Thursday, August 9, 2012

திரு. செல்வராஜ் ஜெகதீசன் கவிதை நூலுக்கான முன்னுரை


நான்காவது சிங்கம்....

கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதுவதென்பதில் விக்ரமாதித்ய நம்பிதான் என்னை ஈடுபடுத்தினார் என்று சொல்ல வேண்டும்.கவிதைகள் பற்றிநல்லா இருக்கு, நல்லா இல்லை என்று ஒற்றை வரி அபிப்ராயமே சொல்லி வந்த என்னை,மேட்டுப்பளையம் ‘நிஷா எழுதிய  “முகங்கள் கவனம்என்ற தொகுப்பிற்கு முன்னுரை எழுதுமாறு என்னிடம் சொன்னார்.நான் முயற்சிப்பதாய்ச் சொன்னேன்.கவிதைகளைப் படித்த போது அவை நன்றாகவே இருந்தன.நிஷா நல்ல வாசகர்.நிறைய நூலகளை வாசிப்பார். நாங்கள் இருவரும் நிறைய புத்தகங்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறோம். முன்னுரை எழுதுவதில், பெரும்பாலானவர்களைப் போல்ப் பெரிதும் நல்ல விதமாகவும், சிறு சிறு குறைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை மறு பரிசீலனை செய்யலாம், அல்லது தவிர்த்திருக்கலாம் என்று சொல்லும் வழக்கமான முறையையே தேர்ந்தெடுத்தேன்.
     தமிழின் சில முக்கியமான ஆளுமைகள் எழுதியுள்ள முன்னுரைகளில், பிரஸ்தாபக் கவிஞரின் காலத்திய மூன்று பேருடன்.... சம்பந்தப்பட்ட கவிதைகளையும் ஒரு ஒப்பு நோக்கில் பார்த்து இவரை விட இவர் கவிதைகள் நன்றாக இருக்கின்றன என்று எழுதியிருக்கிறார்கள்.அத்தோடு அந்தக்காலத்திய கவிதைகளைப் பற்றியும் எழுத அதை ஒரு களமாகப் பயன் படுத்தியிருக்கிறார்கள். இதன் சாதக பாதகங்கள் பற்றி நான் சொல்லப் போவதில்லை.எனக்கு அது உவப்பானதாக இருந்ததில்லை.
     மரபுக் கவிதைகளைப் பொறுத்து அவற்றின் யாப்பமைதியை அதன் ஒரு கூறாக எடுத்துக் கொண்டு அதை வைத்தே அதனைப் பற்றிய கருத்துக்களைக் கூற முடியும். நவீன கவிதைகளைப் பொறுத்து  அந்தச் சாத்தியமும் கிடையாது.இதன் பன்முகத்தன்மையோடு கூடிய உள்ளடக்கம் வாசிப்பவனுக்கு ஒரு பெரிய சவாலை முன் வைக்கின்றன.
     மன்னர்கள் காலத்தில், ஒரு தனி மனிதனின் வாழ்வு என்பதும் மன்னனின் வாழ்வாகவே இருந்தது
காமத்துப்பாலில் ஒரு குறள் வருகிறது.

“வினை கலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து
மாலை அயர்கம் விருந்து.”  
