Monday, June 3, 2013

நன்றி: காட்சிப்பிழை திரை- ஜூன் 2013



வழிந்தும் வழியாமலும்...
ராமகிருஷ்ணன் என்றால் தெருவில் யாருக்கும் தெரியாது.கிட்டுப் பிள்ளை என்றால் மட்டுமே தெரியும். “பேர் வச்ச எங்க ஐயாவுக்கே மறந்துருக்கும்..என்று அவரே அடிக்கடி சொல்லிக் கொள்ளுவார்.ரொம்ப ஜாலியான ஆள். இவ்வளவுக்கும் குடும்பப் பொறுப்பு பூராவும் அவர் தலையில்தான்.என்னிடம் தனியாக எப்பவாவது பேசினால் தவறாமல்ச் சொல்லுவார், ஏய் சின்னவனே,நாம் ரெண்டு பேருமே வழிச்சு ஊத்துன தோசைடா..(கடைசிப் பிள்ளகள்) நாம ரெண்டெழுத்துப் படிச்சது பெரிய தப்புடா... நானாவது எஸ்செல்சி யோட நிப்பாட்டி விட்டேன்... மூதேவி காலேஜுக்கு வேற போற நீ..என்பார். அவர் எஸ்.எஸ்.எல்.ஸி படிக்கும் போதே அவரது அப்பா இறந்து போனார்.அவர் அப்பா பண்ணாத வியாபாரம் கிடையாது.சின்னதாய் ஜவுளிக்கடை, காபித்தூள் கடை, பேக்கரிக் கடை, என்று பல கடைகள்.இது போக ரயில்வே ப்ரோக்கர் என்று ஒரு சோலி.பார்சல்கள் அனுப்புவதற்கு ஒரு ஃபார்வேடிங் ஏஜன்ஸி மாதிரி. அது போக, அந்தக் காலத்தில், காங்கிரஸ் ஆட்சியில் கன்னியாகுமரிக்கு ரயில் கிடையாது. விருதுநகரில் தோற்ற காமராஜர், கன்னியாகுமரி எம்.பி.தேர்தலில் ஜெயித்த பின்னர், எடுத்த கடும் முயற்சியில் ஒரு வழியாய் ரயில் வந்தது.அதற்கு முன்னர் அவர் ஏனோ அந்த முயற்சியை கையெடுக்கவில்லை.
கன்னியாகுமரிக்கு வரும் வடநாட்டு யாத்ரீகர்கள், திருநெல்வேலியிலிருந்து எஸ்.ஆர் (சதர்ன் ரயில்வே) அவுட் ஏஜென்சி பஸ்ஸில் கன்னியாகுமரி போவார்கள். அதற்கான கட்டணம் ரயில் டிக்கெட்டோடு சேர்ந்தது.முதலில் ரொம்பக் காலம், கிட்டுப் பிள்ளையின் அப்பா இந்த பஸ் ஏற்பாடுகளையும் செய்வார். அப்புறம் ஒரு பயோனீயர் பஸ், அவுட் ஏஜன்ஸியாக ஓடிக்கொண்டிருந்தது. அதனாலேயே என்னவோ பயோனியர் பஸ் பூராவும் ரயில்ச் சிவப்பு நிறத்திலேயே இருக்கும்.இப்படிப் பல சோலிகள்.சம்பந்தமே இல்லாமல், சங்கரpaaNtiநாராயண பிள்ளை, மட்டன் ஸ்டால் கூட  நடத்தினார் என்பார்கள். கடைசியாய் அரிசிக்கடை வைத்திருந்தார்.அதைத்தான் கிட்டுப்பிள்ளை தொடர்ந்து நடத்தினார்.ஏதோ கொஞ்சம் பரவாயில்லாமல்...வாழ்க்கை ஓடியது. அவரது அக்காவுக்கு அவர்தான் திருமணம் செய்துவைத்தார். அவர் ராத்திரி கடையெல்லாம் அடைத்த பின் சாப்பிட்டு விட்டுத் தெருத் திண்ணையில் உட்கார்ந்து ‘காத்தாட பேசிக் கொண்டிருக்க வருவார்.பெரும்பாலும் செகண்ட் ஷோ சினிமாதான் போக முடியும். ஆனால் ஒரு படம் தவற விடமாட்டார். என்னை விட மூத்தவர். நன்றாகப் பேசிக் கொண்டிருப்பார், ஏய் கோவாலு,பனித்திரை படம் பார்த்தியாடே... எப்படி இருக்கு என்றெல்லாம் விசாரிப்பார்.