Thursday, April 29, 2010

ஓடும் நதி-29


அந்தப் பழமையான உடுப்பி ஓட்டல் சுவர்களில், வரிசையாக, அற்புதமான காலண்டர் ஓவியங்களை சட்டமிட்டு மாட்டியிருப்பார்கள். அநேகமாக வடக்கத்தி ஓவியர்கள் வரைந்தவையும், ரவி வர்மா படங்களும் இருக்கும். மகாபாரதக் காட்சிகள்,அனுமன் பீமன் உரையாடல், சிசு பாலன், மயானக் கூலி கேட்கிற அரிச்சந்திரன், துஷ்யந்த நினைவில் உலகை மறந்திருக்கும் சகுந்தலையைச் சபிக்கிற துர்வாசர் என்று கதை கதையாய்ச் சொல்கிற ஓவியங்கள். அதில் ஒன்றை, சாப்பிடுவதற்கு ஆர்டர் கொடுத்துவிட்டு வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொடிருப்பேன். யார் வரைந்தது தெரியாது, அநேகமாக, எஸ்.எம்.பண்டிட் வரைந்ததாக இருக்கலாம். நிலவு பொழியும் ஒரு அழகிய நீர் நிலையின் புற்கள் படர்ந்த கரையில், தேகம் மெலிந்த ஒருவர், , கண்மூடியபடி பொக்கை வாய் திறந்து, கிருஷ்ணகானத்தை லயித்துப் பாடிக் கொண்டிருப்பார். ஒரு கையில் தம்புரா, ஒரு கையில் சிப்ளாக்கட்டை.எதிரே கண்ணன், சம்மணமிட்டு அமர்ந்து பவ்யமும்,ஆனந்தமுமாக கேட்டுக் கொண்டிருப்பான்.அவர் யார் என்பதும் தெரியாது. அப்போது நான் நான்கோ, ஐந்தோ படித்துக் கொண்டிருந்தேன். (கோவை ஓவியர் ஜீவானந்தம் சமீபத்தில் சொன்னார் அது கண் தெரியாத இசைஞன் பக்த சூர்தாஸ் என்று)

அச்சசல் அவரைப்போலவே இருப்பார் அந்த ஒண்ணா(ம் வகு)ப்பு சார்.அவரிடம் நான் பயின்றதில்லை.ஆனால் பல பேருக்கு அவர்தான் விஜயதசமி அன்று ‘அகரத்தை அரிசியின் மேல் எழுத வைத்து அறிவுக்கண்ணைத் திறந்த ராசியான வாத்தியார் என்பார்கள்.ஓட்டலுக்கு அவர் வந்தால் பெரிய மரியாதையாய் இருக்கும். கல்லாவுக்கு அருகே இருக்கும் ஒரு சிமெண்ட் பெஞ்சில்தான் உட்கார்வார். ஒரு காஃபி மட்டுமே சாப்பிடுவார்.பெரும்பாலும் அவருக்குத் தெரியாமலே யாராவது காசு கொடுத்திருப்பார்கள். அவர் காசு தர, கல்லாப் பக்கம் வந்தால், போத்தி, எல்லாம் கொடுத்தாச்சு, என்பார் ஒரு சிரிப்புடன்.

சரஸ்வதி பூஜை முடித்து, இரண்டு கைகளிலும், வாய் நிறையவும், சுண்டலுடன் வீட்டுக்குள்ளிருந்து தெருவுக்கு வந்த போது எதிரே நீலகண்டன் வந்தான், என்னை விட ஒன்றிரண்டு வகுப்பு மூத்தவன். அவன் , வேறு பள்ளிக் கூடம்.அவன் கையில் பனை ஓலையைக் கத்திரித்துச் செய்த, குருவி மாதிரி ஒன்றை வைத்திருந்தான்.தகடு போல இருந்தது, ஆனால் வால்ப் பக்கம் ஒரு முடிச்சு போலிருந்ததை இழுத்தால் பறவை இறக்கை விரித்தது.வாயால் அழகாகச் சத்தமிட்டுக் கொண்டான், இறக்கை விரிக்கும் போது. ஒரு கைச் சுண்டலை அவனிடம் கொடுத்துவிட்டு, அதைப் பார்க்கக் கேட்டேன். தந்தான். “உனக்கும் இதே மாதிரி வேணுமா,என்னுடன் மத்தியானம் ஒரு சார் வீட்டுக்கு வாறியா, சார், நாளைக்குப் படிக்கப் போடற பிள்ளைகளுக்கு ஏடு எழுதுவாரு, அதுக்கு உதவி பண்ணுனா இதே மாதிரி செய்து தருவார்என்றான்.மத்தியானம் சாப்பிட்ட கையோடு அவனுடன் சார் வீட்டுக்குப் போனேன்.

அங்கே ஒரு மர ஈசிச் சேரில் ஒண்ணாப்பு சார், அவரைச் சுற்றி நாலைந்து பையன்கள். அவர்கள் முன்னால் நிறைய ஏடு போல ஓலை நறுக்குகள், அதில் மஞ்சள் தடவிக் கொண்டிருந்தார்கள். சிலர் முற்றத்து வெயிலில் மஞ்சள் தடவிய ஏடுகளைக் காய வைத்துக் கொண்டிருந்தார்கள். சார், ஏட்டில் எழுத்தாணியால் வேகமாக எழுதிக் கொண்டிருந்தார்.என்னைப் பார்த்ததும் வாடே உக்காரு என்றார் பொக்கை வாய்ச் சிரிப்புடன். என்னிடம் இரண்டு ஏடுகளைத் தந்து அதில் மஞ்சள் பூசச் சொன்னார். .நான் ஏட்டில் உள்ளதை வாசிக்க முயன்றேன், சரியாகத் தெரியவில்லை.மஞ்சளைத் தடவி விட்டுப்படி என்றார் சார். மஞ்சள்ப் பொடியைத் தடவினேன்.

