Sunday, December 18, 2011

விளக்கு விருது, தேவதச்சனுக்கு

கவிஞர் தேவதச்சன், 1970 களிலிருந்து கவிதை எழுதி வருபவர்.தொடர்ந்து இன்று வரை துடிப்பாகவும் உயிருடனும் எழுதிக் கொண்டிருப்பவர்களில் அவர் முக்கியமான ஒருவர். தமிழின் மிக முக்கிய கவியாக நான் அவரைக் கருதுகிறேன்.அன்றாடக் காட்சிகளைக் கூட தன் கவித்துவ வீர்யத்தால் அற்புதமான தத்துவச் சிந்தனைக்கு உட்படுத்தி விடுகிறவை அவருடைய கவிதைகள். அவருடன் கவிதை பற்றிப் பேசிக் கொண்டிருப்பது ஒரு பேரனுபவம்.அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத மனிதர். எதையும் எப்போதும் யாரிடமும் ‘கோரியதே கிடையாது.அவரது அணுக்கத்தில் பல நவீன எழுத்தாளர்கள் உருவாகி இருக்கிறார்கள் அல்லது பட்டை தீட்டப் பட்டிருக்கிறார்கள். அவருக்கு இந்த ஆண்டு “ விளக்குவிருது கிடைத்துள்ளது.
     முற்றிலும் தகுதியான ஒருவருக்கு இப்பரிசை ‘விளக்குஅமைப்பினர் வழங்கியுள்ளமைக்கு அவர்களுக்கு பாராட்டுக்களும். தேவதச்சனுக்கு எனது வாழ்த்துக்களும்.

தேவதச்சன் கவிதைகள்

நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன்
ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன
சட்டையை தொளதொள வென்றோ
இறுக்கமாகவோ போடுகிறாய்
தலைமுடியை நீளமாகவோ
குறுகவோ தரிக்கிறாய்devathachan
உன்னிடமிருந்து பறந்து சென்ற
இருபது வயது என்னும் மயில்
உன்
மகளின் தோள் மீது
தோகை விரித்தாடுவதை
தொலைவிலிருந்து பார்க்கிறாய்
காலியான கிளைகளில்
மெல்ல நிரம்புகின்றன,
அஸ்தமனங்கள்,
சூரியோதயங்கள் மற்றும்
அன்பின் பதட்டம்

*

கைலாசத்தில்
புதரோரம்
ஒட்டாமல் கிடந்த
சிவனின் இடது பாகமும்
பார்வதியின் வலதும்
சரிந்து பூமியில் விழுந்தன
சாமிகளின் உடம்பில்லையா
காலங் காலங் காலமாய்
அழுகிக் கொண்டிருக்கிறது
தம் வீடுகளில்.

*

காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை.

*

பழத்தை சாப்பிட்டு விடு
நாளைக்கென்றால் அழுகிவிடும்
என்றாள் அம்மா
வாங்கி விண்டு
உண்டேன்
இன்றை.

Monday, December 12, 2011


கேணி....

நீரிறைத்துத் தொட்டி

நிறைத்து விட்டு

ஞாபகக் கிணற்றினுள்

மறுபடி இறங்கும் வாளி

இரு கைப்பிடி தழுவி  

நழுவி விரையும்

நனைந்த கயிற்றிலிருந்து

தெறிக்கும் பொடீ நீர்ச்சிதறலில்



கேணியின் எதிரெதிர்ச்சுவர்

இணைத்து வரையும்

கிழக்கு வெளிச்சமோர்

குட்டி வானவில்.....



அக்கா  ஒருத்தியின்

”சிட்டுக் குருவி முத்தங்கொடுத்து……

ராக முணுமுணுப்பிற்கோ

முதுகமரும் குருவி விரட்டவோ

காது கொம்புகளசைத்துக் கொண்டு  

சுற்றிலும் அசை போடும் ஆவினம்

அவளைப் புளியரையிலும்

மாடுகளை அது தாண்டி

மலையாளத்திற்கும் 

அனுப்பிய கையோடு

கிணறு தூர்ந்து போனது.