ஆனால் அந்த உரிமையில் கொஞ்சம் அதிகப் படியாகப் பேசி விட்டால்,பட்டென்று நாலு பேர் முன்னால் ஏதாவது சொல்லி விடுவார்.பரிசு படம் பார்த்தியா என்று ஒருநாள் கேட்டார்.ஆமாம் என்று சொன்னவன், சாவித்திரி ஓவரா நடிச்சிருக்கா, ஜெமினிகணேசன்ல்லாம் சாகணும் என்றுசொல்லி விட்டேன்.”””ஏல உனக்கு பன்னிரெண்டு வயசு இருக்குமா..உனக்கு என்னலே தெரியும்..சரியான வெம்பலா இருக்கியே... என்று பிடிபிடியென்று பிடித்துக் கொண்டு விட்டார். இதற்காகவே காத்திருந்தது மாதிரி,என் தோள் மட்ட நண்பர்கள் எல்லோரும் கை கொட்டிச் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு நிற்கவும் பிடிக்கவில்லை, போனாலும் கஷ்டம்...ஏதோ கனவு கண்ட மாதிரி, மெல்லவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் நின்று கொண்டிருந்தேன்.அவர்தான், “புள்ளை முழிக்கிற முழி பேளறதுக்குத்தான்கிற மாதிரி முழிக்கான் பாரு, விடுங்கடே..என்று சமாதானப் படுத்தினார்.

பேச்சை மாற்றுகிற விதமாய்,தம்பிகளா, தரை டிக்கெட்டுக்கே போகாதிங்கப்பா.. அதிலயும், பாப்புலர், ராயல் மாதிரி தரையில் உட்கார்ந்து பார்க்கிற மாதிரி போகவே போகாதீங்கப்பா...என்றார். கோவாலு, ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹ்தி ஹை..பார்த்தியாடே..., இங்க மூடிக்கிட்டு நடிக்கிற பத்மினி வடக்கேன்னா என்னமா தெறந்து போடுதியா பார்த்தியா..என்றார். எல்லோரும் நான் என்ன சொல்லுவேனென்று ரெடியாய்க் காத்திருந்தார்கள். ஹ்ஹும் நான் இன்னக்கி வாயத் திறப்பனா இன்னம என்று அமைதியாய் இருந்தேன்.ஆனால் ஆமா அண்ணாச்சி, என்று சொல்ல,மனசுக்குள்ள குறுகுறுப்பாயிருந்தது. வைஜயந்தி மாலா என்ன வாழுதாம் என்று யாரோ சொன்னார்கள். கிட்டுப்பிள்ளை சித்தப்பா, “ வாழ்க்கை படம் ரிலீஸான அன்னக்கி.. அவளைப் பார்த்து நாக்கைத் தொங்க விடாதவன் கிடையாதுப்பா மவனுவளா, என்றார். அது அவர் அடிக்கடி சொல்லுகிற விஷயம். “அந்தப் படத்தில் இருந்துதான் நான் தரை டிக்கெடுக்குப் போகாம இருக்கேன்.. தொடையைத் தடவறதுக்குன்னே ஒரு எச்சிக் கூட்டம் வரும்டே.. “ என்பார். பின்னணிப் பாடகர் பாடகியர் பற்றி அவருக்கு ஒரு அபார ஞானம் உண்டு.தேவதாஸ் படத்தில் “ எனது வாழ்வின் புனித ஜோதி எங்கே சென்றாயோ..என்று பாடும் ‘ராணியின் குரல் அவரது ஃபேவரிட்.இந்த ராணி பின்னாளில் நாகூர் அனிபாவுடன் பாடிக் கொண்டிருந்தார்.