Sunday, February 1, 2009

மரணம் என்பதே நித்திரையாம்...




செல்லையாவும் நானும் தான், வகுப்பைக் கட் அடித்து விட்டு, திறந்து கிடந்த தரை டிக்கெட் க்யூ வாசலில் நுழைந்தோம்.கலர்ப் படங்களே அப்போது அபூர்வம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், படத்திற்குப் பின் நாடோடி மன்னன் பகுதி கலர், கட்ட பொம்மன், கொஞ்சும் சலங்கை, ஸ்ரீ வள்ளிக்குப் பின், கர்ணன் தான் 1964 –ல் வந்தது. அதுவும் பம்பாய் பிலிம் செண்டரில் பிராஸஸ் செய்யப் பட்டது. கலர் கன்சல்டண்ட் ஜே.எஃப். வாண்டர் அவேரா.தமிழில் ஜெமினியில் தயாரான முதல்க் கலர்ப் படம், ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை.போஸ்டர்களெல்லாம் பிரமாதமாய் இருந்தது. சீநி.சோமு டிசைன்.ஸ்பெஷல் கிளாஸ் என்பதால் யூனி ஃபார்ம் போடவில்லை.இதுதான் சான்ஸ்,நான் தான் கிளாஸ் மானிட்டர்,செல்லதுரை சாரிடம் ஏதாவது பொய் சொல்லிக் கொள்ளலாம் என்று செல்லையா ஆசையயைக் கிளப்பினான்.
சனிக் கிழமை காலைக் காட்சி. படம். எழுத்து போடத் துவங்கி விட்டார்கள்.கார்ட்டூன் சித்திரங்கள் போல கேரி கேச்சர் சித்திரங்கள் ஒரு புறம்அதன் அருகே. எழுத்து.அந்த டிசைனும் சோமு தான்.வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குள் வந்ததால் கண்ணே தெரியவில்லை.கடைசிச் சித்திரம் உயிர் பெற்று எழுந்த மாதிரி, காஞ்சனாவும் முத்து ராமனும் ``என்ன பார்வை உந்தன் பார்வை.. என்று பாடுவதாகப் படம் தொடங்கும்...கிளியோபட்ரா படத்திலும் இப்படித்தான். அழகான ரோமானியச் சித்திரங்கள் மீது டைட்டில் ஓடும். கடைசிச் சித்திரமாய் ஒரு பெரிய கப்பல்., அது கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் பெற்று சீசரின் நிஜக் கப்பல் கடலில் மிதப்பதாக படம் ஆரம்பமாகும்.பள்ளிக் கூடம் ஸ்பெஷல் கிளாஸ் எல்லாவற்றையும் மறக்கடித்து விட்டது படம்.நாகேஷும் பாலையாவும் தான் நினைவு பூராவும்.செல்லையா நன்றாகப் பாடுவான்.முதல்த் தடவை பார்க்கும் போதே. பாட்டைக் கேட்டதுமே மனப்பாடமாகி விடும் அவனுக்கு .வசனமும் அப்படித்தான். நாகேஷ் என்றால் உயிர் அவனுக்கு.இடைவேளையின் போதுதான் பார்த்தோம், செல்லப்பா, வைகுண்டராமன், என்று ஷாஃப்டர் ஹை ஸ்கூலே வந்திருந்தது. படத்துக்கு. செல்லையாவுக்கு கொண்டாட்டம் தாங்க முடியவில்லை. மாட்டினால் ஸ்கூல் பூராவுமே மாட்டும்.நமக்கென்ன பத்தோடு பதினொன்னா ரெண்டு அடி வாங்கிக்கிருவோம்., என்று சொல்லிவிட்டு, ’’ஹை செல்லபா, ஐயாம் செல்லாபா..என்றும் ’’தெயெர் யூ ஆர்’’...என்றும் கலகலத்துக் கொண்டிருந்தான்..படத்தில் நாகேஷ் வேகமாக ஒரு டயலாக் பேசுவார், (ஆனால் அப்போது ``பேசுவான்’’ என்றுதான் சொல்லுவோம்., ஏன்னா அவர் காமெடியன் அப்போது.)``அடுத்த வருஷம் ரெண்டு படம் எடுக்கப் போறேன் மசானத்தில் முத்தம், கத்தி முனையில் ரத்தம்’’ அதுக்கு அப்புறம் எவனுமே படம் எடுக்க மாட்டான்....’’ என்று படு வேகமாகச் சொல்லுவார்.தியேட்டரே குலுங்கிக் கொண்டிருக்கையில் முதல்ப் பேர் (மசானத்தில் முத்தம்) யாருக்கும் புரிந்திருக்காது. செல்லைய்யா சரியாகச் சொன்னான்.ஆனால் யாரும் ஒத்துக் கொள்ளவில்லை.ப் படத்தை பலதடவை திரும்பத் திரும்ப பார்க்கும் போதும் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.ரொம்ப நாள் கழித்து பேசும் படம் பத்திரிக்கையில்,காதலிக்க நேரமில்லை படத்தின் கதை, வசனம் முழுதும் போட்டிருந்தார்கள்.(அப்போது அது ஒரு வழக்கம், படம் வெளி வந்து கொஞ்ச நாள் கழித்து பேசும் படத்தில், நல்ல படங்களின் கதை, வசனத்தைப் போடுவார்கள்.)அப்போது தான் செல்லைய்யா சொன்னது சரி என்று எல்லோரும் ஒத்துக் கொண்டான்.
