Sunday, February 15, 2009

பாமர ஜாதியில் தனி மனிதன்....

ஆவன்னா.பழனி, இப்போது இல்லை.அவனுடைய ஆதங்கம், தான் சற்று உயரமாய் இருந்திருக்கலாமே என்பதுதான்.உடம்பை கட்டுக் குலையாமல் வைத்திருப்பான்.கராத்தே வந்த புதிதில் அவன் தான் முதல் ஆளாய்ச் சேர்ந்தான்.ஏற்கெனெவே கரிக்காத் தோப்பு மாப்ஜான் பாய் உடற்பயிற்சிக் கழகத்துக்குத் தினமும் போய் விடுவான்.பெஞ்சு பிரஸ் எடுப்பதில் சாய்புக்குப் பிடித்த மானவன். பார் விளையாட்டும் நன்றாக விளையாடுவான்.பெரிய கோபாலுடன் நான் ஒரு நாள் போனேன்.கம்பியில் வட்டமான இரண்டு பழைய தகடைப் போட்டு மாப்ஜான் பாய் இதைத் தூக்கிப் பழகுங்க, என்றார்.பாய்,எங்கள் தெரு வழியாகத் தான் சமயங்களில் போவார். காலைச் சற்றுச் சாய்த்து நடப்பார். அதிகப் படியான உடற்பயிற்சியால் ஒரு விரை உள்ளே போய் விட்டதால் இப்படி நடப்பதாகப் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம்.அவர் கழகத்திலேயே போய் உடற் பயிற்சி செய்யப் போவோம் என்று நாங்கள் நினைத்தது கிடையாது. கோபால் கொஞ்ச நாட்களாகவே போய் வருகிறான்.பழனி எங்களை விட வயதில் சின்னவன். அவன் அண்ணன்தான் எங்கள் குரூப். பழனி,என்னை அத்தானோவ் என்று தான் கூப்பிடுவான்.அவன் நீண்ட நாள் சந்ததாதாரர்.சந்தா ரெண்டு ரூபாய். அருமையான தென்னந்தோப்புக்கு நடுவில். சமப் படுத்தப் பட்ட தரையின் ஓரங்கள் பூராவும் நல்ல புல். வளர்ந்திருக்கும்.பயிற்சியின் இடைவேளைகளிலோ அல்லது பயிற்சி முடிந்த பின்னரோ ஓய்வெடுக்க தோதாக இருக்கும்.
அவர் எனக்கு போட்டுத் தந்த வட்டுகள் இரண்டுமே மொத்தம் ஐந்து அல்லது, ஆறு கிலோ இருக்கும்.ரொம்ப ஈஸியாக, கால் மணி நேரத்திற்கு மேல் வெயிட் லிஃப்ட் எடுத்தேன். பாய், போதும் தம்பி, இன்னக்கி, என்றார். இன்னம் கொஞ்சம் எடுக்கறேன், எனக்கு ஒன்னும் வலிக்கலை என்றதற்கு நிறையப் பேர் சிரித்தார்கள்.சரி ஆர்வக் கோளாறில் பேசி விட்டோமோ என்று வெட்கமாக இருந்தது.புல் வெளியில் உட்கார்ந்த பின்னரும் கைகளை மேலே தூக்கி இறக்குவது போல் தோன்றிக் கொண்டே இருந்தது. ஃபேண்டம்ஸ் லிம்ப் மாதிரி.எதிரே தான் கல்லணை வாய்க்கால்.கோபாலும் பழனியும் பயிற்சி முடிந்து வந்ததும் மூன்று பேரும், வாய்க்காலில் அழகான குளியல் போட்டு விட்டுத் திரும்பினோம். தினந்தோறும் வந்து விட வேண்டும், உடம்பைப் பேண வேண்டாமா என்றெல்லாம் நினத்தபடியே வீட்டுக்கு வந்தேன்.
