Monday, January 19, 2009

பனி தீராத வீடு....


இனி இதுதான் வாழ்க்கை, இனி மேல் கனவுகளுக்கு இடமில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.வீட்டில் இரண்டு நாளாக அம்மாவும், குழந்தைகளும் மூன்று நேரமும் வெறும் சீனிக் கிழங்கை, வெந்து தின்று தோட்டத்திற்கும் வீட்டிற்கும் போவதும் வருவதுமாக இருந்தார்கள்,கையில் தண்ணீர்ச் செம்புடன். அதற்கு கக்கூஸ்ச் செம்பு என்றே பெயர், நிறைய வீடுகளில் அப்படியொன்று இருக்கும். கனத்த பித்தளைச் செம்பு. அதிகம் துலக்காமல் களிம்பு ஏறிப் போயிருக்கும்.அதை மறந்து கூட வீட்டிற்குள் கொண்டு வரமாட்டார்கள். பின் புறத் தார்சாலில்த் தான் எப்போதுமிருக்கும்.இது போக, கழிப்பிடத்தின் அருகேயே எல்லாக் குடித்தனக்காரர்களுக்குமான கல்கத்தா வாளி இருக்கும்.ஆனால் வீட்டின் பெண்கள், குழந்தைகள் எல்லாரும் செம்பைத்தான் தேர்வு செய்வார்கள்.அந்தச் செம்பை எப்படி இன்னும், எனக்குத் தெரியாமல், விற்காமல் இருக்கிறார்கள் என்று இரண்டு நாளுக்கு முந்தித் தான் நினைத்திருந்தேன்.ஏதோ கிராமத்திலிருந்து கொஞ்சம் நெல் வருகிறது.மேல்ச் செலவுக்கு குச்சு வீடுகளின் வருமானம் இருக்கிறது.எல்லாரும் இரண்டு வேளை சாப்பிட்டு விடுகிறார்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இரவுச் சாப்பாட்டை எனக்கு அநேகமாக நண்பர்கள் வாங்கித் தந்து விடுவார்கள்.நான் சாப்பிட்டு விட்டேன் என்று தெரிந்ததும், அம்மா சாப்பிடுவாள், கொஞசம் பருக்கைகளை.
நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளவில்லை.அவ்வப்போது சாமான்கள் சில காணாமல்ப் போகும்.ஏதோ அடுப்பெரியும்.சீனிக் கிழங்கைத் தின்று எல்லாரும் வெளிக்கிப் போன வண்ணமாய் இருக்கிறார்கள், என்பதை பெரிய அண்ணன் தான் கோபத்தில் சொன்னான்.கோபம் என்று கூடச் சொல்லமுடியாது.மெத்தப் படித்த என்னிடம் அவன் கோபப் பட்டுப் பிழைக்கவா. அவன் கெந்திக் கெந்தி நடமாடிக் கொண்டிருந்தான்.மடி கனமாக இருந்தது.என்னமாவது பொருளை மடியில் ஒளித்து எடுத்துச் செல்கிறானோ, விற்பதற்கு என்று, ``அது என்னத்தை மடியில வச்சுருக்க,‘’ என்றேன். ஒன்னுமில்லை,ஆப்பரேஷன் பண்ணி இருக்கேன், நடக்க முடியலை என்றான்.``ஆப்பரேஷனா, எதுக்கு’’ என்றேன், அதான்,அந்த ஆப்பரேஷன்.சொல்லும் போது முகத்தில், கோபம் கரைந்து, ஒரு திருப்தி தெரிந்தது. நூறு ரூபாய அம்மாட்ட கொடுத்துட்டேன், அரிசியையும் பொங்கித் தின்னாச்சு,வீட்ல வேற என்னமும் இல்லை, நீயும் நானும் தான் சோறு திங்கோம்.ஐம்பது ரூபாய் கரண்டுப் பணம் கட்டியாச்சு. பீஸைப் புடுங்கிட்டுப் போய்ட்டான்.அதுக்கு வேற தெண்டம் அஞ்சு ரூபா என்றான்.மனைவியைப் பறி கொடுத்து எட்டு வருஷமாச்சு.இது என்னடா கொடுமை, இப்பப் போய் குடும்பக் கட்டுப்பாடு பண்ணீட்டு வந்து நிக்கானே. இது வரை அவன் வேலை எதற்கும் போனதே இல்லை.இது தான் அவன் குடும்பத்திற்கு சம்பாதித்துக் கொடுத்த முதல்ப் பணம்.என் முன்கோபத்திற்குப் பயந்து என்னிடம் யாரும் இதைச் சொல்லவில்லை.அவன் சொல்லி முடிக்கும் வரை அம்மா அடுப்படியிலேயே நின்று கொண்டிருந்தாள்.அப்புறம் சற்றே வெளியே வந்து `` ஆமா ‘’ என்று மட்டும் சொன்னாள், சொல்லும் போதே அழுகையில் முகம் கோணலாகிப் போனது. எனக்கும் தாங்க முடியவில்லை.பட்டாசலுக்கு வந்து தலையில் தலையில் மடார், மடாரென்று அடித்துக் கொண்டேன். இப்படி நானும் செய்ததில்லை.
அப்பா தன் மரணப் படுக்கையில் இருக்கையில் ஒரு நாள் சொன்னார் ``அவன்ல்லாம் என்னை எங்கே பாக்கப் போறான்’’ என்று. நான் அப்படி நினைத்ததே இல்லை.அப்பா மேல்த்தான் எனக்குப் பிரியம்.அப்பா படுக்கையில் விழுந்த சமயம் தான் நான் சிகரெட்டுக்குப் பழகி இருந்தேன்.இதனால் சற்று அருகில்ப் போவதை தவிர்த்தது வாஸ்தவந்தான்.ஆனால் அவரை நெருங்கக் கூடாது என்று நினைத்ததே இல்லை. இப்படி அவர் சொன்னதைக் கேட்டதும், கையாலாகத் தனத்தின் வெளிப்பாடாய் தலையில் அடித்துக் கொண்டு கத்தி அழுதேன் காணாததற்கு அன்று க்ரூப் -2 தேர்வின் கடைசிப் பரீட்சை வேறு.பரீட்சை எழுதப் போகிறவன் இப்படியொரு மன நிலையிலா போவது என்று அக்காவிடம் அழுதேன். அக்காவும் அம்மாவும் சமாதானப் படுத்தி மாடிக்கு அழைத்துப் போனார்கள்.அதிலிருந்து அப்பாவிடம் பேசுவதே இல்லை.அந்த அனுபவம் வேறு விதமான வெறுப்புகளை வீட்டிலுள்ளவர்கள் மேல் ஏற்படுத்தி இருந்தது. செய்யவே நினைக்காத செயலுக்கு ஏன் இப்படியொரு பழிச் சொல் என்கிற நினைப்பு.
அப்பாவிடம் பேசவே இல்லை.பட்டாசலில் கட்டிலில் படுத்த படுக்கையாகி விட்டார்.மேலெல்லாம் படுக்கைப் புண். காச நோய் கடுமை கொள்ளத் தொடங்கி இருந்தது. நண்பனும் உறவினனுமான டாக்டர் பாலு தினமும் வந்து ஊசி போட்டுச் செல்வான். காசு எதுவும் வாங்கிக் கொள்ளமாட்டான்.அந்த நேரத்தில் தான் சுப்ரமணிய ராஜு திருமணம் சுவாமி மலையில் நடந்தது.ராஜுவுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்.ஏற்கெனெவே அவன் எனக்காக அவனது டி.டி.கே கம்பெனியில் வேலைக்கு முயன்று கொண்டிருந்தான்.வேலைக்கு விண்ணப்பம் வாங்கி வைத்து, வாசு சாரிடம் சொல்லி இருந்தான். ``இன்னும் ஓரிரு வாரத்தில் நீ சென்னை வாசியாகப் போகிறாய், நம்பிக்கையோடு இரு, எப்படியும் உனக்கு வேலை கிடைக்காமலே போகாது.’’ என்று கடிதம் எழுதி இருந்தான். அத்தோடு யாரிடமாவது பணம் வாங்கிக் கொண்டு கட்டாயம் திருமணத்திற்கு வந்து விடு,நான் திரும்பும் போது பணம் தந்து அனுப்புகிறேன்.என்று எழுதி இருந்தான்.
