Thursday, October 22, 2009

ஓடும் நதி...2


டவுண் மார்க்கெட்டின் பின் புறம், அந்தத் தெருவின் கடைசி. மார்க்கெட்டிற்குப் போய் விட்டு வந்தால், அதை தெருவின் ஆரம்பம் எனலாம். மார்க்கெட்டின் பின்புறமும் தெருவிலும் அழுகிய காய்கறிகளும், இலை தழைகளும், குவிந்து ஒரு மணம் வீசிக் கொண்டிருக்கும்.முனிசிபாலிட்டியின் குப்பை வண்டிகளை இழுக்கும் மாடுகள், அதை அப்படி ஆசையாய் மேயும். அவைகளெல்லாம் புஷ்டியாய், பெரிய கொம்புகளுடன் ஒரே ஜாடையில் இருக்கும். பார்த்தாலே சொல்லிவிடலாம் இது முனிசிபாலிட்டி மாடு என்று. தெருவில், பூட்டியே இருக்கிற ஒரு அம்மன் கோயில். அது அம்மன் கோயிலென்பதே வெகு நாள் கழித்துத்தான் தெரியவந்தது.அதன் நடையில் ஒரு பைத்தியக்காரி உட்கார்ந்து தனக்குத் தானே பேசிக் கொண்டிருப்பாள்.எப்பொழுதும் எச்சில் ஒழுகுகிற வாய், கழுத்தில் குப்பையிலிருந்து எடுத்து அணிந்து கொண்ட, நாரும் அங்கங்கே வாடிய பூக்களும், உள்ள சில பூமாலைகள். நினைத்தாற் போல் எழுந்து, யாருடனோ வாதிட்டுச் சண்டையிடுவது போல், மொழியற்ற பாஷையில் பேசிக் கொண்டு, வேகமாய் இரண்டு தரம் தெருவை அளந்து விட்டு வந்து, மறுபடி கோயில் நடை. இரண்டாம் முறை மது விலக்கு நீக்கப் பட்ட சமயம் என்று நினைவு, திடீரென்று பார்க்கையில் பெரிய வயிற்றைச் சுமந்து கொண்டு தெருவை அளந்து கொண்டிருந்தாள்.கொஞ்ச நாளில் மார்க்கெட் குப்பையில் ஒரு குழந்தை பிணம்.மாடுகள் மேயாமல் தள்ளி நின்று கொண்டிருந்தன. உடையெங்கும் ரத்தத்துடன் எதுவும் நடக்காதது மாதிரியில், நீதி கேட்பது போல்,வடக்கும் தெற்குமாக அவள்.

‘’வித்தியாசமான ஊர்க் குணாதிசயங்கள்
இந்தப் பைத்தியங்கள்.....’’

