Wednesday, August 19, 2015

குழந்தையும் சினிமாவும் கொண்டாடும் இடத்தில்....


குழந்தையும் சினிமாவும் கொண்டாடும் இடத்தில்....

     சிவக்கொழுந்து என்கிற கொழுந்தண்ணன், நல்ல உயரம். ஸ்கூலுக்கு போகும் போது,வழியெங்கும் வேஷ்டி கட்டிக் கொண்டுதான் வருவார். எங்களை விட வயதில் மூத்தவர். எப்போதுமே மூத்தசெட் பின்னால் வர, நாங்கள் முன்னால் போவோம். ஆனால் அவர்கள் எல்லோருமே முன்னாலேயே கிளம்பி விடுவார்கள்.வழியில் ஒரு பெட்டிக்கடையில் நின்று வருவார்கள். அதற்குள் பின்னால் கிளம்புகிற நாங்கள் முந்தி விடுவோம். எங்களுடன் வருகிற அவரது தம்பி அவர் புத்தகங்களையும் சேர்த்துத் தூக்கி வருவான். ஸ்கூலுக்கு அருகில் உள்ள பெட்ரோல்பல்க் வரும் போது, பையை வாங்கிக் கொண்டு,அதன்  பின்புறம் போய், யூனிஃபாரம் டிராயருக்கு மேலாய் கட்டிக் கொண்டிருக்கும் வேட்டியை அவிழ்த்து பைக்குள் வைத்துவிட்டு, டிராயர் மட்டும் போட்டுக் கொண்டு வருவார். வகுப்பறைக்கு,வந்ததும் விடுவிடு என்று போய் கடைசியில் அமர்ந்து கொள்வார். நடுவில் யார் கூப்பிட்டாலும்  திரும்பவே  மட்டார்.பி.டி கிளாஸ் என்கிற டிரில் கிளாசுக்கு மட்டும் வெளியே வருவார் மற்றப்படி ஸ்கூல் முடிந்ததும் முதல் ஆளாக வெளியே வந்து அதே பல்க், மறுபடி வேட்டி, மறுபடி புத்தகப்பை தம்பியிடம் அல்லது எங்களிடம்.  பாஸ்கெட் பால் மற்றும் ஜாவலின் த்ரோ என்கிற எரியீட்டியில் ஸ்கூலுக்கு எப்படியும் ஒரு கப் வாங்கி வருவதால் அவரை பள்ளியை விட்டு நீக்காமல் வைத்திருந்தார்கள். அப்படியும் டிரில் மாஸ்டரிடம் ஒரு முறை ஏதோ பிரச்னையாகி விட்டது, அடிக்க வந்த அவரது பிரம்பை வாங்கி முறித்துப் போட்டுவிட்டுப் போனவர்தான்,ஆள் எங்கே என்றே தெரியவில்லை.