நாளை நமதே - 75-ஜூலை 4- படம் பார்த்து விட்டு, முருகானந்தத்தோடு, அவன் வீட்டிற்குப் போனேன்.ரொம்ப அருமையானவன்.அவனைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது.அவன் அம்மாவிடம் சொல்லி அவன் வீட்டுக்கு அடுத்த அடகுக் கடைச் செட்டியாரிடம்மோதிரத்தை வைத்து ஐம்பது ரூபாய் கேட்கச் சொன்னேன். நானும், அவனும் கேட்ட போது, நாற்பதுக்கு மேல் தர முடியாது என்று சொல்லி விட்டார்.அவனதான் வா அம்மாவிடம் சொல்லி கேட்டுப் பார்ப்போம் என்றான்.அம்மாவிடம் சொன்னதற்கு, ஏல நாயி, மோதிரத்த அடகு வச்சாலே கல்யாணத்துக்குப் போகணும் அப்படீன்னாங்க. அவனுடைய அம்மா எப்பவும் அப்படித்தான் கூப்பிடுவா. சிரிச்ச மானிக்கித்தான் பேசுவா, நல்ல சங்கீதம் தெரியும்,வீணை வாசிப்பாள். வாசிச்சுக் கேட்டதில்லை.ஆனால் வீணை வாசிக்கிற மாதிரி போட்டோ இருக்கும்.ஏதாவது ராகத்தை முனு முனுத்துக் கொண்டிருப்பாள்.சஷ்டிக்கு விரதம் இருந்தால், கவசம் பூராவையும் (முழுவதையும்) ராகத்தோடு பாடிக் கொண்டிருப்பாள். `மனமே முருகனின் மயில் வாகனம்’ பாட்டென்றால் ரொம்பப் பிரியம்.இது இந்தோளம் தானே என்று ஒரு முறை கேட்டேன், இல்லையே, அப்படித்தானா என்று ம்னசுக்குள் பாடிப் பார்த்துக் கொண்டு, ஆமா இந்தோளம் தான். ஆமா, உனக்கு ராகமெல்லாம் ரொம்பத் தெரியுமோ என்றாள்.எனக்கு சினிமாப் பாட்டை வச்சு கொஞ்சம் தெரியும் லாலா மணி எப்பவாவது சொல்லுவான். இது இன்ன ராகம் என்று படம் பார்க்கையில்.நான் கெத்தாக ஏன் உங்களுக்கு மட்டும்தான் தெரியணுமோ, நாய்க்கும் ராகம் தெரியும், என்றேன்.எங்கே, அம்சத்வனிக்கு ஸ்வரம் சொல்லு பார்ப்போம். என்றாள்.நான், அகத்தியர் படத்தில் வருகிறதை வைத்து ல லா லா என்று ஏதோ உளறினேன்,. ஏய் மூதேவி, பாடீட்டு என்று தலையைப் பிடித்து ஆட்டி, நாடியைத் தொட்டு முத்தமிட்டுக் கொண்டாள்.ஆமா, கொஞ்சு, இருபத்தி அஞ்சு வயசு நாயை, என்று முருகானந்தமும் சிரித்துக் கொண்டான்.அவன் கதை விடுதாம்மா, ஒரு எளவும் தெரியாது பயலுக்கு என்றான் முருகானந்தம்.
அவள் போய் செட்டியாரிடம் சொல்லி ஐமபது ரூபாய் வாங்கி வந்து விட்டாள்.ராத்திரி பத்து மணிக்கு எக்ஸ்பிரஸ் பஸ், திருச்சிக்கு.அப்பாவிடம் போய் ரொம்ப நாளைக்கு அப்புறம் பேசினேன். , ``நான் தஞ்சாவூர் வரை போய்ட்டு வாரேன்., ஃப்ரெண்டோட கல்யாணம், அவன் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி இருக்கிறான்.’’ என்றேன்.``இப்பவா, எனக்கு உடம்பு ரொம்ப முடியலையே’’ என்றார்.அதெல்லாம் ஒன்னும் ஆகாது, என்று சொல்லிவிட்டுக் கிளம்பும் போது, கட்டில் அடியிலிருந்த ஒரு சின்ன டிரங்குப் பெட்டியை எடுக்கச் சொன்னார்.அதில், வீட்டு வாடகை ரசீதுகள், ஏதோ சில அடையோலைகள்,(நிலத்தைப் பயிர் வைக்கிற சம்சாரி எழுதித் தரும் ஒப்பந்தம்). ``டிருநெல்வேலி டூட்டிகுரின் எலக்ட்ரிக் சப்ளைஸ்”ரெஸிடெண்ட் எஞ்சீனியர் சீனிவாசன் கையெழுத்துப் போட்ட, தனியார் மின்சாரக் கம்பெனியின், அது தமிழ்நாடு மின் துறையுடன் இணைக்கப் பட்டு விட்டது., டிப்பாஸிட் ரசீது, இடையே திருநெல்வேலி நகர்க் கூட்டுறவு பாங்கு கடன் புஸ்தகம். அதிலிருந்து ஒரு ஐந்து ரூபாயை எடுத்து தந்தார்.வாங்கிக் கொண்டேன். அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
வழியெல்லாம் நல்ல தூக்கமில்லை பஸ்ஸில்.கண்ட கண்ட கனவு. விபத்து நடக்கிற மாதிரி, வாட்ச் கட்டிய, மணிக்கட்டிலிருந்து துண்டாகிக் கிடக்கும் ஒரு கை தோன்றிக் கொண்டே இருந்தது, கனவில். தெருவில் நடந்து கொண்டிருக்கிறேன், தெரு அகலத்துக்கு ஆள் உயரத்துக்கு தூரத்தில் வாய்க்கால்த் தண்ணீர் போல வெள்ளம், தூரத்தில் வருகிறது.எப்படியோ திருச்சி போய், கும்மோணம் பஸ் பிடித்து ஸ்வாமி மலை சேர்ந்த போது நல்ல பசி. ஜெய பாரதி(குடிசை ஜெய பாரதி) இருந்தான்.அவன் தங்கை பாரதி தான் மணப்பெண்.சற்றுப் பொறு சாதம் ஆகிவிடும் சாப்பிடலாம் என்றான்.காபி சாப்பிட வெளியே போனோம்.அவன் அப்போது தினமணி கதிரில் இருந்தான்.என்னுடைய சிறுகதை ஒன்று அதில் வந்திருந்தது.-கண்ணாடி ஜன்னலில் விட்டெறிந்த கல்-அதற்காக 75/- ரூபாய் விரைவில் வரும் என்றான். மோதிரத்தை மீட்டு விடலாம், என்று நினைத்தேன். கும்மோணம் போய் காவேரியைப் பார்க்கணும், அதற்காகவே சீக்கிரம் வந்து விடு என்று ராஜு சொல்லி இருந்தான்.ஆனால் காவேரியில் சொட்டுத் தண்ணீர் இல்லை.ராஜுவும் மாலையில்தான் வருவான் என்றார்கள்.சாமி மலைக் கோயிலேறி இரவில், காத்தாட உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.நான், ஜெய பாரதி, அலிடாலியா ராஜாமணி, ``இடைவெளி’’ எழுதிய சம்பத்,.ராஜுவின் தம்பி ஆர்,விசுப்பிரமணியன்,நா விச்வநாதன்.என்று எல்லோரும். அநேகமாய் எல்லாரும் சம்பத்தைத் தான் கேலி செய்து கொண்டிருந்தர்கள், அவன் மனைவிக்கு அட்ங்கி ஒடுங்கி நடப்பதாக.அவனும் கூச்சமாக சிரித்துக் கொண்டிருந்தான்.அவனது அந்த பிரபலக் குறுநாவலும் , எனது `சுயம் வரம்’ குறுங்காவியமும் ஒரே தெறிகள் இதழில் வெளி வந்திருந்தது.அவனா அந்த நாவலை எழுதியது என்று எனக்கு ஆச்சரியம்.எனக்கு டி.டி.கேயில் கிடைக்க இருந்த வேலையை, திடீரென்று தற்கொலை செய்து கொண்டுவிட்ட ஒரு வாட்ச் மேன் பையனுக்கு கொடுக்க வேண்டி வந்து விட்டதாக ராஜு சொன்னான்.பர்ச்சேஸ் டிபார்ட்மெண்டில், அசிஸ்டண்ட் வேலைக்கு உத்தரவெல்லாம் தயாராகிக் கடைசி நேரத்தில் மாறி விட்டதாகச் சொன்னான். அந்தப் பையனுக்கு டைப் அடிக்கத் தெரிந்திருந்தது ஒரு காரணம் என்று சமாதானம் சொன்னான்.என்னை ஏதோ வெள்ளம் அடித்துக் கொண்டு போவதாக உணர்ந்தேன்.
