’.

.

Visitors