Tuesday, November 10, 2009

ஓடும்நதி-5


வேதமும் கோயிலும் இந்த மண்ணின் அகராதியில் உள்ளதுதான். வேதக்கோயில் என்றால் சற்று அந்நியப் பட்டு விடுகிறது..``அவங்க வேதக்காரங்க’’ என்றால் அர்த்தம் மாறுபட்டு விடுகிறது. எங்களது வேதக் கோயில் பள்ளிக் கூடத்திலிருந்து, நாளைக்கு பளையங்கோட்டைக்கு கூட்டிப் போகிறோம் எல்லாரும் நாலணா கொண்டு வந்து விட வேண்டுமென்று என்று நாலாம் வகுப்பு பால் மாணிக்கம் சார் சொன்னார். நல்ல அழகான கருப்புக் கலரில் இருப்பார். குரல் நன்றாக இருக்கும்.அவரே சொல்லிக் கொள்ளுவார், பேர் தாம்லெ வெள்ளையா வச்சுட்டாரு எங்க அப்பா.
மறுநாள் பாளையங்கோட்டையில் இருந்த விழியிழந்தோர் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்கள்.அவர்கள் பாய் நெய்வதையும் கூடை முடைவதையும் அதிசயமாகப் பார்த்ததுக் கொண்டிருந்தோம். நாங்கள் போன அன்று அங்கே விளையாட்டு விழா. ஓட்டப் பந்தயப் பாதையில் கயிறுகள் கட்டி அதற்குள் ஓடினார்கள் அங்குள்ள மாணவ்ர்கள்.ஆனால் ஒருவர் உடல் கூட கயிற்றில் படவில்லை, பாருங்கடா என்று சார் சொன்னது நன்றாய் நினைவிருக்கிறது.
பல வருடங்கள் கழித்து, அந்த வளாகத்தில் உள்ள சர்ச் சில் ஒரு கல்யாணம். நானும் வண்ணதாசனும் போயிருந்தோம் அன்று மாணவர்கள் யாரும் தென்படவில்லை. விடுமுறையோ அல்லது விடுதியை விட்டு வரவில்லையோ தெரியவில்லை. அந்த வேதக் கோயிலின் சுவர்கள் பளிச்சென்றிருந்தது. ஒரு அசாத்திய மௌனத்தை உணர்த்திக் கொண்டிருந்தது. திருநெல்வேலி டயோசிசன் கோயில்களில் சொரூபங்கள் இருக்காது. ஆனால் ஐயர் பிரசிங்கிக்கும் மேடை, பாடல்கள் பாடுவோரின் இடம் இவற்றில் சிறிது அலங்காரம் இருக்கும்.இங்கே அது கூட எளிமையாக இருந்தது.சில சர்ச்சின் பக்கவாட்டுச் சுவர்களில் ஒனறிரண்டு படங்கள், இயேசுவின் ‘ராப் போஜனம்’ இயேசு ஆட்டுக் குட்டியுடன் உள்ள சித்திரம் என்று ஏதாவது இருக்கும்.
ஆனால் இங்கே எதுவுமில்லாமல் சுவர்கள் வெண்மையாய்ப் பளிச்சென்று இருந்தது.ஏன் என்ற கேள்வி என்னைப் போலவே வண்ணதாசனின் மனத்திலும் ஒடியிருக்க வேண்டும்.திருமணம் முடிந்து வெளியே வந்த போது ப்லைண்ட் ஸ்கூல் சர்ச் என்பதால் படங்கள் எதுவுமில்லையோ என்று கேட்டு விட்டு அமைதிக்குள் புகுந்து கொண்டார், அவர். இருக்கலாம் என்று நானும் நினைத்துக் கொண்டேன்.சொல்லவில்லை.
நாலைந்து வருடங்கள் கழித்து. ஜான்ஸ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், மறு நாள் வெள்ளி விழா சுதந்திர தினக் கொண்டாட்டங்கள், விடுமுறை. லைப்ரரியில் சில புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்ததால் சற்று நேரமாகி விட்டது.அப்போது ஜெயராஜ் சார் அவசரம் அவசரமாக வந்தார்.