காலையில் ஒரு பம்ப் செட்டுக்குப் போய் குளித்து விட்டு,காபி சாப்பிட்டோம். மாலன் வந்து விட்டான்.அவன் அப்போது தஞ்சாவூரில் இருந்தான்.அவன் ராஜாமணி, நான், எல்லோரும் காலையில் கோயிலுக்குக் கிளம்பினோம்.அவர்கள் சற்று முன்னே நடந்து கொண்டிருந்தார்கள்.நான் முழுக்கை சட்டையை மடித்து விட்டபடியே தொடர்ந்து கொண்டிருந்தேன்.கோயிலின் அடிவாரத்தை ஒட்டிய, வடக்கு வீதி.பாதித் தெரு வந்திருப்பேன், தெரு ஓரமாய் இருந்த குப்பைத் தொட்டி அருகே நின்றுகொண்டிருந்த ஒருவன், ஒரு கையில் அரிவாள், இன்னொரு கையில் நல்ல உருட்டுக் கட்டை, திடீரென்று எங்களை விரட்டத் தொடங்கினான். அவர்கள் எல்லோரும் கிழக்காக ஓடி விட்டார்கள்.நான் மாட்டிக் கொண்டேன்.திரும்பி ஓட முயற்சிக்கையில்,கால் இடறிக் கீழே விழ்ந்து விட்டேன். அருகில் யாரும் இல்லை.அவன் கட்டையை ஓங்கினான்.நான், அந்தா அ அவங்க அங்க ஓடிட்டாங்க என்று அலறினேன்.அதற்குள் ஒரு பலமான அடி,தலையில் விழ வேண்டியது. இடது கையால் தாங்கிக் கொண்டேன்.நல்ல வேளை அரிவாள் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்தது.. அதற்குள் மேற்கே நின்று கொண்டிருந்த சிலர் பிடிலே, பிடிலே என்று ஓடிவந்ததும் அவனும் ஓடி விட்டான். அவன் ஒரு துப்புரவுத் தொழிலாளியாம், மனைவி ஓடிப் போனதில் பைத்தியமாகி விட்டவனாம்.
கோயிலுக்குப் போகாமல் கல்யாண மண்டபத்திற்கு வந்து, (சாமண்ண செட்டியார் சத்திரம்.) படுத்து விட்டேன்.கை வலியெடுக்க ஆரம்பித்தது. சாப்பிடத் தோன்றவில்லை.இடுப்பிலும் அடி பட்டிருந்தது.யாரோ கட்டாயப் படுத்தி சாப்பிட வைத்தார்கள். ராஜாமணி என்று நினைவு, அயோடெக்ஸ் வாங்கி வந்து தடவி விட்டான்.கல்யாணம் முடிந்து சீட்டுக் கச்சேரி ஆரம்பித்ததுசம்பத்துக்கு சந்தோஷமோ சந்தோஷம். அவன் மனைவி சீட்டு விளையாட அனுமதி தந்து விட்டதாக யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.என்னால்.சீட்டைக் கையில் பிடிக்கக் கூட முடியவில்லை.வேறு யாராவதுதான் எனக்குப் பதிலாக சீட்டைக் கலைத்துப் போட்டார்கள்.ஆனால் அப்படி கார்டு பிடித்தது. கார்டுக்கு பத்துப் பைசா.பணம் நூற்றுக் கணக்கில் சேர்ந்தது. வலி சற்று குறைந்த மாதிரி இருந்தது.கோயிலுக்குப் போனோம். எனக்கு பயமாயிருந்தது.இருந்தாலும் போனோம்.நல்ல கூட்டம்.இரண்டு மூன்று பேர் அர்ச்சனைக்கு பூ, பழம் எல்லாம் வாங்கினார்கள். நான் ஒரு நாளும் வாங்காதவன் அன்று வாங்கினேன்.அர்ச்சனைத் தட்டை பூசாரியிடம் கொடுக்கும் போது பேரும் நட்சத்திரமும் கேட்டார். நான் அப்பா பெயரையும், நட்சத்திரத்தையும் சொன்னேன்.சொல்லி முடிக்கவும் பவர் கட் ஆகியது.கோயிலே இருண்டது.