காலையில் கோபால் கூப்பிட்டுத்தான் விழிக்கவே செய்தேன். கை மஸ்ஸில்ஸ் ரெண்டும் வலி பின்னிக் கொண்டிருந்தது.தோளிலும் வலி.அவசரமாகப் பல் தேய்த்து ஒரு மடக்கு காபியை விழுங்கி விட்டு அவனுடன் சைக்கிளில் கிளம்பினேன்.சைக்கிள், எங்கள் வீட்டு சைக்கிள். அவன் தான் ஓட்டுவான். நான் பின்னால் இருப்பேன். போலீஸ் வந்து விட்டால் டபாரென்று குதிக்க வேண்டும்.இட்லர் மீசையுடன், சற்று வயதான ஒரு போலீஸ்காரர் தினமும் வாய்க்காலில் குளித்துவிட்டு வருவார்.காலையில் வாய்க்காலுக்குப் போய் வருகிறவரைப் பார்த்தோமென்றால், இரவு ஏழு, ஏழரை மணிக்கு அவர் மாட்டை தேடிக் கொண்டு மறு படி தெருவுக்குள் வருவார்.தெருவில் ஒரு காலி மனையில் புல்லும் செடி கொடியும் வளர்ந்திருக்கும்.அவர் மனைவி அதில் மேய்த்துக் கூட்டிப் போவார். அந்த நினைவுக்கு அதுவாகவே தும்பை அறுத்துக் கொண்டு வந்து விடும். அந்தப் பகுதி இருட்டாய் இருக்கும், அவர் அந்த இருட்டுக்குள் சென்று ’’ப்பா, ப்பா’’ என்று சத்தம் கொடுப்பார்.போலீஸ்காரர் வீட்டு மாடென்றாலும் அது சரியான திருட்டு மாடு. சத்தமே கொடுக்காது. தலையைக் கூட ஆட்டாது.ரொம்ப நேரம் சத்தம் கொடுத்தபின் மெதுவாய் இருட்டுக் குள்ளிருந்து வெளியே வரும்.அவர் அநேக தரம் எங்களிடம் கேட்பார்,மாட்டைப் பாத்தீங்களா தம்பீ என்று. நாங்கள் தெரிந்தாலும் சொல்ல மாட்டோம், இல்லையே என்றுதான் சொல்லுவோம்.ஏனென்றால் சைக்கிளில் டபுள்ஸ் போனால் விடவே மாட்டார். காற்றை திறந்து விட்டு விடுவார்.”மாட்டுக்கு வைக்கலே வாங்காத கருமி போலிருக்கு” என்போம்.
பாய் அதே வட்டுகளைப் போட்டு கம்பியைத் தூக்கி தந்தார். ம்ஹூம் ஒரு தடவை கூட தலைக்கு மேல் தூக்க முடியவில்லை. வலி. பாய் சொன்னார், ”இன்னக்கி கஷ்டப் பட்டு நேத்தே அளவுக்கு எடுத்தீங்கன்னா நாளைக்கி வலியே இருக்காது’’என்று நாலு அல்லது ஐந்து முறை முயற்சித்தேன். முடியவைல்லை. யாரும் என்னைப் பார்க்கிறார்களா என்று பார்த்து விட்டு புல்லாந்தரிசைப் பார்த்தேன், அது வா வா என்று அழைப்பது மாதிரி இருந்தது.பாய் அதற்குள் டர்பெண்டைன் தைலத்தோடு வந்தார்.பால் போல் வெள்ளையாய்த் தைலத்தை இடது கையில் ஊற்றிக் கொண்டு வலது கையால் தொட்டு, தோள் பட்டை, கை ம்ஸ்ஸில்ஸ், எல்லாம் அழுந்தத் தேய்த்து, கொஞ்ச நேரம் அந்த வெயில் விழுகிற இடத்தில் உட்காருங்க என்றார். அப்பாட என்றிருந்தது. யாரும் எதுவும் என்னிடம் கேட்கவில்லை, அவர்கள் பாட்டுக்கு, பார் விளையாடுவதிலும், அழகான வேப்பமரத்தில் கட்டியிருந்த ரோமன் ரிங்கிலும் பயிற்சி எடுத்துக் கொண்டுமிருந்தார்கள்.