ராசா சீக்கிரமாச் செயிக்கட்டும், நீயும் சீக்கிரமா வா, நாம சந்தோஷமா வீட்டில ‘கூடுவோம்....என்று ‘தலைவிகூறுகிறாள். இன்றையக் கால மனிதனின் வாழ்வும் அரசியலும் பொது, சமூக நிகழ்வுகளிலிருந்து மிகவும் தனித்து இருக்கிறது. ஆனாலும் அதன்  ‘அரசைவிட்டு அவனால் வெகுவாகவும் விலகி நிற்க முடியவில்லை.முடியாது
     இன்றைய நவீன (இந்திய) மனிதனுக்கு, உலகின் எந்த மூலையில் நடக்கும் எந்த நிகழ்வும் நேரடியாகவோ மறைமுகமாக்வோ தங்கள் பாதிப்பைச் செலுத்துகின்றன. சத்யஜித்ரேயின் “ஆஷானி சங்கேத்” (தூரத்து இடி) சொல்லும் சங்கேதமும் இதுதான். எங்கேயோ நடக்கும் போர் ஒரு வங்காளக் கிராமத்தை எப்படியெல்லாம் பாதிக்கிறது.என்பதுதான் அதன் கதை. இன்றைய மனிதனை உலக அரசியலோடு, பொருளாதாரச்சிக்கலோடு அவனறியறியாத ஒரு சங்கிலிக்கட்டு பிணைத்தே இருக்கிறது.    ஆனாலும் அவனளவில் அவன் ஒரு சின்ன ‘இருப்புக்குள்ளேயே இருக்கிறான்.அதனாலேயே அவனது கவிதை மொழி சிக்கலானதாகவும் மைய்யமற்றும் இருக்கிறது.
     செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள் சிக்கலானதாக இல்லை. ஆனால் நவீன மனிதனுக்குள்ள எல்லாச் சிக்கல்களும் அதில்வெளிப்படுகின்றன.
“எல்லாமே இப்படி

தவறுதலாய் நான் அழுத்திய
தளத்தின் எண் தனக்கானது என்று
புன்சிரிப்போடு ஒருவருடன்
போக நேர்ந்த லிஃப்ட் பயணம் போல
தானாய் இப்படி எல்லாமே
தவறுகளின்றி நேருமானால்........
சந்தோஷமாக இருக்குமா, கஷ்டமாக இருக்குமா,என்ன விதமாக இருக்கும் என்று தான் சொல்லாமல் அதை வாசகனின் அபிப்ராயத்திற்கு விட்டு விடுகிறார்.கவிதை அங்கேதான் சிறக்கிறது. (இதில் என்ன இருக்கிறது ? என்று கேட்பாரும் இருக்கக் கூடும்)
     ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில், லிஃப்ட்டில், ஆண்கள் எங்கள் ஐவருடன், ஒரு பெண்ணும் இருந்தார்.நான்கு பேரிடமிருந்து ஆல்கஹால் வாடை நாசியைத் துளைத்துக் கொண்டிருந்தது.அவர்கள் நான்கு பேரும் மறுபடி பாருக்கு மேஏஏஏல் மாடிக்குப் போகிறார்கள்.நான் மூன்றாவது மாடியில், அந்தப் பெண்ண்ணுடன் வெளிப்போந்தேன். அவள் நான்காவது தளத்திற்குப் போக வேண்டும் போலிருக்கிறது.வாசனை பொறுக்காமல்த்தான் இறங்கி விட்டீர்களா என்றேன். “ இல்லையே என் கணவரும் அதில்த்தானே போகிறார், எல்லோரும் அவரது நண்பர்கள்தான் என்றார். எனக்கு இந்தக் கவிதை அந்த அனுபவத்தை நினைவு படுத்தியது.
     என்ன சொல்ல
இனிமேல் பார்க்கவே கூடாதென்று நினைத்திருந்த
இடுங்கிச்சிரிக்கும் அந்தக் கண்களை
இனம் மொழி தேசம் கடந்து
இன்னொரு இடத்தில் காணச் செய்யும்
இந்த இயற்கையை என்ன சொல்ல?
எனக்கு இந்தக் கவிதையில் வரும் அந்தக்கண்கள்யாருடையவை என்று கூறாதது சிறப்பாகப் படுகிறது. அது ஆணாகவும் இருக்கலாமில்லையா என்று எண்ணும் போது கவிதையின் ஆழம் எனக்கு வேறு படுகிறது.




