Monday, May 25, 2009

செந்தமிழே வணக்கம் -2

மதுரை ரயில் நிலையத்தில்,பந்தடி 5 வது தெரு, எம் ஜி ஆர் மன்றத்திலிருந்து சரத் சந்திரன், அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்.நான் கம்பார்ட்மெண்டின் வாசலில் நின்று கொண்டிருந்தேன்.என்னைப் போலவே ஒடிசலாய், இருந்தார்.நம்மைத் தேடிக் கொண்டுதான் அலைகிறார் என்று புரிந்து விட்டது. நான் மெட்ராஸ் போகிற தகவலை அனைத்து மன்றங்களுக்கும் ஏற்கெனெவே எழுதிவிட்டேன்.கையில், ஒரு இலையில் பொதிந்த பூமாலை வைத்திருந்தார், அதுதான் சற்று தயக்கமாய் இருந்தது.மூன்றாம் முறை என்னைப் பார்த்த படியே கடக்கும் போது, ஹலோ மிஸ்டர் சரத் சந்திரன் என்றேன்,ஆமா, நீங்க சோமசுந்தரமா, என்று சொல்லிகொண்டே, கையிலிருந்த மாலையைப் பிரிக்க ஆரம்பித்தார்.இதற்குள் இன்னொரு பெட்டியில் இருந்த கணபதியண்ணன்,என்னருகே வந்திருந்தார். அவர் இந்த வேடிக்கையைப் பார்த்து மௌனமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்.நான் சரத்சந்திரனை மாலையைப் பிரிக்காமல் தடுத்த படி ஸ்டேஷனின் ஒதுக்குப் புறமாகஅழைத்துப் போனேன். மாலையைப் பிரிக்காமலேயே கையில் வாங்கிக் கொண்டேன்.சுமார் அரைக் கிலோ போல் சாக்லெட் பொட்டலம் ஒன்றும் தந்தார்.வாத்தியாரிடம் எங்கள் மன்றத்தைப் பற்றியும் சொல்லுங்கள், எனக்கு இன்னும் பரீட்சை முடியவில்லை, இல்லையென்றால்,உங்களுடனேயே வந்து விடுவேன் என்று உணர்ச்சி பூர்வமாகப் பேசிக் கொண்டிருந்தார்.அவர் பாலிடெக்னிக் படித்துக் கொண்டிருந்தார்.அவரது மன்றத்தின் ரப்பர் ஸ்டாம்ப் அழகாயிருக்கும்.அதே போல் ஒன்றை செய்து தாருங்கள், நான் திரும்புகிற போது வாங்கிக் கொள்கிறேன் என்றேன்.
ரயில் கூவியது, விடை பெற்றுக் கொண்டேன்.கணபதியண்ணன், ச்சே, கெடுத்துட்டியே.... மாலை போட்டதும் நான் கை தட்ட ரெடியாய் இருந்தேன் என்றார்.பெட்டிக்குள்ளும் என்னை, மாலையும், மணமுமாய் பெட்டிக்குள் நுழையும் என்னை, ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.வெட்கம் பிடுங்கித் தின்றது.என் அருகே உட்கார்ந்திருந்தவர் ஒரு அரசு எஞ்சினியர்,ரயில் நெல்லையில் புறப்படும் போதே நான் குமுதத்தில் அப்போது வந்து கொண்டிருந்த, சி.ஏ பாலனின் `தூக்கு மரத்தின் நிழலில் ‘ தொடரை வாசிப்பதைப் பார்த்து, தம்பி இதைப் படிக்கிறீங்களா உங்களுக்கு இது பிடிச்சிருக்கா என்றார். ஆமா, என்று அதைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்தேன். அந்த மரியாதை இப்போது கெட்டு விடுமோ என்று யோசித்தேன்.ஆனாலும் அவர் என்ன இதெல்லாம் என்று கேட்ட போது ஒன்றையும் மறைக்கவில்லை.பிற் காலத்தில் பெரிய அரசியல் வாதியாய் ஆயிருவீங்க போல இருக்கே என்று சிரித்துக் கொண்டார்.கையைக் காமியுங்க, ஆமா, சூரிய ரேகை நல்லா இருக்கே., நிச்சயம் அரசியல்வாதிதான் என்றார்.யோசித்துப் பார்க்கிற போது அவர் சாலமன் பாப்பையா ஜாடையில் இருந்தது போல் நினைவுக்கு வருகிறது.