மணி பதினொன்றரை இருக்கும்.மனசை என்னவோ செய்தது.சப்பாடு சரியாகவே இல்லை.ராஜுவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினேன். அவன் தம்பியிடம் சொல்லி நூறு ரூபாயும், வாத்தியாரிடம் சொல்லி வெற்றிலை பாக்குடன் நாலணாவும் தரச் சொன்னான். நா.விச்வநாதனுடன் பேராவூரணிக்குக் கிளம்பினேன்.அவனும் ராஜு மாதிரி ஒரு நல்ல ஃப்ரெண்ட்.அவனுடன் அன்று பூராவும் தங்குவதாகத் திட்டம். கை வேதனை கூடியது. அவன் வீட்டில் வெண்ணீர் ஒத்தடம் எல்லாம் கொடுத்தும் கேட்கவில்லை.மனசும் கேட்கவில்லை.ஊருக்கு கிளம்பறேண்டா என்று சொன்னேன். அவனும் தஞ்சாவூர் வரை வருவதாகச் சொல்லி, வந்தான்.அங்கே பிரகாஷைத் தேடிப் போனோம்.உடையார் காலனி வீடு.அவரது அம்மா டாக்டர். அவரிடம் காண்பித்து ஏதாவது ஊசி போட்டால் தேவலாம் போலிருந்தது.அவர்கள் இல்லை. பிரகாஷும் கூடவே வந்து திருச்சிக்கு பஸ் ஏற்றி விட்டார். திருச்சியில் எப்படியோ மதுரைக்கு பஸ் கிடைத்தது. மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு பஸ் பிடித்து வந்து வீட்டருகே இறங்கும் போது, சொந்தக் காரக் கூட்டம் ஒன்று பஸ் ஸ்டாப்பிலேயே காத்திருந்தது. பஸ்ஸை விட்டு இறங்கியதும் யாரோ என்னிடமிருந்து பையை வாங்கினார்கள்.வாங்கிக் கொண்டே தந்தி கிடச்சுத்தான் வாறியா, அப்பா போய்ச் சேர்ந்தாச்சு என்றார்கள்.போத்தி ஓட்டல் பக்கம் கூடி நின்றவர்களெல்லாம் வந்துட்டான், வந்துட்டான் என்று சொல்வது கேட்டது.பையை வாங்கிக் கொண்டது ஒரு முறையில் மாமா, அவனிடம் மெதுவாகக் கேட்டேன்.எப்ப என்று, ``அது நேத்து காலையில் பதினோரு, பதினொன்னரை மணி இருக்கும்’’ என்றான். .கோயிலில் கரண்ட் கட் ஆனதும் இதே நேரம்தான்,அப்பாவின் ஈமச் செலவுக்கு இரு நூறு ரூபாய்க்கு மேலிருந்தது..பாதிப் பணம் சீட்டு விளையாட்டில் கிடைத்தது.சம்பாதித்தது.சடங்கை சரியாகக் கூட செய்ய முடியவில்லை. கை வலி. பைத்தியக்காரனை பைத்தியக் காரன் பார்த்த பர்வை.அப்பாவைக் குளிப்பாட்டக் கொண்டுபோகும் போது, எங்கிருந்தோ வந்த கோயிலாச்சியும் சங்கம்மாளும் மேலேயே விழுந்து அழுதார்கள்.இன்னும் நேரமாவதற்காக எல்லோரும் சலித்துக் கொண்டார்கள்.அம்மா என்னைப் பெத்த தங்கக் கட்டி என்று அழுது கொண்டிருந்தாள், யாரை அப்படிச் சொல்கிறாள் தெரியவில்லை.நேற்றுக் கூட அவள் அதிகமாய் அழவில்லை என்று பெண்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இன்று சீனிக்கிழங்குப பஞ்சத்தைக் கேட்டதும் கொதித்துப் போயிற்று மனசு. இன்னம் கொஞ்ச நாளில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கு.அதற்குள் என்ன செய்வது. திடீரென்று நினைவு வந்தது. அப்பா அபூர்வமாய்க் கடன் கேட்கும் கோயிலாச்சியின் வீடு.அடுத்த தெருவில் இருந்தது.பெரிய பணக்காரக் குடும்பம். தூரத்து உறவு.ஒரு ஆச்சியும் அவள் மகளுமிருந்தார்கள் அம்மாவையும் அந்த ஆச்சிக்கு ரொம்பப் பிடிக்கும்.மகள் இங்கே இப்போது இல்லை. தந்தி ஆபீஸில் வேலை.ஆச்சிக்கு சில பண வரவு செலவுகளில் அப்பாதான் உதவுவார்கள்.ஆனால் ரொம்பக் கண்டிப்பானவள். புருஷன் இல்லாத சொத்து, யாராவது ஏமாற்றி விடக் கூடாது எனபதில் சர்வ ஜாக்கிரதையாய் இருப்பாள்.
விளையாடப் போன மகனைக் காணோம் என்று தேடிக் கொண்டு வந்த சங்கம்மாளை,கருக்கலில் அரைப் பைத்தியமாய்த் திரிந்து கொண்டிருந்த சொக்கன்,திடீரென்று கட்டிப் பிடித்துக் கொண்டு விட்டானாம். நல்ல வேளை, விளக்கு வைக்கிற நேரமாயிருந்ததால்,தெருவில் நடமாட்டம் அதிகமில்லை. வேற யாரும் பார்க்க வில்லை. பைத்தியக்காரன் ரொம்ப முன்னேறும் முன், தற்செயலாக வந்த அப்பா, அவனிடமிருந்து சங்கம்மாளைக் காப்பாற்றினாராம். யாரும் பார்க்கவில்லையே தவிர அரசல் புரசலாக விஷயம் பரவி விட்டது.சங்கம்மாள் வேறு ஊருக்கு மாறுதல் வாங்கி விட்டுப் போய் விட்டாள்.ஆச்சி தினமும் பெரிய கோயில் போகாமல் இருக்க மாட்டாள். திருவிழா என்றால் சாமி புறப்பாடு செய்வதிலிருந்து தொடங்கி, வீதி வலம் வரும் போது கூடவே வந்து, கோயிலில் கொண்டு போய் சப்பரத்தைச் சேர்த்த பின்னர் தான் வீடு வருவாள்.அதனால்த்தான் கோயிலாச்சி என்றே பேர் அவளுக்கு. இதற்குப் பின் அவளும் கோயிலுக்கே போவதில்லை. கோயிலாச்சியிடம் போய் நின்றேன்.விஷயத்தைக் கேட்டாள். அடப்பாவி மக்களா, படிச்ச பய நீ வீட்டில இருந்தும் இந்தப் பஞ்சமா?கோமுக்குத்தான் புத்தியில்லையா ஏண்ட்ட கேக்கதுக்கு என்ன.இந்தா இன்னக்கித்தான் மணி ஆர்டர் வந்துது.,சங்கம்மாள்ட்ட இருந்து. வச்சுக்கோ, வேலை காயம் ஆயிரும்ன்னு ஆவு வீட்டில சொன்னாகளே, ஆனதும் குடு.உங்க அப்பாவோ சங்கம்மாவோ இங்கே இருந்தா எனக்கு உதவியாயிருக்கும். என்ன செய்ய, வீட்டுக்கு வீடு வாசப்படி, என்ற படி, நீயாவது கூறோட இரு என்றாள்.
இனிமேல் கனவுகளுக்கு இடமில்லை என்று முடிவு செய்தேன்.ராஜு சொன்னது மாதிரி எப்படியும் ஒரு வேலை கிடைத்து விடும், பனி விலகி விடும் என்று நம்பிக்கை வந்தது.

Sunday, January 11, 2009

ஒரு வழியை மறு வழியாய்........

வீட்டின் புற வாசலில் இருந்த பூச மடத்தை ஒரு சிறிய குச்சு வீடாக மாற்றுவதில் அம்மாவுக்கு சம்மதமே இல்லை.எப்பொழுதும் போல் அம்மாவின் பேச்சு எடுபடவில்லை(யாம்)..மாமரத்தின் வேர்கள் பூசை மடத்தின் முன் கட்டுச் சுவரில் கீறல் விழ வைத்திருந்தது. மாமரம் தாத்தா வைத்தது
ஒரு சிறிய நந்தவனம் என்றுதான் அதைச் சொல்ல வேண்டும்.நாங்கள் தோட்டம் அல்லது புற வாசல் என்போம்.வீட்டை அடுத்து ஒரு முடுக்கு. அதன் முடிவில் ஒரு ஒரு கிணறு.அப்புறம் வாய்க்கால், வாய்க்காலுக்கான படித்துறை. கிணற்றிலிருந்து துலா மூலம் நீரிறைத்து, சுவரில் பதித்திருக்கும் அகலப் பாத்திரம் போன்ற குழிவான கல்லில் விட்டால் சுவரின் இந்தப் புறம் இருக்கும் ஒரு பெரிய தொட்டியில் வந்து விழும்.அதிலிருந்து செடிகளுக்கும் மா, தென்னைக்கும், வில்வ மரத்துக்கும் பாயும்.அந்த முடுக்கு வழியே துப்புரவுத் தொழிலாளர்கள் வந்து போக வசதியாயிருக்கும்.கிணற்று நீர் ருசியாய் இருக்கும்.கோடையில் வாய்க்கால் வற்றி விடும்.மணிமுத்தாறு அணையிலிருந்து வரும் கோடகன் கால்ப் பாசன வாசலை அடைத்து விட்டால் வாய்க் கால் வற்றி நயினார் குளமும் கொஞ்சம் கொஞ்சமாய் வற்றி விடும்.அப்புறம் ஜூன் மாதம் அணை திறந்து தண்ணீர் வரத் தொடங்கி விடும்.தண்ணீர் கல்லணை வாய்க்காலைத் தாண்டி விட்டது, பிராமணக்குடிக்கு வந்து விட்டது, அரசரடிப் பால வாய்க்காலைத் தாண்டி விட்டது என்று ரன்னிங் கமெண்ட்ரி சொல்லுவார்கள்.நாங்கள் வாய்க்கால் மேடையிலிருந்து பார்ப்போம்.கண்டது கழியதையும் இழுத்துக் கொண்டு தண்ணீர் மெதுவாக வரும்.பெரும் பாலும் முருங்கைக் கொப்புகள் பழைய துணி மணிகள், கிழிந்த பாய் , தலையணை, யாராவது இறந்து போனவனின் மெத்தை, எல்லாம் மெதுவாகக் கட்ந்து போகும். நேரம் ஆக ஆக தண்ணீரின் வேகம் கூடத் தொடங்கிவிடும்.மத்தியான வாக்கில் இந்த ஊர்கோலக் காட்சிகளைப் பார்த்தோமென்றால்,காலையில் வாய்க்கால் சுத்தமாகி விடும் நயினார் குளமும், கா(ல்)க்குளம் நிரம்பி இருக்கும்.