மறு திங்கள்க் கிழமை கிளாஸ்ஸில் செல்லையாதான் மாட்டிவிட்டு விட்டான். நான் சொன்ன பொய்யை சார்வாள் ஒத்துக் கொண்டு உட்காரச் சொன்னதும், செல்லையா,``தெய்ர் யூ ஆர் மாப்பிள்ளை’’ என்று சற்று சத்தமாகவே சொல்லிவிட்டான்.சார் பிடித்துக் கொண்டு விட்டார்,``எந்திரிங்கடா ரெண்டு நாய்ங்களும், ஒஹோ புரொடக்‌ஷன்ஸ் பார்த்துட்டு வந்து கதையா விடறீங்க.’’என்று சொன்னதும் மொத்த வகுப்புமே தெய்ர் யூ ஆர் என்று கத்தியது.``ஓஹோ எல்லாருமே பார்த்தாச்சா’’, என்று செல்லத்துரை சாரும் சிரித்துக் கொண்டே கேட்டார். சொல்லிவிட்டு ``நானும் ஞாயித்துக் கிழமை ஈவ்னிங் ஷோ பாத்துட்டேண்டா,நாகேஷ் பிரமாதமா நடிச்சுருக்கான். இல்லையாடா,நாகேஷ், நாகேஷ் தான் என்னடா, என்று எங்களைப் பார்த்துக் கேட்டார்,நான் பேய் முழி முழிச்சுகிட்டு நின்னேன்.அவர் செல்லையாவிடம் கேட்டார் என்னடா உங்களை என்ன செய்யலாம், நீங்களே சொல்லுங்க, என்று.அவன் சற்றும் தயங்காமல், ``பேசாம கல்ப்பூர ஆரத்தி எடுத்து மங்களம் பாடிடுங்கோ சார் என்றான்,’’அடி செருப்பால, எத்தன தடவைலெ பார்த்தெ வசனத்தை அப்படியே ஒப்பிக்கிற,’’என்று ஆச்சரியாமாய்க் கேட்டார்.வகுப்பில் பல குரல்கள், சார் அவன் ஒரு தடவை பார்த்தாலே கட கடன்னு சொல்லிருவான் சார், பாட்டு சூப்பரா படிப்பான் சார்,என்று சொல்லியது.சரி ஒரு பாட்டு படி, என்றார். ‘’உன்னை அறிந்தால் . நீ உன்னை அறிந்தால்’’,என்று வேட்டைக் காரன் படப் பாடலைப் பாடினான்.முழுவது கேட்டு விட்டு, ஏல நாகேஷ் பாட்டு பாடுறா, என்றார்.`` சீட்டுக் கட்டு ராஜா.. ‘’ என்று ஆரம்பித்தான். சரி, சரி உட்காருங்க என்றுசொன்னார். அன்றிலிருந்து சாருக்கு நாகேஷ் என்று பட்டப் பெயர் வந்தது.
நாகேஷின் மானசீகக் குரு ஜெரி லூயி தான். அதற்காகவே ஜெரி லூயீயின் படங்களை விரும்பிப் பார்போம்., நானும் செல்லையாவும். டீன் மார்டின்னும் ஜெரி லூயியும் நடித்த ஒரு கௌ பாய் படம் போலவே நாகேஷ், அன்னை இல்லம் படத்தில் செய்திருப்பார்.ஜெரியின், ``எரண்ட் பாய்’’ படத்தின் அப்பட்ட மான காப்பிதான், சர்வர் சுந்தரம்.ஆனால் இது தமிழ்த்தன்மையோடு இருக்கும்.சிண்டெர் ஃபெல்லா, படத்தில் ஜெரி,அழகனாக மாறும் மருந்தைக் குடித்துவிட்டு கீழே விழுந்து துடிப்பான், வாஷ் பேஸினை எட்டிப் பிடித்து. எழுந்திருக்க முடியாமல், எழுந்திருந்து தவிப்பார். அதே காட்சி மாதிரி, நீர்க் குமிழியில் நாகேஷ், அலாரம் ஸ்விட்சை எட்ட முயன்று தோற்கிற மாதிரி பிரமாதமாக நடித்திருப்பார்.ஜெரியின், ஃபேமிலி ஜுவெல்ஸ், ஒரு அழகான படம்.அதில் ஏழு வேடங்களில் அற்புதமாக நடித்திருப்பார், அதுதான், நவராத்திரி படத்திற்கு மூலம் என்றால் பொய்யில்லை.
லாரல் ஹார்டி பாணியில் இரண்டு பேர் நகைச் சுவை, முதன் முதலில் கடவுளைக் கண்டேன்,படத்தில் வந்தது.. சந்திர பாபு-நாகேஷ் ஜோடி அமர்க்களப் படுத்தியிருப்பார்கள்.லாரல் ஹர்டி மாதிரியில்லாமல் இது ஒரு வகையில் ஸ்லாப் ஸ்டிக் காமெடி யாக இருக்கும்.போலீஸ்காரன் மகள் படத்திலும் நாகேஷ் சந்திர பாபு உண்டென்றாலும் கடவுளைக் கண்டேன் காமெடி கலக்கலாக இருக்கும்.அதன் தொடர்ச்சியாக பணத்தோட்டம் படத்தில், நாகேஷ் – ஏ. வீரப்பன் நகைச் சுவை பிரமாதமாய் இருக்கும். ஏ. வீரப்பன் ஒரு அற்புதமான கலைஞன்.பின்னாளில் கவுண்ட மணிக்கு காமெடி ட்ராக் எழுகிறவராகி விட்டார்.