அவரிடம் `ஸெரோ’ எழுதிய, கைரேகைப் புத்தகம் பற்றிப் பேசிக் கொண்டு வந்தேன்.பதினேழு, பதினெட்டு வயசில், அதைப் படிக்க முயற்சிக்காதவர்கள் யாரும் இருந்திருக்கமாட்டார்கள்.லைப்ரரி போகிற பழக்கம் உள்ளவர்கள்,ஒருவாரமாவது அதை எடுத்து வைத்திராமல் இருக்க மாட்டார்கள்.சென்னை மாம்பலத்தில் இறங்குகிற போது அவசரமும் பரபரப்புமாய் இறங்கியதில் அவரைடம் சொல்லிக் கொள்ளக் கூட இல்லை.அவராகவே, பாத்தீங்களா சொல்லாமலே போறீங்களே, மாலையை வேற விட்டுட்டிங்களே, என்றார்.சுருட்டியவாறே அது, வாடிக்கிடந்தது. எடுக்கவில்லை.சாக்லெட் பொட்டலத்தை எடுத்து கைப்பைக்குள், கடிதங்களுடன் வைத்துக் கொண்டேன்.மாம்பலத்தில் இரண்டு நிமிடம்தான் நிற்கும் சீக்கிரம் இறங்க வேண்டும், என்று சொல்லியிருந்தார்கள்.அவரிடம் ஸாரி சொல்லிக் கொண்டே இறங்கினேன்.
உஸ்மான் ரோடு துவக்கத்தில், ப்ரிவியூ பாரடைஸ், தியேட்டருக்கு எதிரில் இருந்தது, அந்த சத்யா லாட்ஜ். அங்குதான் அவர் தங்கி இருந்தார்.ப்ரிவியூ பாரடைஸ் தியேட்டரை ஒட்டி சினிமா சென்சார் போர்ட் அலுவலகம் இருக்கும்.உஸ்மான் ரோட்டில் நடந்தே, ஹபிபுல்லா ரோடு போய்விட்டோம்.அங்கேதான் ஜேயார் மூவீஸ் அலுவலகம் இருந்தது.அங்கே விட்டு விட்டு, கணபதியண்ணன் சொன்னார்கள், நீ மெடராஸை எப்ப வேணும்ன்னாலும் பாத்துக்கிடலாம், சினிமா ஸ்டுடியோவுக்குள்ள, போகிறதும் வருதும் கஷ்டம், அதனால அதை நல்லா பாரு என்று. அது எவ்வளவு பெரிய உண்மை என்று நான் யோசிக்காத நாளே கிடையாது.அந்த ஆபீஸுக்குள் நுழைந்ததுமே, வேறு எந்தப் படங்களும் இல்லை,பெரிதாக அடுத்தடுத்து எம்.ஜி ஆர் படமும், எம்.ஜி சக்கரபாணி படமும் மாட்டி இருந்தது.சின்னவரும் பெரியவரும் என்று ஆவுடையப்ப அண்ணன் சொன்னார்கள். அவருக்காக காத்திருந்த நேரத்தில். ஜேயார் மூவீஸின், பெரிய முதலாளி ப.கு.சங்கரன் அவரது அறைக்குள்ளிருந்து ஒரு பில்லுடன் வந்தார்.நீ யாருப்பா கைலாஷ் சில்க் செண்டர் ஆளா பில்லுக்கு பணம் எதுவும் கொடுக்கணுமா,என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.இல்லை, நான் ஆவுடைஅப்பனின் தம்பி என்றதும், ஏன் வெளியே உட்கார்ந்திருக்கிறாய்,உள்ளே அவன் ரூமில் போய் இரு என்றார். அந்த பில்லை என்னிடம் கொடுத்து, அதை அந்த மேஜைக்குள் வை என்றார். நான் அதைப் பார்த்தேன் பில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தது.அவர் காட்டிய மேஜைக்குள் வைக்க அதைத் திறந்தேன்.ஐந்தும் பத்துமாக,ஏகப்பட்ட ரூபாய் உள்ளே கிடந்தது.இரண்டு பெரிய ஆல்பம் இருந்தது.வெங்கடாச்சாரி அன் சன்ஸ் என்றோ ப்ரதர்ஸ் என்றோ போடு ஒரு விசிட்டிங் கார்ட் ஒட்டி இருந்தது.பிரித்தேன். எல்லாம் புதிய பூமி ஸ்டில்கள். எல்லாவற்றிற்கும் அதனதன் அடியில் நம்பர் எழுதியிருந்தது.எல்லாம் போஸ்ட் கார்ட் சைஸ் ஸ்டில்கள்.எம்.ஜிஆர் ஜெயலலிதாவின் அழகான படங்கள் இருந்தது.