அருமறையின் திரு மொழியில் மறைந்திருப்பது என்ன...? என்ற ஹனிஃபாவின் பாடலில் பதில்க் குரலாக ஒலிப்பது ராணியின் குரல்தான். ஏ.பி கோமளா வின் முல்லை மலர்க்காடு...எங்கள் மன்னவர் தன்னாடு.....என்று ராணி சம்யுக்தா படத்தில் வரும் பாடல் அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.பால சரஸ்வதி தேவி பாடிய “நீலவண்ணக் கண்ணா வாடா...வும் அவருக்குப் பிடித்தமானது.டி.எஸ்.பகவதி யின் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்..... பாடலும், https://www.youtube.com/watch?v=KCh5FrlBpqs&feature=endscreen&NR=1 எஸ் வரலட்சுமியுடன் பாடும் தென்றல் வந்து வீசாதோ தெம்மாங்கு https://www.youtube.com/watch?v=rGu1LMh1maM (சிவகங்கைச் சீமை)பாட்டும் ரொம்பப்பிடிக்கும்.சிவகங்கைச் சீமை ரிக்கார்டுகள், (ஒலிச்சித்திரம், பாடல்கள்) வாங்கச் சொல்லி தெருவின் பணக்காரப் பையனிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அவன் வீட்டில்தான் ரேடியோகிராம் உண்டு. அவன் கட்ட பொம்மன் ஒலிச்சித்திரம் வாங்கினானேயொழிய இதை வாங்கவில்லை.நம்ம கிட்ட வக்கு இல்லாமப் போச்சே என்று சலித்துக் கொள்ளுவார்.
சக்கரவர்த்தி திருமகள் படத்தில் எஸ்.வரலட்சுமி பாடும் “ ஏமாற்றம் தானா என் வாழ்விலே...பாட்டுக்கும் உருகுவார். https://www.youtube.com/watch?v=UJlSRw3T1W8.  அவர் மட்டுமல்ல, அவர் பின்னாலேயே பழைய படங்களின் பழைய பாடல்களுக்காக செகண்ட் ஷோவுக்குப் போவோம்.சக்கரவர்த்தி திருமகளின் மோசமான ப்ரிண்டுக்காகக் கூட மேலப்பாளையம் “கண்ணகி, அது காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜாத்திக்கு சொந்தமானது  தியேட்டருக்கு சைக்கிளில் போனோம் அவருடன் ஒரு முறை. அதே போல வணங்காமுடி படத்திற்கும் மூன்று நாலு மைல் தூரம் நடந்து காவடி எடுத்திருக்கிறோம்.அப்பொதெல்லாம் அவர் கொஞ்சம் செயலாக இருந்தார். ரேஷன் கடை லைசன்ஸ் கிடைத்திருந்தது. போகிற வழியில் ஆபிரகாம் ஓட்டலில் ரொட்டி சால்னா உபயம் இருந்தாலும் இருக்கும்.
     பி.பி ஸ்ரீனிவாஸ் மீதும் அவருக்கு மோகம் உண்டு.
மணமாலைஎன்ற படத்தில் நெஞ்சம் அலை மோதவே கண்ணும் குளமாகவே ...என்று ஒரு பாடல்.அடிக்கடி சிலோன் ரேடியோவில் போடுவான்.அதை என்னிடம் மறக்காமல் எழுதித் தரும்படிக் கேட்பார்.நானும் எழுதித் தந்தேன்,நானும் வைத்திருக்கிறேன்.தனியாகப் பாடிக் கொள்வார், என்று நினைத்தேன். ‘தெய்வபலம் என்றொரு டப்பிங் படம் அதில் வரும் “மலரோடு விளையாடும் தென்றலே வாராய்....பாட்டில் ஜானகியும் பி.பி ஸ்ரீனிவாஸும் செய்யும் ஜாலங்களை அப்படிப் பேசுவார்.
