Sunday, August 12, 2012

நன்றி: காட்சிப் பிழை திரை:ஆகஸ்ட் 2012




தணிக்…..(கை)
பணமா பாசமா படத்தின் அசுர வெற்றிக்கு ஒரு காரணமாயிருந்த ”எயந்தப்பயம்….” பாடல் போடு போடென்று முழங்கிக் கொண்டிருந்தது, பட்டி தொட்டியெல்லாம். ரசிப்பதையும் ரசித்து விட்டு கண்ணதாசனைத் திட்டித் தீர்த்துக்கொண்டுமிருந்தார்கள்…..கலாச்சாரக் காவலர்கள்.
கைக்கு அடக்கமா..-நீ
கடிச்சுப்பார்க்க வாட்டமா
இருக்குது அதுதான் ஊரையெல்லாம்
இஸ்து இஸ்து இஸ்தூன்னு இயுக்குது..”
என்றொரு பல்லவி.இதில் விஜயநிர்மலாவின் சைகைகள்,பார்த்து - கைக்கு அடக்கமாஎன்னும் போது, ஒரு குத்து இலந்தைப் பழம் ஏந்திய கைகளை மார்புக்கு அருகே வைத்துக் கொள்ளுவார்…- தியேட்டரில் விசில் காதைப் பிளக்கும்..பெண்கள் பகுதியில் கூட சிரிப்பலை பரவ ஆரம்பித்திருந்தது. கண்ணதாசனை விமர்சித்ததிற்காக அவரோ சினிமாக்காரர்களோ பயந்து விடவில்லை. “உலகம் இவ்வளவுதான்படத்தில் மாம்பழப் பாடல்எழுதினார் கவிஞர்.
மாம்பழம் வாங்குங்க
மல்கோவா பழமுங்க
எல்லாம் வித்துப் போச்சுங்க
இருப்பது ரெண்டுதானுங்க…..
இதற்கும் கிட்டத்தட்ட அதே அபிநயம்.. இது தமிழ் நாட்டின் அனிதா எக்பெர்க்’ (பொக்காக்சியோ-70 படத்தில் அனித்தா எக்பெர்க்கின் மிகப்பெரிய,பிரபலமான மார்புகளை வைத்தே கதை நகரும்.) என்று எங்கள் தலை முறை செல்லம் கொண்டாடிய ராஜ்ஸ்ரீ (.இப்போதென்றால் நமீதாவை அந்த இடத்திற்கு தேர்ந்தெடுத்து விடுவார்கள் ’மச்சான்ஸ்’) இவையெல்லாம் 1967க்கு பின்னால் அரங்கேறிய காட்சிகள்.1967க்கு முன்னால் நடந்த ஆட்சியில் தோட்டம் வெட்டுகிற கத்திரிக் கோலால் காட்சிகளையும் பாடல் வரிகளையும் வெட்டிக் கொண்டிருந்தார்கள். இது இந்த உச்சம் என்றால் அது அந்த உச்சம். எல்லிஸ் ஆர் டங்கன், சுந்தர் ராவ் நட்கர்ணி காலங்களில் சட்டையே.அணியாமல் டி.ஆர் ராஜகுமாரி போன்றவர்கள் நடித்த காலம் போய், ஸ்கின் நிறத்தில் மெல்லிய நைலான் அணிந்து உடலைக் காட்டாமல் காட்டுவது 60 களின் ஆரம்பக் காலங்கள் வரை நடந்தது.படகோட்டி படத்தில் சரோஜதேவி சட்டை அணியாத மீனவப் பெண்ணாக (!)  வருவார் ஆனால் ஸ்கின் டைட்டாக மெல்லிய துணி அணிந்து அதன் ஸ்லீவ்ஸ் முடிகிற இடத்தில் வங்கி போல் ஒரு அணிகலனை/பாசியை அணிந்து கொள்ளுவார்.( சட்டையே போடவில்லை என்று பார்வையாளர்கள் ‘புரிந்து’ கொள்ள வேண்டும்.) தமிழ்ப் படங்களில் தொப்புள் காட்டும் கலாச்சாரத்தை 67 பொங்கல் ரிலீஸான “மனம் ஒரு குரங்கு” படத்தில், கதாநாயகியாக கே.ஆர் விஜயா ஆரம்பித்து வைத்தார்.அதற்கு முன்னால் குமாரி சச்சு ’தேன் மழை’ படத்தில் ஒரு பாடல்க் காட்சியில் ஒரு வினாடி, பாவாடை கட்டி கறுத்துப் போன இடுப்போடு, தொப்புள் காட்டுவார்.அதுவும் ஏதோ தற் செயல் போல அமைத்திருப்பார் ‘முக்தா சீனிவாசன்’. அவற்றைப் பார்த்தே ஜொள்ளு விட்டது அந்தத் தலை முறை.