போகும் பொது இதில் பல படங்களைப் பிய்த்துப் போய்விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இல்லாமல் ஆவு அண்ணனின் செல்வாக்கு இருந்தது.அண்ணன் போன அன்றே டிரைவர் மணியிடம் என்னை அறிமுகப் படுத்தி. விட்டார்.மணி, எம் ஜி ஆர் வீட்டில் ட்ரைவராய் இருந்தவர்.ஏனோ என்னையும் அவருக்கு பிடித்துப் போயிற்று.அங்கே அண்ணனைத்தவிர, அழகப்பன் என்று ஒருவரும் ப்ரொடக்‌ஷன் மேனேஜர்.அது தவிர,ஒரு சீனியர் ப்ரொடக்‌ஷன் மேனேஜர்,பெயர் மறந்து விட்டது,அவர் நிறைய கம்பெனிகளுக்கு பணியாற்றி வந்தார். அவர் பதினோரு மணிக்குத் தான் வருவார்.அவருக்கு தனி ஃபோன்.அவர் தான் பீச், மவுண்ட் ரோடு,நேப்பியர் பாலம் போன்ற இடங்களில் ஷூட்டிங் என்றால் எல்லா ஏற்பாடுகளையும் எளிதில் செய்து விடுவார்.அருண் பிரசாத் மூவீஸுக்கும் அவர்தான் ப்ரொடக்‌ஷன் மேனேஜர், நான் போயிருந்த சமயம்,அத்தைக்கு மீசை வச்சு பாருங்கடி., பாட்டுக்கு ஏதோ ஒரு சாலையில் ஜெயலலிதா படப்பிடிப்பிற்கு, இங்கிருந்துஃபோனிலேயே பேசி முடித்தார்.அவர் வந்ததுமே மணி காரை எடுத்துக் கொண்டு தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ஓடலுக்கு கிளம்பிவிடுவார். என்னையும் அழைத்துப் போவார், நானும் அவரும் காஃபியோ, கூல் ட்ரிங்க்ஸோ சாப்பிட்டு விட்டு தவறாமல், சீனியர் ப்ரொடக்‌ஷன் மேனேஜருக்கு தயிர் வடையும், காராபூந்தியும் வாங்கி வருவோம்.அதைச் சாப்பிடும் வரைதான் அவர் இங்கே இருப்பார், அதற்குப் பின் அவர் வேறு சினிமாக் கம்பெனி போய் விடுவார்.
அங்கே போய் இரண்டு நாள் கழித்து, ஒரு மாலையில் நான் மட்டும் முன் அறையில் இருந்தேன், பழம் பெரும் நடிகர் முஸ்தபா வந்தார், அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.`யார் பையன்’, `திருடாதே’ படங்களில் நல்ல வேஷங்களில் நடித்திருப்பார். பெரும்பாலும், இன்ஸ்பெக்டராக நடிப்பார் நன்றாக வெளுத்திருந்த முழுக்கை சட்டையும் வேஷ்டியும் அணிந்திருந்தார்..வந்தவர் சிரித்தபடியே வணக்கம் சொன்னார். எனக்கு தயக்கமாக இருந்தது.அவருடைய வணக்கம் நான் ஏதோ கம்பெனியில் முக்கியமான நபர் போல நினைத்துக் கொண்டாரோ என்றிருந்தது.நான் உள்ளே போய் ஆவு அண்ணணிடம் சொன்னேன்.அவரும் வந்து பேசிக் கொண்டிருந்தார்.என்னை தன் தம்பி என்று அறிமுகப் படுத்தினார்.மீண்டும் ஒரு அதிகப் படியான சிரிப்பும் வணக்கமும் சொன்னார்.நான் அவருடைய திருடாதே நடிப்பைப் பற்றி மனதாரப் பாராட்டிக் கொண்டிருந்தேன்.அவருடைய சிரித்த முகத்தில் கூடுதலாய் ஒரு முறுவல் தோன்றி மறைந்தது. அண்ணன் ஒரு சிகரெட்டை அவரிடம் நீட்டினான்.வாங்கிப் பற்றவைத்துக் கொண்டார், ஆனால் புகைக்கவில்லை, .அண்ணன் அவரைத் தவிர்ப்பதற்காகவோ என்னவோ மறுபடி உள்ளே போய் விட்டார்.திடீரென்று தம்பி தப்பா நினைக்காதீங்க இந்த சிகரெட்டை தூரப்போட்டுரலாமா, உங்க அண்ணாருகிட்ட சொல்லமாட்டிங்களே, என்றார்.நான் புரியாமல் தலையாட்டினேன்.