 அப்போதெல்லாம் ஜானகியின் பாடல்களை அபூர்வமாகவே படங்களில் கேட்க முடியும்.ஸ்ரீதருக்கும் பி.சுசிலாவுக்கும் ஏற்பட்ட மனத்தாங்கலில் சுசிலாவை முற்றாகத் தவிர்த்து ஸ்ரீதர், சுமைதாங்கி, போலீஸ்காரன் மகள் படங்களில் பி.பி.எஸ் –எஸ் .ஜானகி ஜோடியைக் கொண்டு வந்தார்.பாலும் பழமும் , தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், என்று அப்போதெல்லாம் டி.எம்.எஸ்- சுசிலா மட்டுமே எல்லாப் பாடல்களையும் ஒரு படத்தில் பாடுகிற காலம் ஒன்று இருந்தது.ஜானகி “ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி...போல ஏதாவது ஒரு பாடலை அபூர்வமாகப் பாடுவார். நிச்சயம் அது சிறந்த பாடலாகவே இருக்கும். மிகப் பெரிய எழுத்தாள நண்பரிடம் அப்போது பேசிக் கொண்டிருந்த போது.... ஆஷா போன்ஸ்லே மாதிரி செக்ஸி வாய்ஸில் பாட ஜானகிதான் சரி என்று சொன்னேன்.. ஜானகிக்கு செக்ஸி வாய்ஸா என்று சிரித்தார். அவர், சிங்கார வேலனே தேவாவை விட்டு விலகாதவர். பின்னாளில் ஜானகி பாடாத படமே இல்லையென்ற இளைய ராஜா காலத்தில் “ நேத்து ராத்திரி யம்மா...கேட்டபோது இந்த உரையாடலை அவரே ஞாவகப் படுத்திச் சரியாதான் சொல்லிருக்கீங்க என்று சிரித்தார்.
கிட்டுப்பிள்ளைச் சித்தப்பாவுக்கு “எங்க வீட்டுப் பெண்’’படத்தில் பி.பி.எஸ் பாடும், “சிரிப்புப் பாதி அழுகை பாதி ...பாடல் ரொம்பப் பிடிக்கும். தத்துவப்பாடலை இப்படித்தாண்டா பாடணும் என்பார்.ஆடிப்பெருக்கு படத்தில், சுரதா எழுதி, பி.பி.எஸ் பாடிய புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது..பாடலை உதாரணமாகச் சொல்லுவார். ‘அவள் யார் என்று ஒரு படம்,சிவாஜி பண்டரிபாய் என்று நினைவு,எஸ்.ராஜேஸ்வரராவ் இசை. இயக்கம் கே.ஜேமகாதேவன் (ஜெமினி கதை இலாகாவின் கே.ஜே.மகாதேவன், சிறந்த திரைக்கதை ஆசிரியர், வஞ்சிக் கோட்டை வாலிபன், ஆயிரத்தில் ஒருவன் எல்லாம் இவர் திரைக்கதைகள்.) அவள் யார் படத்தில் ஒரு வங்காளப் பாடகர் “ ரகுநாத் பாணிக்ரஹி(பெயர் சரியாய் நினைவில்லை, பட்டப்பெயர் பாணிக்ரஹி) பாடிய “கண் காட்டும் ...