Saturday, December 8, 2012

நன்றி: காட்சிப்பிழை திரை-10




இரண்டாம் இடம்.....
தி-லி சந்திப்பின் பெரிய லாட்ஜ் அது. உருப்படியான பிரபலமான லாட்ஜும் அதுதான்.நெல்லையப்பர் நெடுஞ்சாலையை ஒட்டிய அதன் முகப்பு பூராவும் கீழே கடைகளும் மேலே சினிமாக் கம்பெனிகள், மாத வாடகைக்கு குடியிருக்கும் அநேகமான மருந்துக் கம்பெனிகளின் பிரதிநிதிகள் தங்கும் அறைகளும்.கணேசன் அங்கே ரூம் பாய் ஆக வேலை பார்த்தான்.சாயங்காலம் எப்படியாவது எம்.ஜி.ஆர் படம் ஓடும் தியேட்டருக்கு ஐந்து நிமிடமாவது வந்து விடுவான்.வருவதும் போவதும் தெரியாது.இத்தனைக்கும் சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது.லாட்ஜிலுள்ள எல்லா சினிமாக் கம்பெனிகளிலும் நல்ல பழக்கம் உண்டு.சில சினிமா தியேட்டர்களில் வசூல் கணக்கைத் தர மாட்டார்கள்.குறிப்பாக ரத்னா பார்வதி திரை அரங்குகளில்.,மன்றத்தினரை எதற்குமே அனுமதிக்க மாட்டார்கள். அப்போழுதெல்லாம் கணேசன்தான், பட விநியோகஸ்தர்களிடம் அவற்றை வாங்கித் தருவான்.
கணேசனுக்கு அவசரமாக ஒரு தந்தி அடிக்க வேண்டி இருந்தது. அவனுடைய சிலோன் பேனா நண்பன் இந்தியா வந்தார். அவரை வரவேற்க திருச்சி போக வேண்டும்.முடியவில்லை.அவர் விமானம் ஏறி விட்டார்.சேது ஃபிலிம்ஸ் கம்பெனியின் ஃபோன் நம்பரை அவருக்கு தெரிவிக்க வேண்டும். ON ARRIVAL INFORM KATHIRKAMANATHAN OF CEYLON FLIGHT TO CONTACT THIS PHONE NUMER 1391 P.P GANESAN..”என்று ஒரு தந்தியை திருச்சி விமான நிலைய அதிகாரிக்கு அனுப்பினேன்.RECEPTIONIST, TRICHY AIRPORT என்று விலாசம் எழுதிய ஞாபகம்.அதை அனுப்பிய ஜங்ஷன் தந்தி அலுவலர் ஐய்யர், கிண்டல் செய்தபடியேதான் அனுப்பினார், என்னடா அம்பி இதெல்லாம் என்னடா இங்க்லீஷ்...இதையெல்லாம் யாரும் ரிஸ்க் எடுத்து கொடுப்பாளோ...திண்டாடப் போறான் அந்தப்பயலென்றார்.ஆனால் தந்தி முறையாக அவர் கைக்கு கிடைத்து அவரும் ஃபோன் பண்ணி,விவரம் கேட்டு தானே தி-லி வந்து சேர்ந்து விட்டார்.அவருக்கு பி.பி கணேசன் என்று போட்டதுதான் புரியவில்லை.விமானநிலையத்தில் உதவினார்களாம்.பி.பி என்றால் பர்டிகுலர் பெர்சன்.அப்போதெல்லாம் ஒரு நம்பருக்கு டிரங்க்கால் புக் பண்ணினால், எக்சேஞ்சில் நம்பர் காலா, பி.பி காலா என்று கேட்பார்கள்.பி.பி. கால் என்றால் அந்த ஆள் அங்கே ஃபோன் அருகே காத்திருக்க வேண்டும்.மணிக்கணக்கில் கூடக் காத்திருக்க வேண்டும். ‘பி.பி ரெடியா என்று கேட்க கொஞ்சநேரம் ,பி.பிரெடி என்றாலும், அதன் பின்ன்னும் கொஞ்ச நேரம் கழித்துத் தான் லைன் கிடைக்கும்.இந்தாங்க திருநெல்வேலி கால், பி.பி ரெடி பேசுங்க என்று நம்மிடம் தொலை பேசியைத் தருவார்கள்.அவர் வந்த இரவு மூன்று பேரும் செகண்ட் ஷோ ‘பாதுகாப்புபடம் போனோம். நகரில் மூன்று பேரும் பார்க்க வாத்தியார் படம் ஒன்று கூட ஓடவில்லையே என்று அந்த ரசிகர் அலுத்துக் கொண்டு பாதியில் தூங்கிப் போய்விட்டார்.அதிலிருந்து கணேசன் என்னுடன் நெருக்கமாகி விட்டான். லாட்ஜ் பக்கம் போனால் காஃபி வாங்கித் தருவான்.லாட்ஜ் காஃபி நன்றாயிருக்கும்.டி.டி.கே கம்பெனி ரெப்பிடமிருந்து காட்பரீஸ் சாக்லேட், பாண்ட்ஸ் க்ரீம்( பாதி உபயோகித்தது) எல்லாம் வாங்கித் தருவான்.அவர் அவ்வப்போது ரூமில் நடத்தும் மன்மத லீலைகளை பக்கத்து ரூம் வழியே ‘பிக்ச்சர்பார்க்க அனுமதிப்பான்.
லாட்ஜில் தங்க வரும் சினிமாக் காரர்களைக் காண அழைத்துப் போவான்.எம்.ஜி.ஆரின் நேர்முக உதவியாளர் குமாரசாமி,வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமி,பின்னாளில் புலமைப்பித்தன் எல்லோரையும் அங்கே பார்த்திருக்கிறேன்.பறக்கும்பாவை படம் ஓடிக் கொண்டிருந்தபோது அதன் டைட்டில் கார்ட்டூன் ஓவியங்கள் வரைந்த (குமுதம்,கல்கண்டு இதழ் கார்ட்டூனிஸ்ட் ‘ராகி’, ஆர் ஆர் பிக்சர்ஸ் மேற்பார்வையாளர் மாப்பிள்ளை விஜயரங்கம் என்று, நிறையப்பேர்.எல்லோரையும் பார்ப்போம் சிலர் நன்றாகப் பேசுவார்கள், சிலர் ரசிகக் குஞ்சுகளுக்கு என்ன தெரியும் என்பது போல் தலையை மட்டும் ஆட்டி விட்டு விடை கொடுப்பார்கள். நான் சற்று அதிகப் பிரசங்கமாகப் பேசி ஆளைக் கொஞ்சம் கவர்ந்து விடுவேன். சக்தி.கிருஷ்ணசாமியிடம் நீங்க பாரதிதாசன் மாதிரி இருக்கீங்க என்றேன்.மீசை அவர் மாதிரித்தான் வைப்பேன் என்று சிரித்துக் கொண்டார்.