என்ன செய்யறது தம்பி, நானும் காலையிலிருந்து ஜெமினி, வள்ளி பிலிம்ஸ்ன்னு, கம்பெனி கம்பெனியா அலையறேன், எல்லா கம்பெனியிலும், தாராளமா சிகரெட்டை நீட்டுதாங்களே தவிர சாப்பிட்டியான்னு கேக்க மாட்டேங்கிறாங்க, கணேசண்ணன் கம்பெனிக்குப் போக முடியாது,வீட்ல புள்ளைங்க சாப்பிட்டு ரெண்டு நாளாகுது, என்றார். சொல்லிக் கொண்டே ஹாலில் மாட்டியிருந்த `சின்னவர்’ படத்தைப் பார்த்தார்,மனசுக்குஎன்னவோ போலிருந்ததுஎன் முக பாவமும் அவர் பேச்சுக்கேற்ப சோகமாய் மாறியதை இன்று கூட உணர முடிகிறது.தம்பி நீங்களும் இங்க வேலை பாக்கிறீங்களா என்றார்.இல்லை நான் காலேஜில் படிக்கிறேன் என்றேன்.ரொம்ப நல்லது, என்றார். இதற்குள் உள்ளிருந்து அண்ணன் வந்தார் கையில் சில பத்து ரூபாய்கள் இருந்தது, இந்தாங்க வச்சுக்குங்க,முதலாளி கிட்ட சொல்றேன், படம் முக்காவாசி முடிஞ்சாச்சு,சின்னவர், சத்யா மூவீஸ் ஷூட்டிங்ல தீவிரமா இருக்காரு, அவரைப் பாருங்களேன் என்றார்.பணத்தை வாங்கிக் கொண்டார். கும்பிட்டுக் கொண்டே இறங்கினார்.அவர் போனதும் அண்ணன் சொன்னார்.பாவம், இதுதான் சினிஃபீல்டு பாத்தியா, என்று. படம் வெளிவந்த போது முஸ்தபா அதில் இன்ஸ்பெக்டராக நடித்திருந்தார்.நான் நினைத்துக் கொண்டேன் அண்ணன் உதவியிருக்கலாம் என்று.புகைக்காமல் அவர் கையில் சாம்பல் நீண்டு கொண்டிருந்த சிகரெட்டும் முஸ்தபாவும், அசோகமித்திரனின் புலிக்கலைஞனையும், வண்ணநிலவனின் குணச்சித்திர நடிகர் கதையையும் படிக்கிற போது தவறாமல் நினைவுக்குவரும்.
முதல் சென்னை அனுபவத்தின் இன்னொரு மறக்க முடியாத நபர்,கவிஞர் நெ.மா. முத்துக் கூத்தன்.புதிய பூமியில் அவர் பாட்டு எதையும் எழுதவில்லை.நாகேஷுடன் நகைச் சுவைக் காட்சியில் நடித்திருப்பார். உதவி இயக்குநர் என்று டைட்டிலில் போட்டார்கள். அவர் மீது சின்னவருக்கு திடீர் கரிசனம் எப்படியோ உண்டாகியிருந்தது. .அரசகட்டளை படத்தின் ஆடப்பிறந்தவளே பாடலின் மூலம் அவர் மறுபடி சற்று பிரபலமாகியிருந்தார்.நாடோடிமன்னனில் செந்தமிழே வணக்கம் பாடலையும் அவர்தான் எழுதியிருந்தார்.அது எம் ஜி ஆர் நாடக மன்றத்துக்காக எழுதிய பாடல் என்று சொன்னார்.அவரைப் பார்ப்போமா என்று ஒரு அந்தியில் கடற்கரைக்குப் போகிற வழியில் அண்ணன் சொன்னார்.அவர் வீடு திருவல்லிக் கேணியோ, அருகேயோ இருந்தது. காரை தள்ளி நிறுத்திவிட்டு,ஒரு சந்துக்குள்ளிருந்த அவர் வீட்டுக்குப் போனோம்.முழங்கையில்,ஒரு கட்டி. வலியில் துடித்துக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும்,எங்கேயாவது வெளியில் போனால் நல்லதுதான் என்று உடனே கிளம்பி விட்டார்.மெரினா பீச்சில், புஹாரி ஓட்டலுக்குப் போனோம்,ஏதாவது சாப்பிடுகிறாயா என்று அண்ணன் கேட்டார், என்னிடம்.சரி என்றேன் கூத்தன் தான் ஃபலூடா சாப்பிட்டிருக்கீங்களா என்றார். கேள்விப் பட்டதே இல்லையே,எங்கே சாப்பிட்டிருக்க.சரி என்றேன், எனக்கு சிக்கன் 65 என்று சொல்லுகிறார்களே, எங்க வீட்டுப் பிள்ளையில் எம் ஜி ஆர் சாப்பிடுவாரே அதை கேட்கலாமா என்றிருந்தது.கேட்கவில்ல.