aanaaஆனால் டிரில் மாஸ்டர் செல்லம் என்பதால், அவர் புதுப்படம் ரிலீஸாகிற அன்று  கிளாசுக்கே வரமாட்டார். பெட்டிக்கடையோடு ஸ்டாப். மறுநாள் காலையில் ஸ்கூல் போகும்போது அவரோடு ஒட்டிக் கொண்டு செல்லுவோம். படத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டு  வருவார். பேச ஆரம்பிக்கிறபோது, தம்பி படம் வெறும் குப்பை தம்பி, என்பார். ஆனா பாட்டு பிரமாதமா போட்ருக்காம்ப்பா, ஏழு பாட்டும் அப்படி இருக்கு, ஃபைட்டும் தூளா இருக்கு, ஏய் யாரோ ஒரு புதுக் குட்டிடே ஒரு டைட் ட்ரெஸ் போட்டுகிட்டு கிளப்டான்ஸ்ல வரா பாரு, அதுக்கே துட்டு செத்துது.’ ‘கதை  என்ன அண்ணாச்சி என்றால். நல்ல புது மாதிரி ஜாலிக் கதையா இருக்குடே’, என்பார். கண்டிசனா மூணு,  நாலு வாரம் ஓடும்டே, என்பார்.வேற என்னலே வேணும், கழுந்து மூதி..என்று யாராவது அவர் தோள் மட்ட நண்பர்கள் கேட்டால், ஒரு தரம் தாராளமாப் பாக்கலாம், என்ன பொம்பளை கூட்டம் இருக்காது, அப்படீம்ப்பார். இதுதான் அவர் அநேகப் படங்களுக்கும் சொல்லும் விமர்சனம். பெண்கள்  கூட்டம் வரும் படம் என்றால் அவருக்குக் கன கொண்டாட்டம். தரை டிக்கெட்டில் பெண்கள் பகுதியை பிரித்திருக்கும் மரத்தட்டியை ஒட்டி உட்கார்ந்து விடுவார். ஒட்டகச் சிவிங்கி மாதிரி யாராவது அரை இருளில் தியேட்டரில் பெண்கள் பகுதி அருகாகத் தெரிந்தால் சொல்லி விடலாம். சிவக்கொழுந்து வந்திருக்கார்லே என்று. அவர் அதிகம் பார்த்த படம் கற்பகம். பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து கே ஆர். விஜயாவுக்காக கண்ணீரைக் கொட்டி,முந்தானையால் துடைத்துக் கொண்டிருதார்கள். இவர் கண்கொட்டாமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். தரை டிக்கெட் முழுவதும் பெண்களுக்கு என்று ஞாயிற்றுக் கிழமை மாலைக் காட்சிக்கு ஒதுக்கிய ஒரு ஞாயிறு அன்று அவருக்கு வருத்தமோ வருத்தம். ஏன் அண்ணாச்சி படம் தான் நெறைய தரம் பார்த்தாச்சே பொறவு என்ன வருத்தம், என்றால்,ச்சே சகிலாப்புள்ளை நடிப்பு பிரமாதம்ப்பா, யார் பையன் டெய்சிராணிக்குப் பொறவு இந்தப் புள்ளை வெளுத்து வாங்கியிருக்குல்லா என்பார்.  பேபி ஷகிலா,அதில்தான் விஜயாவுடன் அறிமுகமான நினைவு.
பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் சிறுவர்கள் பேண் வேடமிட்டது போக,சினிமாவில் பெரும்பாலும் பெண்குழந்தைகள் ஆண் வேடமிட்டு நடிப்பது வழக்கம். யார் பையன், ஸ்ரீதரின் ஒரு அற்புதக் காமெடிப் படம். ஒரு வங்காளக் கதையைத் தழுவியது. என்.எஸ்.கிருஷ்ணன் சகோதரர் திரவியம் தயாரித்தது.இதில் டெய்ஸி ராணி ‘பூரிஎன்ற பையனாக நடித்திருப்பார். உண்மையில் அந்தக் குழந்தையின் பெயர் டெய்சி இரானி என்பதுதான்.ஆனால் அதை தமிழ்க் குழந்தையாக ஏற்றுக்கொண்ட தமிழ்ச் சமூகம் டெய்சி ராணி என்றே அழைத்தது. என்.எஸ்.கே., ஜெமினி,சாவித்ரி என்று நட்சத்திரப் பட்டாளமே இருந்தாலும் ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டது, டெய்சி ராணிதான். அவ்வப்போது குழந்தை நட்சத்திரங்கள் முக்கியத்துவம் பெறும் படங்கள் சிறப்பாக ஓடிவிடும்.