ஒருநாள் கணேசனைப் பார்க்கப் போயிருந்த போது,வாங்க ஒரு புரொட்யூசர் வந்திருக்காரு...பார்க்கலாம் என்று அழைத்துப் போனான்.நாங்கள் அருகே போனதும் அவர் ‘அருந்திக் கொண்டிருந்ததைஒளித்து வைத்தார். கணேசன் தானென்றவுடன் எடுத்துக் கொண்டார். பொத்தாம்பொதுவாக “பிஸ்கட் பிராண்டி,இங்கேயெல்லாம் கெடைக்கவே மாட்டேங்கே..என்றார். பெயரே இனித்தது.அப்போதெல்லாம் பாளையங்கோட்டை ‘எட்வர்ட் அன் கோமெடிக்கல் ஸ்டோரில்  ஒரு போர்டு தொங்கும்,டாக்டர்கள் சீட்டின் பேரில்,பெர்மிட் உள்ளவர்களுக்கு மட்டும் பிராந்தி , விஸ்கி, ஒயின் கிடைக்கும்.‘அதை வாசிப்பதே பெரிய கிக் ஆக இருக்கும்.பின்னாளில் எல்லாமே தெரிந்து விட்டது. முக்கியமாக பிஸ்கட் பிராண்டி இனிக்காது என்று.அவர் எம்.ஜி. ஆரை வைத்து ஒரு படம் தயாரித்தவர்.படம் ஓடவே இல்லை.மிகப் பெரிய நிறுவனத்தின் அதிபருக்கு மச்சினர் என்றான் கணேசன்.கதை, நல்ல கதை சார் இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி எடுத்திருக்கலாமென்றேன். என்னத்த  கதை,அதில் நடித்த இரண்டாவது கதாநாயகி பேரைச் சொல்லிக் கொண்டு “சதையைத்தான் பார்த்தேன். அதையும் எங்க மச்சான் எங்க விட்டாரு... கொண்டா,கொண்டான்னுருவாரு. அவருக்குத்தான் எல்லாரும் வருவாங்களே...என்று புலம்ப ஆரம்பித்தார். அடிக்கடி பாட்டில் காலியாகி விடுமோ என்று பார்த்துக் கொண்டிருந்தார்.இரண்டாவது கதாநாயகிகளைப் பற்றி நிறையச் சொன்னார்.ஒரு படம், ரெண்டு படம் செகண்ட் ஹீரோயினா நடிக்கலாம்: அப்புறம் முதல் இடத்துக்கு பிக் அப் ஆயிரணும் இல்லேண்ணா கஷ்டம்தான், எங்கப்பூ, விட மாட்டாங்கப்பூ....அது......கொலைகார உலகமப்பூ...என்று சொல்லியபடியே படுத்து விட்டார்.கணேசன் ரூம் கதவைச் சாத்தி விட்டு கீழே அழைத்து வந்தான்.பாத்தீங்களா சார் இதுதான் சினிமா.இப்ப இவரு வந்திருக்கிறதே..அடுத்த படத்துக்கு ஃபைனான்ஸ் புரட்டத்தானாம் வெளங்குமா.... என்றான்.
வீட்டுக்கு வரும் வழியில் பொம்மைசினிமா இதழ் வாங்கிவந்தேன்.எல் விஜயலட்சுமியும் கே.ஆர்.விஜயாவும், ஊட்டி வரை உறவு ஸ்டில் அட்டைப்படம் போட்டிருந்தார்கள். எல்.விஜயலட்சுமி அதோடு கல்யாணம் செய்து கொண்டு மணீலாவுக்குக் கிளம்பி விட்டார். ரொம்ப அழகான படம். எங்களில் சிலருக்கு எல்.விஜயலட்சுமியை ரொம்பப் பிடிக்கும்.நல்ல டான்ஸர். திருநெல்வேலி அக்ரஹாரத்துப் பெண்(ணாம்), கவலை இல்லாத மனிதன் படத்தில் சேரிப் பெண்ணாக அறிமுகமாகி சந்திரபாபுவுக்கு ஜோடியாக நடித்தார்.கொடுத்து வைத்தவள் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரண்டாவது கதாநாயகி. (சிலப்பதிகார காலம் தொட்டே தமிழ்க் கதைகளில் ஒரு கதாநாயகனுக்கு இரண்டு கதாநாயகி என்பது சினிமாவிலும் ‘ஊழ்வினையாக உறுத்து வந்து ஊட்டுகிறதோ என்னவோ). படத்தில் இரண்டு டூயட் எல்.வியுடன் எடுத்தார்கள்.
தள தள வென ஜொலிக்குது-உடம்பு
தக்காளிப்பழம் போல் சிவக்குது
குறு குறு வெனப் பாக்குது – மனசு
கொல்லாமலே என்னைக் கொல்லுது”................என்று ஒரு பாடல் ‘ஹம்பியில் ஷூட் பண்ணினார்கள். பேசும்படம் இதழில் அருமையான ஸ்டில் எல்லாம் வந்தது. படத்தில் வரவில்லை.படத்தில்,
“பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது..
காதல் தேனாற்றில் நீராடுது
அழகுத் தேரோடுது
மனது போராடுது
   -(மேனிப் பாலாற்றில்.....)
என்று இதுவும் ஒரு அழகான பாடல்.இது மட்டும் படத்தில் இருந்தது. ஈ.வி சரோஜா தான் முதல்க் கதாநாயகி. படமும் அவர் சகோதரர் தயாரிக்க ராமண்ணா இயக்கினார்.எம்.ஜி.ஆருக்கு ஈ.வி. சரோஜாவுடன் இணையாக நடிக்க இஷ்டமேயில்லை என்பார்கள். என் தங்கை படத்தில் தங்கையாக நடித்த குழந்தை(!) நட்சத்திரத்துடன் நடிக்க விருப்பமில்லை என்றும், தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் சொன்னாராம்.அவர் சொன்னதில் ஒரு உண்மை இருந்தது.பாச மலர் படத்தின் வெற்றிக்குப்  பின் உடனேயே ‘எல்லாம் உனக்காக படம் வந்தது. சாவித்திரி அதில் சிவாஜியின் ஜோடியாக நடித்ததை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, அதனால் படம் படு தோல்வி என்று ஒரு பேச்சு உலவியது.
தவிரவும் ராமண்ணாவின் (மூன்றாம்) மனைவியான ஈ.வி சரோஜாவுடன் அவர் இயக்கத்தில் நடிக்க எம்.ஜி.ஆர் தயங்கியதாகவும்....அதனால் காதல் காட்சிகளை ப.நீலகண்டன் இயக்கினார் என்றும் ஒரு கதை.இந்த மாதிரிக் கதைகள் சினிமா கதையை விட சுவாரஸ்யம் மிக்கவை.