சாக்காடுக்குப் பின் விரியும்

உடையாத நீளக் கனவு போல்

இப்போதங்கேயொரு காற்றாலை

இடம் பெயர்ந்த எச்சங்களுக்கேதோ 

சீவனோபாயமாய்

                           -கலாப்ரியா





மனோ வேளை

இருட்டைப் பற்றிய
பொறியொன்று
மனதில் ஒளிர்ந்த வேளை

பேருந்து
தன் வழித்தடத்தில்
பழுதாகி நின்றது

மனோ வேளையை
நிகழ்வுடன்
இணைக்க முயற்சிக்கையில்
இடம்  பிடிபட்டது
சமீபத்தில் கட்டிய
புது மயானம்

எரிந்து கொண்டிருக்கும்
சிதையிலிருந்து
தீப்பொறிகள் வெடித்து
இருளில் கரைகின்றது

ஒரு படிமம்
இப்படியும் தன்னை
நிகழ்த்திக் காட்டும்
போலும்
                     -கலாப்ரியா
 

Tuesday, November 22, 2011




தகவமைப்பு



கனத்த சொற்களை

இரையெடுத்திருந்தது

எந்த விமர்சனக்

கல்லோ கழியோ

வசமாய்

நடூஉக் குறுக்கில்

ஒரு காயம் வேறு

நெளியமாட்டாமல் கிடக்கிறது



செரிமானமோ நகர்வோ

இனிச் சாத்தியமில்லையென

நம்பிக்கையின்றி

பருந்துப் பார்வைக்குப் பயந்து

மேகம் பார்த்து

மதில்ச் சுவரொட்டிக் கிடக்கிறது.



பூ நாடி வரும்

பறவைகள் வண்டுகள்

பட்டாம் பூச்சிகள் யாவும்

மகரந்தப் புரளல்

மறந்து விலகிப்பறக்கின்றன



பச்சைப் பாம்பு

என்பதால் நீங்கள்

பயமின்றி

வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்

                                -கலாப்ரியா




Monday, November 21, 2011

ராஜாராணிக் கப்பல்





ராஜாராணிக் கப்பல்

கப்பல் கத்திக்கப்பல்
செய்யத்தெரியும்
காகித விளையாட்டின்
பால பாடமது
அவளிடம் கொஞ்சம் கற்றுக்கொண்டு
மைக்கூடு ஏரோப்ளேன்
செய்து காண்பித்தபோது
முட்டாள்த் தொப்பித்தாளொன்று
சதுரமாகி
மடிந்து மடிந்து விரிந்ததுன்
முதிர்ந்த விரல்களில்
ராஜாராணிக் கப்பலாய்

எடுத்து வந்து தனியே சுயமாய்
மடிப்பு மாறாமல் பிரித்து
மறுபடி மடித்து முயற்சிக்கையில்
சதுரம் கிழிந்து கைக்கொன்றாய்
இரு நீள் சதுரம்

காகித மடிப்புகளை வெறித்த
பார்வையில் நிலைத்தன
கருப்பை அண்டத்துயிர்
உள்ளொடுங்கிக் குவித்த
கை மடிப்புகள்

ரேகைகள்
யார் செய்து பிரித்த
ஒரிகாமி
-கலாப்ரியா

Wednesday, October 26, 2011

புதிய வெளியீடு


சமீபத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு “தீபாவளி ரிலீஸாக” வந்துள்ளது.
வெளியீடு: சந்தியா பதிப்பகம் சென்னை.தொலைபேசி: 044-24698979