கொஞ்சம் பெரிய பையனாகி,ஒன்பது பத்து படிக்கும் போது, சைக்கிளை எடுத்துக் கொண்டு நயினார் குளம் பக்கம் போய் விடுவோம். வெறுமையான குளம் நிரம்பு வதைப் பார்க்க.
(``நாளை இந்தக் குளத்தில் நீர் வந்துவிடும்’’ என்று பிரபலமான கவிதை இதன் பாதிப்பில் எழுதியதுதானோ என்னவோ). வாய்க்காலை எனக்கு ரொம்பப் பிடிக்கும். வாய்க்காலுக்கு எங்கள் வீட்டில் தனி படித்துறை உண்டு. அகலமான படிகள்.சுமார் பத்தடி நீளத்தில். வடிவாகக் கொத்தி அமைக்கப் பட்ட கல்ப் படிகள்.மற்ற வீடுகளில் இப்படிப் படித்துறை இருக்காது.சுவரில் ஒரு தொண்டு இருக்கும் தேவைப் பட்டால் அதன் வழியாக வாளியால் நீரிறைத்துக் கொள்ளுவார்கள்.தெருவின் கிழக்கிலிருந்து கூட நிறையப் பேர் இங்கே, துணி துவைக்க, பாத்திரம் கழுவ வருவார்கள்.வருகிறவர்கள், அம்மாவிடம் ஏதாவது பாடு பேசிவிட்டு வருவார்கள்.`கோமக்கா, என்ன வேலை நடக்கு,’’ என்றபடி வருவார்கள, கையில் கனத்த, கல்கத்தா வாளி அல்லது .பித்தளைச் சருவச் சட்டியுடன் வருவார்கள். வாளி நிறைய அழுக்குத் துணி இருக்கும். தவறாமல் ஒன்று அல்லது இரண்டு மூத்திரப் போர்வையோ. ஜமுக்காளமோ இருக்கும். அதை சிலாவத்தாக (நன்றாக விரித்து) அலச, வாய்க்கால் போல, ஓடுகிற தண்ணீர்தான் வசதியாயிருக்கும். ``சமையப் போற வயசாச்சு இன்னும் படுக்கையிலதான் மூதேவி ஒண்ணுக்கிருக்கா,’’என்று அலுப்பாய் சொல்லுவாள்.``இதுக வயசுல நாம வாக்கப் பட்டு வந்தாச்சு.’’ என்று பதிலுக்கு சடைத்துக் கொண்டு,``நான் ஒரு பக்குவம் சொல்லுதேன், நாளக்கி ஞாயித்துக் கிழமதான, சாலாச்சிய (விசாலாட்சி) நெல்லையப்பர் கோயிலுக்கு காலையில ஏழு மணிக்கி கூட்டீட்டுப் போனா, விளா பூசை முடிஞ்சு சாமிக்கும் பரிவாரங்களுக்கும் எண்ணெய்யில் உருட்டுன பலிச் சோத்தை(சோற்றை), ஆமா பலி பீடத்தில வைச்சுருப்பாங்கள்ளா அதை.,எடுத்து ரெண்டு வாய் ஊட்டி விடு, படுக்கையில மோளறதப் புள்ளைகள் நிப்பாட்டிரும்பா எங்க அம்மா.’’என்று அம்மா சொல்லுவாள்.
வாய்க்காலை ஒட்டித்தான் இரண்டு குச்சுகளும் இருக்கும்.அதற்கு மேல் ஒரு மச்சு. அதைத் தான் வாய்க்கால் மேடை என்று சொல்லுவோம். குச்சுகளில் ஒன்று பூசமடம். என்கிற பூசை மடம்.வாய்க்காலின் தண்ணீரோட்டமும், பூசை மடத்தில் காலையிலும் இரவிலும் தாத்தா செய்கிற பூஜை புனஸ்காரங்களால் சிந்துகிற தண்ணீரும், நந்தவனமும் இரண்டு குச்சுகளையும் குளுமையாக வைத்திருக்கும்.பூச மடத்தின் நடுவில் ஒரு பீடம் போல் சதுரக்கல்.அதில் பிள்ளையார் சிவலிங்கம் சிலைகள்.நான் தாத்தவையோ, சிவ லிங்கங்களையோ பார்த்த நினைவில்லை.மாமரம் ஐந்துவிதமான ருசியுள்ள காய்களாய்க் காய்க்கும் என்று அம்மா சொல்லுவாள்.அதை வெட்டி எடுத்த குழியை நிரப்ப வண்டி வண்டியாய் மண் அடித்தது நினைவில் இருக்கிறது. அவ்வளவு பெரிய குழியை அம்மாவின் சேலையைப் பிடித்த படி எட்டிப் பார்த்த இரண்டு மூன்று வயசு ஞாபகம் இருக்கிறது.மத்தியான நேரம் படித்துறையில் ஆள் இருக்காது.அங்கேயும் சாமி சிலைகளை அபிஷேகம் பண்ணத் தோதுவாய் ஒரு சிறிய சிமிண்டுப் பீடம் உண்டு. அதில் உட்கார்ந்து எப்போதாவது படிப்பது உண்டு. அந்த நேரங்களில் யாராவது வளவின் பெண்கள் `அதற்கான’ துணிகளை அலச வந்து நான் இருப்பதைப் பார்த்தால் இங்க வச்சுப் படிச்சாத்தான் மண்டையில் ஏறுவேங்கோ, போடா அங்கே என்று விரட்டி விடுவார்கள்.இது தான் சங்கரநாறாயணன் சொன்ன `விஷயம்’ போலிருக்கு என்று நினைத்துக் கொள்ளுவேன். வாய்க்காலையும் படித்துறையையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். வாய்க்காலுக்கு அக்கரையில் தான் சசியின் வீடு.
