Tuesday, August 19, 2008

உதிரி(ப்பூக்)கள்

அமர் ப்ரேம் என்று ஆராதனாவுக்கு அப்புறத்துக்கு அப்புறம் சக்தி சாமந்தா ஒரு படம் எடுத்தார்(இடையில் 'கட்டி பதங்க்”)அமர் ப்ரேம் பார்க்கவில்லை. கே. பாலசந்தர் வெள்ளி விழா என்று எடுத்த படத்தை ஆசை ஆசையாக நானும் கல்யாணி அண்ணனும் பார்க்க்ப் போனோம் படத்தில் ஜெயந்தி செத்தவுடன் படமும் செத்து விட்டது.இதே மாதிரி பாபி (BOBBY)படம் ஸ்டில் களை பிலிம் ஃபேர், ஸ்டார் &ஸ்டைல் ஆகியவற்றில் பார்த்து விட்டு கே ஏ அப்பாஸ் அற்புதமாக தீட்டியிருப்பார் என்று மதுரை மீனாக்ஷி தியேட்டரில் நானும் மு.ராமசாமியும் அடிபிடி போட்டு பார்க்கப்போய் அதிருப்தியுடன் திரும்பினோம்.அப்படி அமரத்வமான காதல் கதையை யார் எப்போதுஎடுக்கப் போகிறார்கள்.தேவதாஸ் நன்றாயிருக்கும்.”அடைய முடியாப் பொருளின் மீது ஆசை தீராது என்ற உடுமலை கவிராயரின் பாட்டு இன்னும் உயிரை எடுக்கிறது.ஆயிற்று நாற்பது வருடம். உன்னை மறுபடி குமரியாய்ப் பார்த்து.பூவாடை வீசி வர பூத்த பருவத்தில் நீலச் சேலையில் பார்த்து வருடந்தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் நீலக்கவிதை எழுதி நானே வைத்துக் கொள்வேன்.அப்படி எழுதிய கவிதைகள் எந்த டயரியில் இருக்கிறதோ.கால்குலஸ் புத்தகத்தில்
“கார்த்திகையின் ஒளியாறு
மார்கழியில் உன்னலோடும்-அது
ஆர்த்திடும் ஒளிப்புனலில் என்
ஆவியின் உயிர்ப்பாடும்”
என்று முதல்ப் பக்கத்தில் (68-ல்) எழுதி வைத்தேன்.அதை படித்து விட்டு இந்தா இந்தப் புத்தகத்தை நீயே வைத்துக் கொள் என்று கால்குலஸ் வாத்தியார் தந்து விட்டார். அவர் புதிதாக வாங்கியிருந்த புத்தகம். நன்றாகப் படிக்கிறேன் என்று எனக்கு தந்திருந்தார்...கொஞ்சம் கோபப் பட்ட மாதிரி இருந்தது...நாலு நாள் கழித்து பாட்டு பிரமாதமா இருக்கு டே என்று நாகர்கோயில்த் தமிழில் சொல்லி விட்டு அதற்காக ஆறு ரூபாய் கொடுக்கலாந்தான் டே என்று சொன்னபோது சந்தோஷமாய் இருந்தது.அந்தக் கார்த்திகையின் நினைவாகத்தானோ என்னவோ வருடந்தோறும் மாலை போட ஆரம்பித்தேனோ என்னவோ.ஆனால் எனக்கு முதன் முதல் மாலை போட்ட குருசாமிக்கு நான் உன் பின்னால் அலைவது நன்றாகத் தெரியும் நீ மலைக்கிப் போயி என்ன கேக்கப் போறேன்னு தெரியும்பா என்றது நினைவிருக்கிறது. அதுதான் அப்போஉண்மையும் கூட,எப்பவும்.

தேடுகிறது
இன்று கைக்
கெட்டாமல்ப்
போன
முயற்சிகளின்
தோல்விகளுக்கும்
அல்லது
முயற்சிகளே
பங்கப் பட்டுப்
போனதற்கும்
முயற்சிகளுக்கும்
காரணமாயிருந்த
உன்னை
நீ
இப்போது என்ன
செய்து கொண்டிருப்பாய்
இன்றைய வேலைகளால்
களைப்பு உன்னை
விழுங்கிக் கொண்டிருக்க
அடுக்களையை
அப்படியே போட்டு
விட்டு
கொஞ்சம்
பட்டாசலுக்கு வந்து
டி.வி.
பார்ப்பாயா
ரெண்டு தோசைக்கு
மட்டுமே மீதமிருக்கிற
மாவை மொத்தமாய்
தோசைக் கல்லில்
ஊற்றி விட்டு
ஏனங்களை
ஒழித்துப் போட்டுக்
கொண்டிருக்கிறாயா

பொறுமையாய்
ஸ்டவ் குமிழையும்
சிலிண்டர் குமிழையும்
மூடி விட்டு

கை கழுவி
நறுவிசாய் உடுமாத்துச்
சேலையில்
துடைத்துக் கொண்டே
படித்துக் கொண்டிருக்கும்
உன்
குழந்தைக்குப்
பரிவு பாராட்ட.....
இதை மறுபடி திருத்தி எழுதுவேனா. பிரசுரம் முக்கியமில்ல உன்னைச் சார்ந்து நிற்கும் இந்தக் கவிதைக்கு...மிக மிக உன்னதமான நின்றுவிடல்...பாதியில் நின்று விடல்,இளமை வழங்கும் இந்தக் கவிதைக்கு. அஸ்வகோஷின் கவிதையில் பிரபாவைப் போல்........