பொதுவாகவே, கவிதையைத் தானே வாசித்து அனுபவிப்பது என்பது வேறு’. ஒருவர் விளக்கி அனுபவிப்பது என்பது வேறு.அதனால் ஜெகதீசனின் கவிதைகளை நான் வாசிக்கும் போது அவை எனக்கு ஒருபேரனுபவத்தைத் தந்தது
கோலாகலம்
சுற்றி விடப்பட்ட தட்டு
சுழன்று கொண்டிருந்த்து
ஒவ்வோர் முறையும்
ஒரோர் மாதிரி

குழந்தைக் கண்களின்
கோலாகலமோ
ஒவ்வொரு முறைக்கும்
ஒரே மாதிரி.
     இது,தொகுப்பின்  சிறந்த கவிதைகளில் ஒன்று.ஒரு தட்டு சுழன்று விழும் நிகழ் தகவு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆனால் கோலாகலத்தின் ஜாடை எப்போதும் எங்கேயும் யாரிடமும் ஒன்றுதான்.மாறாக துயரின் ஜாடைகள் வெவ்வேறு விதமாக இருக்கும்.
“இன்னொரு சந்தர்ப்பம்“ என்றொரு கவிதை எத்தனை முறை நமக்கு வாழ்வதற்குச் சந்தர்ப்பம் தந்தாலும் நாம் அதை முற்றிலும் சரியாக வாழ்ந்து விட முடியாது. அல்லது ஒன்றில்  தவறவிட்ட கொண்டாட்டங்களை இன்னொன்றில் கொண்டாடியோ, அபத்தங்களை திருத்தியோ வாழ்ந்து விடமுடியாது. இப்படி நிறைய யோசிக்க வைக்கிற கவிதை இது.
****   *****  ****
பால்க் கிண்ணத்தின் விளிம்பில்
ஓர் எறும்பு
பால் குடிக்குமோ
உயிர் முடிக்குமோ
இது நாற்பது வருடமாக என் நோட்டைக் காத்துக் கொண்டிருக்கும் என்னுடைய ஒரு கவிதை.. இதை வாசித்தது வண்ணதாசனும் கணபதியண்ணனும் மட்டுமாகத்தான் இருக்க முடியும். ‘பால் குடிக்குமோஎன்கிற வரிக்குப் பதில்பசி முடிக்குமோஎன்று எழுதவே எனக்குச் சம்மதம். அப்படி எழுதினால் உயிர் முடிக்குமோ, வுடன் அது ஒத்துப் போக மறுக்கிறது. அல்லது பால்க்கிண்ணத்தில் வருகிறபால்’  முட்டுகிறது. கூறியது கூறல் என்பதல்ல தடங்கல். வேண்டுமானால் அது ரத்தத்தில் ஊறிப் போய் இருக்கலாம்.”தளை தட்டுதல்போல ஏதோ தட்டுகிறது. பசி வெறுக்குமோ உயிர் துறக்குமோ…”என்றும் எழுதிப் பார்த்தேன்.அது எறும்பின் பாஷையாயில்லை.    
     மொத்தத்திலும் இதில் கவிதாம்சம் குறைவு என்று பால குமாரனோ யாரோ சொன்ன நினைவு.. அதனாலும் பிரசுரிக்க மனமில்லை.இதே போல் குரலகள்என்றொரு கவிதை- நாடக மேடையில், பார்வையாளருக்குத் தெரியாமல் ஓரமாக ஒளிந்திருந்து வசனத்தை மறக்கிற பாத்திரங்களுக்கு அதை ‘எடுத்துக் கொடுக்கிற‘ப்ராம்ப்ட்டர்’ (PROMPTER)பற்றிய கவிதையொன்று. அதுவும் சுத்த ‘உரைநடையாகஇருக்கிறது என்று ராஜுவோ பாலகுமாரனோ சொன்னார்கள்.அப்போது எங்களுக்கிடையே கடித/ கவிதைப் பரிமாற்றங்கள் நடக்கும்...அதனால் அது எங்குமே பிரசுரமாகவில்லை. இவற்றையெல்லாம் ஏன் சொல்ல வருகிறேனென்றால். ஒரு தொகுப்பு என்று வருகிற போது சில, கவிதைகள் போல் உள்ள கவிதையாய் இல்லாதவற்றை தவிர்க்க வேண்டும்.
