Monday, November 24, 2008

நால் வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும்........



சந்திப் பிள்ளையார் கோயில் ரொம்ப பிரசித்தமானது.சந்தி வினாயகர்ரொம்ப வலதியானவர். நானே கண்கூடாக அனுபவித்த உண்மை. அரையணாவுக்கு ஒரு சூடன் பொருத்தி வைப்பதாக முதல் நாள் வேண்டிக் கொண்டால், மறுநாள் தலைவர் படத்திற்கு, முதல் காட்சிக்கு பெண்கள் தரை டிக்கெட்டில் படம் பார்க்க விட்டு விடுவார்கள்,சின்னப்பையன் தானே என்று.. ரத்னா, பார்வதி டக்கீஸில் இது ரொம்பக் கஷ்டம்.போங்கலே என்று துரத்திவிடுவார்கள். ஆனால் ரத்னாடாக்கீஸில் மெயின் கேட்டில் நின்றுகொண்டிருந்தால் பெரும்பாலான சமயங்களில் சின்னப் பையன்களை தனியே அனுமதித்து, தரை டிக்கெட் கேட் திறக்கும் முன்,உள்ப் புறமாகஅந்த கியூவில் முதலில் நிற்கும் படி போக விடுவார்கள். சற்று பெரிய பையன்களை, அவன் அரை டிராயர் போட்டிருந்தாலும்,.ஏல ஏழு கழுத வயசாகுது,கல்யாணம் பண்ணி வச்சா இதுக்குள்ள ரெண்டு பெத்துருப்பே, போடா மெயின் கியூவில் வா என்று அனுப்பி விடுவார்கள்.
குடும்பத்தலைவன் 1962 ஆகஸ்ட் 15=ல் வந்தது. அன்றைக்கு நாலு காட்சிகள் .காலை பத்து மணிக்கு பெண்கள் டிக்கெட்டில் ஐம்பது டிக்கெட்டுகளே ஒதுக்கி இருந்தார்கள். ஆம்பிளைப் பயலுகள்ளாம் ஆம்பளை டிக்கெட்டுக்கு ஓடுங்கலே என்று துரத்திவிட்டார்கள். பெஞ்சு டிக்கெட் பெண்களுக்கு கொடுக்கவே இல்லை.என்னை விட சற்றுப் பெரிய பையன்களாய் இருப்பவர்கள் எல்லாம் முதலிலேயே ஆண்கள் கியூவில் அடித்துப் பிடித்து போய் விட்டார்கள்.பிள்ளையார் கை விட்டு விட்டாரே என்று மேட்னி ஷோவுக்கு கூடுதல் பிரார்த்தனைகளுடனும், பெஞ்சு டிக்கெட்டிற்கான கூடுதல் காசுகளுடனும் போனேன்.சுடலை மாடன் கோயிலையும் ஒரு சுற்று சுற்றி வந்திருந்தேன். (இரா. முருகன் நாவல்-அரசூர் வம்சம்- படித்த பாதிப்பு சாமியைக் கூட கிண்டலடிக்கிற மாதிரி தோன்றுகிறது.) காலைக் காட்சியை விடக் கூட்டம் அதிகமாயிருந்தது.பையன்களை பெண்கள் டிக்கெட் பக்கம் அனுமதிப்பார்களா என்று சந்தேகமாயிருந்தது.நல்ல வேளை பாக்கியத்தக்கா கியூவில் நின்று கொண்டிருந்தாள். ஈ.வி சரோஜா மாதிரி இருப்பாள்.தேன் நிலவு படத்திற்கு இந்த மாதிரி ஞாயிறு காலைக் காட்சிக்கு பார்வதி தியேட்டரில் அல்லாடிக் கொண்டிருந்த போது அந்த அக்கா தான் இது ஏந்தம்பிதான் என்று கூட்டிப் போனாள். ஆள் நல்ல சிகப்பு. இப்ப யோசிக்கையில் கொஞ்சம் ஓவர் மேக் அப் என்று தோன்றுகிறது.முதல் தரம் கூட்டிப் போகும் போதே துட்டை முதலிலேயே வாங்கிக் கொண்டுவிட்டாள், அடுத்த கண்டிஷன் உள்ளே வந்த பிறகு மரியாதையா ஆம்பிளை டிக்கெட் பக்கம் போய் உட்கர்ந்துக்கிடனும்.அதற்கு அப்புறம் முத்துமண்டபமோ ஏதோ ஒரு படத்திற்கு அவளுடன் போவது போலவே போய் நானே டிக்கெட் எடுத்துப் போனேன்.வேறு சில படங்களுக்கும் அவளை நான் காலைக் காட்சியில் பார்த்திருக்கிறேன். அதெல்லாம் கூட்டமில்லாத படங்கள்.ஆண்கள் டிக்கெட்டிலேயே போனவை.