இன்னொருவன் ஒரு பழைய தையல் மெஷினை கன்னாபின்னாவென்று சங்கிலியால் சுற்றி ஒரு பூட்டைக் கொறுத்துத் தோளில் சுமந்து கொண்டே திரிவான்.தையல் மிஷினும் சங்கிலியும் கை பட்டுப் பட்டு, பளபளவென்றிருக்கும். மிஷினில் பெயிண்டோ பெயரோ இருக்காது. காணாததற்கு அவன் உயரத்திற்கு தோளில் ஒரு பை. அதில் புதிதும் பழையதுமான துணிக் குப்பைகள்.அவனைப் பார்க்கையில் ‘’தையற்காரன் புறக்கணித்த புது வெள்ளைத் துணி போல....’’என்கிற ஞானக் கூத்தனின் கவிதை வரிகள் நினைவுக்கு வரும்.
தென்காசியில் ஒருவன். என் சின்ன வயதில் பார்த்தவன்.சாக்கடைக்குள் நின்று கொண்டு, சாக்கடைச் சுவரின் மேற்பகுதியில் எரு தட்டிக் கொண்டிருப்பான்.’’எரு தட்டற மாதிரி தட்டறியே...’’என்று சொல்வதற்கு எதிராக, கர்ம சிரத்தையோடு, சாணியை முட்டானாக உருட்டாமல், அழகான பந்து போல் உருட்டி, சுத்தமான வட்டமாக எரு ‘‘தயாரித்து’’க் கொண்டிருப்பான். கை விரல் பதிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பது போல் இருக்கும்.கிட்டத்தட்ட இருநூறு அடி நீளச் சாக்கடை அவன் ராஜ்ஜியம்.இவர்களுக்கெல்லாம் நோயோ, நோக்காடோ வரவே வராது என்பது போல் நீண்ட காலம் அதே இடத்தில்,கண்ணில் பட்டுக் கொண்டிருந்தான்.இருபது வருடம் கழித்து அந்த ஊருக்கே குடி பெயர்ந்த போது, அவனைக் காணவில்லை.
அதற்குச் சமீபமாக ஒரு வீட்டில் என் அலுவலக நண்பர் வீடு இருந்தது.அவரைப் பார்க்கப் போன போது அங்கே சீட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.வெவ்வேறு வயதில் ஆட்கள் அமர்ந்து பேச்சும் கும்மாளமுமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.சீட்டு விளையாட்டுக்கென்றே ஒரு கலகலப்பு உண்டு. நல்ல சீட்டுக்களாக வராதவன் மட்டும் சற்று நேரம் அமைதியாய் இருப்பான்.நல்ல சீட்டுகளாய் வந்து எதை எங்கே சேர்க்க என்று திண்டாடுகிறவனும் அமைதியாய் இருப்பான்.அது ‘’புள்ள முழிக்கிற முழி பேளறதுக்குத்தான்..’’என்கிற திண்டாட்ட அமைதி.விஷயம் தெரிந்தவர்கள் ‘’எப்பா இந்த ஆட்டைக்கி நான் வரலைப்பா...’’என்று சீட்டைக் கவிழ்த்திவிடுவார்கள்.
ரசிகமணி டி.கே.சிக்கு நெருக்கமான ஒரு வித்துவான் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தார், குழந்தை மாதிரிப் பேசிக் கொண்டிருந்தார். ‘’யாரோ ஸ்ரீதேவீன்னு ஒரு புள்ளையாம், ராதிகான்னு ஒரு புள்ளையாம் படங்கள்ல்ல போடு போடுன்னு போடுதுகளாமே..... டி.ஆர் ராஜகுமாரியெல்லாம் பக்கத்துல நிக்க முடியாதேமே..’’.நீங்க என்ன அண்ணாச்சி லலிதா, பத்மினி மாதிரி ரெண்டு கேரளாக் குட்டிகள் அம்பிகா, ராதான்னு வந்தாச்சு. இவ்வளவு பொது அறிவு கூட இல்லையே என்றார், இன்னொருவர்.எனக்கும் என் நண்பருக்கும் சிரிப்பாக வந்தது.அது தர்க்க பலமில்லாத உண்மை போல கூடத் தோன்றியது. (இப்பொழுது சமீபமாக டி.வியில் போட்ட ஒரு புதுப் படத்தைப் பார்த்த போது, இது யாரு இந்த நடிகை, என்று என் குழந்தைகளிடம் கேட்டேன். அவை கோரஸாகச் சொல்லின, ‘’யாரா? இந்த ஜெனரல் நாலெட்ஜ் கூட இல்லை, நீ எல்லாம் ரிடையராகப் போறே..’’)
நான் நண்பரிடம் கேட்டேன், இங்க அந்தக் காலத்துல ஒருத்தன் எரு தட்டிக் கொண்டு இருப்பானே அவன் என்ன ஆனான் என்று. ஒரு பெரியவர் உற்சாகமாகச் சொன்னார், நீங்க அவனைப் பாத்திருக்கீங்களா, பாவிப்பய என்ன அழகா எரு தட்டுவான் தெரியுமா, காம்பஸ் வச்சு வரைந்த மாதிரி.நாலு நாள் மழை தொடர்ந்து பெஞ்சுது தம்பி, சீஸன் மழை மாதிரியே இல்லை, அடை மழை அது. பாவிப்பய இடத்தை விட்டு நகராம அங்கனயே கிடந்து செத்துப் போனான். அதை விடக் கூத்து முனிசிபாலிட்டிக்காரன் அவனை எடுத்துட்டுப் போறப்ப எங்கள்ட்ட, எருவுக்கு காசு கூடக் கொஞ்சம் குடுங்க சாமின்னு வாங்கீட்டுப் போனான். பாவிப் பய, பாவிப்பய....என்று பாவியாக அடுக்கிக் கொண்டே சீட்டைக் கவிழ்த்தினார்.
-இன்னும் விரியும்

3 comments:

குப்பன்.யாஹூ said...

அந்த தெருவில் உள்ள ரேஷன் கடை பத்தி எழுதலை.

குப்பன்.யாஹூ said...

எரு தட்டின தொழிலாளியின் உடலை எரிக்க எரு வாங்க பணம் தேவை. அற்புதமான வரிகள், இதுதான் உலக நியதி, நுகர்வோர் கலாசாரம்,

அற்பதமான கட்டுரை, நன்றிகள் பல

இனியாள் said...

intha mathiri paithiyangalin kathaigalai nan kooda yosithathu undu, avargal enna aanargal. Iranthu ponargal endral oru melliya varutham varum, kaanamal poi irunthargal endral enna thaan seithukondirupargal endra yosanai varum. Nalla pathivu. itahi nan bookil padikka villai, ithilum eluthuvathu oru vasathi thaan, eninum kaiyil puththagamai padikkum pothu athu oru alathi anatham thaan.

Visitors