பலூடா சாப்பிட்டுவிட்டு.,கடற்கரையில் சாலை ஓரமாக நடந்தோம்.கூத்தன் ஆள்தான் சிறியவராய் இருந்தார், படு வேகமாக நடந்தார்.வல்லிக் கண்ணனைப் பார்க்கையில் எனக்கு கூத்தன் நினைவு வரும்.நாடோடிமன்னன் பாட்டைப் பற்றி சொன்னேன். அது சின்னவர் நாடகத்துக்காக எழுதுனது, தம்பி,படத்துல இதைவிட அருமையான பாட்டெல்லாம் எழுதி இருக்கேன். பானுமதியம்மா பாடுகிற ஒரு பாடல் படத்தில் வரவே இல்லை.ஷூட்டிங்கெல்லாம் பண்ணினார்கள், என்று அதைப் பாடிக் காண்பித்தார். சாலை என்றெல்லாம் பார்க்காமல் உற்சாகமாகப் பாடிக் கொண்டு வந்தார்.அவர் ஒரு டீ மட்டும் குடித்திருந்தார்.படத்தில் எந்த இடத்தில் இந்தப் பாடல் என்று கேட்டேன்.அரன்மணைக்குள் வந்து விட்ட நாடோடிக்காக, வந்து காத்திருக்கிற இடத்தில், இந்தப் பாடல் வரும் என்றார்.அடுத்த கட்டத்தில், சந்திர பாபுவை பானுமதி வெளுத்து வாங்குவார், `அம்மையார் பூண்ட போர்க்கோலம் அடியேன் பூண்ட அலங்கோலம்’என்று சந்திர பாபு பேசுகிற வசனத்தைச் சொன்னேன்.அவர் உற்சாகமாகி விட்டார்.தம்பி படத்தை நல்லா பாத்திருக்கீங்களே என்றார்எம் ஜி ஆரைப் பற்றி நிறையப் பேசிக் கொண்டு வந்தார்.எல்லாமே எனக்குப் பிடிக்காமலிருந்ததை உணர்ந்தவர் மாதிரி தம்பி சின்னவர் ரசிகருல்லா என்று சிரித்துக் கொண்டார்.பின்னாளில், அவர் தூர்தர்ஷனில் பொம்மலாட்டம் மாதிரி ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வந்தார்.தூர்தர்ஷனுக்குக் கூட கடிதம் எழுதி அவர் விலாசம் கேட்டேன். பதிலே இல்லை.
மணி தினமும் எடிட்டிங்க் நடக்கிற ஏ வி எம் முக்கு கூட்டிக் கொண்டு போய் விட்டு விட்டு வந்து விடுவார்.தேவராஜ் மாஸ்டரிடம் உதவியாளராய் இருந்த கிட்டு தான் எடிட்டிங்க் வேலையைப் பார்ப்பார்.முதல் நாள், `நான் தாண்டி காத்தி பாட்டுக்கு எடிட்டிங்க்’. மூவியோலாவில் ஓடவிட்டு மஞ்சள் பென்சிலால் பாட்டின் தொடர்ச்சிக்கேற்ப, சீனைக் குறித்துக் கொண்டு வெட்டி வெட்டி, ஃபிலிம் சிமெண்டால் ஒட்டுவார்.காலையில் ஆரம்பித்து மாலைக்குள் பாட்டு ஒரு வழியாய் முடிந்தது.அருகே கே.பாலசந்தரின் தாமரை நெஞ்சம் படத்துக்கான கட்டிங்க் நடந்து கொண்டிருந்தது.`அடீப் போடி பைத்தியக்காரி பாட்டுக்கு முந்திய சீன்.வாணிஸ்ரீ,ஊஞ்சல் ஆடி காலை ஒடிக்கிற மாதிரி காட்சி. பாலசந்தர் நகத்தைக் கடித்துக் கொண்டே பார்த்துப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.படம் ரிலீஸ் தேதி அறிவித்து விட்ட டென்ஷன்.ஒரு சாஸ்க்ரீன் பேண்ட் தொள தொளவென்று, முழுகையை மடித்து விட்ட சட்டை.கோல்ட்.இடை இடையே சூட்டை விட்டு ஃப்ளேக் சிகரெட்டாக ஊதிக் கொண்டிருந்தார்.நான் உங்கள் ரசிகன் என்றேன்.தலையை மேலும் கீழுமாக அசைத்தார்.கிருஷ்ணன் பஞ்சுவுக்குப் பின் நீங்கள்தான் மிகச் சிறந்த டைரக்டர் என்றேன்.சிரித்துவிட்டார்.நீங்க உண்மையாகச் சொல்லுகிற மாதிரி இருக்கிறது, நாந்தான் பெரிய டைரக்டரென்று சொல்லாமல், என்னை ரெண்டாவதாகச் சொன்னதைச் சொல்லுகிறேன்,என்றார்.இல்லை உங்கள் படமெல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை,எனக்கு அனுபவி ராஜா அனுபவி ரொம்பப் பிடிக்கும்.என்றேன்.ஏன் நீர்க்குமிழி பிடிக்காதா என்றார்.பிடிக்கும் என்றேன்.தாமரை நெஞ்சம் பாருங்கள் என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார். மறு நாள் பார்த்த போது நேற்று பேசின மாதிரியே காட்டிக் கொள்ளவில்லை.