”ஆலய வாசலில்க்
காணேன் கோபுர
அழகின் நிழலிலும்
காணேன்
பொன்னம்பலத்திலும்
பூங்காவனத்திலும்
பொய்கைக் கரையிலும்
உனைக் காணேன்..


அன்புத் தெய்வம்
நீ எங்கே
தேடியலைகின்றேன்” தேவி படத்தில் தக்ஷினாமூர்த்தியின் இசையில் சுசிலாவின் குரல் அமரத்துவமாக ஒலிக்கிறது மனசுக்குள்.

Wednesday, July 16, 2008

உதிரிகள்

நான்கு ரத வீதியும் பர பரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இதயம் போல்,. இதயத்திலிருந்து ரத்தம் பாயும் நாளங்கள் போல தெருக்கள். சித்தர் தெரு. செங்கோல் முடுக்கு, சுந்தரத் தோழர் தெரு அப்பர் தெரு சங்கரோஜித பண்டிதர் தெரு கழுவேற்றி முடுக்கு, காவல் பிறைத் தெரு, குளப்பிறைத் தெரு, நாலு திசைக்கும் எட்டுத் திக்கிற்கும்....தெருக்கள்.தெருக்களிலோ அவ்வளவு பதட்டமோ பர பரப்போ இல்லாமல்....சற்று அமைதியாய்....தெரு.... வீடுகள்...பெரிய வீடுகள், தெரு நீளத்திற்கும் அரண்மனை போல வீடு,கிருஷ்ணன் வைத்த வீடு வேப்ப மரத்து வீடு...ஏழு வளவு, சாவடிப்பிள்ளை காம்பவுண்ட், நடுச் சாவடி வீடு.....பண்ணைய வீடு .பெரிய வீட்டுக்கு எதிர்த்தாற் போல மங்களா வீடு...புழக்க டை அல்லது புற வாசல் தோட்டம் சின்னச் சின்னதாய் குச்சு வீடு.....எல்லாவற்றையும் உள்ளடக்கி காம்பவுண்ட். பெரிதாய்த் தலை வாசல்க் கதவு . தெரு வாசல் கதவு.”எல்லா ஊர்களையும் போல் இங்கும்/ படிக்கும் போது தூங்கிவிழுந்து/ இப்போது விழித்து விட்ட/ பிள்ளைகளால் அறைந்து சாத்தப் படுகிற தெரு வாசல்க் கதவுகள்.....”ரத வீதிகளின் ஜவுளிக் கடைகளில், பல சரக்குக் கடை, மளிகை, போஸ் மார்க்கட்....என்று புதுமைப் பித்தன் ராமச்சந்திரன் (வண்ண நிலவன்) கதா பாத்திரங்கள் ராத்திரி பத்து மணிக்கும் கடையடைக்காத முதலாளிகள்... புது ரிலீஸ் சிவாஜி எம் ஜி
ஆர் படங்களை வெள்ளிக்கிழமையே பார்க்க முடியாமல் ஞாயிறு காலைக் காட்சிக்கு ஒத்தி வைக்கும்,அகாலமாய் வீடு திரும்பும் கடைச் சிப்பந்திகள், கணக்கு (கோமதிநாயகம்)ப் பிள்ளைகள்.....அடையும் கூடு ,,, இந்தக் குச்சு வீடுகள். படம் பார்த்த வேகத்தில் குச்சு வீட்டு தகரக் கூரையின் மத்தியான வெக்கையையும் பொருட் படுத்தாமல் தாம்பத்திய சுகம் காணத் துடிக்கும்....வாலிபம் கதவடைத்துக் கொள்ளும் ஞாயிறு.
தெருவும் ஊரும் பெயர்களில் தான் வேறு. வாழ்க்கை ஒன்றுதான்.....சித்திரங்களும் சிக்கல்களும் ஒன்றுதான் ஒரே கோட்டுச் சித்திரங்கள்தான்


கோட்டுச் சித்திரம்
________________________

தெரிந்தவர் தெரியாதவர்
போனஸ் கிடைத்தவர்
பொங்கல்ப் படி ’வசூலித்தவர்’
புதிய கடன் கிடைத்தவர்

யாவருக்கும் நிறுத்து
பொட்டலங்கள் கட்டித் தந்து
வீடு வந்த போது
அடகுக்குப் போனவை
தவிர்த்து அத்தனை
பாத்திரங்களும்
பொங்கல் விடத் தயாராய்
பானையும் கழுவி
வைத்து விட்டு,
இடி பட்டு மிதி பட்டு
இலவச வேட்டி சேலை
வாங்கின அலுப்பில்
வீடு முழுக்க அடைத்துக்
கொண்ட இரட்டைப்பாயில்
துவண்டு தூங்கிக்
கொண்டிருந்தாள்
தூக்கம் கெடுக்கத்
தோன்றாமல் ஒன்னும்
தின்னாமல் தானும்
உறங்கிப் போனான்

காலையில் எழுப்பிய போது
இஷ்டமின்றி எழுந்து
எரிச்சலுடன்
பாயைச் சுருட்டி வைத்தான்.
பளீரென்று
மாக் கோலம்-
தரையில்
(இடுக்கண் வருங்கால்
நகுக என்கிற மாதிரி)

(18.01.1994)(உதிரி நம்பர் -3)