Tuesday, August 7, 2012

இரா.சின்னசாமியின் ஏழிலைக் கிழங்கின் மாமிசம்-கவிதை நூலுக்கான முன்னுரை


திறந்தே கிடக்கும் தெரு
 வாழ்க்கை சொற்களாலும் அலகிடப்படும்…” என்பது இன்றையக் கவிதைகள் குறித்த, இன்றையக் கவிதைகளைப் புரிந்து கொள்ள, வாசிக்க, ஒன்ற, அதன் பெருமழைத் தூறலை, தூறலில், வேடிக்கை பார்க்கிறவன் போல் சிறிதே நனையமிக எளிமையான, அடிப்படையான ஒரு மதிப்பீட்டு அரசியல்,“ (இது றியாஸ் குரானாவுக்கான முன்னுரையில் மலேசிய நண்பர் பால முருகன் குறிப்பிடும் வார்த்தைப் பிரயோகம்), என நினைக்கிறேன்.ஆரோக்கியமான தமிழ்க்கவிதை வளச்சியில் .யவனிகா, பூபதி, கடற்கரய், செல்மா, ஸ்ரீசங்கர், இசை, இளங்கோ கிருஷ்ணன்,, நேசமித்ரன்,என்று நம்பிக்கை தரும் படைப்பாளிகள் வந்துள்ள காலமிது .. இன்னும் ஒரு பக்க நீளத்திற்குச் சொல்லக் கூடிய அளவுக்கு கவிஞர்கள் இருக்கிறார்கள், கவிதையும் இருக்கிறது.இவை மகிழ்ச்சி மீதூறச் சொல்லும் வாசகங்கள்.இவர்கள் சார்ந்தும் , இவர்கள் பங்கெடுத்துக் கொண்டும், பல விவாதங்கள் கவிதை குறித்து நடந்தேறி வருகிறது.இதில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்திக் கொள்ளும், காத்திரமான கவிதை உரையாடல்களை முன் வைக்கக் கூடிய முக்கியமான நண்பராகவும் கவிஞராகவும் என்னைக் கவர்ந்து அறிமுகமானவர், திரு சின்னசாமி.,
     இது அவரது முதல் கவிதைத் தொகுப்பு.சின்னசாமியின் கவிதைகளை வாசித்த போது  இது மிகவும் பேசப்படப் போகும்ஒரு தொகுப்பு என்று தோன்றியது.அவரை வாசிக்க, வாசிக்க நான் முதலில்க் குறிப்பிட்ட,  ’வாழ்க்கை சொற்களாலும் அலகிடப்படும்என்ற மதிப்பீட்டு அரசியலை உருவாக்கிக் கொண்டேன். அல்லது படிக்கப் படிக்க அப்படியொன்று உருவானது. அது இயல்பானதுதான். ஒருவருடைய கவிதைகளைப் படிக்கப் படிக்க அவருடைய சகல வாழ்வும் (இதை அனுபவம் என்ற பழைய சொல்லால் குறிப்பிடத் தோன்றவில்லை) மொழி வழியே அவரது படைப்பின் மீது செலுத்தும் ஆளுமையை விட மொழி தனித்து நின்று ஒரு  ஆதிக்கம் செலுத்துகிறது. இதை படைப்பாளியே உணரக்கூட முடியாதபடிக்கு வேடிக்கையான தாக்குதலாகக்  கருத இடம் இருக்கிறது.
இத்தொகுப்பின் முதல்க் கவிதை மந்தைக்குத் தப்பிய மேய்ப்பன்என்றொரு கவிதை.. தலைப்பிலேயே சகலத்தையும் கலைத்துப் போடுகிறது, கவிதை.கொஞ்சம் சாதாரண வரிகளுடன் ஆரம்பித்தாலும்,இறுதி மூன்று வரிகள்,
ஆடு மந்தையைத் தேடிக் கொண்டிருக்கிறது
மேய்ப்பன் ஆட்டினைத் தேடிக் கொண்டிருக்கிறான்
என்ன திணை இது”-   