ஆனால் அதே பச்சை மண்ணை வைத்து பிள்ளையார் பிடித்தால் குரங்காகி விடும். டெய்சி ராணியுடன் அவர் தங்கை ஹனி இரானியும் சேர்ந்து நடித்த ‘நான் வளர்த்த தங்கைவெற்றி பெறவில்லை. ஒரு படத்தின் வெற்றி என்பதே முதல் நாள் மாட்னி பார்த்து வரும் ரசிகன் சொல்லும் வாக்கில்தான் இருக்கிறது. ஆனால் அவன் பாமரனாக இருப்பது முக்கியமென்று படுகிறது. என்னதான் முடிவு படம் பார்த்து விட்டு வரும்போது, செண்ட்ரல் தியேட்டர் மேனேஜர் கூப்பிடுவதாக அழைத்தார்கள்.கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அன்று அங்கு வந்திருந்தார். மேனேஜர் எங்களை அறிமுகப் படுத்தினார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஏம்ப்பா தம்பிகளா படம் எப்படி இருக்கு, என்றார். நானும் சபாபதி என்கிற நண்பனும்,பிரமாதமாருக்கு, என்றோம், சபாபதி, இந்த வருடம் தங்கப்பதக்கம் கிடைச்சாலும் ஆச்சரியமில்லை,என்றான். அவருக்கும் மகிழ்ச்சிதான்,ஆனால் அடுத்து அவர் கேட்டது எங்களை  கஷ்டத்திற்குள்ளாக்கியது, “படத்தோட கருத்து புடிபட்டுதா,” என்றார். நான் வாயைத் திறக்கும்முன்,ஒரு பாமர ரசிகன், “ சார், அதெல்லாம் புரியுது,காணாததுக்கு, அதைப் பாட்டுப் புஸ்தகத்திலேயே தான் போட்ருக்கீங்களே... படம், பாலையா நடிப்பு எல்லாம் நல்லாருக்கு, பாராட்டுப் பத்திரம் வேணும்ன்னா கிடைக்கும்,பதக்கமெல்லாம் வராது, என்று தேங்காய் உடைச்ச மாதிரி சொன்னான்.அவர் முகம் தொங்கிப்போய் விட்டது.ஆனால் உண்மையில் அதுதான் நடந்தது.என்னதான் முடிவின் முடிவு அதுதான்.
மகாதேவி படத்தில் மாஸ்டர் முரளி என்றொரு பையன் இளவரசனாக அழகாக நடித்திருப்பான்.அப்போதைய ரசிகர்களின் செல்லம் அவன். ஆனால் அதற்கு முன்பே எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த குழந்தைகள் படம் ‘ஜெய கோபி’.என் அண்ணனுடன் போனேன்.ஐந்து வயது இருக்கும். அதில் கடைசிக் காட்சியில்,கோபி ஒரு (சிகப்புத்) துணியுடன் ரயில்வே டிராக்கில் ஓடி வந்து ரயிலை நிறுத்தி பெரிய விபத்திலிருந்து காப்பாத்தி ‘ஜெய கோபிஆவான். மா கோபி என்ற கன்னடப்படம் ஒன்றின் டப்பிங்.அநேகமாக டப்பிங் படங்கள் அல்லது பிற மொழியில் வெற்றிபெற்ற குழந்தை நட்சத்திரங்கள் நடித்த படங்களே தமிழில் ரீமேக் ஆகும். அப்போது ‘ஜேசூஸ் பச்சே’- ’துப்பறியும் குழந்தைகள் என்று ஒரு ஜப்பானியப் படத்தின் ஹிந்தி டப்பிங் படம், அடிக்கடி சனி ஞாயிறு காலைக்காட்சிகளில் போடுவார்கள். எங்கே போட்டாலும் தவறாமல்ப் போய்விடுவோம். நல்ல சிரிப்பாக இருக்கும். ஜெய கோபி படம் போலவே அல்லது அதே கதையுடன் பந்துலு ‘ஷகிலாவை வைத்து ‘எங்க பாப்பா எடுத்தார். பேபி ஷகிலா-கற்பகம் படத்தில் ஹிட் நடிகையான பின் ‘வேட்டைக்காரன் படத்தில் எம்.ஜிஆரின் மகனாக நடித்தார். அதற்குப் பின் எ.வீ.பிள்ளை ஒரு மகத்தான வெற்றி. தொடர்ந்து ஷகிலாவில் மையம் கொண்டது தமிழ் சினிமா.  கன்னித்தாய் படம் ஷகிலாவைச்சுற்றி பின்னப்பட்ட படம்.அது ஒரு ஆங்கிலப்படத்தின் விலகிய தழுவல் என்றார்கள்.பாவம் ஆங்கிலப்படம். தொடர்ந்து நாடோடி படத்திலும் ஷகிலாவுக்கு கேரக்டர் உருவாக்கப் பட்டது.சரோஜாதேவியின் தங்கையாக. சரோஜாதேவிக்கே மகளாகப் போட வேண்டிய குழந்தை, வி.கே. ராமசாமியின் மகளாக. ஆனால் அந்தக்காலத்தில் ஐம்பது வயதில்கூட குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களும் உண்டு. அம்மா எங்கே என்ற மாடர்ன் தியேட்டர்ஸ் படத்திலும் ஷகிலாவுக்கு நல்ல ரோல்.இந்திப் படத்தின் தழுவல்.சில பாடல்கள் உட்பட.