ஈ.வி.சரோஜாவே இரண்டாம் கதாநாயகியாகவோ நாட்டிய நடிகையாகவோதான் நிறையப் படங்களில் நடித்தார். இவரும் அருமையாக நடனம் ஆடுவார்.சந்திர பாபுவுடன் ஆடும் நடனங்கள் அழகாய் இருக்கும்.அருமையான கண்கள். ‘கைதி கண்ணாயிரம் படத்தில் இரண்டு ‘கிளப் டான்ஸ்ஆடுவார்.அப்படியே இந்தி நடிகை போலிருக்கும். எல்.விஜயலட்சுமி, ஜெய்சங்கர் சகாப்தத்தில் கதாநாயகியாக நடித்து கொஞ்சம் வெளிச்சத்தில் இருந்தார். இதே போல கன்னட நடிகை பாரதி, தன் அபூர்வமான நடு மார்பு மச்சத்துடன் நாடோடி படத்தில் எம்.ஜி.ஆருடன் அறிமுகமானார். முதல் ரீலில் ஒரு டூயட் பாடி விட்டு இரண்டாவது ரீலில் தற்கொலை செய்து கொள்ளுவார்.சந்திரோதயம் படத்தில் உடன் பிறவாச் சகோதரியாக நடித்து, எம்.ஜி.ஆர் ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறி விட்டார். அவரும் ஜெய்சங்கர் ரவிச்சந்திரனுடன் கொஞ்ச காலம் நடித்து, அவளுக்கென்று ஒரு மனமாக விஷ்னு வர்த்தனை மணம் முடித்துக் கொண்டு திரையுலகுக்கு டாட்டா காட்டி விட்டார்.
பாசம் படத்தில் ஷீலா அறிமுகமானார், இரண்டாம் கதாநாயகியாக. கண்ணதாசன் படங்கள் ஒன்றிரண்டில் தலை காட்டினவருக்கு தன் சொந்த தேசமான கேரளமே கடவுளாகியது.கிட்டத்தட்ட 500 மலையாளப் படங்கள் நடித்தார்.நூற்றிச் சொச்சம் படங்களில் பிரேம் நசீருடன் மட்டுமே நடித்தார்.வாழ்க்கை வாழ்வதற்கே படத்தில் அறிமுகமான சாரதா அதில் பேசிய வசனம் நாலைந்து வார்த்தைகள் கூட இருக்காது.கிருஷ்ணன்-பஞ்சுவின் பிரியத்துக்குரியவரான இந்த அற்புதமான நடிகை குங்குமம் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார்.அவ்வளவுதான்.ராஹேல் என்ற பெயரில் மலையாளத்தில் அறிமுகமாகி நூற்றுக் கணக்கில் நடித்து இரண்டு முறை ஊர்வசி பட்டம் வாங்கினார்.அந்தக் கையோடு எம்.ஜி.ஆர் தங்கையாக நினைத்ததை முடிப்பவன் படத்திலும்,சிவாஜிக்கு ஒரு ஜோடியாக என்னைப் போல் ஒருவன் படத்திலும் தோன்றியதோடு சரி.
பெரிய இடத்துப் பெண் படத்தில் அறிமுகமான ‘மணிமாலாபடத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக முடியாமற் போவது போலவே எந்தப் படத்திலும் ஜோடியாக முடியவில்லை.இரண்டாவது படத்தில் (பணக்காரக் குடும்பம்) நாகேஷுக்கு ஜோடியாகி விட்டார். தெய்வத்தின் தெய்வம் படத்தில் மணிமாலா என்று இன்னொரு நடிகையை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தினார். முதல் ரீலில் டூயட், அடுத்த ரீலில் விதவை.பெயர்க் குழப்பம் வரவே இரண்டாவது (கே.எஸ்.ஜி). மணிமாலா, தன் பெயரை கீதாஞ்சலி என்று மாற்றிக் கொண்டார்.ஒரிஜினல் மணிமாலா நிஜ வாழ்க்கையில் வெண்ணிற ஆடைமூர்த்திக்கு மனைவியாகி விட்டார். எல்லாம் அந்த ஏழுமலையான் பாலாஜி செயல்.வெண்ணிற ஆடை நிர்மலா ‘காதலிக்க நேரமில்லைபடத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டவர்.அவரை வைத்து சில காட்சிகள் கூட எடுத்தார் ஸ்ரீதர்.( ஒரு காட்சி, “அனுபவம் புதுமை.... பாடல்க் காட்சி. இந்த ஃபிலிம் கூட கடைகளில் கிடைத்தது. )சுத்தமாய் நடிப்பே வரவில்லை.ஒப்பந்த நடிகை வேறு. அதனால் அடுத்த படமான வெண்ணிற ஆடையில் பயன்படுத்திக் கொண்டார்.வெண்ணிற ஆடையிலும் ஹேமமாலினிதான் ஜெயலலிதா ரோலுக்கு தேர்வானவர். வைகை அணைக்கட்டில் கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல...பாடல்க் காட்சியை அவரை வைத்துப் படமாக்கினார். அப்புறம் அவருக்கும் நடிப்பு வரவில்லை என்று வடக்கே வெற்றிக் கொடி நாட்ட அனுப்பி வைத்து விட்டார், ஸ்ரீதர்.ராஜ்ஸ்ரீக்கு ராசியான நடிகை என்று ஒரு பேர். குடியிருந்த கோயிலில் காஞ்சனா நடிப்பதாக இருந்த்து. பறக்கும்பாவை தோல்வி கண்டதால் அவரைத் தவிர்த்து ராஜ்ஸ்ரீயைப் போட்டார்கள்.ஆனால் வேலுமணியின் அடுத்த படமான  நான் ஏன் பிறந்தேன் பட்த்தில் காஞ்சனா நடித்தார்.வெற்றியும் பெற்றது.அவர்தான் நிலைக்க முடியவில்லை.
இன்னும் விஜய குமாரி, புஷ்பலதா, ராதா,(அம்பிகா-ராதா இல்லை, நீதிக்குப் பின் பாசம், யார் நீ போன்ற படங்களில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து இடையிலேயே செத்துப் போகிற ரோல், அதுவும் ரத்தம் சிந்தி) குமாரி பத்மினி,எம்.ஜி.ஆர். சங்கீதா, சிவாஜி சங்கீதா, என்று அந்தக் காலம் தொடங்கி இந்தக் கால தங்கைகள் வரை நிறையப் பேர் இரண்டாம் இடத்திலிருந்து இல்லாமல்ப் போய் விடுகிறார்கள். லலிதா பத்மினி ராகினி மூவரில் கூட பத்மினி அளவுக்கு மற்றவர்கள் சோபிக்க முடியவில்லை.ராகினியாவது பத்மினி நடிக்கும் படங்களில் காமெடியனுக்கு ஜோடியாக வந்தார். லலிதாவை  கொலையும் செய்வாள் பத்தினியாகக் கொன்டேபோட்டு விட்டார்கள். பத்மினிக்காக தியேட்டரை எழுதித் தந்தவர்களும், பீடிக் கம்பெனியை அடகு வைத்தவர்களும் உண்டு என்பார்கள். இவர்கள் ஏன் லலிதாவையோ ராகினியையோ. இரண்டாம் பட்சமாகக் கூட கணக்கெடுக்கவில்லை என்று தெரியவில்லை.என்ன அழகான ஐஸ்கிரீம் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா,அவர் இன்சால்வெண்ட் ஆனாரே ஒழிய  பாவம் எம்.எல்.சி.யாகக் கூட ஆக முடியவில்லை.அதற்கப்புறம்,அவரால் யாருமே இன்று வரை எம்.எல்.சியாக முடியவில்லை.