இதிலும் இந்தக் கடைசீ வரியில்,கவிதை மொழியின் ஆதிக்கத்திற்கு தன்னைப் பலி ஆக்கிக் கொள்கிறது. திணை என்னும் ஒரு செவ்வியல்ச் சொல் எத்தனையோ நூறாண்டுகளைக் கடந்து புதுச் சொல்லாகி ஒரு அற்புதமான கவிதா  மனசைத் தருகிறது. கவிஞரே தன் உரையில் சொல்வது போல.” உணச்சிகளை சலனப்படுத்தும்வரி இது.கவிதை குறித்த கவிதைகள் மீது எனக்குப் பொதுவாக ஈடுபாடு கிடையாது.ஆனால் இத்தொகுப்பில் வரும் அதன் பொருட்டுஎன்ற கவிதை….. அதன் அற்புதமான வரிகள், சொற்களால் வித்தியாசமான கவிதையாக உள்ளது.
ஒரு இரவின் காமத்தை பகிர்ந்தளிக்க
மௌனப்படாத நிலையில் அசந்தர்ப்பமாக எழுதப்பட்ட
ஒரு கவிதையை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்”.-
என்று ஒரு கவிதை தன் பொருட்டு வைக்கும்  வாதங்கள் போல் செய்திகளை அடுக்குகிறது.மீன் தொட்டிக்குள் நீந்தும் மீனின் எந்த ஒழுங்குமற்ற நீர்த்தடங்கள் போல வரிகள், வார்த்தைச் சேர்க்கைகள், அபத்த அடுக்குகளாய்த் தோன்றினாலும்கவிதை முடிகிறபோது நம்மைக் கவர்ந்து விடுகிறது. ”ஒரு இரவின் காமத்தை பகிர்ந்தளிக்க
மௌனப்படாத நிலையில் என்கிற வரிகள் மிக அழகானவை.
சின்னசாமியின் ஆதி வாழ்க்கை அலைக்கழிதல்களுடன் நடந்தேறிய  ஒன்றுதான்.அதன் தாக்கங்கள், வலி, வேதனை, கொண்டாட்டம்,(அது கூட ஒரு வேதனைதான்), ஆதங்கம், ஏமாற்றம்,எல்லாம் சில கவிதைகளில் ஆங்காங்கே வெளிப்படுகின்றன.ஆனால் வழக்கமான வலி உணரும் மனிதன்  பாணியில் இல்லாமலிருப்பதுதான் சிறப்பு. மலையும் மலை சார்ந்த இடமுமான உச்சிக்காடுஒன்றில் நிகழும் பல இயற்கையுடனான மனிதனின் போராட்டங்களைக் கண்டு, உருவாகி என்ன செய்யப் போகிறோம் என்றோ என்னவோ தங்கையின் கரு தன் பிண்டத்தைத் தானே செங்குருதி தாரை வார்த்துதானே அழிந்து போகிறது.ஆனாலுமென்ன இன்னொரு கரு, உருவாகமலா இருக்கிறது, வாழ்க்கை நகராமலா இருக்கிறது.
     சொல்லுதலின் முழுமை சொல்லில், சொல்லால் இல்லை.சொல்லின் இந்த ஒளிந்து மறையும் விளையாட்டு எல்லாக் கவிஞனும் அனுபவிப்பதுதான்.சின்னசாமியின் சொல்கவிதையும் இதையே சொல்ல வந்தாலும்..அதை இருப்பின் தவிப்போடு இணைக்கையில் புதிய பரிமாணம் பெற்று விடுகிறது.
     பன்னாட்டு நிறுவனங்கள், அவற்றின் புதிய காலனிய சுரண்டல் குறித்து இன்றைய கவிதைகள் பல் வேறு தளங்களில் சொல்லி வருகின்றன.இத்தொகுப்பின் அந்தரவெளியில் தொல்லுயிர் ஒன்றுகவிதையின், தானே அமைந்து விட்ட, செய்நேர்த்தி அவரது முழு மனக்குமுறலையும் வெளிக் கொணர்வதாக இருக்கிறது.அத்துடன் இது, ”எத்தியோப்பிய, வாழும் எலும்புக்கூடுகளின் சிறிதேயான மூச்சு விடல் என்னும் உலகளாவிய வன்முறையைச் சுட்டுகிறது என்பதோடில்லாமல், இதை பிரபஞ்சம் முழுதும் எள்ளலுடன் வேடிக்கை பார்ப்பதாக நினைக்கச்சொல்லும்,”அந்தர வெளியின் புள்ளியாய் ஒளிரும்(ஒரு) தொல்லுயிரியும்கவிதைக்கு புதிய பரிமாணங்களைச் சேர்க்கிறது.