மாடர்ன் தியேட்டர்ஸ் கைதி நம்பர் 911 படத்தை கைதி கண்ணாயிரம் என்ற பேரில் படமாக்கினார்கள். பேபி சாவித்திரி என்ற பெண்குழந்தை குமரன் என்ற ஆண் குழந்தை ரோலில் நடித்தது. இந்திப்படத்தின் டியூனிலேயேமகாதேவன் போட்ட ‘கொஞ்சிக் கொஞ்சிப் பேசி  மதிமயக்கும்...பாடலுடன் படம் சூப்பர்ட் டூப்பர் ஹிட்.இதன் ஹிந்திப் பதிப்பில் டெய்சி இரானி, கடத்தப்படும் பையனாக நடித்தது. பேபி சாவித்ரி,ஜாவர்சீதாரமன் மகள் என்று கூட ஒரு பேச்சு அடிபட்டது அது உண்மையில்லை என்றும் சொல்லுவார்கள். உண்மையில் ஜாவர் சீதாராமனே ஒரு குழந்தை மாதிரித்தான் இருப்பார். அவருக்கு குழந்தைகள் சப்ஜெக்ட் ரொம்பப் பிடிக்கும். களத்தூர் கண்ணம்மா, குழந்தையும் தெய்வமும், ராமு எல்லாம் அவர் கதை வசனம்தான்.இதே போல ஸ்ரீதரின் கல்யாணபரிசு படத்தில் வரும் குழந்தை நட்சத்திரம் பாபு, அப்போது காலமாகிப் போன ஸ்டண்ட் மாஸ்டர் பலராமன் அவர்களின் மகன். ஆனால் அதை படத்தின் டைட்டிலில் போடுவார்கள். தந்தையை இழந்த உண்மையான சோகத்தை, குழந்தை தாயை இழந்த சினிமா சோகமாக வெகு இயற்கையாகக் காட்டியிருக்கும்.
மாடர்ன் தியேட்டர்ஸ் 1959-60 களின் ‘உஸ்தாத்இந்தி சீரியல்களைத் தமிழில் தர ஆரம்பித்தார்கள். உஸ்தாதோன் கி உஸ்தாத் -வல்லவனுக்கு வல்லவன், தோ உஸ்தாத் - ‘இரு வல்லவர்கள் என்றும் வந்தது.இரு வல்லவர்கள் படத்தில் ஷகிலாவுக்கு, குவாகுவா பாப்பா இவ குளிக்கக் காசுகேப்பா..என்று எம்.எஸ். ராஜேஸ்வரி பாடுவார். கைதி கண்ணாயிரத்தில் சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம், அம்மா எங்கே படத்தில் அம்மா அம்மா எங்கே போனே...என்று குழந்தைகள் படம் என்றாலே ராஜேஸ்வரி பாட்டு வந்து விடும். அப்படியே அந்த நல்ல பாடகியைப் பலி வாங்கியது தமிழ் சினிமா. (நல்ல வேளை எஸ்.ஜானகி தப்பிவிட்டார். சில படங்களில் எல்.ஆர் .அஞ்சலி, குழந்தைப் பாட்டு பாடுவார்.) எல்லாமே, அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...என்ற கமலஹாசனின் பால்ய முக பாவத்தில் ஆரம்பித்தது. 1960ல் ஆரம்பித்த கமலின் பயணம், பாத காணிக்கை, ஆனந்த ஜோதி, வானம்பாடி எனத் தொடர்ந்தது. களத்தூரின் அதிசயச் சிறுவன் உலகநாயகனாக மாறப் பலகாலம் காத்திருக்க வேண்டியிருந்தது.
பொதுவாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள்,வளர்ந்த பின் நடிகராகவோ நடிகையாகவோ பிரகாசித்தது கொஞ்சம் பேர்தான். கமல் ஒருவர். தேவதாஸ் படத்தில் ஜூனியர் சாவித்ரி ரோலுக்கு வரும் பேபி சரஸ்வதி,குமாரி சச்சுவாகி இன்னும் சிரஞ்சீவியாக இருக்கிறார். ஆனால் சூப்பர்ஸ்டார் ஆக முடியவில்லை. கமல் போல அப்படி ஆனது ஸ்ரீதேவிதான்.திருவிளையாடல் படத்தில் பாலமுருகனாக முதலில் வந்தார். குமுதம் இதழில் ஒரு புதிர் போட்டிருப்பார்கள். ஸ்ரீதேவி டாப்லெஸ் ஆக நடித்த படம் எது? இன்னொரு பக்கத்தில், விடை: திருவிளையாடல். குமுதத்தின் திருவிளையாடல்களில் இது ஒன்று. ஸ்ரீதேவி இங்கிருந்து இந்திப்படம் வரை சென்று கலக்கினார். இன்னொருவர் பேபி ஷாலினி. அலை பாயுதே, காதகுக்கு மரியாதை என்று அமர்க்களம் பண்ணியவர் அடங்கிப் போனார் குடும்ப பந்தத்தில்.
நெஞ்சில் ஓர் ஆலயத்தில் பெயர் வாங்கின பல கலைஞர்களில்  குட்டி பத்மினி என்கிற பேபி பத்மினி ஒருவர். அம்மா ராதாபாய் ஒரு நடிகைதான். மாணவன் படத்தில் கமலுக்கு ஜோடியாக வந்தார்.கமல் அடைந்த உயரத்தை அடைய முடியவில்லை. பொதுவாக தமிழ்ப்படக் குழந்தைகள், குழந்தைகள் போலவே பேசாது. வசனகர்த்தாக்கள்,இயக்குநர்கள் தங்கள் அறிவு பூராவையும் குழந்தைகளின் அதிகப் பிரசங்கித்தனமான நடிப்பில் தான் காண்பிப்பார்கள். அப்படியொரு  குழந்தையாகவே குட்டி பத்மினியை ரசிகர்கள் பார்த்தார்கள். வா ராஜா வா புகழ் மாஸ்டர் ஸ்ரீதரையும் அப்படித்தான்,வளரவே விடவில்லை. அவர் தங்கை சுமதியும் அண்ணன் காட்டிய வழியிலேயே போனார், போயே விட்டார். ரோஜா ரமணி நன்றாக வருவார் என்று எதிபார்த்தோம்.அவருக்கு உடல் வாகில் முதிர்ச்சியே வரவில்லை. பேபி ஷகிலா குமாஸ்தாவின் மகள் படத்தில் சிவகுமாருக்கு இணையாகவோ என்னவோ வருவார். ஆனால் அப்புறமென்ன ஆனார் என்றே தெரியவில்லை. ஆலிவர் டுவிஸ்ட்டின் தழுவல், சந்தா ஔர் பிஜிலி இந்திப்படத்தின் அப்பட்டமான காப்பியான அனாதை ஆனந்தன் படத்தில் நடித்த மாஸ்டர் சேகர் கொஞ்சம் நம்பிக்கை தருகிற குழந்தை நட்சத்திரம். குடியிருந்த கோயில் படத்தில் ஜூனியர் எம்.ஜி.ஆர் ரோல்களில் வருவான். சுவாமி ஐயப்பன் படத்தில் ஐயப்பனாகவும் நடித்தார்.