 இந்தத் தொகுப்பில்  காதல் விளையாட்டு என்றொரு கவிதை.அது கவிதையாக மாற மறுக்கும் ஒரு கூற்று. அதை நிர்த்தாட்சண்யமாகத் தவிர்த்திருக்கலாம். சூடாப்பூபோன்ற கவிதைகள் நிறைய எழுதப் பட்டாயிற்று.அதே போல் “கவி சாம்ராட்”.
“எவ்வளவு தூரத்தையும்”,இழைபிரிதல்ஆகிய அற்புதமான் கவிதைகளை மறு படி மறுபடி படிக்கத் தோன்றுகிறது. அவை உங்களுக்கே அதிகம் பிடித்த கவிதையாயிருக்கும். அப்படிக் கவிதைகளைத்தான் எழுத வேண்டும்.
முகம் திரும்பா பிரிதல்கள்
என்றேனும் நிகழும்
நீ திரும்பும் கணமென்னும்
எதிர்பார்ப்பை எப்போதும்
பொய்யாக்கிப் போகும்
உன் முகம் திரும்பா
பிரிதலகள்’ 
ஐம்பது வருடமாக நான் அனுபவிக்கும் துயர். இந்தத் துயர சுருதியின்( Melancholic mood) ரீங்காரத்தில்த்தான் என் ஆதிக்கவிதைகள் தங்கள் ராக விந்நியாசத்தைக் கண்டன. இது பொதுமைப்படும் போதுதான் அற்புதமான கவிதைகள் உருவாகின்றன என்கிறார்கள்.வண்ணதாசன் “உங்கள் முந்திய ஒரு தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல உங்கள்  அயலக வாழ்வின் சோகங்கள் உங்களுக்கு ஒரு கவி மனத்தை உண்டாக்கியிருக்கிறது. நீங்கள் அருவியாய்க் கொட்டிக்கொண்டிருக்கிறீர்கள், கவிதைகளையும் கவிதை சார்ந்தும்.இது ரொம்ப முக்கியமானது.
  இரு தளப் பார்வைக்குப் புலப்படாத அசோக ஸ்தூபியின்,நான்காவது சிங்கமென உங்கள் முந்திய தொகுப்புகளில் நன்கு தெரியாமல் மறைந்திருந்த நான்காம் கவிச் சிங்கம் இந்தத்  தொகுப்பில் துலாம்பரமாகத் தெரிகிறது. இது உங்கள் தொடர் வாசிப்பு, மற்றும் கவிதா ஈடுபாட்டின் வெற்றி. கவிதைகளின்பால் உங்களது இந்த ஈடுபாடு மிக்க அன்பு,உங்கள் கவிதைப் பயணத்தில் உங்களை எவ்வளவு தூரமும், எவ்வளவு காலமும் அழைத்துச் செல்லும்.இந்தப் பூமிப் பாத்திரத்தில் எந்த அவநம்பிக்கையுமின்றி தினமும் பூக்கிற ஆயிரமாயிரம் பூக்களைப் போல், நீங்கள் தொடர்ந்து கவிதைகள் தருவீர்கள். என் உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.