அன்று மாலையில் ஒரு கால்ஷீட் கொடுத்திருந்தார். சின்னவர்.அது படத்தின் ஒப்பனிங் ஷாட்.காலையிலிருந்தே அலுவலகம் பரபரப்பாய் இருந்தது.படத்தின் டைரக்டர் சாணக்கியாவும் உதவியாளர் ஜெகனாதனும் வந்தார்கள்.நான் என் அண்ணனிடம் சொல்லியிருந்தேன். ஏன் சாணக்கியாவைப் போட்டீர்கள்., அவருக்கு நான் ஆணையிட்டால் படம் சுத்தஃப்ளாப் ஆயிற்றே, என்று. இதெல்லாம் சின்னவர் சொல்லுகிறதுதான். நடக்கும்.சாங்க் பிக்சரைசேஷனில் ஸ்ரீதரை விட்டா சாணக்கியாதான் எக்ஸ்பெர்ட் என்று ஃபீல்டே கொண்டாடுகிறது.ஜெமினியின் புதுபடத்துக்குக் கூட அவர் தான் கமிட் ஆகியிருக்காரு என்று நியூஸ் என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.எஸ் எஸ் தென்னரசு வந்திருந்தார்.அவர் தான் படத்தின் வசனகர்த்தா.சாணக்கியா சீனியர் ப்ரொடக்‌ஷன் மேனேஜரிடம் செட்டைப் பற்றி விசாரித்து விட்டு, வி.சி குகநாதனிடம், காட்சியைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்.அவர் அங்கேதான் தங்கி இருந்தார்.
காலையில் அண்ணனும் நானும் பி.அங்கமுத்து வீட்டுக்குப் போனோம் அவர்தான், படத்தின் ஆர்ட் டைரக்டர்.அவர் வீட்டின் பின்னால் போடப்பட்டிருந்த பெரிய கூரைக்கடியில், ஒரு உலை மாதிரி இருந்தது, அதனருகே அவ்வையார் சிலை செய்து கொண்டிருந்தார்கள். மார்பு அளவுக்கு சிலை வார்க்கப் பட்டு கிடந்தது.அங்கமுத்து அதனருகில் உட்கார்ந்து அறத்தால் ஏதோ நுணுக்கமாக, செய்து கொண்டிருந்தார்.அதுதான் ஏற்கெனவே பீச்சில் சிலை வைத்தாயிற்றெ என்றேன். அது வெறும் மாதிரிதான் , இப்பத்தான் வெண்கலத்தில் செய்கிறோம்.அது முழு அளவில் இருக்கிறதே, இது மார்பளவுதானே இருக்கிறது என்று கேட்டேன்.இரண்டாகச் செய்து இணைக்க வேண்டும், என்றார்.கரி படிந்த அந்த உலோக அவ்வையார், அழகாய் இருந்தார்.இதுக்கு யார் மாடல் என்று கேட்டேன்.வள்ளுவர் சிலைக்கு சிவாஜி மாடலாய் இருந்தார் என்று படித்ததை வைத்துமாடலெல்லாம் கிடையாது, படம்தான். தம்பி படம்ல்லாம் வரைவீங்களா, என்று கேட்டார்.வீட்டுக்குள்ள வாரீங்களா நிறைய படம் பாக்கலாம் என்று சொல்லிவிட்டு அண்ணணைப் பார்த்துச் சிரித்தார்.நேரமாயிட்டு, இன்னிக்கி விஜயாவுல செட்டுக்கு வந்துருங்க, சின்னவர் கால்ஷீட் இருக்கு என்றார், சரி தம்பி செட்டுல பார்ப்போம் என்று சொல்லிவிட்டு உலையில் கொதித்துக் கொண்டிருந்த உலோகத்தின் பக்கம் போனார். எனக்கு ஆசைதான் அதைப் பார்க்க, ஆனால் அன்றுதான் எம்ஜியாருடன் படம் எடுத்துக் கொள்ளவேண்டும்.இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் வாய்க்காது.
மாலை ஷுட்டிங். விஜயா ஸ்டுடியோ வுக்கும் ஒவ்வொரு ஆர்டிஸ்ட் வீட்டுக்கும் இடத்திற்கும் மணி காரில் ஓடிக் கொண்டிருந்தார்.என்னையும் கூடவே அழைத்துக் கொண்டு. ராமபுரம் தோட்டம் போய், திருப்பதி சாமியை அழைத்து வந்தோம்.அவர் அங்கேயேதான் இருப்பாராம். தோட்டத்துக்கு முன்பாக ஒரு சின்னப் பாலம், அது அடைத்தே இருந்தது.பாலத்தின் முன்னால்கொடிக் கம்பிஅத்தில் தி.மு.க கொடி பறந்து கொண்டிருந்தது. எம் ஆர் ராதா சுட்ட பிறகுதான் இந்தக் கெடுபிடியாம் மணி சொன்னார்.வி. என் ஜானகி போர்டிகோ வரை வந்து நடிகை சந்திரகாந்தாவை வழியனுப்பிக் கொண்டிருந்தார்.ஒரு சின்ன பாமரேனியன் அவர் காலைச் சுற்றி வந்தது. நான் ஒரு கும்பிடு போட்டேன, அந்த ம்மா கவனிக்கவில்லை.அற்புதமான ரோஸ்நிறம்.அவர் மணியிடம் விசாரித்தார், என்ன மணி சொல்லி விட்டேனே, இங்க ஆள் வேணுமே, வரப் பிடித்தமில்லையா என்று கேட்டார். இல்லங்கம்மா, இங்க படம் முடிஞ்சதும் வந்திருதேன் என்றார். அவர் ஒன்றும் சொல்லாமல் உள்ளே போய்விட்டார். மணியண்ணன், இப்ப சின்னவர் தூங்கீட்டு இருப்பாரா என்று கேட்டேன், எனக்கும் சின்னவர் பழக்கமாகியிருந்தது.அவர் சத்யாவில கணவன் ஷூட்டிங்க்ல இருக்காரு, அங்கேயிருந்து நேரா நமக்கு வந்துருவாரு, என்றார்.