மற்ற மாணவர்கள் எல்லாரும் போய் விட்டார்களோ,இப்ப தான் முதல்வர் ஒரு பொறுப்புச் சொன்னார். நாளை ப்லைண்ட் ஸ்கூலில் ஃப்லாக் ஹாய்ஸ்ட் பண்ணனுமாம், நீங்க வர முடியுமா என்று அங்கிருந்த எங்கள் இரண்டு மூன்று பேரிடம் கேட்டார். யாரோ, சாப்பாடு போடுவீங்களா, இல்லேன்னா வெறும் மிட்டாய் கொடுத்து அபனுப்பிருவீங்களா என்று விளையாட்டாகக் கேட்டார்கள். நான் எங்கள் வீட்டில், விருந்தே ஏற்பாடு செய்கிறேன் என்று உற்சாகமாய்ச் சொன்னார்.திரும்பத் திரும்ப கேட்டார், ஃப்ரெண்ட்ஸ் வர முயற்சி பண்ணுங்களேன் என்று. ஒரு விடுமுறை நாளை வீணடிக்க யாருக்கும் மனமில்லை. அமைதியாக இருந்தோம்.
அவர் முகத்தில் தெரிந்த எதிர்பார்ப்பு, மனதை என்னவோ செய்தது.நான் வருகிறேன் என்றேன்.இன்னும் இரண்டு மூன்று பேர் நங்களும் வாரோம் சார் என்றார்கள்.கல்லூரியை விட்டு சற்று தூரம் வந்த பின்னும் சைக்கிளில் பின்னாலேயே வந்து சொன்னார்,வீட்டில் மதிய விருந்து ஏற்பாடு செய்து விடுகிறேன் என்று.அதெல்லாம் வேண்டாம் சார் வந்திருதோம் என்று உறுதியளித்து விட்டுக் கிளம்பினோம்.
காலையில் சார், அந்த விழியிழந்தோர் பள்ளியின் வாசலில் காத்திருந்தார்.நல்ல வெயில் வந்து விட்டிருந்தது. பள்ளியின் மாணவர்கள் சற்று நிழலிலேயே அமர்ந்திருந்தனர். கல்லூரி முதல்வர் அவர்களே வருக வருக என்று ஒரு கரும் பலகையில் எழுதி வைத்திருந்தது. எங்களைத் தவிர கொஞ்சம் இளங்கலை பயிலும் மாணவர்களும் வந்திருந்தனர்.வேகமாக மாணவர்களை அணிவகுத்து நிற்கச் செய்து விட்டார்கள், அந்த ஆசிரியர்கள். பிரம்புடன் நின்ற ஒருவரிடம், பிரம்பை ஒளித்து வைக்கும் படி பள்ளி நிர்வாகி ரகசியமாய்ச் சொன்னார். அது எங்களைப் பார்த்ததனால் என்று நினைத்தேன். தூரத்தில் சர்ச் மூடியிருந்தது. ஒரு ஜன்னல் கூட திறக்கப் படவில்லை.
ஜெயராஜ் சார் கொடியேற்றினார். ஸ்கூல் சல்யூட் என்று உரக்கக் கத்தினார் பிரம்பை ஒளித்து வைத்தவர்.எங்களிடம் தம்பிகளா பலமா கைதட்டுங்க என்றார்.தட்டினோம் இன்னும் பலமா தட்டுங்க, என்றார். ஜெயராஜ் சார் ‘ப்ளீஸ்’ என்கிற மாதிரியில் பார்த்தார். பலமாகத் தட்டினோம். இப்போது அந்த மாணவர்களும் கை தட்ட ஆரம்பித்தனர். கைதட்டலை நாங்கள் நிறுத்திய பின்னும் அவர்கள் தட்டிக் கொண்டிருந்தார்கள்.கொடி பட்டொளி வீசிப் பறந்தது.அவர்கள் அருகே போய் என்னவோ செய்தார்,பிரம்பு சார்.ஓரிரு நிமிடங்களில் அமைதியாகி விட்டது வளாகம்.இனிப்பை வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.ஜெயராஜ் சார், ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வாங்க பக்கத்திலதான் இருக்கு என்றார். ஒட்டு மொத்தமாக மறுத்தோம்.. நான் என்றுமில்லாத வேகத்தோடு சைக்கிளை மிதித்தேன்.
வீட்டுக்கு வந்ததும் எழுதினேன், ஒரு அடித்தல் திருத்தலில்லாமல் ஒரு கவிதையை. கனமான இதயம் கொஞ்சம் மட்டுப்பட்டது மாதிரி இருந்தது.