அன்புடன்                                                  இடைகால்    
கலாப்ரியா                                               








Tuesday, August 7, 2012

இரா.சின்னசாமியின் ஏழிலைக் கிழங்கின் மாமிசம்-கவிதை நூலுக்கான முன்னுரை


திறந்தே கிடக்கும் தெரு
 வாழ்க்கை சொற்களாலும் அலகிடப்படும்…” என்பது இன்றையக் கவிதைகள் குறித்த, இன்றையக் கவிதைகளைப் புரிந்து கொள்ள, வாசிக்க, ஒன்ற, அதன் பெருமழைத் தூறலை, தூறலில், வேடிக்கை பார்க்கிறவன் போல் சிறிதே நனையமிக எளிமையான, அடிப்படையான ஒரு மதிப்பீட்டு அரசியல்,“ (இது றியாஸ் குரானாவுக்கான முன்னுரையில் மலேசிய நண்பர் பால முருகன் குறிப்பிடும் வார்த்தைப் பிரயோகம்), என நினைக்கிறேன்.ஆரோக்கியமான தமிழ்க்கவிதை வளச்சியில் .யவனிகா, பூபதி, கடற்கரய், செல்மா, ஸ்ரீசங்கர், இசை, இளங்கோ கிருஷ்ணன்,, நேசமித்ரன்,என்று நம்பிக்கை தரும் படைப்பாளிகள் வந்துள்ள காலமிது .. இன்னும் ஒரு பக்க நீளத்திற்குச் சொல்லக் கூடிய அளவுக்கு கவிஞர்கள் இருக்கிறார்கள், கவிதையும் இருக்கிறது.இவை மகிழ்ச்சி மீதூறச் சொல்லும் வாசகங்கள்.இவர்கள் சார்ந்தும் , இவர்கள் பங்கெடுத்துக் கொண்டும், பல விவாதங்கள் கவிதை குறித்து நடந்தேறி வருகிறது.இதில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்திக் கொள்ளும், காத்திரமான கவிதை உரையாடல்களை முன் வைக்கக் கூடிய முக்கியமான நண்பராகவும் கவிஞராகவும் என்னைக் கவர்ந்து அறிமுகமானவர், திரு சின்னசாமி.,
     இது அவரது முதல் கவிதைத் தொகுப்பு.சின்னசாமியின் கவிதைகளை வாசித்த போது  இது மிகவும் பேசப்படப் போகும்ஒரு தொகுப்பு என்று தோன்றியது.அவரை வாசிக்க, வாசிக்க நான் முதலில்க் குறிப்பிட்ட,  ’வாழ்க்கை சொற்களாலும் அலகிடப்படும்என்ற மதிப்பீட்டு அரசியலை உருவாக்கிக் கொண்டேன். அல்லது படிக்கப் படிக்க அப்படியொன்று உருவானது. அது இயல்பானதுதான். ஒருவருடைய கவிதைகளைப் படிக்கப் படிக்க அவருடைய சகல வாழ்வும் (இதை அனுபவம் என்ற பழைய சொல்லால் குறிப்பிடத் தோன்றவில்லை) மொழி வழியே அவரது படைப்பின் மீது செலுத்தும் ஆளுமையை விட மொழி தனித்து நின்று ஒரு  ஆதிக்கம் செலுத்துகிறது. இதை படைப்பாளியே உணரக்கூட முடியாதபடிக்கு வேடிக்கையான தாக்குதலாகக்  கருத இடம் இருக்கிறது.
இத்தொகுப்பின் முதல்க் கவிதை மந்தைக்குத் தப்பிய மேய்ப்பன்என்றொரு கவிதை.. தலைப்பிலேயே சகலத்தையும் கலைத்துப் போடுகிறது, கவிதை.கொஞ்சம் சாதாரண வரிகளுடன் ஆரம்பித்தாலும்,இறுதி மூன்று வரிகள்,
ஆடு மந்தையைத் தேடிக் கொண்டிருக்கிறது
மேய்ப்பன் ஆட்டினைத் தேடிக் கொண்டிருக்கிறான்
என்ன திணை இது”-   
இதிலும் இந்தக் கடைசீ வரியில்,கவிதை மொழியின் ஆதிக்கத்திற்கு தன்னைப் பலி ஆக்கிக் கொள்கிறது. திணை என்னும் ஒரு செவ்வியல்ச் சொல் எத்தனையோ நூறாண்டுகளைக் கடந்து புதுச் சொல்லாகி ஒரு அற்புதமான கவிதா  மனசைத் தருகிறது. கவிஞரே தன் உரையில் சொல்வது போல.” உணச்சிகளை சலனப்படுத்தும்வரி இது.கவிதை குறித்த கவிதைகள் மீது எனக்குப் பொதுவாக ஈடுபாடு கிடையாது.ஆனால் இத்தொகுப்பில் வரும் அதன் பொருட்டுஎன்ற கவிதை….. அதன் அற்புதமான வரிகள், சொற்களால் வித்தியாசமான கவிதையாக உள்ளது.