பார்க்கும் போது லகுவாகச் செய்வது மாதிரி இருந்தது. பாய், யாருக்கோ கர்லாக் கட்டை சுற்றச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.கோபால், பெஞ்ச் பிரஸ் எடுத்துக் கொண்டிருந்தான்.அரை மணி நேரம் ஆன பின்னும்,எனக்கு வெயிட் லிஃப்ட் தூக்கும் எண்ணமே வரவில்லை.பேசாமல் புல்லை அளைந்து கொண்டும். வாயில் வைத்து கடித்து துப்பிக் கொண்டும் இருந்தேன்.(புல்லில் அமர்கிற எல்லாருமே அநேகமாய் இப்படி ஒரு புல்லை கடித்துக் கடித்து துப்புகிறார்கள்.)அதற்குள் கோபால், ’வா குளிக்கப் போகலாம், நாளைக்கு வெயிட் எடு’ என்றான். தினமும் பச்சை முட்டை குடித்து, வெயிட் லிஃப்ட் தூக்கி, உடம்பை கிண்ணென்று வைக்கிற கனவு கரைந்து போயிற்று கல்லணை வாய்க்காலில்.
மாப்ஜான் பாயின் ஜிம் எங்கே போயிற்றென்று தெரியவில்லை.அங்கே அருமையான கள்ளுக் கடை வந்திருந்தது, மது விலக்கு நீக்கப்பட்ட போது.தரையோடு கூடாரம் போட்டது போல் ஒரு ஓலைக் குடிசை.அதற்குள் நுரை பொங்கும் பெரிய புதூப்பானைகள்.இடுப்பு உயரத்துக்கு மர பேரல். வரும் போதே ஆமவடை வாங்கி வந்திருந்தான் பழனி. ரொம்பப் புளிக்காத கள்ளாக ரெண்டு கலயம் வாங்கிக் கொண்டு, இருட்டில் தோப்புக்குள் நகர்ந்தோம்.அங்கங்கே காடா விளக்கின் வெளிச்சமும், அதன் கனத்த திரி எரிகிற வாசனையும்.அதே புல்லாந்தரசில் உட்கார்ந்து புதுக்கலயம்,அவ்வளவாய்ச் சுட்டிராத மண் வாசனையுடன், பல்லிலும் உதடு பூராவும் பட, கள் உள்ளே இறங்கி ஒரு ஏப்பம் வந்ததும், லேசான போதை ஏறத்தொடங்கியது.ஒரு கலயம் காலியானதும் சுகமான மிதப்பு வந்த போது பழனி கேட்டான், ” அத்தானோ நீங்க இங்க தான வெயிட் லிஃப்ட் படிச்சீக’’ என்று சற்று கிண்டலுடன்.ஆம்மா ஆமா , இந்தா பாரு இப்படி என்று இரண்டு காலிக் கலயத்தையும் தூக்கி காண்பித்தேன்.யாரோ ஊறுகாய் இருக்கா என்று கேட்டார்கள், இல்லை சட்னி வேண்ணா இருக்கு என்று பழனி நீட்டினான், இலையில் ஒரு துண்டு வடையும், வெள்ளாங்க்யச் சட்னியும் இருந்தது. அவர், நல்ல போதையில் இருளில் வெறும் இலையைத் தடவினார்.பழனி ஒரு காடா விளக்கை எடுத்து வந்தான்.எங்க மரத்து தென்னங்கள்ளுன்னா தொட்டுக்கிட எதுவுமே வேண்டாம், இது பனங்கள்ளு என்றபடியே சட்னியை வழித்தார். விளக்கின் வெளிச்சத்தில் முகத்தைப் பார்த்தேன். மாப்ஜான் வாத்தியார்.அவருக்கு என்னை நினைவில்லைபோலிருக்கிறது.பழனி யாத்தாடி என்று சொல்லி விளக்கை ஊதி அணைக்க முயன்றான்.சற்று கஷ்டப்பட்டே அணைக்க முடிந்தது.