தமிழ் சினிமாவில் தங்கையாக அறிமுகமானால் ஆகப் பாரிய சங்கடங்கள் உண்டு.எப்படியும் படத்தின் பாதியில் வில்லனால் கொடூரமாகச் சிதைக்கப்பட்டு செத்துப் போக வேண்டும். அதிலும் கூடுதல் செண்டிமெண்டுக்காக கர்ப்பஸ்திரீயாக வந்து வயிற்றில் உருட்டுக் கட்டை அடி வாங்கிச் சாக வேண்டும்.லட்சுமி, விஜயநிர்மலா, சுமித்ரா போல கதநாயகி அந்தஸ்துக்கு உயர்ந்து ஒன்றிரண்டு பேர் தப்பித்திருக்கிறார்கள்.
பெண்கள்தான் என்று இல்லை.எம்ஜி.ஆர், சிவாஜி தவிர அவர்கள் காலத்து நடிகர்கள் யாருமே இரண்டாம் இடத்திலிருந்து மேலே வர முடியவில்லை.காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன் இரண்டாவது படமான கல்யாண மண்டபத்தில் வில்லனாக நடித்தார்,.ஜெய்சங்கர் இரண்டாம் படமான ‘பஞ்சவர்ணக்கிளி’யில் வில்லனாக ஒரு ரோல் நடித்தார். சரி இருவரும் காலி என்று நினைத்தோம்,நல்லவேளை தப்பித்தார்கள். ஆனால் கடைசி காலத்தில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் இருவருமே வில்லனாக நடிக்க நேர்ந்தது.ஸ்ரீகாந்த் இரண்டாவது படமான செல்வமகள் படத்தில் இருந்து வில்லனாகி, வில்லனாகவே உணரப் பட்டு விட்டார்.எம்.ஜி ஆர் படத்தில் இரண்டு கதாநாயகி என்றால், சிவாஜி படங்களில் இரண்டு கதாநாயகர்கள், ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்., ஏவி.எம்.ராஜன், விஜயகுமார்,முத்துராமன் என்று.எல்லாப் படத்திலும் சிவாஜியின் நடிப்பில் இவர்கள் அமிழ்ந்து போவார்கள்.எம்.ஜி.ஆர் இரண்டாம் கதாநாயகனைப் பெரிதும் விரும்பமாட்டார். தானே இரட்டைவேடம் போட்டு விடுவார்.நாளை நமதே படத்தில் ஒரு தம்பியின் பாகத்திற்கு நல்ல நடனமாடக்கூடிய இளம் நடிகராக கமல்ஹாசனைப் போடலாம் என்று பேச்சு அடிபட்டபோது ஒரு தெலுங்கு நடிகரைப் போட வேண்டியாதாயிற்றாம்.இயக்குநர் சொல்லியும் கேட்கவில்லை என்று ஒரு பேச்சு.
காதல் வாகனம் படம் ஊத்திக் கொண்டு விட்டது.ஆனாலும் அந்த தியேட்டர் முன் கொஞ்ச நேரம் நின்று விட்டு, ஒளிவிளக்கு தியேட்டர் நோக்கி நடந்து கொண்டிருந்தோம். கணேசன் பின்னாலேயே வந்தான். சார் வேகமா வாங்க, ஒரு நடிகை வந்திருக்காங்க லாட்ஜுக்கு, என்று சொன்னான். என்னை மட்டும் கூப்பிட்டாலும் இன்னும் இரண்டு மூன்று பேர் போனோம். கொழுக் மொழுக் என்று சிகப்பாய், நன்றாய்த்தான் இருந்தார், சி.ஐ.டி சகுந்தலா. கையை அசைத்தபடி காரில் ஏறிக் கொண்டிருந்தார்.இருபது முப்பது பேர் நின்று விசிலடித்துக் கை தட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லார் முகத்திலும் சொல்ல முடியாத மகிழ்ச்சி.

நன்றி: காட்சிப்பிழை திரை டிசம்பர் 2012


கேள்வியின் நாயகனே ......

நகராட்சி அலுவலகத்திற்கு எதிர்த்த வயல்வெளிகளில்தான் ஆண்டுதோறும் ஆனித் திருவிழா பொருட்காட்சி நடை பெறும்.அதனால் அந்த வயல்களில் நடவு நட சற்றுப் பிந்தி விடும்.கிட்டத்தட்ட 40 நாட்கள்,ஒருமண்டலம், ஆயிரக் கணக்கானவர்களின் லட்சம் தடவையிலான காலடிகள் பட்டு அந்தக் களிமண் பூமியே இறுகிப் போயிருக்கும். உழுவது சுலபமில்லை. சிலர் அந்தப் பூவில் (பிசானம் பருவத்தில்) நடுகையே  செய்யாமல் தரிசாகக் கூடப் போட்டு விடுவார்கள். “ எம்பூட்டு மகசூல் வம்பாப் போச்சு.. என்று தாலுகா ஆஃபீசுக்கு வரும் கிராமத்து சனங்கள் ‘வாப்பாறுவதைக் கேட்கக் கஷ்டமாக இருக்கும்.பழைய இடத்திலேயே நடத்தலாம் என்றால் அங்கே பார்வதி டாக்கீஸ் வந்து விட்டது.பொருட்காட்சி 1960-க்கு முன்னால்,  ரத்தினா டாக்கீஸுக்கு எதிர்த்த ஆசிரிய பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நடைபெறும்.நாடகங்களுக்கான தகரங்கள் வைத்து மறைத்த அரங்கம், பார்வதி தியேட்டர் இருக்கும் இடத்தில் தனியே இருக்கும். அங்குதான் தினமும் நாடகங்கள்,இசைக் கச்சேரிகள் நடைபெறும்.அருமையான கர்நாடக இசைக் கச்சேரி நடை பெறும் அன்றைக்கு அந்தப் பக்கம் ஆள் நடமாட்டமே இருக்காது.அதிலும் நீண்ட காலமாக நகர் மன்ற உறுப்பினர் ஒருவரின் அம்மாதான் முதல் நாள் பாடுவார்கள்.மாமி என்னவோ நன்றாகத்தான் பாடுவதாகச் சொல்லுவார்கள்.ஆனால் ரசிகனுக்கு ஞானம் வேணுமில்லையா.
     ஒரு வருடம், காங்கிரஸ் ஆட்சி தன் முடிவை நெருங்குகிற நேரம் என்று நினைவு. நகராட்சி தி.மு.க வசம் இருந்தது.அதனால் நகராட்சிக்கு எதிர்த்த வயல் வெளிகளின் உடைமையாளர்களில் சிலர் தங்கள் வயலைத் தர மறுத்து விட்டார்கள்.அதனால் நகராட்சிக்குப் பின்னாலுள்ள வயல் வெளிகளில் ( அவற்றில் சில வயல்களில் தண்ணீர் பாய்ச்சி, தொழி, மரம் எல்லாம் அடித்து முடித்து நாற்றுப் பாவும் வேலைதான் பாக்கி இருந்தது. அதையெல்லாம் நிறுத்தி வைத்து) அவசர அவசரமாகப் பொருட்காட்சி ஏற்பாடுகள் நடந்தன.நாடக அரங்கெல்லாம், ஒன்றரை ஆள் உயரத்திற்கு, சுற்றி மட்டுமே, தகரத்தால் மறைக்கப் பட்டிருந்தது. மேலே திறந்த வெளிதான்.அந்த வருடம் பிரபல நடிகர்களின் நாடகங்கள் எதுவும் இல்லை. எம்.ஜி.ஆர் நாடோடிமன்னன் படத்திற்குப் பின் நாடக மன்றத்தையே கலைத்து விட்டார். அதனையெல்லாம் விற்று படத்தில் போட்டு விட்டார்.சிவாஜி வரமறுத்து விட்டதாக சேர்மன் மஜீத் அண்ணாச்சி பொருமிக் கொண்டிருந்தார். நகராட்சி சார்பாக எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தது ஒரு காரணம், என்று பேசிக் கொண்டார்கள்.அப்போது சிவாஜி “தேன்கூடு “, நீதியின் நிழல்ஆகிய நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தார். கட்டபொம்மன் திரைப் படமாகிவிட்டது.