பீம் சிங் படங்களான சாது மிரண்டால், மெட்ராஸ் டூ பாண்டிச் சேரி எல்லாம் தமிழ் சினிமாவின் சூப்பர் காமெடி. இந்திய சினிமா என்று எடுத்துக் கொண்டாலே தமிழ்ப் பட நகைச் சுவை போல் வேறு எங்கும் கிடையாது.மஹ்மூத்தெல்லாம் சுத்த அலமபல். 1965 நாகேஷுக்கு ஒரு அற்புதமான வருடம் என்று நினைக்கிறேன்.எங்க வீட்டுப் பிள்ளையின் காமெடி எப்போது வேண்டுமானாலும் சொல்லிச் சொல்லி சிரிக்கக் கூடியது.ஸ்பூனரிஸம் வந்தவர் போல் நாகேஷ் உளறிக் கொட்டுவது. கொண்ட்டாட்டமாய் இருக்கும் ``மாப்பிள்ளைக்கு நாலு பாடி தச்சு ஒரு வேட்டி கட்டும், ச்சேய், நாலு மாடி வச்சு ஒரு வீடு கட்டும்’’
அதன் நூறாவது நாள் விழாவுக்கு எம்.ஜி.ஆர் சரோஜா தேவி,நாகேஷ் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே வந்தது. லக்‌ஷ்மி தியேட்டரில் கூட்டமான கூட்டம்.சினிமா நட்சத்திரங்கள் நேரில் தோன்றுகிற நூறாவது நாள் விழாவுக்கு டிக்கெட் கட்டணம் மூன்று மடங்காகி விடும். அதோடு வேடிக்கை என்னவென்றால், தரை டிக்கெட் கட்டணம்தான் மிக அதிகமாயிருக்கும். உயர்ந்த வகுப்பென்றால் குறைவாயிருக்கும்.தரை டிக்கெட் 25-ரூபாய் என்றால்.சோஃபா டிக்கெட் 10/-ரூபாயாக இருக்கும்.மாட்னி காட்சியின் இடை வேளையில். மேடையில் தோன்ற வேண்டிய நடிகர்கள், மாலை ஆறு மணிக்கே வந்தார்கள். அவர்கள் வந்ததும் போலிஸ் துரத்தோ துரத்தென்று துரத்தினார்கள்.அது இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டம் முடிந்திருந்த நேரம்,எம்.ஜிஆர் உச்சத்தில் இருந்தார்.காங்கிரஸ் கல கலத்துக் கொண்டிருந்த நேரம்.போலீஸ் துரத்த ஆரம்பித்ததும், தியேட்டர் முன்னால் கூடியிருந்த நாங்கள், கண்ட தெருவுக்குள் எல்லாம் ஓடிப் புகுந்து தியேட்டரின் பக்கவாட்டுத் தெரு வழியாக, வந்து நின்றோம். அந்தத்தெரு ``தரைப் படத்திற்கு’’ பிரசித்தமான தெரு.(தரையில் படுத்தபடி டூயட் பாடுகிற படம் என்பான் எங்கள் வீட்டுக்கு, கிராமத்திலிருந்து வருகிற குடியானவன்) ரோஸ் கலரில் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவியை விட ரத்னா மொழு மொழு வென்றிருந்தார்.நாகேஷ் தான் கலக்கிக் கொண்டிருந்தார்.சுமார் பத்தடி உயர மொட்டை மாடியில் நின்று எல்லாருக்கும் கை அசைத்துக் கொண்டிருந்தார்.அவர்களை பக்கத்தில் சென்று பார்க்க வசதியாய் ஒரு மின் கம்பமிருந்தது.செல்லையா விடு விடுவென்று அதில் ஏறி கையிலிருந்த ஸ்கூல் நோட்டை நாகேஷிடம் நீட்டினான், அவர் வாங்கிக் கொண்டு அரைத்தாள் களாகக் கிழித்து கையெழுத்துகள் போட்டு பறக்கவிட்டார். என் கைக்கு ஒன்று சிக்கியது.செல்லையா மின் கம்பியிலிருந்து இறங்குவதற்குள், கூட்டம் எல்லாவற்றையும் பொறுக்க ஆரம்பித்தது.நல்ல அச்சான தமிழ் எழுத்துக்களில், ``அன்பு வாழ்த்துகள், தாய்- நாகேஷ்’’ என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்தார். சிலருக்கு நாகேஷ் என்று மட்டும் எழுதியிருந்தார்.செல்லையா கெஞ்சிக் கொண்டிருந்தான், ஏண்ட்ட குடுத்திருல, என்று. இரண்டுக்கும் மனசில்லை. நான் ஆறு மணி காட்சிக்கு டிக்கெட் ரிசர்வ் செய்து வைத்திருந்தேன்.சரி அப்போது கையெழுத்து வாங்கிக் கொள்ளலாம்.. என்று அவனிடம் கொடுத்து விட்டேன்.ரொம்ப நாளைக்கு சொல்லிக் கொண்டிருந்தான், சோமு தான் தந்தான் என்று..
ஸ்ரீதர்-நாகேஷ் காம்பினேஷன், ஒரு விதமென்றால்,கே.பால சந்தர் வேறு விதம்.எனக்கும் லாலா மணிக்கும் கே பி யின் படங்களிலியே ரொம்பப் பிடித்தது, `அனுபவி ராஜா அனுபவி’ தான். இரட்டை வேடப் படங்களில் அது ஒரு சிகரம். பணக்காரக் குடும்பம் படத்தில் நாகேஷ் மூன்று நான்கு ரோலில் வருவார் அது கூட இதற்குப் பின் தான்..நாங்கள் பார்த்ததிலேயே முதல் ஞாயிற்றுக் கிழமை மாலைக் காட்சிக்கு தியேட்டரும் கொள்ளாமல், அதற்கு எதிர்த்த ரயில்வே பீடர் ரோடு முழுக்க கார்கள் வந்து நிறைந்திருந்த படம் அது தான்.அந்த கார்களைக் காண்பிப்பதற்காகவே லாலா மணி., படம் முடிவடையும் தருவாயில் வெளியே கூட்டி வந்தான்.