வாத்தியார் அவனை இனம் கண்டு கொண்டார். ”நேரத்தப் பாத்தியாடே,எம்புட்டுப் புள்ளங்கள்ளாம் கள்ளுக் கடைக்கு வந்திட்டூ” என்று சொல்லிய படியே இலையை இருட்டில் தூர எறிந்து விட்டு நகர்ந்தார்.பழனி என்னை விடவும் சின்னவன் என்றாலும், அந்தக் கள்ளுக் கடையை அவன்தான் அறிந்து வைத்திருந்தான். இதை விட்டா நல்ல கள்ளுக்கு கருப்பந்துறைக்குத்தான் போகணும் என்பான்.இன்னொரு கலயம் வாங்கி வந்தான். ஆளுக்குப் பாதி என்றான்.என்னிடம் காசே இல்லை.அவன் தான் அவனது கடையில், அண்ணனைச் சாப்பிட மாற்றுகிற அரை மணி நேரத்தில், நைசாக கொஞ்சம் ஒதுக்கி இருந்தான்.அன்று மத்தியானம் சீட்டு விளையாடுகிற போது நான் சொல்லியிருந்தேன், நான் கள்ளு குடிச்சதே இல்லை என்று அதனால்த் தான் என்னை கூட்டிவந்திருந்தான்.ஒன்னரைக் கலயம் என்னவோ செய்தது.பொதுவாகவே அப்போது அதிகம் இந்தச் சவங்களைப் பழகி இருக்கவில்லை.இப்போ வீட்டுக்குப் போக முடியாது, செத்த நேரம் கழிச்சுப் போவோமா என்றேன். சரி வாங்க கொஞ்சம் மேக்கே போய் ஒரு ஆளைப் பாத்துட்டு வருவோம் என்றான். தோப்பை விட்டு வெளியேறும் போது வாசலில் வாத்தியார் நின்று கொண்டிருந்தார். ”ஏ பழனி இடமே நம்ம இடம், எனக்கே ஒரு செம்பு கேட்டா தர மாட்டேங்கான்”, என்று வழி மறித்தார்.நீயாவது சந்தா கொடுறே என்று என்னிடம் கேட்டார். பாவி மனுஷம் மறந்துட்டாருன்னு நினச்சுகிட்டு இருந்தேன், சந்தா கொடுக்காம ரெண்டாவது நாளே வந்ததை இன்னும் ஞாவகம் வச்சுருக்காரே என்று தோன்றியது.ஏண்ட்ட பைசா கிடையாது. அதற்குள் யாரோ வந்து அவரை இழுத்துக் கொண்டு போனார்கள்.
எங்கள் இரண்டு பேருக்கும் நடை தள்ளாடியது.அத்தானோவ், நீங்க சொன்ன மாதிரி பதினி கொஞ்சம் புளிச்சதுதான் போலிருக்கு. என்றான்.ஒடுக்கமான பாலத்தைத் தாண்டி பாட்டப்பத்துக்குள் நுழைந்தோம். அத்தானோவ் இங்கேல்லாம் பகல்ல வந்திருக்கீகளா வாய்க்காத் தண்ணீ ஆத்தண்ணி மாதிரி இருக்கும். என்றான். நான் நிறைய தடவை வந்திருக்கேன்.பாட்டப் பத்து வாய்க்கால்ல அருவி மாதிரி விழும்.ஆனா ஆத்தண்ணி மாதிரி இருக்காது. வயலுக்கெல்லாம் பாஞ்சு அப்புறம்தான் ரெண்டடி உயரத்திலேருந்து அருவி மாதிரி விழும். ஆனாலும் பழனி கூட்டிச் சென்ற இடம் புதிதாய் இருந்தது.
