Tuesday, March 20, 2012

21.03.2012 கவிதைகள் தினம்





ஆச்சர்யக்குறி
நான் நடுகிறேன் ஓர் ஆச்சர்யக்குறியை ஒரு மரத்தினருகே
நான் மலரச் செய்கிறேன் ஓர் ஆச்சர்யக்குறியை ஒரு                                    மலரினருகே
நான் அவிழ்க்கிறேன் ஓர் ஆச்சர்யக்குறியை ஒரு பெண் அருகே

துன்பத்தினால் அழவிடுகிறேன் ஓர் ஆச்சர்யக் குறியை
மகிழ்ச்சியில் சிரிக்க விடுகிறேன் ஓர் ஆச்சர்யக் குறியை
மற்றும் நான் என் வழியில் போகிறேன் உணர்ச்சியற்ற
ஒரு தலை கீழான ஆச்சர்யக் குறியைப் போல.
                     -சோங் ஹ்யோன்-ஜோங் (தென் கொரியா)
(தமிழில்: ராஜலக்ஷ்மி)



சுருக்கை இழுத்து
ஆளை இறக்கி விட்டார்கள்

மரத்தின் உச்சிக் கிளையிலிருந்து
இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது
அகணட் ஒரு சுருக்கு
முன்பெல்லாம்
கண்ணுக்குப் புலப்படாத ஒரு தற்கொலை
தினம் தினம் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தது

எல்லாம் மாறிவிட்டது
கரிச்சான் குருவி
அதில் ஊஞ்சலாடியதைக் கண்ட பிறகு.
                           -ரமேஷ் பிரேம்


பிரிவை எழுதும் முன்பாக

உசிப்பி விட்டாலதான்
அசையக்கூடிய நிலையில் இன்றிரவு காற்று வீசிற்று
சுவாசிக்க விரும்புகிறவர்கள் கூட
வேறெங்காவதுதான் போக வேண்டும்
என்னருகில் நின்ற அவன்
ஒரு முக்கிய விடயத்தை பலமாக கத்தியும்,
என்னிடம் சேர்ப்பிக்க காற்றுப் போதவில்லை
மரத்திலிருந்து உதிர்ந்த இலைகள்
பாதித் தூரம் பயணித்தபடி
அந்தரத்தில் நின்று விட்டன.
கையசைத்து
காற்றை அழைத்துச் சென்ற அவள்
திரும்பி வந்து இமைக்கும் வரை
நிலமை வழமைக்குத் திரும்பப் போவதில்லை
                                  -றியாஸ் குரானா


மின்னும் பீங்கான் சில்லுகள்

வீடுகள் பாதுகாப்பற்றவையாக மாறிப் போக
குழந்தைகளுக்கு
பதுங்கு குழிகளைத் தோண்டிக் கொண்டிருந்த போதுதான்
உறுதியான வீட்டிற்கென
தோண்டப்பட்ட பில்லர் குழிகளில்
பொடித்த பாறைத் தூசுகளை நிரவி
கிட்டித்துக் கொண்டிருந்தோம்
கவச வாகனங்களில் கொலைகாரர்கள் சமீபிக்கையில்
ஆழ் துளையிடும் எந்திர இரச்சலை மீறி
குரலெழுப்பிக் களித்திருந்தோம்
ஒன்றன் மீது ஒன்றாய்
சூளைக்கற்கள் எழும்பிக் கொண்டிருக்க
ஒரு இனத்திற்கான கல்லறை
உருவாகத் தொடங்கியது
ஆயுதங்களியும் நிதியையும்
யுத்த நுட்பங்களையும்
கொலைகாரர்களுக்குக் கையளித்த அதிகாரம்தான்
எங்களுக்கு வீட்டுக் கடனையும்
வட்டிக் குறைப்பையும்
வருமான வரி விலக்கையும் அருளியது

ஆளுயரச் சுற்றுச் சுவர் எழுப்பி
பதித்த பீங்கான் சில்லுகள் மினுங்க
வெட்கமற்று
புரட்சிப் புடுங்கி போல கதைத்துத் திரியும் எம்மை
தயவு செய்து மன்னியாதீர்
ஒரு போதும்
                            -லிபி ஆரண்யா


எங்கோ மலைப்பிரதேசத்தில்
ஒரு தோட்டக்காரனிடம்
கெஞ்சி வாங்கி வந்த
திராட்சைக் கொடி
பூக்கவும் இல்லை
காய்க்கவும் இல்லை
மாறாக
படரவிட்டிருக்கிறது
மலையடிவாரத்தை
என் பால்கனியில்.
                 - தென்றல்


தற்கொலை
உனக்கு நிகராய்ச்(?)
சிரிக்கும் ஒன்றை
ஞானித்தேன்-சசி
                  (நாட் குறிப்பு : 08-09-1972)


               

Visitors