பாளை அசோக் தியேட்டரில் மதுமதி படம் வந்த போது நானும் பெரிய கோபாலும் போயிருந்தோம்.முதலில் ரத்னாவில் வந்த போது பார்க்கவில்லை. ஆனால் அதன் கதையை கிட்டத்தட்ட முழுதாகப் போட்டிருந்த பெரியசைஸ் நோட்டீஸ் என்னிடம் ரொம்ப நாள் இருந்தது.டைரக்‌ஷன் பிமல்ராய், இசை சலில் சவுத்ரி என்றெல்லாம் பல தடவை படித்து மனப்பாடம் ஆகியிருந்தது.அஷோக்கில் ரெண்டாம்தடவை வந்தபோது. கோபால், கூட வருவதற்கு தாராளமாய் சம்மதித்தான்.அவ்வளவு தூரம் நடந்து போவதற்கு அவந்தான் எப்போதும் சம்மதிப்பான்.ஊசிக்கோபுரம் வரைக்கும் ஜங்ஷன் டிக்கெட்தான். சமயத்தில் ஊசிக்கோபுரம் வரை பஸ்ஸில்போவோம் அப்புறம் குறுக்கு வழியாய் தியேட்டருக்குப் போய் விடுவோம். அதற்கு அவள் வந்திருந்தாள்.அவளது மாப்பிள்ளையுடன் பால்கனி டிக்கெட்டிலிருந்து படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அந்த ஆள் சற்று வயதான முரட்டு ஆளாய் இருந்தார்.பேசுவதற்கோ தெரிந்த ஆள் என்கிற மாதிரி சிரிக்கவோ வாய்ப்பில்லை.பெரிய கோபால் மட்டும் ஏல அந்த ஆள் நம்மளை முறைச்சுப் பாக்காருல என்றான்.
இன்றும் அந்த அக்காவிடம் கெஞ்சுகிற மாதிரி ஒரு டிக்கெட் எடுத்துத் தரக் கேட்டேன்.காலையில் படம் பார்த்து விட்டு வந்த எல்லாரும் படம் வேறு நல்லாயிருப்பதாய்ச் சொல்லியது ஆவலை அதிகரித்து விட்டது. டேய் கூட்டமாயிருக்குடா அங்க யார் டிக்கெட் கிழிக்கறாங்க. பூதததானா அப்படீன்னா பரவால்ல இப்படி ஏம் பக்கத்தில நைசா நுழஞ்சிரு என்றாள் நான் நுழைந்து அவளை ஒட்டியவாறு நின்று கொண்டேன்.. லைட் ப்ளூகலர் சேலை கட்டி இருந்தாள்.உடுத்திப் பழகிய வாயல் சேலையின் வள வளப்பு உடலில் உரச நின்று கொண்டிருந்தேன். மற்ற பொம்பளைகளெல்லாம் யார்ல அது என்று திட்டிக் கொண்டிருந்தார்கள்.அவளோ எதையும் கண்டுக்காத என்கிற மாதிரி கண்ணால் ஜாடை செய்தாள். ஒரு வழியாய் பெண்களிடையே நசுங்கிப் பிசுங்கி டிக்கெட் கவுன்tடர் அருகே வந்ததும் பூதத்தான் கையயைப் பிடித்து வெளியே இழுத்து விட்டான். பாக்கியத்தக்காவின் முகத்தைப் பார்த்தேன் அவள் கவுண்டருக்கு இரண்டு மூன்று பேர் தள்ளி நின்றாள்.பூதத்தானிடம், என்னை அவள் தம்பி என்று சொல்லுவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.சொல்லவில்லை. அவனோ டிக்கெட்டைக் கிழித்தவாறே ஓடீருல என்று சொல்லிக் கொண்டிருந்தான்.அவமானம் பிடுங்கி தின்றது.ராஜ மரியாதையுடன் படம் பார்க்க பாப்புலர் டாக்கீஸெல்லாம் இருக்க, இங்கே இப்படி ஆகிவிட்டதே என்று வெட்கமாயிருந்தது.ஆனால் எப்படியோ அவள் இரண்டு டிக்கெட்டுடன் கவுண்டரிலிருந்து வெற்றிகரமாக வந்து விட்டாள். வாடே என்று கூப்பிட்டாள். ஏதொ சொல்ல வாயெடுத்த பூதத்தான் ஒன்றும் சொல்லாமல் ஏல அந்தப் பக்கம் போயிரனும் என்றான், டிக்கெட்டைக் கிழித்தபடியே.