ஈரம் முகந்த மேகம்...
கவிஞர்கள் பலருக்கு நல்ல வசனம் கை வந்திருக்கிறது. பாரதியாரின் வசனம், ஒரு நல்ல தொடக்கம். ஒரு பத்திரிகையாளரும் ஆன பாரதிக்குப் போதுமான தமிழ்ச் சொற்கள், அரசியல் தொடர்பாகக் கிடைக்காமைக்கு அவர் வருந்தியிருக்கிறார். என்றாலும் பாரதியின் வசனம், சிக்கலற்ற, தெளிவான, கலைகள் மேலான அக்கறையும், சுலபத் தன்மையும் கொண்டவை. கண்ணதாசனின் வசனம் மிக ரம்யமானவை. புது மாதிரியானவை. சராசரிக் கவிஞரான நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, அவருடைய வாழ்க்கை வரலாறான என்கதைமூலம் நல்ல உரைநடை நூலைத் தந்திருக்கிறார். உ.வே.சாமிநாதையரின் பொது ஜனங்களுக்கான வசனம், மிக அழகியவை. அவரது புலமை நடை மறையும் இடத்தில் மிக அழகான வசனம் தோன்றுகிறது.
கலாப்ரியா, அடிப்படையில் ஒரு கவிஞர். தமிழின் முக்கியமான கவி. திணை எனப்படும் நிலம் தொடர்பான அவர் கவிதைகள் மிகவும் கவனிக்கத் தக்கவை. தாமிரபரணி வற்றிச் சாமியார்கள் கோவணமாகச் சிறுத்துப் போனாலும், அந்த நதி தீரக் கவிஞர்களிடம் எப்போதுமே நீர்வளம்வற்றிப் போகவில்லை. அவர்களின் மனவயல்களில் அந்த நதி பாய்ந்தே அவர்களைச் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. புதுமைப்பித்தன் முதல் இன்றைய சங்கர் ராமசுப்ரமணியன் வரை.
சங்க இலக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட திணையை அதிகமாகப் பாடிய கவிஞர்களை அத்திணையைக் குறித்தே, ஒரு அடைமொழியைப்போல அவர் பெயருடன் சேர்த்துச் சொல்வதுண்டு. பாலையை அதிகம் பாடிய கடுங்கோ என்பவன், பாலை பாடிய பெருங்கடுங்கோ எனப்படுகிறான். கபிலர் குறிஞ்சியில் தேர்ந்தவராக இருக்கிறார்.
அம்மரபு பற்றிக் கலாப்ரியாவை மருதம் பாடும் கவிஞர் எனலாமா என்றால்: எனலாம். மருதம் என்பது, வயலும் வயல் சார்ந்த இடமும். இது பள்ளி விளக்கம். மருத மரத்தால் பெயர் பெற்ற, பண்படுத்தப்பட்ட பூமி, மருதம். மனிதகுலம், வேட்டை மற்றும் மீன்பிடித் தொழிலுக்கு அடுத்தகட்ட வளர்ச்சியாக ஆற்று நீரைக்கொண்டு. மண்ணைப் பண்படுத்தி வயலாக்கி விவசாயம் செய்யக் கற்று, நிரந்தர இருப்பிடங்கள் கண்டு, குடும்பம் என்ற புதிய அமைப்பைக் கண்டறிந்த பூமி மருதம். அதுகாறும் சமூகத்தில் நிலைபெற்ற பாலியல் சுதந்திரம், குடும்ப நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. குடும்பத்துக்குள் இருந்த பெண்கள், குடும்ப அமைப்புக்கு வெளியில் இருந்த பெண்களால் பதற்றத்துக்குள்ளாகிறதைச் சங்கஇலக்கியமும் பதற்றத்துடனேயே பதிவு செய்கிறது. மருதம் ஒரு குறியீடாக மாறுவது இந்த இடத்தில்தான். காமம், ஒரு கடக்க முடியாத விஷயம் என்பது மாத்திரமல்லாமல், கடக்க வேண்டாத விஷயமாகவும் புரிந்து