     மனோகரின் இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், காடகமுத்தரையன், எல்லாம் சினிமாவை விட  பிரபலமான, கூட்டம் மொய்க்கும் முக்கியமான நாடகங்கள்.அவை வழக்கமான வரவேற்புடன் நடைபெற்றன.மற்றப்படி உள்ளூர் அமெச்சூர் ஆர்டிஸ்டுகள் நாடகம் நடந்தது. “நெல்லை எஸ்.கே இரணியணின்சீமான் பெற்ற செல்வங்கள், நெஞ்சில்பட்ட வடு, இரண்டும் பிரபலம்.திருநெல்வேலியைச் சேர்ந்த ‘பிரபல சினிமா நடிகை, நாஞ்சில் நளினி கதாநாயகி.சீமான் பெற்ற செல்வங்கள் ஆர்.ஆர்.சந்திரனால் சினிமாவாக எடுக்கபட்டது.கல்யாண் குமார்,எஸ்.ஏ. அசோகன் நடித்தது. தேவிகா உண்டா நினவில்லை.அந்த வருடம் கலைவாணர் என்.எஸ்.கேவின் மகன் கோலப்பன் புதிதாக ஒரு நாடகக் கம்பெனி ஆரம்பித்து ஒரு நாடகம் போட்டார். பெரிய இடத்துப் பெண், பணக்காரக் குடும்பம் போன்ற எம்.ஜி.ஆர் படங்களில் சிறிய பாத்திரங்களில் நடித்திருந்தார். என்.எஸ்கே வின் நாடகக் கம்பெனி அவர் காலத்தில் பிரபலமானது.கோலப்பன் நாடகம் ரொம்ப சுமார் ரகம்.mak மக்கள் அவ்வளவாய் ரசிக்கவில்லை.அவரிடம் என்.எஸ்.கே வையே எதிர் பார்த்தார்களோ என்னவோ.
அந்த வருடம் எஸ்.எஸ்.ஆரின் மணிமகுடம் நாடகம்தான் ஹை லைட். பொதுவாக சிவாஜி, எம்.ஜி.ஆர் நாடகங்களை கடைசி மூன்று நாட்களுக்கு ‘ஹைலைட் ஆகப் போடுவார்கள்.எம்ஜி.ஆரின் நாடகங்கள்,அட்வகேட் அமரன், சுமைதாங்கி, இன்பக்கனவு.அவை நடந்து முடிந்த பின் அரங்கமே கூட்டத்தினால் நொறுங்கிப் போயிருக்கும். இந்த முறை கடைசி நாளன்று எஸ்.எஸ்.ஆர் நாடகம்.அநேகமாக எல்லா நாடகங்களையும், நகராட்சியில் பணிபுரிந்த என் அக்கா கணவர் வாங்கித் தந்த ஓசிப் பாஸில் பார்த்தவனுக்கு,மணிமகுடத்திற்கு பாஸ் கிடைக்கவில்லை.எஸ்.எஸ்.ஆர் மிக மிக தாமதமாக வந்தார். வரவேமாட்டார். வரும் நிலையில் அவர் இல்லை என்று ஏகப் புரளியாகக் கிடந்தது. அதனால் அரங்கமே கூச்சலில் மூழ்கி இருந்தது.
சேர்மன் அறையை ஒட்டி ஒரு சிறிய பாதை அமைத்திருந்தார்கள்.அதை பிரப்பம் தட்டியால் மறைத்திருந்தார்கள். அவரது அறையின் பின் புறம் வழியாகவும் அந்த மறைப்பினூடாகவும்தான்  நடிகர்கள் ஸ்டேஜுக்குச் செல்ல ஏற்பாடு.நாங்கள் சிலர் ஓசிப்பாஸுக்காக சேர்மன் அறையருகே நின்று கொண்டிருந்தோம்.திடீரென்று ஒரு கார் வந்தது. எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி இருவரும் வேகமாக இறங்கிச் சென்றார்கள்.இன்னொரு ஜீப் மாதிரி வண்டியில்,நாலைந்து பேர் சில பெட்டிகளுடன் வந்தார்கள்.அதில் முன் தலை வழுக்கையாய் இருந்த ஒருவர், தம்பி, இந்தப் பெட்டிய கொஞ்சம் உள்ளே கொண்டு வாங்க.... என்று என் அருகே நின்றிருந்தவரிடம் சொன்னார்.இதுதான் சாக்கு என்று சற்றே பெரிதாக இருந்த அதை நாலு பேரும் தூக்கிக் கொண்டு மேக் அப் ரூமுக்குள் போனோம்.அதை வைத்த விருத்தியில் ஒருத்தன் அரங்கத்திற்குள் நுழைய, ....ஏல ஏல எங்கலெ உள்ள வாரீங்க.... என்று எங்களை விரட்டி விட்டு தட்டிக்கதவைச் சாத்தி விட்டார்கள். சரியான இருட்டாகிவிட்டது அந்தப்பாதை. நாடகத்திற்கு மணிஅடித்து ஆரம்பமாகி விட்டது. அங்கேயே நின்று பிரப்பம் தட்டியின் இடுக்குகள் வழியே பார்த்துக் கொண்டிருந்தோம். கொசு காலைப் பிடுங்கிக் கொண்டிருந்தது. விஜயகுமாரி டச் அப் செய்து கொண்டிருந்தார். முகமெல்லாம் ஒரே ஜிகினா பளபளத்தது, சுருண்ட முடி, செக்கசெவேலென்று இருந்தார்.மேலே போர்த்தியிருந்த ஷா(வ்)லை பட்டென்று நீக்கி விட்டு, ஆச்சரியமான வேகத்தில் ராஜரீகமான உடையொன்றை அணிந்து கொண்டார். இதையும் நாடக ஒத்திகையில் சொல்லித் தருவார்களோ என்னவோ.அதே வேகத்தில் ஸ்டேஜுக்கும் போய் விட்டார்.