அந்தத் தெருவே மற்ற தெருக்களை விட சற்று உயரத்தில் இருந்தது.நன்கு படி ஏறித்தான் போகமுடியும்.தெருவுக்குள் நுழைததுமே பசை மாவு வாசனை அடித்தது. சில வீடுகளில் மங்கலான வெளிச்சத்தில் தறி ஓடுகிற சத்தம் கேட்டது.தெருப் பூராவுக்கும் சிமெண்ட் போடப் பட்டிருந்தது. தெருவின் கடைசியில் ஒரு மெர்குரி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதன் கீழே சத்தமும் கை தட்டலுமாக கேட்டது.அங்கே அழைத்துக் கொண்டு போனான் பழனி.யாரோ ஒருத்தன் சுவரில் தலையை முட்ட வைத்தபடி நின்று கொண்டிருந்தான். கைகளைப் பின்னால் சேர்த்து வைத்திருந்தான்.சுவரிலிருந்து கால்களிரண்டும் நான்கு தப்படி தூரத்தில் இருந்தது. சுவரிலிருந்து தலையை எடுக்க முயன்று கொண்டிருந்தான். முடியவில்லை.நீண்ட முயற்சிக்குப் பின் தலையை எடுத்து நிமிர்ந்தான். ஒரே கை தட்டும், விசில்ச் சத்த்முமய் இருந்தது.எனக்கு இதில் என்ன கஷ்டம் என்பது மாதிரி இருந்தது.பழனியிடம் கேட்டேன், மாப்பிள இது என்ன பிரமாத வித்தை என்றேன். அது யார் சவால் விடறது, என்று ஒரு கிழவர் கேட்டார். கையில், பாவுக்கு ஊடே சொருகும் ஒருநீளப் பிரம்பை வைத்திருந்தார்.அநேகமாய் எல்லோரும் அப்படி ஒரு கம்பை வைத்திருந்தார்கள். பழனி,”சலாம் அண்ணாவித் தாத்தா” என்றான்.”ஏய் ஆண்டியா பிள்ளை பையன்ல்லா, வாரும் வாரும், என்னவே இன்னும் எத்தனை வருசை பாக்கி இருக்கு உம்ம ஆளையே காங்கலையே”. இன்னக்கி என்ன, கார்த்திகைப் பிறை கண்ட மாதிரி இருக்கு, என்றார்.இது யாரு என்றார். நம்ம அத்தான் தானென்றான் பழனி.அதற்குள் சார் வாங்க என்ற சத்தம் கேட்டது.குற்றாலிங்கம் நின்று கொண்டிருந்தான். ரசிகர் மன்றத் தோழன்.”எப்பா இது நம்ம சேக்காளி மாதிரித்தான், வாத்தியார் ஆள்” என்றான்.சார் அப்பாவுக்கும் வாத்தியார்ன்னா உயிர் தான் என்றான்.அவனுக்கு நான் குடித்திருப்பது பெரிய ஆச்சரியமாய் இருந்தது.
என்னை கைகளைப் பின்னால் வைத்து கோர்த்துக் கொள்ளும்படிச் சொன்னார் அண்ணாவி முதலியார், ஸ்டாண்ட் அட் ஈஸ் மாதிரி. சுவர் அருகே போ தம்பி என்றார். சொவர்ல் லேருந்து ஒரு ஸ்டெப் அளந்து தள்ளி நில்லும்.. தலையை சொவர்ல முட்ட வையும்.சொன்ன படி செய்தேன். இப்ப தலைய எடும் என்றார்.எடுத்தேன்.இப்ப ரெண்டு தப்படி எடுத்து தள்ளி நின்னு தலையை சொவர்ல வையும். வைத்தேன். இப்ப எடும் என்றார் ஈஸியாக எடுத்தேன்.தலையச் சுவர்ல வையும்,இப்ப நாலு தப்படி தள்ளி வாரும், வந்தேன். தலை சுவரில், கைகள் பின்னால் முதுகில்.உடல் தரைக்கு கிட்டத்தட்ட இணையாக இருந்தது. இப்ப தலையை எடும் என்றார். எல்லாரும் அமைதியாகச் சிரித்தபடி நின்றிருந்தாகள்.ம்ஹூம் தலையை எடுக்க முடியவில்லை. கையை, சுவரில் ஊன்றினால் ஈசியாக தலையை எடுத்து விடலாம்.ஆனால் கை பின்னால்தான் இருக்க வேண்டும்.முடியவே இல்லை.தோல்வியை ஒப்புக் கொண்டு கைகளைச் சுவரில் ஊன்றி தலையை எடுத்தேன். எல்லோரும் சிரித்தார்கள்.நானும் சிரித்தேன். குற்றாலிங்கம் அதை எளிதாகச் செய்தான்.பழனி, `` அத்தானுக்கு சிலம்பாட்டம் கத்துக் கொடுங்க அண்ணாவி’’ என்றான். நான் அவனிடம் கேட்டிருக்கவே இல்லை.