என்றொரு பாடல், அதெல்லாம் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். நீ யாரோ, நான் யாரோ, நிலையற்ற வாழ்விலே யாருக்கு யார் யாரோ... “ என்று ஒரு பாடல் அது பாணிக்ரஹியா டி ஏ மோதியா என்று நினைவில்லை. அதுவும் அவருக்குப் பிடித்த பாடல். ‘அல்லி பெற்ற பிள்ளை என்று ஒரு படம், அதில் குதிரை பாடுவதாக ஒரு பாடல் வரும், “ எஜமான் பெற்ற செல்வமே....என்று ஒரு பாடல். அது திருச்சி லோகனாதனென்று நினைத்துக் கொண்டிருந்தேன்.இல்லை அது ஜி.ராமனாதன் பாடியது.,கிட்டப்பா சொல்லுவார்.( இசை: கே வி மகாதேவன்). அவருக்கு அபூர்வக் குரல்கள் மீது ஒரு அலாதிப் பிரியம்.அவரும் இன்னொரு மணி அண்ணனும் சேர்ந்தால் கொண்டாட்டமாகப் பேசிக் கொள்வார்கள்.இரண்டு பேருக்குமே டி எஸ் பகவதி, ஜமுனாராணி பாடல்கள் என்றால் அவ்வளவு பிரியம்.மாடர்ன் தியேட்டர்ஸ் கவிதா என்றொரு படம் எடுத்தார்கள்.குமுதம் படத்தை அடுத்து வந்தது.அவ்வளவு எதிர்பார்ப்புடன் வந்தது. படம் படு ஃப்ளாப். பி.பி.எஸ்- ஜமுனாராணி ஹம்மிங்குடன்  பறக்கும் பறவைகள் நீயே பாடலும்  மற்ற பாடல்களும் நன்றாக இருக்கும்.கிட்டுச் சித்தப்பாவுக்கு கல்யாணமானது, ஆனால் மனைவிக்கு இவரைப் பிடிக்கவில்லை.
ஒரு நாள் இரவு அவர் “ஒண்ணுமே புரியலை உலகத்திலே..என்று சந்திரபாபு பாடலைப் பாடிக் கொண்டே வந்தார். வழக்கமாக சிரித்தபடிதான் வந்தார்.இது குமாரராஜா படத்துல, இதுல பாலையா பாடும் “மணமகளாக வரும் மங்கையெவளோ....பாட்டைக் கேட்டிருக்கீங்களாப்பா... யாரும்..என்றார். எல்லோரும் என்னை ஒரு கள்ளச் சிரிப்புடன் பார்த்தார்கள். நான் ஆமா வி.என்.சுந்தரம் பாடியது என்றேன்.அதுக்குத்தான் சின்னவன் வேணுங்கிறது என்றார். மறுநாள்தான் தெரிந்தது, சித்தப்பா,சந்திரபாபு மாதிரியே மனைவியைக் கும்பிடு போட்டு அனுப்பி விட்டார் என்று. அதானாலோ என்னவோ  கடைக்கு எதிராக உள்ள ‘சங்கரோஜித பண்டிதர் தெருவுக்குப் போய் விட்டார்.உண்மையிலேயே ரொம்ப நல்ல பேர் கொண்ட தெரு, கெட்ட பேர் எடுத்துக் கொண்டிருந்த காலம் அது. பலசரக்குக் கிட்டங்கிகளும், இருட்டு நடவடிக்கைகளும் அதிகமாகி விட்டது, அங்கே.