பூச மடத்தின் நடுவிலிருந்த, பீடத்தை எடுத்து விட்டு நல்ல தளமாகப் போட்டு, அதன் வெளிச் சுவற்றிலேயே ஒரு சின்னக் கோயில் போலக் கட்டி அதில் பிள்ளையார் சிலைகளை வைத்து விட்டார் அப்பா. மூன்று பிள்ளையார்கள்.அதை பெரிய அண்ணன் தினமும் குளிப்பாட்டி ஒரு அட்டையில், எழுதி ஒட்டி வைத்திருக்கும் மந்திரங்களை முனுமுனுத்து, பாட்டிலில் சளித்துப் போய், இருக்கும் அச்சு வெல்லத்தைக் கிள்ளி ஒரு செம்பருத்தி இலையில் வைத்துப் பூஜை செய்வான்.அவன் பூஜை செய்ய காலை பதினோரு மணி ஆகி விடும்.அதற்குள் இரண்டு தடவை டிஃபன் பண்ணியிருப்பான். பூசை முடிந்ததும் அதைச் சாக்கிட்டு இரண்டு இட்லி தின்றுவிடுவான்.அந்தப் பூசைக்கே பிள்ளையார் அவனைக் கை விடவில்லை. கடைசிக் காலம் வரை அவன் திங்கிற சோறுக்குப் பழுதில்லாமல் காலம் கழிந்தது என்றுதான் சொல்லவேண்டும். பிள்ளையாருக்கு எதிர்த்தாற் போல் இரண்டு பூடம். சுடலை மாட சாமி மாதிரி. அது, மனை காவல் பெருமாள். அதுக்கு எப்பவாவது பொங்கலிட்டு, சுருட்டு, இத்தியாதி எல்லாம் படைப்பார்கள்.பூச மடத்தை அடுத்த குச்சு வீட்டில் முதன் முதலாக ஸ்ரீ வள்ளி படத்தை சேலத்திலிருந்து கொண்டுவந்த ரெப்ரஸெண்ட்டேட்டிவ் ராமசாமி நாயுடு, அப்பாவின் சிநேகிதராகத் தங்கினார்.அப்புறம் அவர் பெரிய படாதிபதியாகி ஸ்வாமி பிக்சர்ஸ் என்று கம்பெனி ஆரம்பித்து.பாலும் பழமும், பாசமலர் என்று பெரிய பெரிய படங்களை எல்லாம் விநியோகித்தார். ஆனால் எங்களுக்கு அவர் எப்பொழுதும் `வள்ளி படத்துக் காரர்’ தான். வீட்டில் விசேஷம் ஏதாவது என்றால் முகவரி லிஸ்ட் தயாரிக்கையில் ஜங்சனிலிருந்து ஆரம்பித்தால் முதலில், வள்ளிப் படத்துக்காரருக்கு எழுதியாச்சா என்பாள் அம்மா.அப்பா பெயரான கந்தசாமியில் வரும் ’சாமி`க்காக ராம`சாமி’ என்று சொல்ல மாட்டாள்.
அநேகமாக அவர் தங்கிப் போன பின் தான் அப்பாவுக்கு அவைகளை வாடகைக்கு விடும் எண்ணம் வந்திருக்கும்.இரண்டு குச்சுகளிலும் ஒன்றில் ஒரு கன்னடத்துப் போத்தி வீட்டாரும், இன்னொன்றில் நாகர் கோயில், பாறசாலை மாமி குடும்பமும் இருந்தது.மாமியின் பெண் என் வகுப்புத்தோழி.சுத்த மக்கு. ஆனால் நான் அவளிடம் அந்தப் பிஞ்சு வயசிலேயே படித்துப் பழுத்து வெம்பிப் போனது ஏராளம்.அதற்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.காலம் செய்த கோலமடி. கடவுள் செய்த குற்றமடி கதைதான்.அப்பா, படித்துறையை மூடி `பத்துக்குப் பன்னெண்டு’ கணக்கில் ஒரு சின்ன வீடு கட்டி வாடகைக்கு விட்டுவிட்டார்.வாய்க்கால் மேடையில் பழைய சாமான்கள் போட்டு வைத்திருக்கும். திருமண வீட்டிற்கு வேண்டிய மர உரல், முக்காலி, த்ண்ணீர் ஃபில்ட்டர் பண்ணுகிற மூன்று தட்டு ஸ்டாண்ட்.அதில் மூன்று பானைகள் வைக்கலாம். அதற்கான தனிப் பானைகளும் உண்டு,அடிப்பாகத்தில் பொடீத் துவாரங்களுடன். மேல்ப் பானையில் மணல், அதற்குக் கீழ்ப் பானையில் மலங்கறி. கடைசியில் வெறும் பானை. மேலாக இருக்கும் பானையில் தண்ணீர் ஊற்றினால், அது மணலில் வடிகட்டி, இரண்டாவதில் விழும்., அதில் வடிகட்டப் பட்டு. சுத்தமான தண்ணீராக மூன்றாவதில் விழும்.அப்புறம் பழைய பிரம்பு சோஃபா,ஏணி, என்று பழையதாகக் கிடக்கும்.அது போக இடமும் இருக்கும்.அதில்த்தான் எல்லா சேட்டைகளும் அரங்கேறும்.
அப்பாவின் காலத்திலேயே அதையும் வாடகைக்கு விட்டு விட்டார்.அப்பா இறந்த நேரத்தில் அந்த வாடகைகள்தான் ஒரு வேளைச் சாப்பாட்டிற்காவது வழி காட்டியது.அப்பா காலத்து ஆட்கள் எல்லாம் வெவ்வேறு காரணங்களுக்காக காலி செய்து போய் விட்டனர்.பூசை மடம் வீட்டில் என் சிநேகிதன் குடியிருந்தான். அவன் மட்டும் தான்.ஒரு பெரிய ஜவுளிக் கடையில் வேலை பார்த்தான். படித்துறை வீட்டில் எலக்ட்ரி சிட்டி போர்ட் ஆஃபீஸில் வேலை பார்க்கும் சங்கரன் இருந்தார். அவர் தினத் தந்தி வங்குவார். காலையில், புற வாசலின் குளுமையில் தென்னை மர நிழலில் தந்தி படித்து நாட்டு நடப்புகளை பேச நல்ல துணை. கல்யாணமாகி, குழந்தை இல்லை. அவருக்கே சொந்தமான வீடு இருந்தும் ஏதோ ஜாதகக் கோளாறு, வேறு எங்காவது இருந்தால். குழந்தை பாக்கியம் கிட்டும் என்று சொன்னதால் இங்கே வாடகைக்கு இருக்கிறார்.கொஞ்சம் வசதியான ஆள்.ஆள் என்னவோ பார்க்க நாகேஷ் மாதிரித்தான் இருப்பார்.வந்த புதிதில் தெரு நண்பர்கள் அவரை ஐசரி வேலன் என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.அதற்காக கோபப் படமாட்டார். பாரும் வேய் ஐசரி பெரிய ஆளா வரப்போறான், உமக்குத் தெரியாது.என்று சொல்லுவார்.(அது பின்னால் உண்மையாயும் ஆயிற்று. ஐசரி பாரளுமன்ற செயலாளர் –துணை மந்திரி- ஆக ஆனார்.)