64- 65 கால கட்டத்தில் காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கியது.இந்தி எதிர்ப்புப் போராட்டம், தி.மு.க வின் மாநாடுகள்,தெருவுக்குத் தெரு கூட்டங்கள்,எம்.ஜி.ஆர் படங்களின் தொடர்ந்த வெற்றி- தெய்வத்தாய் (மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்) படகோட்டி,, எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், என, எம்.ஜி.ஆர் படங்களின் தொடர்ந்த வெற்றி,ஆட்சியாளர்களை சற்று கவலைக்குள்ளாக்கியது.ஏற்கெனவே பராசக்தி படத்தையே தடை செய்திருந்தார்கள்.அண்ணா, கலைஞர் படங்களில்க் கூட நேரடியான தி.மு.க கட்சிப் பிரச்சாரம் வராது.கண்ணதாசன் நிறையச் செய்வார்.சிவகங்கைச் சீமை அவரது ட்ரீம் ப்ராஜக்ட். அது 1959-ல் வெளிவந்த போது,
“ வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்தது கிடையாது
 வீரர்கள் ஆளும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது”

என்று தொடங்கும் பாடல் அது வெளிவந்த நேரத்தில் வெட்டப்பட்டது”அதற்குக் காரணம் வெளிப்படைதான்.அதில் வரும் ஒரு சரணம்
“மன்றம் மலரும் முரசொலி கேட்கும்
வாழ்ந்திடும் நம் நாடு, இளம்
தென்றல் தவழும் தீந்தமிழ் பேசும்
திராவிடத்திரு நாடு –
இதில் வரும் “மன்றம் ,முரசொலி, நம்நாடு, திராவிடநாடு தென்றல் எல்லாம் தி மு க பத்திரிகைகள் தென்றல் மட்டுமே கண்ணதாசன் நடத்தியது.கருணாநிதி, அண்ணா  வசனத்திலோ  பாடலிலோ கூட  வெளிப்படையாய் இப்படி வந்தது கிடையாது.இது படத்தில் வெட்டப்பட்டு விட்டது என்று நினைவு. ஆனால் கடைசியில் குமாரி கமலாவின் ருத்தர தாண்டவத்துக்கு இடையே வரும் வசனம் வெட்டப்படவில்லை
“முரசொலிக்கட்டும், நம்நாடு தழைக்கட்டும்,மன்றத்திலே மக்கள் கூட்டம் திரளட்டும்,மலரட்டும் விடுதலை மலரட்டும்,தவழட்டும் தென்றல் தவழட்டும் வாழட்டும் திராவிட நாடு வாழட்டும்..”
http://www.youtube.com/watch?v=WkLsQECWtc4&feature=related கண்ணதாசன் ஒரு உணர்ச்சி மயமான மனிதன்.(குழந்தை)அதனாலேயே  அவர் அந்தந்தக் காலத்தின் நிலைப்பாட்டுக்கு விசுவாசமாயிருந்தார்.
