Friday, January 7, 2011

தீர்க்க ரேகைகள்....


”இந்த நூற்றாண்டில் நாம் யாருடனும் சண்டையிட முடியாது...நீங்கள் தெருவின் இந்த முனையில் ஒருவருடன் சண்டையிட்டால்..அடுத்த முனையில் அவரின் உதவி நமக்கு தேவைப்படும்...”-அசோகமித்திரன் “ஒற்றன்” நாவலில்.

அசோகமித்திரன், நம் காலத்தின் மிகச் சிறந்த கலைஞன். அவரது பல்வேறான இலக்கியச் சாதனைகளுக்குப் பின்னரும், விருதுக்கோ, அங்கீகாரத்திற்கோ எந்தவிதமான தன் முனைப்பும் காட்டாதவர். தீர்க்கமான் அவரது தமிழ் உரைநடையின் பாதிப்பை நிறையப் பேரிடம் காணமுடியும்.மிக, மிக எளிமையானவர். அவரது தாமோதர ரெட்டி தெரு வீட்டுக்கு டி.நகர் பஸ் நிலையத்தில் இறங்கி,பல முறை சென்றிருக்கிறேன்.அவரது தமக்கையின் உடல் நிலை கருதி பத்து நிமிடம் பேசி விட்டு, “நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் அங்கே வந்துவிடுகிறேன்” என்று சொல்லுவார். அதே போல் அவரது சைக்கிளில் வந்து விடுவார்.
ஒரு முறை ஒயிட்ஸ் ரோடில் உள்ள ஒரு விடுதிக்கு, மதியத்தில் அப்படி வந்து, மாலை மங்கும் வரை பேசிக் கொண்டிருந்தார். அப்போது வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவல். கணையாழியில் தொடராக வந்திருந்த சமயம்.என்னுடன் வந்திருந்த நண்பர் ஒருவர்...வாய்த்துடுக்காக அவரிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கூட அவர் பொருட்படுத்தவில்லை.அன்றைக்கு பாலகுமாரன், சுப்ரமணிய ராஜு, எம்.சுப்ரமணியன், ஜெயபாரதி என்று ஒரு பெரிய கூட்டமே வந்து,அறை கலகலப்பாக இருந்தது.
அவர் கதைத் தொகுப்பு முதன் முதலாக வந்தபோது வண்ணதாசன் படிக்கத் தந்தார். அதைப் படித்த விருத்தியில், சலனம் என்று ஒருகதை எழுதி கசடதபறவுக்கு அனுப்பினேன். பிரதி கூட வைத்துக் கொள்ளவில்லை.அது பிரசுரமானதும் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன், “இது உங்கள் பாதிப்பில் எழுதியது” என்று. ஒரு இன்லண்ட் லெட்டரின் முழுமைக்கும் தன் வாழ்த்தையும், கதை பற்றி அபிப்ராயமும் எழுதியிருந்தார்.அவர் ஆசிரியராக இருந்த கணையாழியில் அதன் பின் இரண்டு கதைகள் வெளிவந்தன. இதெல்லாம் 1973-74-ல்.அதன் பின்னர் என் மீதான அன்பும் , அக்கறையும் அவரிடம் என்றும் குறைந்ததே இல்லை.எப்போது பேசினாலும் நலம் விசாரிப்பார். என்னைத் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பார்.
இன்று கூட என் உரை நடையில் அவரின் பாதிப்பு இருப்பதாகவே உணர்கிறேன்.
அவருக்கு’ சாரல்’ விருது தந்திருப்பது ரொம்பவும் உயர்வான விஷயம்.இந்நேரத்தில் அவருக்கு என் மரியாதையயும், பரிசு தந்த நண்பர்களுக்கு சந்தோஷத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


2 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எந்த விருதுக்கும் முனைப்புக் காட்டாத தத்துவப் பார்வைதான் அவரின் எழுத்துக்கு ஈடான மேன்மை.

இன்று எல்லோரையும் எட்ட வேண்டிய அவரின் எழுத்து சரியானபடி பரவலாக வாசிக்கப்படாமல் காலங்களைக் கடந்து காத்து நிற்கிறது.

என்றாலும் காலம் என்றும் அசோகமித்ரனை நினைவில் கொள்ளும்.

அவருக்குக் கிடைத்த விருதுக்காக வாழ்த்துக்களும், சக கலைஞனை உடனே பாராட்டி கௌரவிக்கும் உங்களுக்கு தலைவணங்குதலும்.

ராகவன் said...

அன்பு கலாப்ரியா அவர்களுக்கு,

அசோகமித்திரனின் ஒற்றன், தண்ணீர், கரைந்த நிழல்கள், பதினெட்டாவது அட்சயகோடு படித்து மிரண்டிருக்கிறேன்... சினிமாவை இதை விட சிறப்பா யாரு எழுதியிருக்காங்கன்னு தெரியலை தமிழ்ல.
சாரல் அவருக்கு செய்த மிகப்பெரிய மரியாதை சொல்வேன் அவருக்கு.

உங்கள் அன்பு வியப்புக்குரியது. வாழ்த்துக்களும், பகிர்வுக்கு நன்றிகளும்

அன்புடன்
ராகவன்

Visitors