ரொம்ப காலத்திற்குப் பின் திருநெல்வேலி ரத்னாவில் ‘தேவதாஸ்போட்டிருந்தார்கள்.சிறுவயதில் புரியாமல் பார்த்த படம்.காதலில் உழன்று கவிதை எழுத ஆரம்பித்த பிறகு பார்க்கவில்லை.போஸ்டர் பார்த்ததிலிருந்து ஆஃபீஸ் எப்போ முடியும் என்று காத்திருந்தேன்.என் கல்லூரி ஆசிரியர் ஒருவர் வந்திருந்தார்.அவர் அருகே அமர வேண்டியதாகி விட்டது.படம் மெதுவாக ‘சரத் சந்திரரின் சோக உலகிற்குள் நழுவிக் கொண்டிருந்தது.இவள் நினைவில் வரத் தொடங்கினாள். இவளும் பார்வதியும் காணாதென்று, சந்திரமுகியும் வேறு தன் நிறைவேறாத காதலுடன் படுத்த ஆரம்பித்தார்கள்.மனசு விட்டு அழலாம் என்றால் பக்கத்தில் பழைய வாத்தியார்.அப்போது மறுபடி மது விலக்கு அமுலில் இருந்தது. தேவ்பாபுவுடன் சேர்ந்து குடிக்க முடியாது. இருட்டில்,கால்களை மிதித்தபடி எங்களைக் கடந்து போனார் ஒருவர். கோபம் வந்தாலும் சற்றுத் தள்ளிப் போனதும் ஜிஞ்சர் பரீஸ் வாசனை மூக்கைத் துளைத்து, மன்னிக்கச் சொன்னது, மன்னித்தேன். என் அன்பே பாவமா அதில் ஏதும் பேதமா..என்று சந்திர முகி பாடவும், சற்றுத் தள்ளி உட்கார்ந்தவர் கையைக் காட்டி அழைத்தார்.அடடா கிட்டுப்பிள்ளைல்லா என்று நினைத்தபடியே அருகில்ப் போனேன்.முதலில் வாத்தியாரை விட்டுத் தள்ளிப் போனால்ப் போதும் என்றிருந்தது.
பாருடா புளியங்குடி அய்யர் (சி.ஆர்.சுப்பராமன்) என்னமா பாட்டுப் போட்டிருக்காரு..என்றார்.மடியிலிருந்து ஒரு பாட்டிலை  எடுத்து வாயில் சரித்துக் கொண்டார். நாலைந்து ஆரஞ்சு வில்லைகளை நறநறவென்று கடித்தார்.எனக்கு ஒன்றைத் தந்தார்.எனக்கு அதைக் கொடுங்களேன் என்று கேட்க ஆசை. பட்டென்று ஏதாவது சொல்லிரப் போறார் என்று பயம்.அடுத்த பாட்டு வந்திருந்தது.உறவும் இல்லை பகையும் இல்லை..வாத்தியார் கண்களில் தெளிவாக நீர்க் கோடுகள்... அடடா நல்ல வேளை அவராவது நிம்மதியாய் அழட்டும் என்று நினைத்தேன். எனது வாழ்வின் புனித ஜோதி  ....யார் பாடுதா தெரியுதா ராணிடா...ராணி...உனக்குத் தெரியுமா ராணியை...அவதான் எங்க வீட்டு மச்சில் குடியிருந்தாளே....அவ எப்படிப் பாட்டுப் பாடுவா தெரியுமா...நீ எழுதிக் கொடுத்த பாட்டை என்னமாப் பாடுவா தெரியுமா...பாடல் முடிந்து  காட்சி நகரத் தொடங்கியது ...அடப்பாவி மனுஷா இதுக்குத்தான் பாடலை எழுதிவாங்கிட்டுப் போனாயா..இதுக்குத்தான் பாட்டுப் புஸ்தகமா வாங்கிக் குவிச்சியா...எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருந்தேன்.

சிறு போதுடனே வாழும் நறுமணம்
மலரானதும் வெகு தூரம் செல்வது போல
காதலின் தன்மை விலகிப்போவதும் உண்மை..