அவளிடம் கூட ஒன்றும் சொல்லவில்லை நான், அவள் பூதத்தானிடம் ஏதோ சிரித்துப் பேசிய படியே நின்று கொண்டிருந்தாள். அன்றோடு பொம்பளை டிக்கெட்டில் படம் பார்ப்பதை நிறுத்துவது என்று முடிவு செய்தேன்.அப்புறம் அவளையும் பார்க்கவேயில்லை.
ஐஸ் மணி பயங்கர சிவாஜி ரசிகன்.எங்கள் தெருவிலும் கொஞ்ச நாள் குடியிருந்தான்.அவன் அம்மா ஆப்பம் அதிரசம் சுட்டு தெரிந்த வீடுகளில் விற்று வருவாள்.கூவிக் கூவியெல்லாம் விற்கமாட்டாள். மணி, ஐஸ் விற்பான்.அவனும் அதிகம் சத்தம் போட்டெல்லாம் விற்க மாட்டான்.அவன் பெரும்பாலும் தியேட்டர் வாசலில் மத்தியான நேரம் தரை, பெஞ்ச்சு டிக்கெட் பக்கம் நின்று விற்பான்.அதிலும் சிவாஜி படம் ஓடுகிற தியேட்டரில்தான் பெரும்பாலும் நிற்பான்.(பின்னாளில் திருவருட் செல்வர் படத்திற்கு நானும் லாலா மணியும் முதல் நாள் போயிருந்த போது. எங்களுக்கு முந்தின இருக்கையில்தான் ஐஸ் மணி இருந்தான்.ரசிகர் சண்டைக்கெல்லாம் லாலா மணி வர மாட்டான்.
அவனிடமும் யாரும் வருவதில்லை.படம் சுமார் ஆகப் போய்க் கொண்டிருந்ததை உள்ளூர ரசித்துக் கொண்டிருந்தோம்,சிவாஜி அப்பராக வரும் காட்சி. சம்பந்தரின் பல்லக்கு சுமப்பவராக வந்து, சம்பந்தர் விசாரிக்கிற போது குடு குடுவென்று ஓடி வருகிறதை நாங்களே சந்தோஷமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த போது.”கணேசா ” என்று சத்தமிட்ட படியே ஐஸ் மணி எழுந்து கைகளிரண்டையும் வா என்றபடிக்கு நீட்டியமானிக்கி (நீட்டியதுபோல்) விக்கித்து நின்று விட்டான்..தியேட்டரே அவனைப் பார்த்து திரும்ப, வாசல் திரைகளையெல்லாம் திறந்து படத்தையே கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டார்கள்.)

பச்சை விளக்கு படம் நன்றாக இருப்பதாகக் கேள்விப்பட்டு. படம் வெளியாகி நாலைந்து நாள் கழித்து ஒரு மேட்னி காட்சிக்குப் போனேன். டிக்கெட் கிடைக்கவில்லை. மணி ஐஸ் விற்றுக் கொண்டிருந்தான்.படம் போடும் வரை அவன் அங்கேயே நிற்பான். எல்லா ரசிகர்களும் அப்படித்தான்.படம் ஓட ஆரம்பித்ததும் அவன் மிச்சம் இருப்பதை தெருக்களில் விற்கக் கிளம்பி விடுவான். அவனுடன் நானும் நடக்க ஆர்ம்பித்தேன்.வேய் ஏங்கூட வாரும் ரெண்டு மூணூ முக்கியமான இடங்களுக்குத்தான் போவேன் என்றான். சரி என்று பேசிய படியே நடந்தோம்.கதாநாயகன் செத்துப் போற மாதிரி எடுத்தா எம்ஜியார் படம் ஓடவே ஓடாது எனவே. மதுரை வீரன் மட்டும்தான் ஓடியிருக்கு. ராஜா தேசிங்கு, ராணி சம்யுக்தா எல்லாம் ஓடவே இல்லை, என்று கணக்கு சொல்லியபடியே வந்தான்.பச்சை விளக்கில் சிவாஜி இறந்து போய்விடுவதாக கதை. ஏதேது இன்னும் கொஞ்ச நேரம் போனா நம்மளையே மாத்திருவான் போலிருக்கு என்று நினைக்கும் போது மாடத்தெரு வந்திருந்தோம்.அறம் வளர்த்த புது மாடத்தெரு என்று பெயர்.தேவ தாசிகள் இருந்த தெரு. தெருவின் கண்டமத்தியில் ஒரு பெரிய செட்டியார் மாளிகை. நகரத்தார் ஸ்டைலில்.இருக்கும்.அதைப் பற்றி ஏகப்பட்ட கதை இருக்கு.