நாகேஷ்,கே.பியின் படங்களில் சும்மா நகைச் சுவைக் காட்சிகளில் மட்டும் நடிக்காமல் அற்புதமான கேரக்டரும் செய்வார். பல படங்களில் கதையை நகர்த்தும் சூத்ரதாரியே அவர்தான். நூற்றுக்கு நூறு, தாமரை நெஞ்சம்.. புன்னகை போன்றவை மறக்க முடியாதவை..தருமியாக வந்து சிவாஜியை தூக்கி சாப்பிட்டு விடுவார்.பாலையாவும் நாகேஷும் இல்லாமல் தில்லானா மோகனாம்பாள் இவ்வளவு வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகம். அபூர்வ ராகங்களில் அவரின் ரோலை வேறு யாரும் செய்ய முடியாது.கொஞ்சம் கூட மிகை நடிப்பில்லாமல், எதிர் நீச்சல், சுப தினம் போன்றவற்றில் பிரமாதப் படுத்தியிருப்பார்.
தேர்த் திருவிழா படத்தில் நடிக்கும் போது,`என்னப்பா கிழவன் இன்னும் குமரனாகலையா’’, என்று மேக் அப் ரூமில் இருக்கும் `சின்னவரை’ (பெரியவர் சக்ர பாணி) கேலி பேசியதாக வந்த கிசு கிசு வைக் கேட்டு எம்ஜி ஆர் அவரை தன் படங்களிலொதுக்கி வைத்திருந்தார் என்பார்கள்.அதனால் அப்போது சோ, எம்ஜியாரின் எல்லாப் படங்களிலும். வந்தார்.ஆனால் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு எம் ஜி ஆரே வலிய அழைத்ததாகச் சொல்வார்கள்.அந்தப் படத்தில் எம் ஜி ஆரின் எடிட்டிங் திறமை பற்றி நாகேஷ் ஒரு சினிமா இதழில் அற்புதமான ஒரு கட்டுரை எழுதி இருப்பார்.மனப் பூர்வமான பாராட்டு அதில் தொனிக்கும்.

மகளிர் மட்டும் படத்தில் பிணமாகவே வாழ்ந்திருப்பார் நாகேஷ். முக பாவத்தில் அப்படியொரு கண்டினியூட்டி. தமிழ் நாட்டின் எந்த நடிகனுக்கும் சவால் விடுகிற சித்தரிப்பு அது.அவர் ஒரு நல்ல விருதைக் கூட வாங்கவில்லை என்பதே சொல்லும் அவன் ஒரு மகா கலைஞன் என்பதை.

``பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய் மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்.’’ என்கிற சுரதாவின் பாடல் வரிகளைப் பாடி நடித்த, அந்த அற்புதக் கலைஞன் நீர்க்குமிழியாக மறையவே மாட்டான்.அவன் மரணம் ஒரு நித்திரை மட்டுமே.

Monday, January 26, 2009

நாலு பேருக்கு.....


அழைப்புக் காரச் செட்டியார் நல்ல உயரம். கரு கருவென்றிருப்பார்.வழுக்கைத் தலை.அரைப் படிக் கடலையை ராத்திரியே ஊறப் போட்டிருப்பார்.காலையில் ஆற்றுக்குப் போய் ஒரு குளியல். மத்தியானத்துக்கு ஒரு சோற்றை மட்டும் வடித்து வைத்து, . அப்புறம் கடலையை வெந்து, தாளித்து சுண்டலாக்கி விற்கக் கிளம்பி விடுவார். இது கல்யாணம், கார்த்திகை நடை பெறாத சூனிய மாதங்களில்த்தான் இப்படி. மற்ற காலங்களில் விசேஷ வீடுகளுக்கு, ஊர் அழைப்பதற்குப் போய் விடுவார்.அவரோடு வீட்டுப் பெண்களும், போவார்கள். பெண்கள், பெணகளை அழைப்பார்கள்.இவர் ஆண்களை அழைப்பார்.``சம்பந்த மூர்த்தி கோயில்த் தெரு, அச்சுக்கூடத்துப் பிள்ளை வீடு, சீமான் பிள்ளை மகளுக்கும், தென்காசி பாப்பா காபித்தூள்க் கம்பெனிக் காரவுக மகனுக்கும் ஆனி மாசம், இன்ன தேதி இத்தன மணிக்கி,பொண்ணு வீட்டில வச்சுக் கல்யாணம்., முந்தின நாள் ராத்திரி மாப்பிள்ளை அழைப்புச் சாப்பாட்டுக்கும், மறுநாள் காலைச் சாப்பாட்டிற்கும், முகூர்த்ததிற்கும், மத்தியானச் சாப்பட்டிற்கும் அழைச்சிருக்கு.’’ என்று கடகட வென்று சொல்லி அழைத்து, ஒரு பத்திரிக்கையை அந்த வீட்டின் ஆண்கள் கையில் கொடுப்பார். கட்டாயம் ஆண்கள் கையில்தான் கொடுக்க வேண்டும், வீட்டில் பெரிய ஆண்கள் இல்லையென்றால், சின்னப் பையன்களிடமாவது கொடுக்க வேண்டும். யாருமே இல்லையென்றால் மட்டுமே பெண்களிடம் கொடுப்பார். அவர் சொல்லி முடிக்க காத்திருந்தது போல,பெண்கள் ஆரம்பிப்பார்கள், ஆனால் இது அவ்வளவு கச்சிதமான ஒப்பித்தலாக இருக்காது.