முதல் ஓலையில்ஓம் அறிவோம் நன்றாக குரு வாழ்க, குருவே துணைஎன்றிருந்தது. இரண்டாவதில் அ,ஆ, இ, ஈ.....என அகரவரிசை இருந்தது. குத்தெழுத்தெல்லாம் இல்லாமல் கூட்டெழுத்தில் எழுதியிருந்ததைப் படிக்க சற்றுச் சிரமமாக இருந்தது. காற்புள்ளி, அரைப் புள்ளி, முற்றுப் புள்ளி எதுவும் இல்லை.தமிழில் அவை கிடையவும் கிடையாது.அது காலனியாதிக்கம் தந்தது. சாரின் வீட்டுக்காரம்மாள், எல்லோருக்கும் பானகம் தந்தார்கள். இருட்டப் போகும் போது, சார் எழுத்தாணியை மடித்து விட்டு கத்தியைப் பிரித்தார்,இரண்டும் ஒரே தந்தப் பிடிக்குள் இருந்தது. ஓலையைக் கத்தியால் விறு விறுவென்று வெட்டினார்.குருவியும்,அன்னமும் மயிலுமாய் அவர் மடியில் விழுந்தது.பையன்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்தனர்.ஏல அவனுக்கு ஒன்னு கொடுங்கடா என்றார். கொடுத்தார்கள், ஒரு அன்னப்பறவை. ஆனால் அது சிறகையெல்லாம் விரிக்கவில்லை, ஏமாற்றமாய் இருந்தது.மறுநாள் செய்து வாங்கித் தருவதாகச் சொன்னான், நீலகண்டன்.

மறு நாள் படிக்க வைக்கும் வீடுகளுக்கும் நீலகண்டனுடன் போனேன். பூந்தி, காப்பரிசி.எல்லாம் கிடைத்தது.பையன்களோடு கோரஸாக சார் சொல்லச் சொல்ல, “அரி சித்தரி “என்று அரிச்சுவடி சொன்னோம். சார் அந்தந்த வீட்டுக்குழந்தைகளின் கை விரலைப் பிடித்து, புதுச் சொளகில் பரப்பி வைத்திருக்கும் அரிசியில் எழுதி அட்சராப்பியாசம் செய்தார். எல்லா வீடுகளிலும் சாருக்கு தனியாகப் பூந்தியைப் பொட்டலமாகக் கொடுத்தார்கள்.கடைசி வீடு முடிந்த போது,சார் என்னிடம் பெரிய பொட்டலமாக இரண்டைக் கொடுத்து “இந்தாடே ஒன்னை நீ வச்சுக்கோ, ஒன்னை வீட்டுல கொண்டு குடுத்திறுதியா என்று கேட்டார். வாங்கிக் கொண்டு சார் வீட்டுக்கு ஓடினேன்..

அவரது மனைவி, பட்டாசல் நடையில் தலை வைத்துப் படுத்திருந்தாள். என் காலடிச் சத்தம் கேட்டு, தலையைக் கொண்டை போட்டபடி எழுந்தாள்.நான் நீட்டியதை வாங்கிக் கொண்டாள். அவளருகே இன்னும் சில மஞ்சள் பூசிய, பூசாத ஏட்டுச் சுவடிகள் கிடந்தன.எங்கே, நெல்லையப்பா, சோத்துக்கு இல்லையேப்பான்னு கோயிலுக்குப் போயிட்டாகளா, தெரியுமே, இது என்னத்துக்கு பூந்தி, புள்ளையா குட்டியா,என்றபடி, சுவடிகளை காலால் எற்றினாள், இன்னம இது வெண்ணீர் போடத்தான் லாயக்குஎன்று சொல்லிக் கொண்டே உள்ளே போனாள்.

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

அருமை சார். சந்தி பிள்ளையார் பக்கம் உள்ள உடுப்பி ஹோட்டலா அல்லது சுவாமி சன்னதி பக்கம் உள்ள உடுப்பி ஹோட்டலா.

சந்தி பிள்ளையார் ஹோட்டல் வீடு பொண்ணு வந்தனா என் பள்ளிகூட செட். இப்போ எங்க இருக்கங்கிலோ தெரியலை, ignatius la படிச்சா வரை டச் இருந்துச்சு.

ராம்ஜி_யாஹூ said...

அவ ignatius நாங்க சேவியர்ஸ், பதிநோனாம் நம்பர் பஸ்ல அவ கூட பேசிட்டே வரணும்னே பசங்க நாங்க சந்தி பிள்ளையார் ஸ்டாப் வரை பஸ்ல பொய், திரும்ப திகட் எடுத்து டவுன் போலிகஸ் ஸ்டேஷன் ஸ்டாப்ல இறங்கி மார்கட் வழியா பூதத்தான் முக்கு, அம்மன் சன்னதி வருவோம்.

அது ஒரு பொற் காலம் சார்.

Visitors