கொஞ்சம் குழந்தையாகவே நடித்த குழந்தை நட்சத்திரம் பேபி ராணி. குழந்தைக்காக படம் ஒரு மெகா ஹிட். சுந்தரராஜன்,மனோகர் போன்றவர்களின் மிகை நடிப்பையும் மீறி ராணி நன்றாக நடித்திருந்தது. தொடர்ந்து கண்ணே பாப்பா,அடிமைப்பெண்,பேசும் தெய்வம் என்று நன்றாகவே நடித்தது. குழந்தைக்காக படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் சார்பாக நம்ம குழந்தைகள் படம் வந்தது. ‘ராதையைப் பெண் பார்க்கக் கண்ணன் வந்தான் நெஞ்சின் ரகசியம் பரிமாற மன்னன் வந்தான்...என்ற அற்புதமான ஜானகியின் பாடலைத் தவிர வேறு ஒன்றுமில்லை. கண்ணே பாப்பா பாடலின் அடுத்த வரியான கனிமுத்துப் பாப்பாவைத் தலைப்பாகக் கொண்டு ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடிக்க வெளிவந்தது. அந்தாஸ் இந்திப் படத்தின் தழுவல். எஸ்.பி. முத்துராமனுக்கு பேர் வாங்கித் தந்த படம்.
மாணவன், குறத்திமகன் படங்களுக்குப் பின காணாமல்ப் போன கமல்,கே.பலசந்தரின் அரங்கேற்றம் படத்தில் மறு அரங்கேற்றம் பெற்று வந்தார். அதிலும் அவர் ஒரு வளர்ந்த குழந்தை போலவே இருந்தார்.சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் ஒரு பெரிய ப்ரேக் கிடைத்தது. கமல் மறு பிரவேசம் வந்த காலத்தில்தான் சிவக்கொழுந்து அண்ணன், அண்ணாச்சியாகத் திரும்பி வந்தார். பட்டாளத்திலிருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் அதற்கான செழிப்பு இல்லை. பழையபடி முதல்நாள் முதல்க் காட்சிக்கு தரை டிக்கெட்டில் அடிபிடி போட்டுக் கொண்டு நிற்பார். சட்டைப் பித்தான் எல்லாம் அறுந்து விழ எப்படியாவது டிக்கெட்டோடு முதல் ஆளாக வெளிவருவார் கவுண்டரை விட்டு. தயாராக அரைநாண் கயிற்றில் கொருத்திருக்கும் ஊக்கை எடுத்து சட்டையை மாட்டிக் கொள்வார். வே எப்படிவே வேட்டி மட்டும் உருவாம வந்திருதேரு,அது போனால்லா கொழுந்து, கழுந்து உலக்கை ஆகிற கதை தெரியும்என்பார்கள்,அவரது  நண்பர்கள். ராமு படத்தில் மாஸ்டர் ராஜ் குமார் என்கிற பையன் நடித்தான். ஆனால் சிவக்கொழுந்து, அது நடிகை ஜெயாதான் சின்னப்புள்ளையா இருக்கையில ஆம்பிளைப்பையனா நடிச்சிருக்கா, என்று சாதிப்பார். ஜாடை அப்படித்தான் இருக்கும்.சினிமாவில் எதுவும் சாத்தியம்.

