Saturday, October 6, 2012


இன்று
புது வார்த்தைகள்
கிடைக்கவில்லை

இதுவரை அதிகம் புழங்காத
வார்த்தையொன்றைத்தவிர


அதுவும்
அகராதியில்
உள்ளதென்பார்

மெலிந்த விரலுக்குள்
சிக்கமறுக்கின்றன
சில அரிசி போன்றே
பொடிக்கற்கள்
இதற்கென்று
காப்பாற்றி வைத்திருக்கும்
கழச்சிக்கற்களைப் போட்டு
அரிசி களைகிறாள்
உலை கூப்பிடுகிறது

சிந்தாமல் சிதறாமல்
நகக்கண்  மோதிரம்  வளையல்
எதிலும் ஒற்றை அரிசிகூட
ஒளிந்து கொண்டுவிடாமல்
எல்லாவற்றையும் போடுகிறாள்
கழச்சிக் கற்களைப் பத்திரப் படுத்துகிறாள்

எடுத்துக் கொள் அந்தத்
தெரிந்த வார்த்தைகளை
போடு  களை கல் நீக்கு
கவிதை சமை

****    ****  ****

எப்போதாவது
பொங்கி வழிந்து விடுகிறது
பால்
எப்போதாவது
உடைகிறது
எண்ணெய்க் கலயம்
எப்போதும் ஏச்சு
மனைவி குழந்தை
கவிஞனுக்கு

**** **** ***
சுமந்து சுமந்து
அலுத்த(அ)வை
என் குறிப்புகளிலிருந்துதான்
என் கவிதை எழுதப்படணுமா
குறிப்புணர்ந்தவர்கள்
கொஞ்சம் சொல்லுங்கள்

**** **** ****
எப்போது எடுத்தாலும்
புரட்டிப் பார்த்துவிட்டு
வைத்துவிடுகிற
புத்தகத்தை
இப்போதும் எடுத்தேன்
அடையாள நூலை
அப்புறப் படுத்தி விட்டு
அப்படியே வைத்தேன்
ஏதோ ஒரு நிம்மதி

**** **** *****

மேடையில் நின்று
பேசிக் கொண்டிருக்கிறார்கள்
அவையில் அமர்ந்து
கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ஓடி ஓடிப்
படம் எடுக்கிறான்
ஆண்டிப்பட்டி முருகன்.


Visitors