கொள்ளப்படுவது இந்தச் சூழலில்தான். காமப் பிரிவினால் ஏற்படும் ஊடல் என்பது மட்டும்தான் மருதம் என்று குறுகிய அர்த்தம் செய்து கொள்ளப்படுகிறது. அப்படி அல்ல. ஆற்றோர, நீர் நிலை சார்ந்த தட்பவெப்பச் சூழல் காமத்துக்கு உதவும்படியாக இருக்கலாம் என்று ஒரு சார் மக்கள் (மக்கள் & அறிவுலகினர்) கருதி இருக்கலாம். அங்ஙனமாகில் பாலையில் காதல் வராதா என்பதல்ல. வரும்தான். இடம் விஷயமில்லை. காதல், தாமிரபரணி வரண்டாலும் வரும்தான். அது உயிர் எழுச்சி. நிலம், அது மருதமோ, குறிஞ்சியோ, நெய்தலோ, முல்லையோ, பாலையோ, எதுவானாலும் காதல், கூடல், பிரிவு, இரங்கல் எல்லாமும் இருக்கும்தான். நீரின், தன்மை போல, காற்றின் குளிர்ச்சி போல உள்ளார்ந்த காமம், கலாப்ரியாவுக்கு நெல்லை நிலத்தில் லயிக்கிறது என்பதுதான் இக்கட்டுரைகள் சொல்லும் செய்தி. சதுக்கம் தோறும் நிற்கும் பூதங்கள் போல, வீதிகள் தோறும் வீடுகள் தோறும் யாரோ ஒரு பெண் இருந்து கொண்டு அவரின் காமத்தை விசுறுகிறாள். காகிதம் போல, விசிறப்பட்ட காற்றில் அவர் அதைப் பாசாங்கில்லாமல், அத்தியாயம் தோறும் பதிவு செய்கிறார். அம்பிகாபதியின் காமத்தை ஒரு அழகிய பாடல் இப்படிப் பதிவு செய்கிறது. உருகி | உடல் கருகி | உள் ஈரல் பற்றி | எரிவது | அவியாது | என் செய்வேன் | வரி அரவ | நஞ்சிலே | தோய்ந்த | நளினவழிப் | பெண் பெருமாள் | நெஞ்சிலே | இட்ட | நெருப்பு.
கலாப்ரியாவும் எரிந்திருக்கிறார். ஆனால், பல பத்தாண்டுகளுக்குப் பிறகு அந்த அவஸ்தைகளைப் பற்றி எழுதுவதால், மென்மையும் நிதானமுமாக அந்த வதைகளைச் சொல்ல முடிகிறது. ஆனால், அவை நிகழ்ந்த காலத்து தகிப்பை உணர வைக்க முடிந்திருக்கிறது அவரால். இது முக்கிய விஷயம்.
·
முந்தைய தொகுப்பான சந்தியா வெளியிட்டிருக்கும் நினைவின் தாழ்வாரங்கள்என்ற கவனிப்புக்குள்ளான தொகுப்பின் அடுத்த பாகம் இந்தத் தொகுதி என்று கூறலாம். பள்ளிப்பருவமும், பதின்பருவமும் சுழன்று இளைஞராக உருமாறும் கலாப்ரியா, இந்தத் தொகுப்பில் காணப்படுகிறார்.
ஒரு குழந்தை, தன் குழந்தைமைக்கு எப்போது விடை கொடுக்கிறது? இது முக்கியமான கேள்வி. தன் பாடப் புத்தகத்துப் பக்கங்களுக்குள் வைத்த மயிலிறகு குட்டி போடாது என்று தெரிந்த அந்தக் கணத்தில் குழந்தை, குழந்தைமையை இழக்கிறது. மனித குலத்தின் பேரிழப்பு தொடங்குவது அங்குதான். ஆனாலும் இது தவிர்க்க முடியாததுதான். அந்த இழப்பை எதைக் கொண்டு இட்டு நிரப்பிக் கொள்கிறது அக்குழந்தை? கனவுகளைக் கொண்டுதான். கனவுகளை யார் தருகிறார்கள். நட்பு, சினேகம், தோழமை ஆகிய பண்புகளின் உருவமாக யார் இருக்கிறார்களோ, அவர்களே கனவுகளை அருள்கிறார்கள். அந்த நட்பு, தோழமை எதிர் & சகபாலினர்களிடம் இருந்து வருகிற போதுதான், இழப்புகள் இட்டு நிரப்பப்படுகின்றன. ஒரு ஆணுக்கு அவனது எல்லாப் பள்ளங்களும், எல்லா இழப்புகளும் அந்தப் பெண்ணின் ஒரு பார்வையில், ஒரு உணர்த்தலில் சரி செய்யப்படுகிறது.