     இன்றைய கவிதை எந்த மையத்திலும், மையத்திற்கும் தன்னை ஒப்புக் கொடுத்து விட்டு செக்கு மாடு போல் சுற்றி வருவதில்லை.வானில் நிறப்பிரிகையின் விளையாட்டை வில்லாய்க் கற்பிப்பவன் அதன் வியாபாகம் பூமியிலா வெளியிலா என்று உணர்கிறானா தெரியவில்லை.ஆனால் ஒரு கவிதையின் வியாபகம், ‘அதிபர வளையம்’(hyper bole) போல், தன் அர்த்தத் தொடுகோட்டை, அனந்தமான புள்ளியில் தொடுகிறது.அந்த முடிவிலியின் பிராந்தியத்திற்கு, சொற்கள் வழி காட்டவே முடியும். சென்று சேர்பவனுக்கும் புதிய சொற்களே காத்திருக்கும், இன்னும் கதி மோட்சம் தர..அப்படியான ஒரு கவிதையே வானவில்லின் வலி”. ஒரு சிறிய கவிதை, சொல் வெளியெங்கும் வியாபித்து, ஆதாரமான உடலில் முடிகிறது.”உடலைப் பொறுத்து அதன் செயலாற்றும் திறனே அதன் மூளைஎன்னும் அரவிந்தர் இங்கு ஏனோ நினைவுக்கு வருகிறார்.
     ”கற்றாழைக்குள் பதுங்கும் நாகம்கவிதை,
அம்புகளை முறிக்கின்றது வில்
அவளுள்ளிருந்து உதிக்கின்றது லிங்கம்”- போன்ற அபூர்வ வரிகளுடன், லிங்க வடிவம் பற்றிய சரியான புரிதல்களுடன் எழுதப்பட்டிருக்கும் ஒரு கவிதை.
இன்னும் பல கவிதைகள், வாசகனின் பல்துறை ஈடுபாட்டையும் கோரும் வண்ணம், தொன்மம், சரித்திரம்,அரசியல் என விரிவான பல தளங்களில் பயணப் பட்டு, மனிதனின்  சில ஆதாரச் செயல் பாடுகளில்  தன் முடிவைக் கொண்டிருக்கிறது.(அல்லது முடிவின்மையை) ”கடவுளின் மாமிசம்இதற்கொரு நல்ல உதாரணம்.உங்களுடைய கண்டுபிடிப்பில் இன்னும் பல நல்ல உதாரணங்களைக் காட்டக் கூடியவகையில் பல நல்ல கவிதைகளைக் கொண்ட தொகுப்பு இது. திறந்தே கிடக்கும் தெரு இது, சுதந்திரமாக நடை பழகலாம் யாரும்.
தன் கவிதைகள் மூலம் சின்னசாமி அற்புதமான பல மாயப் புள்ளிகளை வெளிகளில் உண்டாக்குகிறார். அவற்றுக்கிடையே சொற்களால் தொடர்பைத் தொடர்பற்றுக் கோலமிழைக்கவும் அவரால் கூடுகிறது.”நிலம்-காதல்-மொழிசார்ந்து அவர் எழுதியிருக்கும் நான்கு கவிதைகளும், ஒரு குறுங்காவிய நேத்தியுடனானவை. அவரின் சொற்கள், வாழ்க்கை தினம் தினம் புதுப்பிக்கும் அர்த்தம் கொண்ட அதே சொற்கள்தான்.இது இறுதி அர்த்தமென்று எந்தச் சொல்லுக்கும் ஒரு அர்த்தத்தை நல்ல கவிதையோ , நல்ல கவிஞனோ சொல்லுவதில்லை.அந்த வகையில் பல நல்ல கவிதைகளைத் தன் முதல்த் தொகுப்பிலேயே தந்திருக்கிறார் சின்னசாமி.அவருக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
அன்புடன்
கலாப்ரியா

3 comments:

rajasundararajan said...

//ஒரு கவிதையின் வியாபகம், ‘அதிபர வளையம்’(hyper bole) போல், தன் அர்த்தத் தொடுகோட்டை, அனந்தமான புள்ளியில் தொடுகிறது.//

இப்படி உணர, சொல்ல ஆள் உண்டு பாருங்கள் அதுதான் தமிழ் பெற்ற பேறு!

kalapria said...

இப்படி உள்ளார்ந்து படிக்க பாராட்ட, நீங்கள் இருப்பது என் பேறு. நன்றி. சுந்தரராஜன்...

kalapria said...
This comment has been removed by the author.

Visitors