நாடகம் ஏற்கெனவே துவங்கி இருந்தது. தாடியுடன் எஸ்.எஸ்.ஆர் ஸ்டேஜிலிருந்து வந்தார். இவர் எப்படி அதற்குள் தாடிக்கு மாறினார் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கையில் அவர், ஃப்ளாஸ்க் போல ஒன்றிலிருந்து  எதையோ தம்ளர் ஒன்றில் ஊற்றிச் சாப்பிட்டார்.எங்களிடம் பெட்டியை எடுக்கச் சொன்னவர், -அவரும் விக் எல்லாம் வைத்து மேக் அப்புக்கு மாறி இருந்தார்,கையில் ஸ்கிரிப்ட் வைத்திருந்தார்-ஃப்லாஸ்கை அவசரமாக வாங்கி விட்டு அதைக் கொடுத்தவரை சத்தம் போட்டார்.எஸ்.எஸ்.ஆர் மறுபடி ஸ்டேஜுக்குப் போய் விட்டார்.தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். அவர்தான் டி.வி நாராயணசாமி என்று சொன்னார்கள். திராவிட இயக்கத்தின் மூத்த சினிமாக் கலைஞர்.அவர் சிறந்த நடிகர். கொஞ்ச நாளிலிலேயே அவர்  ‘அவன் பித்தனா?’ படத்தில் நடித்ததை முதல்நாள், முதல்க் காட்சியில் பார்த்த போது ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்தோம்.மீண்டும் விஜய குமாரி வந்தார்.இப்போது அவருக்கு நீண்ட ஸ்லீவ்ஸ் கொண்ட, இடுப்புக்கும் கீழ் வருகிற  ஒரு கருப்பு மேலுடையும், சிகப்புப் பாவாடையையும் தயாராக ஒரு பெண், (சந்திரகாந்தா போலிருந்தார்) எடுத்து நீட்டிக் கொண்டிருந்தார்.நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த தட்டி நெளிந்து, சரசரத்து, சத்தமெழுப்பியது. அதை உணர்ந்தாரோ என்னவோ, சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, விளக்கை அணைக்கச் சொன்னார்.விளக்கு அணைந்ததும் இங்கே கூச்சல் எழுந்தது...ஏல நல்ல கட்டத்துல கெடுத்திட்டீங்களேலெ...அதற்குள் முனிசிபல் பியூன் இரண்டு பேர், ஓடுங்கலே என்று சத்தம் போட்டுக் கொண்டே வந்து, அவர்கள் அங்கே நின்று கொண்டு விட்டார்கள்.மறுநாள் தந்திப் பேப்பரில் அதே கறுப்பு சிகப்பு டிரஸ்ஸில், மேடையில் விஜயகுமாரி நடிக்கும் காட்சியை, (கறுப்பு வெள்ளை) போட்டோவாகப் போட்டிருந்தார்கள்.எங்களில் சிலர் பெருமூச்சோடு அதைப் பார்த்தார்கள்.
     எஸ்.எஸ்.ஆர் ஏற்கெனவே அவரது முத்து மண்டபம்நாடகத்தைப் படமாக எடுத்து விட்டார். மணிமகுடம் ஒன்றைத்தான் அவ்வப்போது நடித்து வந்தார்.அதையும் விஜயகுமாரி ரோலில் ஜெயலலிதா நடிக்க படமாக்கினார்.அதில் இலட்சியத் தம்பதிகளுக்கிடையே சற்று பிரிவு ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பின. படம் ஓடவே இல்லை.ஏற்கெனவே எம்.ஜி.ஆர் நடித்த புதுமைப் பித்தன் கதையும் இதுவும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.இரண்டுமே கலைஞர் கதை வசனம். முத்து மண்டபம் படத்தில்தான் சந்திரகாந்தா வில்லியாக நடித்துப் பேர் வாங்கினார். அப்புறம், அவர் தெய்வத் திருமகள்,(தேவர், தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பில் எடுத்த முதல்ப்படம்) அம்மா எங்கே, இது சத்தியம் என்று சில படங்களில் கதாநாயகியாக நடித்தார்.நல்ல நடிகைதான்.அப்புறம் 67-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், சிறு சேமிப்பு திட்ட துணைத்தலைவராக எம்.ஜி.ஆரை அண்ணா நியமித்தார்.கிட்டத்தட்ட ஒரு கேபினட் அந்தஸ்துள்ள பதவி.அப்போது சிறு சேமிப்பை ஊக்குவிக்க ஊர் ஊராக சந்திரகாந்தா நாட்டிய நாடகங்கள், (சிவகாமியின் சபதம்?) எம்.ஜி.ஆர் தலைமையில் நடந்தது.அப்புறம் அவர் தன் சகோதரர் ‘கரகாட்டக்காரன் புகழ் சண்முகசுந்தரத்துடன் நாடகக் குழு  ஒன்றை அமைத்து ‘மணியனின்இலவு காத்த கிளி கதையை நாடகமாக நடித்தார்.கவுண்ட மணி படங்களுக்கு காமெடி ட்ராக் எழுதும் ஏ.வீரப்பன் நாடகக்கதை வசனம் எழுதியிருந்தார்.அதையே மணியன் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்என்று பாலசந்தர் திரைக்கதை வசனத்தில் படமாக எடுத்து வெற்றி கண்டது. வீரப்பன் ட்ரீட்மெண்ட் என்பதாலோ என்னவோ பாலசந்தர், சினிமாவில் வீரப்பனுக்கு ஒரு முக்கியமான ரோல் (சமையல்காரன்) கொடுத்தார்.     வீரப்பன் ஒரு அருமையான படைப்பாளி.கடவுளைக்கண்டேன், போலீஸ்காரன்மகள் படங்களில் சந்திரபாபு-நாகேஷ் இரட்டைக் காமெடி ரொம்பபிரபலம்.அதற்குப் பின் ‘பணத்தோட்டம், படகோட்டி கலங்கரை விளக்கம் படங்களில் நாகேஷ் –வீரப்பன், ,காமெடி பிரபலம்.சில நல்ல படங்களுக்கு கதையும் எழுதுவார்.