ஒரு இரவின் காமத்தை பகிர்ந்தளிக்க
மௌனப்படாத நிலையில் அசந்தர்ப்பமாக எழுதப்பட்ட
ஒரு கவிதையை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்”.-
என்று ஒரு கவிதை தன் பொருட்டு வைக்கும்  வாதங்கள் போல் செய்திகளை அடுக்குகிறது.மீன் தொட்டிக்குள் நீந்தும் மீனின் எந்த ஒழுங்குமற்ற நீர்த்தடங்கள் போல வரிகள், வார்த்தைச் சேர்க்கைகள், அபத்த அடுக்குகளாய்த் தோன்றினாலும்கவிதை முடிகிறபோது நம்மைக் கவர்ந்து விடுகிறது. ”ஒரு இரவின் காமத்தை பகிர்ந்தளிக்க
மௌனப்படாத நிலையில் என்கிற வரிகள் மிக அழகானவை.
சின்னசாமியின் ஆதி வாழ்க்கை அலைக்கழிதல்களுடன் நடந்தேறிய  ஒன்றுதான்.அதன் தாக்கங்கள், வலி, வேதனை, கொண்டாட்டம்,(அது கூட ஒரு வேதனைதான்), ஆதங்கம், ஏமாற்றம்,எல்லாம் சில கவிதைகளில் ஆங்காங்கே வெளிப்படுகின்றன.ஆனால் வழக்கமான வலி உணரும் மனிதன்  பாணியில் இல்லாமலிருப்பதுதான் சிறப்பு. மலையும் மலை சார்ந்த இடமுமான உச்சிக்காடுஒன்றில் நிகழும் பல இயற்கையுடனான மனிதனின் போராட்டங்களைக் கண்டு, உருவாகி என்ன செய்யப் போகிறோம் என்றோ என்னவோ தங்கையின் கரு தன் பிண்டத்தைத் தானே செங்குருதி தாரை வார்த்துதானே அழிந்து போகிறது.ஆனாலுமென்ன இன்னொரு கரு, உருவாகமலா இருக்கிறது, வாழ்க்கை நகராமலா இருக்கிறது.
     சொல்லுதலின் முழுமை சொல்லில், சொல்லால் இல்லை.சொல்லின் இந்த ஒளிந்து மறையும் விளையாட்டு எல்லாக் கவிஞனும் அனுபவிப்பதுதான்.சின்னசாமியின் சொல்கவிதையும் இதையே சொல்ல வந்தாலும்..அதை இருப்பின் தவிப்போடு இணைக்கையில் புதிய பரிமாணம் பெற்று விடுகிறது.
     பன்னாட்டு நிறுவனங்கள், அவற்றின் புதிய காலனிய சுரண்டல் குறித்து இன்றைய கவிதைகள் பல் வேறு தளங்களில் சொல்லி வருகின்றன.இத்தொகுப்பின் அந்தரவெளியில் தொல்லுயிர் ஒன்றுகவிதையின், தானே அமைந்து விட்ட, செய்நேர்த்தி அவரது முழு மனக்குமுறலையும் வெளிக் கொணர்வதாக இருக்கிறது.அத்துடன் இது, ”எத்தியோப்பிய, வாழும் எலும்புக்கூடுகளின் சிறிதேயான மூச்சு விடல் என்னும் உலகளாவிய வன்முறையைச் சுட்டுகிறது என்பதோடில்லாமல், இதை பிரபஞ்சம் முழுதும் எள்ளலுடன் வேடிக்கை பார்ப்பதாக நினைக்கச்சொல்லும்,”அந்தர வெளியின் புள்ளியாய் ஒளிரும்(ஒரு) தொல்லுயிரியும்கவிதைக்கு புதிய பரிமாணங்களைச் சேர்க்கிறது.