குருடர் பள்ளியில்
கொடியேற்றம்


விழியுள்ள கணவான்
விழாக் கொடியேற்ற
வெள்ளி விழாவென்று
களித்தனர்-சுற்றி நின்ற
கண்ணற்றவர். (15.08.1972)

Tuesday, November 3, 2009

ஓடும் நதி-4


தபால்காரர் நந்த கோபால், காலைநேர விநியோகக் கடிதங்களை எடுத்துக் கொண்டு, எங்கள் தெருவுக்குள் வரும் போது அநேகமாய் உச்சி வெயிலாய் இருக்கும். வண்ணதாசன் அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பார்.அவரது அன்பகம் வீட்டுக்கு எப்படியும் ஒரு கடிதமாவது இருக்கும். அவருக்கு தவறாமல் பெங்களூரிலிருந்து அன்பழகன் தினமும் எழுதி விடுவார்.இல்லையென்றால் சோவியத் நாடு பதிப்பகத்திலிருந்து புத்தகம், அல்லது செய்திமடல் கட்டாயம் இருக்கும்.
எனக்கு ஒரு கால கட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பாகங்களிருந்து எம்.ஜி.ஆர் மன்றக் கடிதங்கள் சில இருக்கும். கவிதைகள் பிரசுரமாக ஆரம்பித்த காலங்களில், ‘மாறா அன்புடன்’ பாலகுமாரனோ, சுப்ரமணிய ராஜுவோ, நா.விச்வநாதனோ தவறாமல் எழுதியிருப்பார்கள். மாலை நாலு மணி வாக்கில் இரண்டாவது விநியோகத்துக்கு ஒரு காத்திருத்தல், என அப்போது ஒரு நாளில் இரண்டு முறை மட்டுமே எதிர்பார்த்திருந்தால் போதும். எங்கள் வீடு தெருவின் மேற்குக் கடைசியில் இருந்தது. கிழக்கிலிருந்து நந்த கோபால் நெருங்க நெருங்க உள்ளம் கிடந்து அடித்துக் கொள்ளும். இவ்வளவுக்கும் அவர் எந்தக் காதல் கடிதங்களையும் கொண்டு வந்தது கிடையாது.இது தவிர விரைவு அஞ்சல் என்று ஒன்று உண்டு. அதிகமாக பத்துப் பைசா தபால்த் தலை ஒட்டி ‘எக்ஸ்ப்ரெஸ் டெலிவெரி’ என்று எழுதி விட்டால்ப் போதும்.ஒரு நாளின் பகலில் எப்போது வேண்டுமானாலும் கொண்டு வந்து கொடுப்பார்கள்.
என் நினைவுக்குட்பட்டு எனக்கு வந்த ஒரே ஒரு எக்ஸ்ப்ரெஸ் கடிதம் மதுரைப் பல்கலைக் கழகத்திலிருந்து வந்தது, ”தினசரிகளில் நீ தவறுதலாக புள்ளியல்த் தேர்வில் தோல்வி என்று பிரசுரமானது தப்பு, நீ வெற்றி பெற்று விட்டாய், உனக்கு அடுத்த எண்ணுடையவரே தோல்வி”.அன்று திருநெல்வேலியில் தேரோட்டம்.தேரை இழுத்து தெருவில் விட்டு விட்டு வந்த உற்சாகத்தோடு இதுவும் சேர்ந்து கொண்டது.ஆனால் கொஞ்ச நேரத்தில், பாஸாகிப் ஃபெயிலான சீனிவாசகம் அவனுக்கு வந்த அதன் நகலோடு, பாவமாக என்னைத் தேடி வந்த போது, எல்லாரும் நீ ஃபெயிலாகவே ஆகியிருக்கலாம் என்றார்கள்.அவன் மிக மிக நேர்மையான போலீஸ் டி.எஸ்.பி யாகப் பணியாற்றி சமீபத்தில் இறந்து போனான்.