யார் யார் வீட்டுக்கு, எதெற்கெல்லாம் அழைப்ப்பு என்பது அவருக்கு அத்துப் படி. யார், யாருக்கு முதல்ச் சுற்று உறவினர்,யாரைக் காலைச் சாப்பாட்டிற்கும் அழைக்க வேண்டும், யாரை முகூர்த்த்தம் மற்றும் மதியச் சப்பாட்டுக்கு மட்டும் அழைக்க வேண்டும் என்றெல்லாம், .வீட்டுக்காரகளுக்கு மறந்தால் கூட அவருக்கு மறக்காது. அதற்காகவே அவர் சொன்ன பிறகு, பெண்கள் துவங்குவார்கள்.யாராவது கிழவி, வேய்,``செட்டியரே காலச் சாப்பாடுக்கு அழைப்பு உண்டா’’ என்று குறிப்பாகக் கேட்பார்கள்.அதுல ஒரு குசும்பு கூட இருக்கும். செட்டியார் இதுக்கெல்லாம் அசராத ஆள், ம்ஹூம் கிடையாது என்று சொல்லிவிட்டு, வாயில் ஏதோ மிட்டாய் போட்டிருந்து, அது நன்றாக ஊறி இனிப்பான எச்சிலாய்ச் சேர்ந்திருத்தாற் போல,வெறும் வாயை உறிஞ்சி எச்சில் விழுங்கிக் கொள்ளுவார்.பெண்களோ, ``அதுக்கென்ன ஆச்சி, உங்க வீடு தான,எப்ப வேணுன்னாலும் வாங்க’’ என்று அசடு வழிவார்கள்.
பெரிய அக்கா கல்யாணத்திற்கு அழைக்க, வீர ராகவ புரம் என்கிற ஜங்‌ஷன்., ஸ்ரீ புரம், கொக்கிர குளம்., வண்ணார் பேட்டை என்று டவுணிலிருந்து தள்ளி இருக்கும் சில வீடுகளுக்கு அழைக்க, பெரிய வரிசையார் (சீர் வரிசை கொண்டு வருவதானால், அண்ணன் மனைவியை வரிசையார் என்று அழைக்கிறார்களோ) இன்னும் சில உறவுக் காரப் பெண்களுடனும், அழைப்புக்காரச் செட்டியாருடனும் ராமையா பிள்ளை வில்லு வண்டியில் நானும் வரேன் என்று கிளம்பினேன். அப்பா தடுத்தார்,அவ்வளவு தூரம் ஒன்னால அலைய முடியாதுல, என்று. நான் அதெல்லாம் போயிருவேன். என்று கிளம்பி விட்டேன்.எட்டு ஒம்பது வயதிருக்கும்.
ஜங்ஷன் போகிற பாதை, குளுமையா இருந்தது.ரெண்டு பக்கமும் மருத மரம்.பார்வதி டாக்கீஸ் அப்ப கிடையாது.ரத்னா டாக்கீஸ் அதே லைட் ஊதாக் கலர் பெயிண்டில். வீரக் கனலோ, வஞ்சிக் கோட்டை வாலிபனோ, ஜெமினி கணேசன் நடிச்ச ஒரு சரித்திரப் படம் போஸ்ட், ஒட்டியிருந்த நினைவு.ஒன்றிரண்டு, ஈயக் கலர் அடித்த டி எம் பிஎஸ் பஸ்களும், புதிதாக ஓடுகிற ஸ்ரீ பால சரஸ்வதி பஸ்ஸும் தவிர வேறு போக்கு வரத்தே இல்லை. ராமையா பிள்ளையிடம் கெஞ்சிக் கூத்தாடி அவர் அமருகிற கோஸ் பெட்டியில் நான் உட்கார்ந்து கொண்டேன். . பால சரஸ்வதி பஸ்ஸில் கடிகாரம் பொருத்தியிருந்தது, அப்போதைய ஆடம்பரச் செய்தி டி.எம்.பி.எஸ் பஸ்ஸுக்கு, ஒரு ஒல்லியான ஐயங்கார், டைம் கீப்பர். ஒற்றை நாமத்துடன் சந்திப் பிள்ளையார் முக்கு ஸ்டாப்பில் இருப்பார்.நேர சுத்தமாக ஓடும் டவுண் பஸ்கள், அப்போதெல்லாம்.திருநெல்வேலி மோட்டார் பஸ் சர்வீஸ் (டி.எம்.பி.எஸ்) தொழிலாளர்களால் நடத்தப் பட்டு வந்தது.அதே போல் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களால், கூட்டுறவு அடிப்படையில் நடத்ததப் பட்ட எக்ஸ் சர்வீஸ் மென் பஸ் செங்கோட்டைக்கு உண்டு. அது வேகமாகப் போகும்.அதில் போவதென்றால் எங்களுக்கு குஷி.முதலில் ஸ்ரீபுரம் போனோம்
.ஸ்ரீ புரம் தான் அப்போதைய தனவந்தர்களின் காலனி.பெரிய பெரிய வீடுகள், வீட்டைச் சுற்றி மரங்களும், தோட்டமும்.நம்ம சொந்தக் காரங்க இவ்வளவு பெரிய வீடுகளில், இருக்கிறார்களா என்று தோன்றியது.பழனியிடம் போய்ச் சொல்ல வேண்டும்.அவந்தான் அடிக்கடி நீ, ஸ்ரீ புரம் போயிருக்கியாலே அங்க பன்னீர்ப் பூ மரம்ல்லாம் இருக்கும்.வாசனை மூக்கைத் துளைக்கும்.என்றெல்லாம் ஆசை காட்டியிருந்தான்.அந்த ஸ்ரீபுரத்தைப் பார்த்த சந்தோஷத்தில், ``வீராவரம்’’ புறப்பட்டோம். ஆனால் கொஞ்ச தூரம் போனதும், பின்னாலேயே நடந்து வந்த அழைப்புக் காரச் செட்டியார், வண்டியில் உடகாருவதற்காக, நான் வண்டிக்குள் உட்கார நேர்ந்தது.அவரைத்தாண்டி வேடிக்கை பார்க்க முடியவில்லை.வயிறு வேறு பசிக்க ஆரம்பித்து விட்டது.கொக்கிர குளத்தில் நான் வண்டியிலேயெ படுத்து விட்டேன். மாட்டை அவிழ்த்துப் போட்ட வணடி.சாய்வாக நின்றது.படுத்தே கிடக்கவும் முடியவில்லை.