விஜயா ஸ்டுடியோ, அல்லோல கல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது.ஃப்லோரின் வெளியே ஒரு தோட்டக்காரர் எதையோ செதுக்கிக் கொண்டிருந்தார்,அங்கே வந்த நாகிரெட்டியார், போப்பா, போப்பா, சின்னவர் வாற நேரமாச்சு என்று விரட்டினார்.எனக்குப் பயமாய் இருந்தது.சின்னவர் வருகிற நேரம் பார்த்து,என்னை யாரும் விரட்டீரக் கூடாதே என்று, மணியை விடாமல் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன்.அவரிடம் சொன்னேன் நீங்க சின்னவர்ட்ட சொல்லுவீங்களா அவர் கூட ஒரு படம் எடுக்கணும். யாத்தா, நீங்க கேளுங்க தம்பி.அவர் கூப்பிடமல்லாம் கிட்டவே போகக் கூடாது. என்றார். அநேகமாஅண்ணன் உட்பட எல்லாரும் இதைத்தான் சொன்னார்கள்.அப்புறம் வாசு ஸ்டுடியோ போய் மூன்றெழுத்து ஷூட்டிங்கிலிருந்து, ஷீலாவைக் கூட்டிக் கொண்டு வந்தோம்.எங்கள் காரிலேயே வந்தார்.நான் முன் சீட்டில் இருந்து மெதுவாக திரும்பிப் பார்த்தேன்.மணி. அம்மா இது ஆவுடையப்பண்ணன் தம்பி, என்றார்.நான் நன்றாகத் திரும்பி வணக்கம் சொன்னேன். என்ன அழகான மூக்கு,என்று தோன்றியது, அந்த மூக்கின் அடியில் நெளிந்த வாய் மூடிய சிரிப்பைப் பார்த்ததும்.அவரைப் பார்த்ததும் சாணக்கியா ஏயப்பா மேகப்பே வேண்டாம் போல இருக்கே, இதே ஸாரியோடவே பண்ணீருங்க என்றார், ராமண்ணா சாரும் இதையே தான் சொன்னார், என்றார் சிரித்த படியே.சொல்லிக் கொண்டே மேக் அப் ரூமுக்குப் போனார். பாரபரப்பு அதிகரித்தது. சின்னவர் வந்து விட்டார்.வந்தவர் அவருக்கான தனி மேக் அப் ரூமுக்குள் போய்விட்டார்.படக் கம்பெனியின் இரண்டு முதலாளிகளும், நடுங்கிக் கொண்டிருந்தார்கள் என்று சொல்லவேண்டும்.
படப் பிடிப்பு ஆரம்பித்தது.நான் மெது வாக உள்ளே போய் காமிராவுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தேன். பி.என். சுந்தரம் அழகான மீசையும் டி. ஷர்ட்டுமாக காமிராவை இயக்கிக் கொண்டிருந்தார்.எம்ஜிஆர், ஒரு கிறிஸ்தவனைப் போல் காமிராமுன் நின்று கையை வான்நோக்கி நீட்டி லேசாக முத்தமிட்டுக் கொண்டார்.சாணக்யா ரெடி ஸ்டார்ட் சொன்னார்.எம்.ஜி ஆர் ஆப்பரேஷன் தியேட்டரில் இருந்து, ஒரு துண்டில் கையைத் துடைத்த படி வெளியே வருவதாக சீன். காமிரா, கையை க்ளோசப்பில் பிடித்துக் கொண்டிருந்தது.படத்தின் ஆரம்பத்தில் எம் ஜிஆரின் கையை மட்டும் காண்பிப்பது ஒரு செண்டிமெண்ட்.ஐந்தாறு டேக் எடுத்தார்கள். திருப்பதி சாமி சொதப்பிக் கொண்டிருந்தார். எம்ஜியார் தலையில் அடித்துக் கொண்டார்.`அவர் பேச வேண்டிய வசனம்``கங்கிராஜுலேஷன் டாக்டர், இந்தியாவிலேயே இந்த மாதிரி ஹார்ட் ஆப்பரேஷனை நீங்க தான் முதல் தடவையா செஞ்சிருக்கீங்க’ ஒரு வழியாய் டேக் முடிந்து ஃப்லோருக்கு வெளியே சின்னவர், தனியாய் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து தானாகச் சிரித்துக் கொண்டிருந்தார், அண்ணன் போ , நல்ல மூடு போல இருக்கு என்றான்.