அவர் 1958 ல் வெளியிட்ட மாலையிட்ட மங்கையில் வரும் எங்கள் திராவிடப் பொன்னாடே பால் முழுமையாய் பட்த்தில் இருந்தது, ஒரு ஆச்சரியம்தான். அதற்கு சற்று முன்னதாக வந்த கே.ஆர்.ராமசாமி நடித்து அண்ணா கதை வசனம் ழுதிய ‘சொர்க்க வாசல்’ , பீப்பிள்ஸ் பிலிம்ஸ் ’அவன் அமரன்(நிமாய்கோஷ்)எல்லாம் கடுமையான தணிக்கைக்குள்ளாயிருந்தன.
     1957-ல் வெளியான சக்கரவர்த்தி திருமகள் படத்தில் எம்.ஜி.ஆரின் பெயரே ‘உதயசூரியன்’ தான். அப்போது ஆட்சியாளர்கள் விழிக்கவில்லையா மெத்தனமா தெரியவில்லை.ஆனால் 1966-ல் வெளிவந்த அன்பேவா படத்தில், புதியவானம் புதிய பூமி பாடலின் முதல் சரணம்
“உதயசூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே…” என்ற வரி படத்தில் வரும் போது ’புதிய சூரியன்’ ஆகி இருந்தது.எங்க வீட்டுப் பிள்ளையின் பிரபல பாடலின் ஒரு வரி “இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்…” என்பது பாத்தில் இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன் என்று மாற்றப்பட்டது..பெற்றால்தான் பிள்ளையா  படத்தில், ”நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி.. ”பாடலில் ”மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்” என்பது ”மேடையில் முழங்கு திருவிக போல் என்று வெட்டி மாற்றப் பட்டது.( ஒரு நல்ல காரியம் திரு வி க என்றால் யார் என்று நிறையப் பேர்க்கு சொல்ல வேண்டியது நேர்ந்தது). இதை விட வேடிக்கை, அதில் வரும் ”சக்கரைக் கட்டி ராஜாத்தி” லவ் டூயட்டில்,
உறவைச் சொல்லி நான் வரவோ-
என் உதட்டில் உள்ளதைத் தரவோ…. என்பது என் உயிரை உன்னிடம் தரவோ என்று மாற்றப் பட்டது.இதே பாடலில் “பள்ளி கொள்வது சுகமோ” என்பது, பழகிக்கொள்வது சுகமோ என்று மாற்றப்பட்டது. அதே பாடலில் காலை வரையில் சேலை நிழலில் .. என்பதில் சேலை என்பது சோலை நிழலில் என்று மாற்றப்பட்டது. இந்தப் படத்தில் ஏன் இவ்வளவு வெட்டுகள். இதை மிகவும் எதிர் பார்த்தார்கள்.இது வந்த்து 1966 டிசம்பர் மாதம், 1967 ஃபெப்ரவரியில் தேர்தல். இந்தப்பட்த்தின் தயாரிப்பாளரான வாசுவுடன் எம்.ஆர்.ராதா சென்றபோதுதான் எம்.ஜி.ஆர், ராதாவால் சுடப்பட்டார்.
பணம் படைத்தவன் படத்தில்,
”அந்த மாப்பிள்ளை காதலிச்சான்
என்னை கையைப் புடிச்சான்…” என்று ஒரு பாடல். பாடல் ஒரு அபத்தக் களஞ்சியம்தான்.அதை மூன்றாம் நாளே, தயாரிப்பாளர்களே நீக்கியும் விட்டார்கள். (பின்னால் சேர்க்கவும் பட்டது). அதில்
அம்மம்மா என்ன சுகம்
அத்தனையும் கன்னி சுகம்… என்பது

அம்மம்மா என்ன சொல்ல
அத்தனையும் கண்டதல்ல- என்று மாறியிருக்கும்.இதிலெல்லாம் வாயசைப்பு மாற்றத்தைத் தெளிவாகக் காட்டிவிடும்.