அப்பொழுதெல்லாம், சினிமாவில் நடிப்பவர்கள் நாடகக் கம்பெனியும் வைத்திருப்பார்கள்.உண்மையில் நாடகத்திலிருந்து வந்ததுதான் தனித்த அடையாளமுள்ள தமிழ் சினிமா உலகம். திராவிட இயக்கங்களின் பெரிய பங்களிப்பைத் தவிர்த்து,டி.கே.எஸ் சகோதரர்களின் சமூக நாடகங்கள் ஒரு பெரிய திருப்புமுனை.அதற்கு முன் பிரபலமாயிருந்த நாடகங்கள் பெரும்பாலும் சரித்திர சம்பவங்களையே கருவாகக் கொண்டிருந்தவை. டிகே.எஸ்.கூட அரு.ராமனாதன் எழுதிய ‘ராஜராஜ சோழன் நாடகத்தை நடித்தார்கள். எனக்குத் தெரிந்து நாடகத்திற்கு சவுன்ட் ட்ராக் வெளிவந்து இசைத்தட்டுகள் நன்கு விற்றது இதற்கு மட்டும்தான் என்று நினைவு.அந்தக் காலத்தில் விடியற்காலை ஐந்து மணிக்கு,தென் கிழக்கு ஆசிய நேயர்களுக்காகடில்லியிலிருந்து ஒலிபரப்பப்படும் ஒரே தமிழ் நிகழ்ச்சியில் அவ்வப்போது இந்த நாடகத்தைப் போடுவார்கள்.எப்போதாவது ஒரே ஒரு தமிழ் சினிமாப்பாட்டு போடுவார்கள். ‘கொய்ன்ற இரைச்சலுக்கு(அதுதான் அப்பாவுக்கு சுப்ரபாதம்) நடுவே அதைக் கேட்க நாங்களும் விழித்துக் கொண்டே படுக்கையில் படுத்திருப்போம். ஐந்தரை மணிக்கு அவர், போத்தி ஓட்டல் திறந்ததும்,முறுகலான ரவாதோசை திங்கப் புறப்பட்ட பின் நாங்கள் கேட்டுக் கொண்டிருப்போம்.பெரும்பாலும் சீன எதிர்ப்புப் பிரச்சாரங்களும் அதையொட்டிய நாடகங்களும் போடுவார்கள். ராஜ ராஜ சோழன் நாடகம், சிவாஜி நடிக்க பிரம்மாண்டமான செட்டுகளுடன் ஏ.பி.நாகராஜன் இயக்க தமிழின் முதல் சினிமாஸ்கோப் படமாக வந்தது.உமாபதியின் பணத்தைப் பூராவும் விழுங்கிக் கொண்டு படம் ஊத்திக்கொண்டது.படமும் நாடகம் போலவே இருந்ததுதான் காரணம்.டி.கே.எஸ் கம்பெனியிலிருந்து என்.எஸ்.கே பிரிந்து, தனியாய் கம்பெனி நடத்தினார். எஸ்.வி.சகஸ்ரநாமம், கே.ஆர் ராமசாமி,ஆகியோர் சிவாஜியுடன்  அவரிடமிருந்து பிரிந்து தனியே கம்பெனி ஆரம்பித்து நடத்தினார்கள். அவருக்காக அண்ணா எழுதிய ஓர் இரவு,வேலைக்காரி ஆகியவை படமாகும் போது பெரு வெற்றி பெற்றன. நாடகம் திரைக்கதையாகும் போதுதான் இயக்குநரின் சாமர்த்தியம் தெரியும்.ப.நீலகண்டனும் ஏ.எஸ்.ஏ.சாமியும் முறையே இந்த இரு படங்களையும் வெற்றிப் படமாக்கினார்கள்.ஆனால் இதே நீலகண்டன், தனது சொந்தத் தயாரிப்பாக எம்.ஜி.ஆரின் (சுமைதாங்கியா, அட்வகேட் அமரனா நினைவில்லை) நாடகத்தைப் படமாக்கினார். படம்,நல்லவன் வாழ்வான்,கதை  அண்ணா. படம் படுதோல்வி அடைந்தது.அதே போல் அண்ணாவின் காதல் ஜோதி நாடகமும் படமாகும்போது தோல்வியே கண்டது.இத்தனைக்கும் ஜெய்சங்கர் ரவிச்சந்திரன்,காஞ்சனா என்று நடிகர் பட்டாளம் நடித்தும்,பீம்சிங்கின் உதவியாளர்கள் திருமலை மகாலிங்கம் இயக்கியும்,வெற்றி பெறமுடியவில்லை.
     கே ஆர் ராமசாமியிடம் இருந்து பிரிந்து வசனகர்த்தா டி.கே கிருஷ்ண சாமி சக்தி நாடக சபா ஆரம்பித்தார்.சிவாஜியும் அதில் உண்டு. அதனாலேயே  ‘வீரபாண்டியகட்டபொம்மன்நாடகத்தை சிவாஜி கம்பெனிக்கு எழுதினார், அவர்.படத்திற்கும் அவர்தான் கதை வசனம்.அப்புறம் அவர், எம்.ஜி.ஆரின் பெரிய இடத்துப்பெண் படத்திற்கு கதை வசனம் எழுதினார்.அதிலிருந்து பணக்காரக்குடும்பம், படகோட்டி, எ.வீ பிள்ளை,என்று நிறைய எழுதினார். கர்ணன் படத்திற்கு வசனம் மட்டும் எழுதினார். எம்.ஜி.ஆரின் பாசம் படத்திற்கு கதை வசனமெழுதிய துறையூர் கே. மூர்த்தி, ஆர்.எஸ்.மனோகர் நாடகமான இலங்கேஸ்வரனுக்கு கதை வசனம் எழுதியவர்.காத்தவராயன் படத்திற்கும் பின்னாளில் ராமண்ணாவின் சக்தி லீலை படத்திற்கும் வசனம் எழுதினார்.மனோகரின் சில நாடகங்களுக்கு மதுரை திருமாறன்கதை வசனம் எழுதினார்.அவருக்கும் ரோஷக்காரி படம் எடுக்கும் வரை, தனிப்பிறவி, சூதாட்டம், திருடி,வாயாடி, என்று கிரகம் நன்றாக இருந்தது. பெரிய பெரிய நடிகர்கள், நாடகத் தொடர்பை அறுத்துக் கொண்டு சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் தங்கள் நாடக மன்றத்தினரை தங்களுடன் சினிமாவிலும் நடிக்க வைத்துக் காப்பாற்றி வந்த கதைகளுண்டு. எம்.ஜி.ஆர் தன் நாடகங்களுக்கு இசை அமைத்த என்.எஸ்.பாலகிருஷ்ணனின் இசையை நாடோடிமன்னனில் பயன் படுத்திக் கொண்டார்.முத்துக் கூத்தன்(செந்தமிழே வணக்கம்...) இலக்குமணதாஸ்(உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலாஇன்பம்...)ஆகிய பாடலாசிரியர்களை,நாடகத்தோடு விடாமல் படத்திலும் எழுத வைத்தார். சிவாஜியும் செந்தாமரை,எம்.ஆர் சந்தானம், போன்றவர்களைத் தன்னுடனேயே வைத்திருந்தார்.
     80கள் வரை கூட மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.ஏ.அசோகன், மனோரமா போன்றோர் நாடகக் குழுக்கள் ஆரம்பித்து நடத்தி வந்தார்கள்.சிவாஜியும் தங்கப்பதக்கம்,வியட்நாம்வீடு எல்லாம் நடத்தினார் ஆனால் சென்னையை விட்டு மற்ற ஊர்களில் நடந்ததாகத் தெரியவில்லை. இரண்டுமே படங்களாக உருப்பெற்று பிரம்மாண்ட வெற்றி பெற்றன.மேஜர் சுந்தரராஜன் நாடகக் குழுவின் ஞான ஒளி, கல்தூண், ஆகியன சினிமாவாகவும் வந்தன.இரண்டிலுமே.மேஜரின் ரோலை சிவாஜி செய்தார்.ஞான ஒளி வெற்றி பெற்றது.வியட்நாம் வீடு சுந்தரம், கெட்டிக்காரக் கலைஞன்.அவருக்குள் ஒரு இயக்குநன் எப்போதுமே இருந்தான்.கௌரவம் படம்தான் அவரது முதல் இயக்கத்தில் வந்ததென்றாலும்.நம்ம வீட்டு தெய்வம்படம் அவர்தான் செய்ததாகச் சொல்லுவார்கள்.ஆனால் படத்தின் அதிகாரபூர்வ இயக்குநர், தயாரிப்பாளரான ஜி.என்.வேலுமணி. வியட்நாம் வீடு, ஞானஒளி சினிமாக்களின் வெற்றிக்கு சுந்தரமும் அவரது திரைக்கதையும் ஒரு காரணம்.