இன்னொரு குச்சுக்கு ஜெசிந்தா வந்து சேர்ந்தாள்.அவள் ஏழு வளவில்த்தான் குடியிருந்தாள்.அரசு அலுவலகம் ஒன்றில் டைப்பிஸ்ட்.தூத்துக்குடிக் கடல்ப் புறம் பக்கம். நிறமென்றால் அப்படியொரு மஞ்சள் நிறம்.ஒரு பெரிய குடும்பத்தைத் தாங்குகிற
தொடர்கதைச் சோகம் முகத்தில் தெரியும்.இருந்தாலும் பார்க்கும் போது தவறாமல் சிரிப்பாள்.சம்பளம் வாங்கி வருகிற போதே என் அம்மாவிடம் வாடகைப் பணத்தைக் கொடுத்து விட்டுத்தான் தன் வீட்டிற்கே போவாள்.வீட்டில் வைத்து கறி, மீன் எதுவும் சமைக்க மாட்டாள்.அந்த நிபந்தனையின் பேரில்த் தான் அம்மா வீடு கொடுக்க சம்மதித்தாள். வாடகையும் அதிகமாகப் பத்து ரூபாய் தந்தாள்.தரையில் அமர்ந்து தந்திப் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவள் குளிக்கிற நேரமுமாய் இருக்கும்.பிரேஸியர் அணியமாட்டாள். சாதரண உள்ப் பாடி தான் போடுவாள்.மார்பும் அவ்வளவுதான்.தலை முடியும் அடர்த்தியாக இருக்காது. குளித்துவிட்டு குளியலறைக் கதவில் போட்டிருக்கும் உள்ளாடையை மார்பு வரை கட்டிக் கொண்டு, மேலே சேலையைப் போர்த்தியவாறு எங்களைக் கடந்துதான் அவள் வீட்டிற்குப் போக வேண்டும்.முழங்கால் சற்றே மறைகிற மாதிரி கட்டிய உள்ப் பாவாடை , கால்களின் அசத்துகிற மஞ்சள் நிறம். கூச்சப்படவும் மாட்டாள்.முகஞ்சுளிக்கவும் மாட்டாள்.முகத்தைப் பார்த்தாலும் பேப்பரில் என்ன போட்டிருக்கு என்கிற மாதிரியில் ஒரு வெறும் சிரிப்பு.கடந்து போய் விடுவாள்.இரண்டு கட்டு வீடு. முன்புறச் சாய்ப்பில் சமையல். ஸ்டவ் வைத்து என்பது நிபந்தனை.வீட்டிற்கு முன்புறம் பாத்திரங்களைப் போட்டுக் கழுவுவது நறுவிசாக இருக்கும்.கழுவி முடித்த பின், தரை சுத்தமாக இருக்கும்.கடல் புரத்துப் பெண்ணிடம் இவ்வளவு சுத்தமா என்று பெரிய அக்காவே ஆச்சரியப் பட்டாள்.முதலில் தோன்றாத ஈர்ப்பு நாளாக நாளாக அவள் பால் தோன்றியது.முன்னிரவில் முழங்காலிட்டு ஜெபித்துக் கொண்டிருப்பாள். முதல்க் கட்டின் கம்பிக் கதவு மட்டுமே சாத்தியிருக்கும்.சத்தம் தெளிவாகவே கேட்கும். பெரும்பாலும் குடும்பத்தைக் குறித்த பிரார்த்தனைகளே இருக்கும். அம்மாவுக்கு சமாதானம் கொடும் ஆண்டவரே என்று கேட்டுக் கொண்டிருப்பாள்.இரண்டொரு நாள் பக்கத்துக் குச்சில் ஆட்கள் யாரும் இல்லாத நேரங்களில் நான் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன்.ஒரு கவிதையில் மேற்கோளுக்காக பைபிள் பழைய ஏற்பாடு புத்தகம் அவள்தான் தந்திருந்தாள்.எனக்கேயும் தந்து விட்டாள்.
அந்த நேரத்தில்தான் ஆர். பாலு சொன்னான். அவன் வேலை பார்க்கும் வங்கியில் ஆள் எடுக்கப் போவதாகவும் அதற்கு ஒரு விண்ணப்பம் தருமாறும்.திடீரென்று தோன்றியது.ஜெசிந்தாவிடம் விண்ணப்பம் டைப் செய்து தரும் படிக் கேட்கலாமே என்று.இரண்டு வெள்ளைப் பேப்பரும், ஒரு விண்ணப்பம் எழுதிய பேப்பரும் எடுத்துக் கொண்டு போனேன். அலுவலகத்துக்குப் புறப்பட்டு உடை மாற்றிக் கொண்டிருந்தாள்.வாசலில் நின்று கூப்பிட்டேன். முதன் முதலாகப் பெயர் சொல்லி அழைத்தேன். எனக்கே என்னவோ போலிருந்தது.வாங்க என்றாள். சேலையை நீவி விட்டபடியே. பேப்பர்களைக் கொடுத்தேன்.விஷயத்தைச் சொன்னதும்`சேசுவே’ என்றாள்.அப்புறம் வழக்கமான மெல்லிய சிரிப்பு உதட்டில் விரியப் பெற்றுக் கொண்டாள். அவள் அலுவலகம் அடுத்த தெருவில்த்தான்.அங்கே வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னேன்.அவசரமென்றால் நானே ஒரு மணிநேரத்தில் கொண்டு வந்து தருகிறேன் என்று சொல்லி விட்டு. வீட்டைப் பூட்டத் த்யாரானாள்.நானும் சரி என்று கிளம்பினேன். சொன்னபடிக்கே ஒரு மணி நேரத்தில் கொண்டு வந்தாள். நான் கொடுத்த பேப்பர்கள் அப்படியே இருந்தது. வேறு அழகான, கனமான காங்குயர் பேப்பரில் அடித்திருந்தாள். புது டைப் ரைட்டர் என்றாள், சிரித்த படியே. சுருண்டிருந்த தாளை விரித்துத் தரும்போது கைகள் நன்றாகவே என் கைகள் மீது பட்டன. நன்றி சொல்லக் கூடத் தோன்றவில்லை.சரியா இருக்கா பாருங்க என்றாள்.சரியாய் இருந்தது.இப்போது நன்றி சொன்னேன்.சேசுவே என்றாள்.உங்களுக்கும் எனக்கும் ஒரே வயது என்றாள் சிரிப்புடன்.பயோ டேட்டாவைப் படித்திருக்கிறாள்.
இரவு எட்டு மணி இருக்கும். ஒரு குறளி பிடித்து ஆட்டிற்று.
வயதைப் பற்றி ஏன் சொன்னாள்.கால்கள் தோட்டத்தை நோக்கிப் போயிற்று., ஜெசிந்தா வீட்டில் மட்டும் ஒரு நாற்பது வாட் வெளிச்சம்.மற்ற வீடுகளில் யாரும் இல்லை.முன் புற அழிக் கதவு(கம்பி போட்ட கதவு) மட்டும் சாத்தியிருந்தது.நான் அருகே போனேன்.``ஆண்டவரே அவருடைய விண்ணப்பம் அன்போடே கவனிக்கப் பட அருள் தாரும் ஸ்வாமி,அந்தக் குடும்பத்தில் சாந்தியும், சந்தோஷமும் சமாதானமும் நிலவ நீரே தயை புரியும். பனி மய மாதாவின் பதந்தொட்டு வணங்கிக் கேட்கிறேன். மறுத்து விடாதேயும் ஸ்வாமி.....’’.குரல் தெளிவாகக் கேட்டது.சுரீரென்றிருந்தது.கன்னா பின்னாவென்ற கற்பனைகள் போன இடம் தெரியவில்லை.திரும்பி விட முயற்சிக்கையில் அவள் ஜெபம் சொல்லி முடித்து விட்டாள்.வாங்க என்று கதவைத் திறந்தாள்.ஒரு கட்டில் மட்டும் இருந்தது. அது எங்கள் வீட்டுக் கட்டில்தான். பழைய பெரிய வீட்டின் மாடியில் கிடந்தது.அந்த வீட்டை விற்ற பின் இது தார்சாலில் கிடந்தது. இப்போது இங்கே. கட்டிலில் சேலைகள் துவைத்துக் காய்ந்தவை சுருண்டு மடங்கிக் கிடந்தன.உட்காருங்கள், என்றாள், சேலைகளைப் பார்த்து தயங்கினேன்.சும்மா உக்காருங்க என்றாள்.முகத்தில் பிரார்த்தனையின் போது வழிந்த கண்ணீரின் சுவடு தெரிந்தது.நானே ராசி இல்லாத பெண் என்னிடம் போய் டைப் செய்து தரக் கேட்கிறீர்களே என்று கஷ்டமாயிருந்தது.அதனால் உங்களுக்காகத்தான் பிரார்த்தனை செய்தேன். இந்த வேலையாவது உங்களுக்கு கிடைக்கணும். இன்னமே கவர்ன்மெண்ட் சர்வீஸ் போக முடியாது. போலிருக்கே என்றாள்.