அதற்கு எதிர்த்தாற் போல ஒரு சந்து பிரியும். அது குளப் பிறைத்தெருவிற்குள் கொண்டு போய் விடும்.அந்தத் தெருவையே நான் அன்றுதான் பார்க்கிறேன்.சிறிதாகப் பிரிந்த சந்து, சற்றுத் தள்ளிப் போனால் அகலமாகி விட்டது.அவ்வளவு அகலத்துக்கும் நிழல் தருகிற மாதிரி ஒரு காம்பவுண்டின் உள்ளே பெரிய வேப்ப மரம். அந்த மத்தியான வெயிலுக்கு அந்த நிழல் பிரமாதமாயிருந்தது.. அதனடியில் ஐஸ் வண்டியை நிப்பாட்டி, ஒரு முறை குரல் கொடுத்தான்.தெருவே அமைதியாக இருந்தது.அவ்வளவு தூரம் வரைக்கும் அவன் குரல் எழுப்பவே இல்லை. இந்தத் தெருவில் யாருப்பா வங்குவாங்க என்று நான் கேட்டு முடிக்கும் முன் வேப்பமர வீட்டின் கதவு திறந்தது..ஒரு கனத்த முரட்டு ஆளும் அவர் பின்னால் வெளிர் நீலக் கலர் சேலை உடுத்தி சற்றே தலையும் ஆடையும் கலைந்த நிலையில் ஒரு பெண்ணும். பெண் பாதி திறந்த கதவுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தாள்.முகம் சற்றே பரிச்சயமான மாதிரி இருந்தது.அவர் நாலைந்து ஐஸ்கப்புகள் வங்கினார். கப் ஐஸ் வந்த புதிது அது.முகம் பிடி பட்டு விட்டது. பாக்கியத்தக்கா.பார்த்து நெடு நாட்களாயிற்று.இப்போதெல்லாம் முதல் நாள் தரை டிக்கெட் போவதில்லை. நீண்டநாள் ப்ளான் போட்டு உண்டியலில் காசு சேர்த்து 1.66 பைசா டிக்கெட்டில் போய்விடும் வழக்கம் வந்தாச்சு, பணத்தோட்டம் படத்திலிருந்து. அக்கா எப்படியிருக்கீங்க, இப்பல்லாம் படம் பார்க்கவே வர்றதில்லையா என்று பட பட வென்று பேசினேன். ஆள் முன்னைக்கு இப்ப உடம்பு பூசினாற்போல் அழகு கூடியிருந்தாள். பதிலெதுவும் சொல்லும் முன் பட்டென்று கதவு சாத்தப் பட்டது.மணி, என்னவே இவளைத் தெரியுமா உமக்கு, நானே நல்ல பார்த்ததில்லையே என்றான்.நான் சொல்லிக் கொண்டிருந்தேன் பழைய கதையை. டெய்லி எங்கிட்ட ஐஸ் வாங்குவாங்க அதுவும் நாலைந்து. ரெண்டு பேர்தான் இருக்காங்க, அவ பேரு பாக்கியம்,(அப்பத்தான் எனக்கு பேர் தெரிய வந்தது.)அவரு நயினார் குளம் ரோட்டில் லாரி பார்வேடிங் ஏஜெண்டா இருக்காரு.அவரு வீடும் கடைப் பக்கத்திலேயே இருக்கு.இது தொடுப்பு கேஸ்.வீட்டை விட்டு வெளியே வந்தே நான் பார்த்ததில்லையே. அவரும் வெளியவே விட மாட்டாரே என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கதவு லேசாகத் திறந்து அவள் வெளியே அவசரமாக வந்தாள். பாதி வாசல் திறக்கும் முன் அவர் முரட்டுத் தனமாக உள்ளே இழுத்து கதவைச் சாத்தினார்.உள்ளே அடி விழும் சத்தமும், இன்னமே போகலை, போகலை என்று அழும் சத்தமும் இரண்டு முறை கேட்டது. அப்புறம் அமைதியாகி விட்டது. நாங்களும் நகர்ந்தோம்.. வே வியாபாரத்தைக் கெடுத்து வச்சு வசூலைக் குறைச்சிட்டேரேவே என்று சொல்லி முடிக்கும் முன் இரண்டு கப் ஐஸ் எங்கள் பின்னால் விழுந்தது.நல்ல வேளை மேலே விழவில்லை.ஆனால் வியாபாரம் பாதித்து விட்டதற்கு மணி வருத்தப் பட்ட மாதிரியில்லை. நால் வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் என்று பாடிக் கொண்டு வந்தான். அந்தப் பாட்டு பச்சை விளக்கு படத்தில் என்று அப்புறம்தான் தெரிந்தது.

Visitors