     இன்றைய கவிதை எந்த மையத்திலும், மையத்திற்கும் தன்னை ஒப்புக் கொடுத்து விட்டு செக்கு மாடு போல் சுற்றி வருவதில்லை.வானில் நிறப்பிரிகையின் விளையாட்டை வில்லாய்க் கற்பிப்பவன் அதன் வியாபாகம் பூமியிலா வெளியிலா என்று உணர்கிறானா தெரியவில்லை.ஆனால் ஒரு கவிதையின் வியாபகம், ‘அதிபர வளையம்’(hyper bole) போல், தன் அர்த்தத் தொடுகோட்டை, அனந்தமான புள்ளியில் தொடுகிறது.அந்த முடிவிலியின் பிராந்தியத்திற்கு, சொற்கள் வழி காட்டவே முடியும். சென்று சேர்பவனுக்கும் புதிய சொற்களே காத்திருக்கும், இன்னும் கதி மோட்சம் தர..அப்படியான ஒரு கவிதையே வானவில்லின் வலி”. ஒரு சிறிய கவிதை, சொல் வெளியெங்கும் வியாபித்து, ஆதாரமான உடலில் முடிகிறது.”உடலைப் பொறுத்து அதன் செயலாற்றும் திறனே அதன் மூளைஎன்னும் அரவிந்தர் இங்கு ஏனோ நினைவுக்கு வருகிறார்.
     ”கற்றாழைக்குள் பதுங்கும் நாகம்கவிதை,
அம்புகளை முறிக்கின்றது வில்
அவளுள்ளிருந்து உதிக்கின்றது லிங்கம்”- போன்ற அபூர்வ வரிகளுடன், லிங்க வடிவம் பற்றிய சரியான புரிதல்களுடன் எழுதப்பட்டிருக்கும் ஒரு கவிதை.
இன்னும் பல கவிதைகள், வாசகனின் பல்துறை ஈடுபாட்டையும் கோரும் வண்ணம், தொன்மம், சரித்திரம்,அரசியல் என விரிவான பல தளங்களில் பயணப் பட்டு, மனிதனின்  சில ஆதாரச் செயல் பாடுகளில்  தன் முடிவைக் கொண்டிருக்கிறது.(அல்லது முடிவின்மையை) ”கடவுளின் மாமிசம்இதற்கொரு நல்ல உதாரணம்.உங்களுடைய கண்டுபிடிப்பில் இன்னும் பல நல்ல உதாரணங்களைக் காட்டக் கூடியவகையில் பல நல்ல கவிதைகளைக் கொண்ட தொகுப்பு இது. திறந்தே கிடக்கும் தெரு இது, சுதந்திரமாக நடை பழகலாம் யாரும்.
தன் கவிதைகள் மூலம் சின்னசாமி அற்புதமான பல மாயப் புள்ளிகளை வெளிகளில் உண்டாக்குகிறார். அவற்றுக்கிடையே சொற்களால் தொடர்பைத் தொடர்பற்றுக் கோலமிழைக்கவும் அவரால் கூடுகிறது.”நிலம்-காதல்-மொழிசார்ந்து அவர் எழுதியிருக்கும் நான்கு கவிதைகளும், ஒரு குறுங்காவிய நேத்தியுடனானவை. அவரின் சொற்கள், வாழ்க்கை தினம் தினம் புதுப்பிக்கும் அர்த்தம் கொண்ட அதே சொற்கள்தான்.இது இறுதி அர்த்தமென்று எந்தச் சொல்லுக்கும் ஒரு அர்த்தத்தை நல்ல கவிதையோ , நல்ல கவிஞனோ சொல்லுவதில்லை.அந்த வகையில் பல நல்ல கவிதைகளைத் தன் முதல்த் தொகுப்பிலேயே தந்திருக்கிறார் சின்னசாமி.அவருக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
அன்புடன்
கலாப்ரியா

Visitors