சேலைகளின் மீது அமர்ந்திருப்பது முதலில் கஷ்டமாய் இருந்தது. அப்புறம் அது தோன்றவில்லை. தன் குடும்பம் பற்றிச் சொன்னாள். கல்லூரிக்குச் செல்ல ஆசைப் படுகிற தங்கை., ஐ.ட்டி படித்து மெக்கானிக் வேலைக்கு அலைகிற தம்பி., அப்பாவை இழந்த அம்மா. தங்கையின் கல்யாணத்திற்குத் தான் கஷ்டப்பட்டுப் பணம் சேமித்துவருவதாகச் சொன்னாள். அது முடிந்து விட்டால் தான் கன்யாஸ்த்ரீயாகப் போய்விட தீர்மானித்திருப்பதாக, நிறுத்தாமல் மூச்சு விடாமல் சிரிப்பு மாறாமல் ஆனால் சோகமாகச் சொன்னாள்.கவலைப் படாதீங்க என்று சொன்னதும் வாய் விட்டுச் சிரித்தாள்.என் கதையைக் கேட்டதும் மரியாதை தானா வருதே பாத்தீங்களா என்றாள் .
ஒரு மாதம் போயிருக்கும். அவள் தம்பியும், தங்கையும் உடன் வர, ஒரு திங்கள்க் கிழமைக் காலையில் வந்தாள், ஊரிலிருந்து. நான் என் வீட்டு வாசலில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தேன்.இதுதான் என் தம்பி ஜோ, இது தங்கை என்றாள்.தங்கை சிரித்தாள். கடைந்தெடுத்தது போலிருந்தாள். நிறம் மட்டும் சற்று கருப்பு. பேச்சே எழவில்லை. தூக்கத்தை கெடுக்க இன்னொரு பிசாசு என்று தோன்றியது.கொஞ்ச நேரத்தில் அலுவலகம் போகிற வழியில் என்னைப் பார்த்து ஜெசிந்தா, கேட்டாள், கொஞ்ச நாளைக்கு இரண்டு பேரும் இங்கிருந்தால் ஒன்றுமில்லையே என்று. தாராளமாக என்று சொல்லவில்லை, நினைத்துக் கொண்டேன்.தலையை மட்டும் மையமாக ஆட்டி விட்டு நகர்ந்தேன்.அம்மா அதிகமாக பதினைந்து ரூபாய் தந்ததும் திருப்தியாகி விட்டாள்.முதல் பதினைந்து ரூபாயில் நங்கையாரிடம் எனக்கு தெரியாமல் அடகு வைத்திருந்த இரண்டு எவர் சில்வர் தம்ளர்களை மீட்டாள்.
மெர்வின் வளவு பூராவும் சுதந்திரமாக நடமாடினாள். டைப் கிளாஸுக்கு தெருவில், நிமிர்ந்த படி, டக் டக் கென்று போய் வந்தாள்.தெருவில் நிறைய ரசிகர்கள் சேர்ந்தார்கள், அவளுக்கும் எனக்கும்.நான் அடி பம்பில் குளித்துக் கொண்டிருந்தாலும், சார் கொஞ்சம் தள்ளிக்கிடுங்க ஒரு குடம் தண்ணி எடுத்துக் கிடுதேன். என்று தயக்கமில்லாமல் புழங்கினாள்.சார் படிக்க ஏதாச்சும் புஸ்தகம் கொடுங்க என்று கேட்டாள் ஒரு நாள். என்னிடம் அப்போதெல்லம் புத்தகங்கள் அவ்வளவாக இல்லை. இருந்தது எல்லாமும் கவிதைகள்.. ஈ.பி. சங்கரன் தினத்தந்தியுடன் பொம்மை, பிலிமாலயா குமுதமெல்லாம் வாங்கத் தொடங்கினார்.
எனக்கு வேலை கிடைத்தது ஜெசிந்தாவுக்கு ரொம்ப சந்தோஷம்.செய்தி கிடைத்த அந்த வாரம் தூத்துக்குடி போய்த் திரும்பி வரும் போது மக்ருன்ஸ் வாங்கி வந்தாள்.நான் முதல் முறையாக அப்போதுதான் மக்ரூன்ஸ் தின்றேன்.
சங்கரன் மனைவி குழந்தை பெற அவள் அம்மா வீட்டுக்குச் சென்று விட்டாள்.சினிமா பார்த்துவிட்டு பத்து மணி வாக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன், தெரு முனையில் ஏதோ சத்தமாகக் கிடந்தது.ஜோ சங்கரனை அடிக்க முயன்று கொண்டிருந்தான்.சிலர் விலக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள்.என்ன விஷயம் என்று விசாரித்த போது தெரிந்தது. மெர்வினை சங்கரன் மடக்கி விட்டார் என்று.மெர்வின் இப்போது சங்கரனின் சொந்த வீட்டில் இருக்கிறாளாம்., சிந்து பூந்துறையில்.தம்பியை இழுத்துக் கொண்டு ஜெசிந்தா வீட்டிற்குள் போனாள். சங்கரன் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார், அவளைல்லா அடிக்கணும்.அவ வந்தா நான் என்னல செய்யறது. என்று. ஆஹா ஐசரிக்கில்லா யோகம் அடிச்சிருக்கு.சுமிதாவும், ஜெய மாலினியும் சேர்ந்த பிகருல்லா என்று தெருவே வாப்பாறியது..எனக்கும் பொறாமை பிடுங்கித் தின்றது.சங்கரனை வீட்டைக் காலி செய்யுங்கள் என்று சொன்னேன்.சரி சரி என்று போய் விட்டார்.ஆனால் விடியும் முன்பே ஜெசிந்தாவும் ஜோவும் போய் விட்டிருந்தார்கள்.வீட்டில் இல்லை.ஆனால் வீட்டை அப்புறமாகத்தான் காலி செய்தாள்.ஊருக்கே மாறுதல் கிடைத்து விட்டதாகச் சொன்னாள்.

எத்தனையோ வருஷம் கழித்து, களக்காடு அருகே ஒரு மிஷன் ஸ்கூலில் வைத்து அகில இந்திய அளவிலான டேலன்ட் எக்ஸாம் ஒன்றுக்கு குழந்தையை அழைத்துக் கொண்டு போயிருந்தேன்.மகள் தேர்வெழுதிக் கொண்டிருந்தாள்.நான் அழகான, பழமையான அந்தப் பள்ளியின் மர நிழலிருந்து காத்துக் கொண்டிருந்தேன்.என்னை நோக்கி ஒரு சிஸ்டர் வந்தார்கள் சிமென்ட் கலர் பாதிரி உடை. நீங்க கோபாலண்ணன் தானே என்று விசாரித்தார்கள்.அந்த அழகான பெரிய உதடுகள் மட்டும் எங்கேயோ பார்த்த ஞாபகம் வந்தது.முகம் வறண்டிருந்தது. தெரியவில்லையே என்றேன். ``நான் மெர்வின், உங்கள் வீட்டில் குடியிருந்த ஜெசிந்தாவின் தங்கை.’’...அப்படியானால் ஜெசிந்தா என்று நான் கேட்கும் முன்பே அவள் சொன்னாள்... ``அக்காவுக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. வல்லநாட்டில் இருக்கிறாள்.ஜோ, வொர்க் ஷாப் வைத்திருக்கிறான்.நான் இங்கே இருக்கிறேன். நீங்கள் மாலை போட்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது,உங்களுடன் நான் பேசலாமா தெரியவில்லை , ரொம்ப நேரமாக உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏதாவது இங்கே சாப்பிடலாம் என்றால் டீ அனுப்புகிறேன்., ஸ்தோத்திரம்’’ என்று சொல்லித் திரும்பி நடந்தாள்.விசுமபுவது நன்றாகத் தெரிந்தது.நானும் மறுபடி கூப்பிட நினைத்தவன் கூப்பிடவில்லை.


``ஒரு வழியை மறு வழியாய் மறைப்பது விதியாகும்-இதை
உணர்த்துவதே நான் இருக்கும் சிலுவையின் அடையாளம்.....’’

வசந்தாவின் குரலில்........... கண்ணதாசன்.