அண்ணாவி தரையில் சாக் பீஸால் மூன்று வட்டம் வரைந்தார்.மூன்றும் கிட்டத்தட்ட ‘’ட’’ வடிவில் சுத்தமான வட்டமாயிருந்தது.கம்பை கையில் தந்து, கீழ் நுனியிலிருந்து இரண்டு பிடி அளந்து வலதுகையை வைக்கச் சொன்னார்.இடது கையை சௌகரியம் போல் வைத்துக் கொள்ளச் சொன்னார்.முதல் வட்டத்தில் நின்று கொண்டு கம்பை எதிராளி யை நோக்கி நீட்டு என்றார். இப்ப கம்பை தாழ்த்தனும், அதெ சமயத்தில் கால்கள் கீழே இருக்கும் இரணடாவது வட்டத்துக்குள் வந்து விட வேண்டும்.. அடுத்த ஸ்டெப், கால்கள் மூன்றாவது வட்டதிற்குள் வரவேண்டும் கழி எதிராளியின் முகம் நோக்கி உயர்ந்திருக்க வேண்டும்.அவர் சொல்லச் சொல்ல முதல் தடவை சரியாகச் செய்தேன் போலிருக்கிறது. எல்லோரும் கை தட்டினார்கள்.இரண்டாம் முறை, மூன்றாம் முறைகளில் சுத்தமாய் குழம்பிவிட்டது. பழனி அழகாகச் செய்தான்.அவனும் குற்றாலிங்கமும் பிரமாதமாக இரண்டு வரிசை வைத்தார்கள்.இதற்குள் அண்ணாவிக்கு கள்ளு வாடை எட்டியிருக்க வேண்டும். குடிச்சுட்டு வித்தை படிக்க கூடாது. நாளைக்கு வாரும் என்றார். சொல்லி விட்டு அவர் இருட்டுக்குள் போனார். வரும் போது அரிஷ்ட வாசனை அடித்தது அவரிடமிருந்து.
வந்தவுடன் சொன்னார், சரி எல்லாரும் கமபைத் தூர வையுங்க. வே இங்க வாரும்., என்று பழனியைக் கூப்பிட்டார்.அவனைத் தரையில் உட்காரச் சொல்லி கைகளிரண்டையும் பின்னால் கயிற்றால் கட்டினார். இப்ப தப்பியும் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு என்னிடம் சொன்னார், தாழம்பூ படத்தில் பார்த்திருக்கேரா வாத்தியார் இப்படிக் கட்டிப் போட்டதிலிருந்து நேக்காத் தப்பிப்பாரு., ஞாவகம் இருக்கா என்று. நான் தாழம்பூ அதிகம் பார்க்காத படம், நினைவில்லை. ஆனால் ஆமா என்றேன். பழனி கைகளை இறுக்கமாக நீட்டி உடலை நெளித்து வளைத்து கட்டிய கைகளை கால் வழியாக முன்னே கொண்டு வந்துவிட்டான்.அப்புறம் பல்லால் கடித்து கட்டை அவிழ்த்துவிட்டான்.நீரு நாளைக்கி இதை முயற்சி பண்ணனும் என்றார் அண்ணாவி.நாளைக்கு ஊரிலேயே இருக்காமாட்டாக அத்தான் என்றான் பழனி. போதை போன இடம் தெரியவில்லை.பசி வயிற்றைக் கிள்ளியது.