பாடல் வரிகளை நினைவுக்குள் நிறுத்த முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஓவ்வ்.... என்று சித்தப்பா வாந்தி எடுத்தார்...என் தோளில் போட்டிருந்த கை இறுகவும் தளரவுமாய் இருந்தது. இந்தச் சவம், கக்கி விட்டால் நாத்தம் குடலைப் பிடுங்கும்...அதற்கப்புறம் படம் பார்க்க முடியவில்லை..அய்யோ என்றிருந்தது. என்ன நினைத்தாரோ எழுந்து கொஞ்சம் தள்ளாடியபடி வெளியே போக முயற்சித்தார்.மடியிலிருந்து பாட்டில் சில்லென்று கீழே விழுந்தது.. அதை எடுத்துக்க, நா வெளியே நிக்கறேன் என்று போய் விட்டார். பெரிய கூட்டமெதுவும் இல்லை.. அதனால் அவ்வளவு சிக்கலில்லாமல் அரங்கை விட்டு வெளியேறி விட்டார். மனுஷன் ஒரு பவுண்டு இஞ்சி பாட்டிலில் பாதியைக் காலி பணியிருந்தார்.கடையாச் சரித்த போது எதுவுமே சேர்க்கவில்லை போல. எவ்வளவு தண்ணீர் வீட்டாலும் உரைப்பு நாக்கைப் புடுங்குமே, என்ன செய்வாரோ தெரியலையே என்று அவசரமாய் வெளியே வந்தேன். அந்த உருண்டையான எழவுப் பாட்டிலை மறைக்கவும் முடியாது. திண்டாட்டமாய் இருந்தது. தரை டிக்கெட் கிழிக்கும் ஒருத்தன் எதிரே வந்தான்.., யாரு அரிசிக்கடையா... பஸ் ஏறிப் போயாச்சு....இதை என்ன செய்யப் போறிய... என்றான். அவனிடம் தந்து விட்டு தியேட்டருக்குள் பார்த்தேன்.படம்முடிந்து விட்டது. வெளியேறும் எல்லார் கண்ணிலும் வழிந்தும் வழியாமலும்... கண்ணீர்.


பல்லவி
நெஞ்சம் அலை மோதவே கண்ணும் குளமாகவே
கொஞ்சும் கண்ணன் மேல் கோபமாய்ப் போகிறாள்
ராதை கண்ணன் மேல் கோபமாய்ப் போகிறாள்
சரணம்
குழந்தைப் பருவம் முதல் ஒன்றாகச் சேர்ந்தே
கோகுல வீதிகளில் ஆடியதை மறந்தே
குழலினோசை தரும் தேன் சுவையைப் பிரிந்தே
விழிகள் வேறு திசை maமாறியே
கொஞ்சும் கண்ணன் மேல் கோபமாய்ப் போகிறாள்  (நெஞ்சம்..)

இன்ப ஒளீ நீங்கி இருள் சேரும் நேரம்
சந்தடியே இல்லை யமுனா நதி ஓரம்
கண்ணன் வேறானான் ராதை வேறானாள்
இன்னல்ப் புயலால் திண்டாடலானாள்
என் சொல்வேன் இறைவா உன் லீலையை
கொஞ்சும் கண்ணன்மேல் கோபமாய்ப் போகிறாள்....(நெஞ்சம்)

மானமே பிரதானமாய்- மெய்க்
காதல் தனை மறந்தே போகிறாள்
கொஞ்சும் கண்ணனைப் பிரிந்தே போகிறாள்

நவனீத ஜோரன் குழலூதும் நேரம்
நாடி வந்தே நின்றாள் ராதையே
நாத வெள்ளந் தன்னிலே - காதல்
கண்ணன் மனம் லயித்ததனால் காணவில்லை பேதையை
அவன் லட்சியமே செய்யவில்லை ராதையை

பாராமுகம் கண்டு மாறாத்துயர் கொண்டு
ஏமாறி ராதை போகிறாள் –மனமே
ஏமாறி ராதை போகிறாள்
கொஞ்சும் கண்ணன் மேல் கோபமாய்ப் போகிறாள் (நெஞ்சம்)

தவறு ஏது ராதை மீது சாகசமே நீ செய்தல் தகாது
தாமதம் போதும்,ஜாலம் செய்யாதே கண்ணா
சந்தோஷமாகவே பாராய்
சாந்தி இல்லாமலே ஏதும் சொல்லாமலே
தனியாக ராதை போகிறாள்-உண்மை

உணராமல் ராதை போகிறாள்      (நெஞ்சம்) அவசியம் இந்தப்பாடலைக்கேளுங்கள்
http://www.youtube.com/watch?v=ZPnDLwT9g2c


Visitors