இப்போதென்றால், கைப்பேசியோ மின்னஞ்சலோ, முகப்(பு)புத்தகமோ, ட்விட்டரோ எப்போது வேண்டுமானாலும் நீளமாகவோ, குறுகலாகவோ அஞ்சல் வரலாம், கணினியைத் திறந்தால் போதும். கைப்பேசியைத் தான், நாம் படிக்கும் அறையோ, பாட்டாசலோ, சமையலறையோ, கக்கூஸோ பிரிவதேயில்லையே.
நாம் சில கடிதங்களை எதிர் பார்த்துக் காத்திருப்போம்., அலுவலகத்திலிருந்து வரும் போதே கடிதம் ஏதாவது வந்ததா என்று கேட்டபடியே வருவோம். ஆமா என்று நீட்டுவார்கள். ரீடர்ஸ் டைஜெஸ்டிலிருந்து குப்பையாக ஏதாவது புத்தக விளம்பரம் வந்திருக்கும்.’ச்சை’ என்றிருக்கும். ஆமா உங்களுக்கு தினம் ஏதாவது காசோலையா வரும் என்று கேலி செய்வாள் மனைவி. 28 வருடத்திற்கு முன், ஒரு நாள், கவிஞர் மீரா என்னுடைய முதல்க் கவிதைத் தொகுதிக்கு அது விற்ற கணக்கும், ராயல்ட்டியாக 165/- ரூபாய்க்கு ஒரு வரைவோலையும் அனுப்பியிருந்தார். நான் பெற்ற முதலும் கடைசியுமான ராயல்டி அதுதான். மகிழ்ச்சியாக இருந்தது.
சுஜாதாவுக்கு என் ‘’உலகெல்லாம் சூரியன்’’ என்ற தொகுப்பிற்கு முன்னுரை எழுத முடியுமா என்று கேட்டு கடிதம் எழுதியிருந்தேன், அதிலுள்ள தயக்கத்தை புரிந்து கொண்டாரோ என்னவோ, ‘’என்ன கலாப்ரியா, கரும்பு தின்ன ராயல்ட்டியா’’ என்று ஒரு வரி கார்டில் எழுதிப் போட்டுவிட்டு, மூன்றே நாளில் அற்புதமான முன்னுரை ஒன்றை கணினியில் அச்சாக்கி அனுப்பியிருந்தார். தமிழில் கணினியில் எழுதுவதை அவர் துவக்கி வைத்திருந்த நேரம அது.
என் மனைவி சரஸ்வதி, குழந்தை பாரதியைப் பிரசவித்திருந்த சமயம். ஒரு நண்பர், ஒரு கார்டு எழுதியிருந்தார்.”கலாப்ரியா, உங்கள் பெயர், உங்கள் துணைவி பெயர், உங்கள் புதிய மகவின் பெயர் மூன்றிலும் கலைமகள் இருக்கிறாள், மூவருக்கும் லட்சுமி கடாட்சம் பொங்கட்டும்” என்று. அவர் ரசிகமணி டி.கே.சியின் பெயரர், திரு.தீப.நடராஜன்.
கதாசிரியர் வண்ணதாசனுக்கு நீண்ட காத்திருப்புக்குப் பின் நல்ல வேலை கிடைத்தது. அதையொட்டி அவரின் மூத்த சகோதரர் கணபதி (எங்களுக்கெல்லாம் அவர் தான் குரு) ஒரு கடிதம் எழுதியிருந்தார். அப்போது நா.பார்த்தசாரதி அவரது தீபம் இதழில், ‘தேவதைகளும் சொற்களும்’ என்று ஒரு பிரபலமான சிறு கதை எழுதியிருந்தார்.கணபதி அண்ணனின் இன்லேண்ட் கடிதத்தில் நான்கே வரி எழுதியிருந்தது.
‘’தேவதைகளும் சொற்களும் எப்போதாவதுதான் கிடைக்கிறார்கள். சமயத்தில் தேவதைகள் கூட தென் பட்டு விடுகிறார்கள்.....ஆனால் வார்த்தைகள்.... அவைதான் கிடைப்பதில்லை..வாழ்த்துக்கள் கல்யாணி...,” என்று
(வலைப் பதிவுகளில், நீலப்பற்களில், ட்விட்டரில் சணடையிட்டுக் கொள்கிறவர்கள் இதை வாசிக்கக் கடவார்களாக)