வண்டியின் பின் பக்கமாக நகர்ந்தால், ராமைய்யா பிள்ளை சத்தம் போடுவார், ``வண்டி குடை சாஞ்சிரும், முன்னாலயே உக்காருல’’, பேசாம வீட்லயே கிடக்க வேண்டியதுதானலே.. பசியோடு வீடு திரும்பும் போது காய்ச்சல் வரும் போலிருந்தது.சாப்பிட்டதும் சரியாய்ப் போய் விட்டது. காணாததற்கு, ஆயிரக்கணக்கில் லட்டு செய்து, மச்சு வீட்டின் நடு ஹாலில்,வெள்ளைத் துணி விரித்து ஆற வைத்திருந்தார்கள்.சின்ன அக்கா, கிட்டு கூப்பிட்டுப் போய் காண்பித்தாள். எடுக்கப் போன போது அடிக்க வந்தாள். அப்பா எடுத்த்துக்கடா என்றதும், இரண்டை எடுத்து இரண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் கடித்து விட்டு, அக்காவைப் பார்த்து பழிப்புக் காட்டினேன். அவள் எனக்குலெ என்று கேட்டபோது, கிட்டு. லட்டு, குட்டு என்று சொல்லிய படி ஓடினேன்
அழைப்புக்கு போவதைத் தவிரவும், செட்டியார் செய்கிற வேலை இன்னொன்று உண்டு. ஒரு வீட்டில் யாராவது வயதானவர் இறந்து போனால், அவரது மகளோ, பேத்தியோ, சாவு நடந்த எட்டாம் நாள், உறவினர் வீடுகளுக்கு கொண்டைக் கடலை அல்லது பச்சைக் கடலை போடுகிற வழக்கமுண்டு.மகள் என்றால் கொண்டைக் கடலை.பேத்தியென்றால், பச்சைக் கடலை.மூடை மூடையாக வாங்குவார்கள். அரைக்கால் படியோ கால்ப் படியோ எல்லா உறவினர் வீடுகளுக்கும் கொண்டு போய்ப் போட வேண்டும். அதைச் செய்கிற வேலையயும் அவரே சரியாகச் செய்வார்.ஒரு கூட்டுக் குடும்பத்தில் திருமணமாகி மகனும் அங்கேயே வசித்து வந்தால் இரண்டு பங்கு போட வேண்டும். அதை பாத்திரத்தில் வாங்கக் கூடாது. தரையில், செட்டியாரே அளந்து தட்டி விடுவார்.ஒரு ஆவலாதி வராது.
ஆற்றில், ஒவ்வொருவருக்கும் பிடித்தமான படித்துறை உண்டு. அங்கே குறிப்பிட்ட நேரத்திற்கு, குறிப்பிட்ட சகாக்களுடன் பேசிய படியே குளிக்கிற சுகமே தனி. நாங்கள் முன்னடித் துறையில் குளிப்போம். இளவட்டங்கள் குளிக்கிற இடம் பொது வாகவே அங்கு தான். அங்கே இழுப்பு, அதிகமிருக்கும். அதை எதிர்த்துக் குளிப்பது ஒரு சுகம்.கொஞ்சம் வயசானவர்கள், என்றால் கோயில்ப் படித்துறை. .கருப்பன் துறையில் தான் மயானம். அங்கிருந்து சற்றே கிழக்காக வ்ந்தால் அமாவாசைச் சாமியார் சமாதியான நந்த வனம்.அதற்குப் பின்னால் ஒரு படித்துறை. அதில் ஏதாவது துஷ்டிக்குப் போய் வந்தால் மட்டுமே நாங்கள் குளிக்கிற வழக்கம்.அந்தப் படித்துறைக்கு பெண்களே வருவதில்லை. ஏனென்றால் மயானக் கரைக்குப் பெண்கள் வர அனுமதியில்லை.அந்தப் படித்துறை, பேணுவார் இல்லாமல், சற்று படிகள் உடைந்தும், சாய்ந்தும் இருக்கும்.ஆறு ஏதாவது ஒரு வெள்ளத்தில் சட்டென்று திசை மாறி, படித்துறையை விட்டு தள்ளியே ஓடும்.இது கொஞ்ச நாளுக்குத்தான்.அந்த நேரங்களில் படித்துறை தனியே துருத்தலாக மணல் வெளியில் அனாதையாக காத்திருக்கும். நந்தவனத்துறை இடத்தில் ஆறு சற்று அகலமாக இருக்கும்.அதனால் படித்துறையை விட்டுத் தள்ளி ஒடினாலும், குளிப்பதற்கு வாகாக மணல் விரிப்பு நன்றாக இருக்கும். பாறைகளும் அவ்வளவாக இருக்காது.நீந்திக் கொண்டே எதிர்க் கரைக்குப் போனால் நல்ல புல் வெளியாக இருக்கும்.கனமான அடர்த்தியான புல். அது மேலப்பாளையம் கரை.அநேகமாக முஸ்லிம் பெண்கள் குளிக்கிற கரை. அவர்கள் துவைப்பதற்காகவே ஆற்றுக்கு வருகிற மாதிரி, அகலப் பாத்திரங்களில் துணியும் பாயும் நிறையவே எடுத்து வருவார்கள். பாய் முடைவ்து மேலப்பாளையத்தில் நிறைய உண்டு. அதனால் எல்லாப் பெண்களின் அழுக்கு மூட்டையிலும் கண்டிப்பாக ஒரு பாயாவது இருக்கும்.ஈரத்துணிகளைப் பிழிந்து ஏனத்தில் அடுக்கி அதன் மேல் ஈரஞ்சொட்டுகிற பாயை வைத்துக் கரையேறிப் போகும்போது, ஆற்றில் குளித்துக் கொண்டே வெண்மையான கால்களைப் பார்ப்பது ஒரு அநுபவம்.பெரும்பாலும் லுங்கி அணிந்த கால்களில் கொலுசு இருக்காது, அப்படியே இருந்தாலும் அதில் சலங்கைகள் இருக்காது..