பகலில் ஒரு இரவு படத்தின் ஸ்டில்கள் எல்லாம் கன கவர்ச்சியாக இருக்குடே என்று ஸ்ரீ தேவியைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் முந்தின இரவு. ஏய் பஸ்ஸில, ரயிலில பிரசவமாகிற குழந்தைகள் மாதிரி இதெல்லாம் ஸ்டுடியோவிலேயே பொறந்ததா இருக்கும்ப்பா... அதான் சூப்பரா நடிக்கிதுக...16 வயசிலே பார்த்தீங்களா...., என்று. அன்றுதான் முதன் முறையாகக் கேட்டார் சபாபதியிடம், தம்பி நாளைக்கு நமக்கு ஒரு டிக்கெட்டுக்கு காசு சேங்ஷன் பண்ணனும்,வள்ளிசாகக் காசில்லை கையில. அவன், பார்ப்போம் அண்ணாச்சி என்றான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த  அவரது தம்பி அவரைக் கடுமையாகச் சத்தம் போட்டான்,ஏன் இப்படி மானத்தை வாங்குதேரு,என்று.அவன் போலீசுக்கு செலக்ட் ஆகியிருந்தான். சபாபதியும் பார்க்கலாம் அண்ணாச்சி,என்று சொல்லி விட்டான்.  மறுநாள் வழக்கம் போல தரை டிக்கெட் கூட்டத்தில் தலை தெரிந்தது. கவுண்டரில் இருந்து அவர் வெளி வருவதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தோம், நாங்கள் இரண்டு மூன்று பேர். நாங்கள் சேர் டிக்கெட் எடுத்திருந்தோம். அவர் வெளியே வரவும் அவரை இரண்டு பேர் கையைப் பட்டென்று பிடித்து அழைத்துப் போனார்கள். கையை விடுங்க வாரேன் என்று கையை உதறினார். விட்டு விட்டாலும் அணைத்தபடியே போனார்கள்.  அவர்களைப் பார்த்தாலே தெரிந்து விட்டது, போலீஸ் என்று. என்ன ஆச்சு.. என்று யாருக்கும் புரியாத போது, டிக்கெட் எடுத்தபடி வந்த சிவக்கொழுந்துவின் சேக்காளி சொன்னார்,மாட்டிக்கிட்டானா மிலிட்டரிலேருந்து சொல்லாமக் கொள்ளாம வந்தா விடுவாங்களா, ஏம்ல வந்தேன்னா சினிமா பாக்காம இருக்க முடியுமாங்கான்,என்று. மாட்னி ஷோ கூட்டம் பூராவும் வேடிக்கை பார்க்க, தலையைக் குனிந்தபடி சிவக்கொழுந்து கையில் பச்சைக்கலர் தரை டிக்கெட்டை இறுகப் பிடித்தபடியே போய்க் கொண்டிருந்தார்.

3 comments:

வல்லிசிம்ஹன் said...

சிறிய வயதிலிருந்து இளமைக்காலம் வரை நான் கேட்ட பாடல்கள் தொகுப்பாக
அருமையான படவிமர்சனங்கள்.அறியாத செய்திகள். நானும் பேபி ஷகிலாவைத் தேடிக்கொண்டிருந்தேன்.
குமாஸ்தாவின் மகள் படத்தில் கன்னட நடிகை ஒருவரின் தங்கையாக வந்த பெண் முகனம் சட்டென நினைவுக்கு வந்தது. மிக மிக நன்றி. அண்ணாச்சி ரொம்பப் பாவம்.

இனியாள் said...

குழந்தை நட்சத்திரங்களை பற்றிய சிறந்த பதிவு. சிவக்கொழுந்து அண்ணாச்சியும் அவரின் தரை டிக்கெட் அனுபவங்களும் அருமை.

sandhirstmacdiarmid said...

JWT Casino Resort & Spa Launches its Mobile App
JWT Casino Resort & 여주 출장마사지 Spa is bringing 강원도 출장샵 back its 울산광역 출장샵 traditional slot games 천안 출장안마 to the palm of your hand, and will 나주 출장마사지 also offer a mobile-friendly gaming app for the

Visitors