அதே சமயம்
”சுற்றி நான்கு சுவர்களுக்குள்
தூக்கமின்றிக் கிடந்தோம்-சிறு
துன்பம் போன்ற இன்பத்திலே
இருவருமே மிதந்தோம்” என்ற ‘அன்னை இல்லம்’ பாடல் எல்லாம் சென்சாரின் கண்ணுக்குத் தெரியலையா என்று ரசிகர்கள் பேசிக் கொள்வோம்.சிவாஜி நடித்த,ஏஎல்.எஸ் படமான ”சாந்தி”ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு போஸ்டர்கள் எல்லாம் ஒட்டப்பட்ட நிலையில், அதன் கதை, தமிழ்ல் கலாச்சாரத்துக்கு எதிரானது என சென்ஸாரால் மறுக்கப் பட்டு, மறுபடி அப்பீல் எல்லாம் செய்து ஒருமாதம் போல் தாமதமாக வந்தது..வல்லவன் ஒருவன் படத்தில், தொட்டுத் தொட்டுப் பாடவா…பாடலில்,
”ஆடவந்த கன்னியின் அந்தரங்கம் வேண்டுமா…” என்பது சற்றே நியாயமாக ஆடவந்த கன்னியின் அந்த நெஞ்சம் வேண்டுமா என்று மாற்றப் பட்டது
சந்திரோதயம் படத்தில்,” சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ..” பாடலில்
“ இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ..” என்பது
எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கிந்த சுகம் வாங்கத் தடை போடவோ என்று மாறியிருந்தது. ஆனால் இதில் வாயசைப்பும், நடிப்பும் மாற்றத்திற்கு ஏற்பவே இருக்கும்.சந்திரோதயம் 1966 மே 30-ல் வந்தது.(அன்றுதான் ஜெயலலிதாவிடமிருந்து கையெழுத்திட்ட புகைப்படமும், கடிதமும் எனக்கு வந்தது அதோடுதான் படம் பார்க்கப் போயிருந்தேன்.) இந்தப்படம் வெளிவந்த சமயத்தில், தினத்தந்தி பத்திரிக்கைக்கும் எம்.ஜி.ஆருக்கும் கடுமையான மனத்தாங்கல்.அவரது செய்திகள் வராது, பட விளம்பரங்களும் வராது.சந்திரோதயம் படத்திற்கு வசனம் ஏ.கே.வில்வம் என்பவர். அவர் தினத்தந்தியில் இருந்து வெளியேறியவர்.படம் வந்த ஓரிரு வாரத்தில், தந்தியில் குரும்பூர் குப்புசாமி எழுதிய சிறுகதையொன்று வெளிவந்தது.அதில் ஒரு காட்சி.ஒருவர் நாயுடன் உலா வருவார். மற்றொருவர், சார் நாய்க்கு என்ன பேர் வைத்திருக்கிறீர்கள் என்பார், முதலாமவர் ‘வில்வம்’ என்பார். ஏன் சார் நன்றியில்லாதவன் பெயரையெல்லாம் நாய்க்கு வைக்கிறீர்கள் என்பார். (இது பற்றி பின்னாளில்(1973) புயலிலே ஒரு தோணி ப.சிங்காரத்திடம் பேசினேன், சிரித்துக் கொண்டார்)
     அப்புறம் எம்.ஜி.ஆர் குண்டடி பட்டதும் சண்டையெல்லாம் சமாதானமாகிவிட்டது, அதுதான் எம்ஜியாரின் ராசி. இதே போல் எமர்ஜன்சி சமயத்தில் ஊருக்கு உழைப்பவன் படத்தின் சண்டைக் காட்சிகள் எல்லாம் வன்முறையென்ற பெயரால் வெட்டப்பட்டன. எம்.ஜி.ஆர் படத்தில் ஹெலிகாப்டர் சண்டையே அதில்த்தான் எடுத்தார்கள். ரொம்ப எதிர் பார்த்தார்கள். சுத்தமாய் ஒன்றுமேயில்லை. ஒரு காமெடி சண்டைதான் மிஞ்சியது. பாலிவுட்டிலிருந்து ஷெட்டி என்ற பயங்கர வில்லன்களுடனெல்லாம் சண்டைக் காட்சிகள் படமாக்கப் பட்டிருந்தன.எல்லாம் தணிக்கை என்ற பெயரால் கை வைக்கப்பட்டது.












     






Visitors