     தமிழின் சிறந்த இயக்குநர்கள் வரிசையில் ஸ்ரீதருக்கும் பாலசந்தருக்கும் முன்னணி இடங்கள் உண்டு.ஸ்ரீதர் டி.கே.எஸ் கம்பெனியின் ரத்த பாசம் நாடக வெற்றிக்குப் பின்னரே அவரது கனவான சினிமாவுக்குள் வர முடிந்தது. பாலசந்தரும் நாடகங்களின் மூலமாகவே சினிமாவைப் பிடித்தார்.அவரும் சென்னை சுற்றுப்புறங்களைத் தவிர்த்து வெளியூர்களில்,பாமர ரசிகர்கள் மத்தியில் தன்  நாடகங்களை நடத்தினாரா தெரியவில்லை.நாகேஷ் அவருக்குப் பெரிய சொத்து, நாகேஷ். அதற்கு முன்பே, சென்னை வானொலியின் சுகி.சுப்பிரமணியன் அவர்களின் மாஸ்டர் பீஸ் படைப்புக்களான ’’துபாஷ் வீடு, காப்புக்கட்டிச்சத்திரம்போன்ற ’ஹாஸ்ய நாடகங்களில் நாகேஷ் (குரலால்) பிரமாதமாக நடிப்பார். karpagamkakkமத்தியானம் ஒரு மணி வாக்கில் ஒலிபரப்பாகும் இந்த ரேடியோ நாடகங்கள் நேயர்கள் மத்தியில் பிரபலம்.பாலசந்தர் தன் நாடகங்கள் தவிர, ஜோசப் ஆனந்தன் நாடகமொன்றை (‘கலெகடர் மாலதி)என்று நினைவு.இருகோடுகள்என்று எடுத்து வெற்றி கண்டார்.அப்புறம் அவரது கதைகள் நாடக உலகிலிருந்து பிரிந்து விட்டது.
     என்.எஸ்கே யிடமிருந்து பிரிந்தவர்களில் சேவா ஸ்டேஜ் எஸ்.வி சஹஸ்ர நாமம் ஒருவர். அவர் கம்பெனியின் தயாரிப்புகள், தேவிகா, முத்துராமன், அற்புதமான கலைஞன் வி.கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள். அவருக்கு பிரபல நாவலாசிரியர் தி.ஜானகிராமன்,வடிவேலு வாத்தியார், நாலுவேலி நிலம் போன்ற நாடகங்களை எழுதிக் கொடுத்தார்.நாலு வேலி நிலம் சேவா ஸ்கிரீன் என்ற பேனர் பெயரில் படமாகி வந்தது ஓடவில்லை. அவரது ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்.என்ற சினிமா .(ஜானகிராமன்எழுதியது) ஓடவில்லை.ஆனால் ரொம்ப காலத்துக்குப் பின்,பாஸுசட்டர்ஜி ‘சிட் சோர்என்ற பெயரில் அதையே இந்தியில் தயாரிக்க அங்கே பிரமாதமாய் பிய்த்துக் கொண்டு போயிற்று.சஹஸ்ரநாமத்தின் ‘தேரோட்டிமகன்ஒரு கவிதை நாடகம். அதையும் நாடக ரசிகர்கள் நன்றாகவே ரசித்தார்கள்.
     எம். ஆர். ராதாவின் நாடகங்கள், தமிழின் உண்மையான கலகக்காரன் அவர்தான் என்று நிரூபித்தவை.ரத்தக்கண்ணீர் சினிமாவாகவும் சக்கை போடு போட்டது.திருவாரூர் தங்கராசு கதை-வசனம். அவர் பின்னர் எழுதிய “அண்ணி’ படம் சுமாராக ஓடியது.அதுவே பின்னால் தங்க துரைஎன்ற பெயரில் மாஸ்டர் சேகர்,எஸ்.எஸ்.ஆர், சௌகார் நடிக்க வந்தது.ஓடவில்லை.
     தேங்காய் சீனிவாசன் ஒரு ட்ரூப் வைத்து நடத்தி நாடகங்கள் போட்டார்.அவை படமான போது, உள்ள முதலும் இழந்ததுதான் மிச்சம். கிரேசி மோகன்,எஸ்வி சேகர் ஆகியோரைக் குறிப்பிடாமல் விடுவது பெரிய தவறு. இந்த வகையில் சோ மிக முக்கியமானவர். அவரது நாடகங்கள் அரசியல்wed நெடியுடனானவை. ஆனால் அவை எதிர்பார்த்த விளைவை உண்டாக்கினவா தெரியவில்லை.அவர் நாடகங்களில் ‘காமன் ஆடியன்ஸுக்கு, ’மெசேஜ் இல்லை. அது அவர் தவறா தெரியவில்லை.அவர் அவர்களைக் கணக்கெடுக்கவே இல்லை என்பதிலும் உண்மையில்லாமல் இல்லை .இங்கே சோவுக்கு முக்கியமான எதிடையாக நாம் ‘கோமல் சுவாமிநாதனை வைக்க வேண்டும். அவரது தண்ணீர் தண்ணீர் ஒன்றே போதும்.
சோவின் நாடகங்கள் படமான போது பெரிய வெற்றியைப் பெறவில்லை. ’’’’யாருக்கும் வெட்கமில்லை படத்தின் மூலம் அவர் ஜெயலலிதாவுடனும் அவரது ‘மூளை பலத்துடனும்நெருக்கமானது ஒரு முக்கிய நிகழ்வு. (அதன் நீட்சியாகவே இன்றைய தமிழ்நாட்டு அரசியலைப் பார்க்க முடியும்.) அதற்குப் பின்னர்தான், அல்லது அதனால்த்தான் துக்ளக் இதழில் “ஜெயலலிதாஎன்ற பெயரில் தொடர் கட்டுரைகள் வந்தன. சும்மாதான் ஜெயலலிதா பெயர் போட்டிருக்கிறோம், இதை எழுதுவது யார் என்று யூகியுங்கள் வாசகர்களே, என்று பரிசில்லாத போட்டியும் அறிவித்தார் சோ’. மூன்று நான்கு இதழ்கள் வந்ததுமே, அவர் ‘எரிக் செகால்அல்லது எரிக்கா யங் போன்ற ஒரு ஆங்கிலப் படைப்பாளி பற்றி எழுதியிருந்ததைப் படித்ததும் சொன்னேன், உண்மையிலேயே இதை எழுதுவது ‘ ஜெய லலிதாதான் என்று. ஏனெனில் அவர் ஏதோ சினிமா பத்திரிக்கையில் அவர்களைப் பற்றி ஒரு பேட்டி தந்திருந்தார். ஆனால் நண்பர்கள்,இவரு எல்லாந் தெரிஞ்ச ஏகாம்பரம், போடா..”என்று கிண்டலடித்தார்கள். சாக்ரட்டீஸ்களுக்கு எப்போதுமே சோதனைதான் என்று சொல்லித் தேற்றிக் கொண்டேன்.சாக்ரட்டீஸ் இல்லடா, ஆர்க்கி மிடீஸ்...ஓடு...நாலு ரத வீதிக்கும்...என்றார்கள்.
     இந்த நினைவலைகள் முன் வைக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்.இன்றைய சினிமா நாயகர்கள் அல்லது நாயகிகள் யாராவது, ரியாலிட்டி ஷோக்கள் தவிர்த்து ஒரு நாடகக் குழு போல் ஏதேனும் கூட்டு முயற்சியினை ஆரம்பிப்பார்களா...?


    

    




Visitors