அமாவாசைச் சாமியார் படித்துறைக்கு அவ்வப்போது போவதுண்டு. அங்கே குளிக்கும் போது மன நிலை வேறு மாதிரியாக இருக்கும். யாரையாவது எரியூட்டி விட்டு வந்து குளிப்பதால் சற்று நேரம் ஒரு மௌனம் எல்லாரிடத்தும் நிலவும் பெரும்பாலும் அது நடு மத்தியான நேரமாகத்தான் இருக்கும்.வெயிலில் குளிப்பது சுகமாயிருக்கும். மயானத்தில் சிதை எறியூட்ட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது பக்கத்து தகர ஷெட்டில் அமர்ந்திருப்போம்.அந்த சிமெண்டுத் தரையை அவ்வளவு வழ வழப்பாகப் பூசிய கொத்தனார் யாரோ என்று நினைத்துக் கொள்ளுவேன். காற்றும் சுகமாய் வரும். கல்த்தூண்களின் மேல் தகரம் வேய்ந்திருக்கும். சுற்றுச் சுவர் எதுவும் கிடையாது.தளத்தின் ஒரம் சற்றே சாய்வான மேடாயிருக்கும், தலையணை மாதிரி.படுத்துக் கொண்டால், தூக்கம் கண்ணைச் சுழற்றும். மனம் தானாகவே ``நம் வாழ்வில்க் காணா சமரசம் உலாவும் இடமே,’’ என்று பாடும்.பள்ளிக் கோட்டை ரத்தினம் பிள்ளை அத்தான் தான் இந்தப் பாட்டை யார் வீட்டு துட்டியின் போதோ,சொல்லிக் காண்பித்தது.அத்தான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். பத்து வார்த்தைக் கொரு தரம் என்னவே நான் சொல்றதூ என்று கேட்டு சத்தமாய் ஒரு சிரிப்பு சிரிப்பார்.எனக்கு வேலை கிடைத்ததற்கு அவருக்கும் கணிசமான பங்கு உண்டு.
யாருமில்லாத போது தனியாக வந்து ஒரு நாள் இங்கே தூங்க வேண்டும் என்று நினைப்பேன்.ராமுவின் அப்பா, ஆறுமுகம் பிள்ளை, ஒரு காலத்தில் பெரிய தவசுப் பிள்ளை.மகாத்மா காந்தி எங்கள் தெருவில் சாவடிப் பிள்ளை வீட்டிற்கு வந்து விருந்தினராகத் தங்கி இருந்த போது, அவர்தான் சமையல்.காந்திக்காகவே முதன் முதலாகத் திருநெல் வேலிக்கு தக்காளிப் பழத்தை ஆறுமுகம் பிள்ளை வாங்கி வரச் செய்தார் என்று அம்மா அடிக்கடிச் சொல்லுவாள்.எங்கள் காலத்தில் ராமுவின் அப்பா சமையலை மேற்பார்ப்பதில்லை.ஆனால் விரும்பிக் கேட்டால், ஆக்குப் பிறைக்கு வந்து ருசி பார்த்துச் சொல்லுவார்கள். வாசனையை வைத்தே சொல்லி விடுவார். ``ஏல , ஏல, ரசத்தில ஒரு கை உப்பு போடுலே, ஏய் பேராச்சி, அவியலை அடிப் புடிக்க விடாதலெ, இன்னும் கொஞ்சம் நயம் தேங்காயெண்ணய விட்டு சட்டாப்பையாலெ கிண்டி விடு, என்று மள மள வென்று உத்தரவு பறக்கும்.ஒரு மூக்கு வாளியக் கொண்டாலெ. என்று கட்டளையிட்டு வாங்கி. பச்சைக் கற்பூரம். குங்குமப் பூ போட்டு, ஒரு பக்காத் தண்ணீர் விட்டு நன்றாகக் கரைக்கச் சொல்லுவார் பச்சைக் கற்பூரம் நல்லா கரஞ்சிருக்கா என்று பத்து தடவையாவது கேட்பார்.அது போட்டாலே கரஞ்சிரும்,சமயத்தில் ஒரு துணுக்கு கரையாது. அது பல்லில் ஒட்டிக் கொண்டால் சூடனைச் சவைச்ச மாதிரி இருக்கும் என்று அவரே சமாதானம் சொல்லிக் கொள்ளுவார்.அதை பாயாசத்தில் சேர்த்த பின் தான் பாயாசத்திற்கே ஒரு ருசி வரும். அவரிடம் தொழில் படிக்காத தவசுப் பிள்ளைகளே திருநெல்வேலியில் இருக்க முடியாது.நான் தூக்க மாத்திரைகளை விழுங்கி விட்டுப் பிழைத்துக் கொண்டதைக் கேள்விப்பட்டு, வெளியில் போவதையே குறைத்துக் கொண்டு விட்ட அவர், வீட்டுக்கு வந்தார்.``எங்க அவனை’’, என்று கேட்டபடியே மாடிக்கு ஏறி வந்தார், ``ஏய், பைத்தியாரா இப்ப என்ன வந்துட்டு நமக்கு,என்ன வந்துட்டூங்கேன், வீடு இல்லையா வாசல் இல்லையா, இல்ல போனாத்தான் வராதா,இன்னம இந்த நெனப்பே கூடாது, ஆமா’’கீழே இறங்கி விட்டார்.கீழே சற்று நேரம் அம்மாவிடம் பேசுவது கேட்டது. நான் ஆடிப் போயிருந்தேன்.ராமுவுக்கு அப்போதுதான் கல்யாணம் நிச்சயித்திருந்தார்கள்.இரண்டு நாள் கழித்து நிச்சயதார்த்தம், ``ஞாவகமா அவனைக் கூட்டியா’’ என்று ராமுவின் தம்பியை அனுப்பி வைத்திருந்தார்.``வயிறு புண் பட்டிருக்கும்., பரவால்லை சும்மா எல்லாத்தையும் சாப்பிடு, சாப்பாடுதான் மருந்து, எல்லாம் உரைப்பில்லாம பக்குவமா இருக்கு’’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