நன் அருகில் போய் பைக்குள் வைத்திருந்த மன்ற லெட்டெர் ஹெட்டின் ஒரு தாளை எடுத்துக் காண்பித்து திருநெக்வேலியிலிருந்து வருவதாகச் சொன்னேன்.அதற்குள் அவருடைய பாடி கார்டெல்லாம் விறு வ்று வென்று பக்கத்தில் வந்து விட்டார்கள், ஏய் ஏய்ய் என்றபடி.ஆமா இதை மட்டும் காமிக்கறதால உன்னை எப்படி நம்பறது என்றார்.எம்.ஜி ஆர்.இல்லை இன்னும் நிறைய தொடர்புகள் எல்லாம்,காரில் இருக்கு எடுத்துட்டு வாரேன் என்றேன், வேண்டாம், வேண்டாம் நாளைக்கு பாத்துக்கலாம் வள்ளி பிலிம்ஸ் ஷுட்டிங்குக்கு வா என்றார். அதற்குள் முதலாளி இரண்டு பேரும் பின்னாலிருந்து தூரப் போ என்கிற மாதிரி சைகை செய்தார்கள்.நான் தள்ளி வந்தேன்.எம்ஜியார் மீண்டும் தனக்குத் தானே சிரித்து தலையை அசைத்துக் கொண்டிருந்தார்.
நிறைவேறாத இந்த ஆசை இன்னும் கூட கனவில் வருகிறது.அந்த வெறுப்பில் ஊர் வந்தவுடன் கண்டபடி திட்டி ஒரு கடிதம் எழுதினேன்.இரண்டு பக்கத்திற்கு பதில் எழுதியிருந்தார். புகைப் படம் எடுப்பவர்கள், அதை எப்படியெல்லாமோ தவறாக உபயோகப் படுத்துகிறார்கள்,என்னுடைய மன்றங்கள் மக்களுக்கு சேவை செய்யவேண்டுமே தவிர படத்தை ஓட வைப்பது பெரிய காரியமில்லை.தென்காசி இடைத் தேர்தலுக்கு வருகிற போது படம் எடுத்துக் கொள்ளலாம், தங்களுக்கு என் மீது உண்மையான அன்பிருக்குமாயின்.அன்பன் எம் ஜி ராமச்சந்திரன்.
தென்காசி இடைத் தேர்தலை ஒட்டி புதிய பூமி படம் வந்தது.படத்தில் எம்ஜியார் பெயர் கதிரவன். வேட்பாளர் பெயரும் கதிரவன்.கருமுத்து தியாகராச செட்டியாரின் பங்களாவில் திமுக வின் பலரும் முகாமிட்டிருந்தார்கள்.முரசொலி அடியார், கடிதத்தைப் பார்த்து கிண்டல் செய்தாலும், பிரச்சாரத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்த எம்ஜியாரிடம் அனுப்பிவிட்டார்.என்னுடன் இன்னும் இரண்டு பேர் வந்திருந்தார்கள்.வேனில் ஏறப்போனவ்ரை மறித்தாற் போல நின்று கும்பிட்டோம்.கடிதத்தை நீட்டினேன் லேசாகப் படித்துவிட்டு என்னாபா,படம் எடுத்தாதான் நீ என் ரசிகனா, செரி செரி யாருபா போட்டோ கிராபர், எங்க கூப்பிடுங்க என்றார். எங்கள் யோகம்,தினத்தந்தி போட்டொ கிராபர் அதுவரை அங்கே ந்ன்றவர் ஆளையே காணும்.
நீ அப்பவே வந்தா என்ன, செரி பின்னால பாக்கலாம் என்று வேனைக் கிளப்பி விட்டார். தலைஅயி வெளியே நீட்டி, கையை அசைத்தார். அது யாருக்கு என்று புரியவில்லை.எங்களுக்கு என்றே என்னுடன் இருந்தவர்கள். சொன்னார்கள்.
ஒளி விளக்கு படத்திற்கு ஒரு சிறப்பு மலர் தயாரித்தேன் சினிமாப் பாட்டு புத்த்கம் போல்.அதை அனுப்பி அடிமைப் பெண் படத்தை பார்வதி தியேட்டரில் வெளியிடப் போவதாக அடிபட்ட செய்தியைச் சொல்லி, அதை செண்ட்ரல் தியேட்டரில் திரையிட ஏற்பாடு செய்யுமாறும் எழுதியிருந்தேன்.உடனேயே பதில் வந்தது.
முதல் கடிதம் தொலைந்து விட்டது.இரண்டாவது கடிதம் இனி, தொலையாது.




Visitors