பஸ்ஸிற்கு ஏகக் கூட்டம்.அது புதிதாய்த் தொடங்கியிருந்த பெண்கள் கல்லூரிக்குச் செல்லும் பஸ்.பழனி நேற்று இரவில் சொல்லி இருந்தான், அத்தானோவ் உங்க ஃப்ரெண்டு பெருமாள் கோயில் தெருலேர்ந்து வருவாரே அவர் தங்கச்சி ஒரு பைய்ன்ட்ட மாட்டிகிட்ட மாதிரி இருக்கு. லெட்டர் கொடுத்து வாங்குது. பையன் ரொம்ப மோசமான பையன்.நீங்க சொல்லி கண்டியுங்க, என்று. அது என்னவென்று பார்க்க நான் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தேன். ஒரு பையனைக் காண்பித்தான் பழனி.இதுதான் புள்ளிக் காரன்,பார்க்காத மாதிரி பாருங்க என்றான். பஸ் புறப்பட்டதும் நானும் பழனியும் ஏறினோம்.அந்தப் பையன் பின்னாலிருந்தவன் மெது மெதுவாக பஸ்ஸின் மத்திக்கு வந்தான்.பெண்ணின் அருகே நின்று கொண்டான்.உரசிக் கொண்டே இருந்தான். தள்ளித் தள்ளிப் போனாலும் பையன் விடவில்லை. அதன் மடியிலிருந்த புத்தகத்தை, எடுத்து லெட்டர் போல ஒன்றை உள்ளே வைத்தான். பெரிய ரகசியமாய்த் தெரியவில்லை.செய்கைகள் எல்லாருக்கும் புரிகிற மாதிரி இருந்தது.நான் புத்தகத்தை அவள் வாங்கும் முன் பிடுங்கினேன்.நீட்டிக் கொண்டிருந்த கடிததை எடுத்துக் கொண்டு புத்தகத்தை மடியில் போட்டேன்.அதன் முகம் சிவந்து அழுகை முட்டிக் கொண்டு வந்தது.எண்ணேன் இவன் என்னை தினமும் தொந்தரவு பண்ணுதான் என்றாள்.பக்கத்தில் இருந்த பெண்ணும் ஆமா என்றது.அடுத்த ஸ்டாப்பில் பையன் விறு விறுவென்று கீழே இறங்கினான்.இறங்கும் போதே என்னை ஏளனமாய்ப் பார்த்தான். நானும் பழனியும் சட்டென்று கீழே இறங்கினோம்.இறங்கிய வேகத்திலேயே பழனி அவன் சட்டைக்காலரைப் பிடித்தான்.பழனியை விட அவன் நல்ல உயரம்.சண்டியர்கள் நிறைந்த தெருவிலிருந்து வருபவன்.நான் அருகில் போனேன் நீங்க தூரப் போங்க, வேலை சோலிக்குப் போற ஆளு, என்று சொன்னான்.பஸ் கிளம்பியது.தள்ளி நட்ந்தேன் பின்னால் அடிவிழும் சத்தம் கேட்டது. பையன் கீழே குப்புறக் கிடந்தான்.அவன் முதுகில் பழனியின் கால் இருந்தது.புத்தகத்தைப் பிடுங்கி ரசாபாசத்தை உண்டு பண்ணி விட்டதாக எனக்கு குறு குறுப்பாய் இருந்தது.கொஞ்ச நேரம் கழித்து தெருவுக்குள் வந்த பழனியும் அப்படியே அபிப்ராயப் பட்டான்.தூரத்தில் அடி பட்ட பையன் நாலைந்து பேருடன் வருவது தெரிந்தது.இப்போதும் பழனி என்னை கட்டாயமாக தள்ளிப் போகச் சொல்லிக் கொண்டிருந்தான்.நான் அண்ணாவியின் வீட்டுக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாய்ப் போனேன்.அவராவது குற்றாலிங்கமாவது இருக்க வேண்டுமே என்ற கவலையுடன்.

Visitors