மாலை ஆகி விட்டது,.அவரைத் தகனம் செய்ய. இருட்டிக் கொண்டு வந்தது.அப்போது மயானக் காவலுக்கு சரியான ஆளில்லை என்று பேச்சிருந்தது.ராமு.,``யாராவது இங்கே இருந்துட்டு வாங்கப்பா நாய் நரி இழுத்துப் போட்றாமெ’’ என்று அரற்றிக் கொண்டிருந்தான்.சரி இருக்கோம் நீ போ என்று கனகு சொன்னான்.யாரோ மூன்று பேர் தங்க முடிவெடுத்தோம். ராமு கடையில் வேலை பார்க்கும் தங்கையா`` நாங்க பாத்துகிடுதோம்.’’நீங்க போங்க’’ என்றான். கொஞ்ச நேரம் இருந்தோம்.எட்டு மணி இருக்கும்.எங்கிருந்தோ சாராயம் வாங்கி வந்தான்.``ஐயா இதை வேண்ணா சாப்பிடுங்க,’’ என்றான்.இதற்குள் ராமு உப்புமா கொடுத்து விட்டிருந்தான்.இரண்டுமே சாப்பிடும் படி இல்லை.ஊன் உருகும் வாசனை, பால் பொங்கி அடுப்பில் விழுவது மாதிரி வந்தது. தீ மத மதவென எரிந்து கொண்டிருந்தது.வெட்டியான் கம்பால் குத்துவதா,இல்லை எலும்பு வெடிக்கிற சத்தமா தெரியவில்லை.``அங்கெ என்ன இருக்கு, எல்லாம் பஸ்ப்பமாயிட்டு, ஐய்யா, இதுக்காக நீங்க இருக்கணுமா’’, என்று கொஞ்சம் பனங்கிழங்கு, சுட்டதை எடுத்துக் கொண்டு வெட்டியான் எங்களைப் நோக்கி வந்தான்.சாராயமும் , உப்புமாவும் அவனை இழுத்து வந்திருக்கும்.கிழங்கின் சூடு கை பொறுக்க முடியாமல் இருந்தது.`ஐயா இது தனியா வெந்தது’, என்று சொன்னான்.ஆனால் வேறு எங்கேயும் தீ தென் படவில்லை.எதையும் சாப்பிடவில்லை. கிளம்பி விட்டோம்.முன்னடித் துறையில் லேசான வெளிச்சத்தில் ஒரு முனிசிப்பல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.படியில் நின்றவாறே
குளித்தோம்.வெளியே குளிராக இருந்தது. த்ண்ணீர் வெது வெதுப்பாக இருந்தது..ஒரு தன் நிதானத்துடன் ஆற்றின் மத்திக்கே நீந்திப் போய்க் குளித்தோம்.குளிர் தெரியவில்லை.
மத்தியானம் மூன்று நாலு மணிக்கு ஆற்றில் குளித்தால், அது வேறு மாதிரி இருக்கும். தண்ணீரின் மேல்ப் பகுதி வெது வெதுப்பாகவும் உள்ளே முங்கினால் சற்றுக் குளிராகவும் இருக்கும்.பொதுவாக இப்படிக் குளிக்கக் கூடாது. என்பார்கள்.காய்ச்சல் வரும்.ஆனால் கல்லூரித் தேர்வுக்கு விடுமுறை விட்டிருக்கும், ஸ்டடி லீவில், எனக்கு இந்த நேரமே வாய்க்கும்.இந்த நேரத்தில்தான் எல்லா வண்ணான், வண்ணாத்தியும் உலரப் போட்ட துணிகளை அள்ளிக் கட்டி கரையில் வைத்து விட்டு,குளித்துக் கரையேறுவார்கள்.துணி மூட்டையை தலையில் வைத்த படியேதான், குறுக்குத் துறை முருகன் கோயிலில் சாமி கும்பிடுவார்கள்.அன்று கோயில் படித் துறையில் குளித்தேன்.அழைப்புக்காரச் செட்டியார் குளிக்கிற இடம்.
மாலைச் சூரியன் முகத்தில் தகித்து, ஆற்றுக் குளியல் முடித்த உடம்பில் வியர்வை வழிய வந்து கொண்டிருந்தேன்.நாலு
பேர் மட்டும் ஒரு உடலைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.பாடையை விட கால் நீளமாய் வெளியே துருத்திக் கொண்டிருந்தது.முன்னாலும் பின்னாலும் யாருமே இல்லை.

சந்திப் பிள்ளையார் முக்கிற்கு வந்த போது,போத்தி ஓட்டலில் இருந்து வெளியே வந்த பள்ளிக் கோட்டை அத்தான் சிரித்துக் கொண்டே கேட்டார்,``வே மாப்பிள, என்ன, அழைப்புக்காரச் செட்டியார அனுப்பீட்டு வாறேரா.’’கேட்டு விட்டு தன் வழக்கமான சிரிப்பைச் சிரித்தார்.