கலாப்ரியா என்கிற ஆளுமை இப்படியான பரிசுகளால், விருதுகளால், அங்கீகரிப்பால் உருவாகி இருப்பதன் எழுத்துச் சாட்சியமாக இந்தக் கட்டுரைகள் விளங்குகின்றன.
·
திராவிட முன்னேற்றக் கழகம் வளர்த்தெடுத்த சினிமா அரசியல் (இது உம்மைத் தொகை), அக்கட்சியை 1967இல் ஆட்சியில் அமர்த்தியது. அந்த ஆண்டுக்கு முன்னும் பின்னுமாக இக் கட்டுரைகளின் அல்லது நினைவுச் சிதறல்களின் அல்லது தன் வரலாற்றுச் சித்திரங்களின் காலம் நிலை கொள்கிறது. கலாப்ரியா, தன் பதின் பருவத்தை மற்றும் இளமைப்பருவத்தைச் சொல்லிச் சென்றாலும், அக்காலத்து வரலாறும் உடன் தட்டுப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதன் அர்த்தம் அவர் தன்னை எழுதிச் செல்லும்போது தன் காலத்து, தன் சமூகத்து வரலாற்றையும் எழுதிச் செல்கிறார். இது இப்புத்தகத்தின் முக்கிய பங்களிப்பு. உதாரணத்துக்கு தமிழகத்தின் சில பகுதியில் உருவான தீப்பெட்டித் தொழில் சார்ந்த சிறு வேலைகள். மக்கள் ஜீவனோபாயம் கருதி வீட்டிலிருந்தே செய்த தீப்பெட்டிக்குக் காகிதம் ஒட்டும் வேலை. அது நீலக்கலரில் இருக்கும். அதையொட்டி பேச்சு வழக்கொன்றே ஏற்பட்டது. பெண், நல்ல தீப்பெட்டி கலர்ல சேலையும் ஜம்பரும் போட்டிருக்காஎன்பது போல. கலாப்ரியா இதைக் குறிப்பிடுகிறார். இதன் அரசியல் பின்னணி மிகவும் அவலம் பொருந்தியது. விவசாயம் என்கிற இந்தியாவின் ஜீவாதாரமான தொழிலை இந்திய அரசு பல ஜந்தாண்டுத் திட்டம் தீட்டித் திட்டமிட்டு அழித்துக் கொன்றதன் மறுதலை இந்தத் தீப்பெட்டி, பட்டாசுத் தொழில்களில் ஒரு இளம், முதிய சமுதாயமே தன்னை இணைத்துக்கொண்டது. விவசாயத்தைப் பூண்டோடு அழிக்க மண்ணை அழிக்க வேண்டுமே! அதற்கென்றே அரசால் அறிமுகப்படுத்தப்பட்டன செயற்கை உரமும் பூச்சிக்கொல்லி மருந்துகளும். கொஞ்சம்கூட மனக் குறுகுறுப்பின்றி எப்படி இருக்க முடிகிறது நம் அரசியல்வாதிகளால்? முடிகிறது. ஒரு உபரித் தகவல்.
அரிசிப் பஞ்சம் நேர்ந்து, மக்களுக்கு ரேஷனில் மைதாவும் கோதுமையும் வழங்கப்பட்டபோது, ஒரு சினிமாப்பாடல் இப்படிப் பாடியது.
ஒரு ஜாண் வயிறே இல்லாட்டா
உலகத்தில் ஏது கலாட்டா
உணவுப் பஞ்சமே வராட்டா - நம்ம
உயிரை வாங்குமா பரோட்டா?
சினிமாப் பாடல்கள், சினிமாப் பாத்திரங்களுக்கு மட்டும் உரியன அல்ல என்பதையும், ஒரு சமூகத்தின் நடைமுறை வாழ்க்கையின் சாரத்தைக் கட்டமைக்கும் உணர்வூக்கியாகவும் செயல்படுவன என்பதும் நிருபணமான ஒன்று. குறிப்பாக இளமைப்பருவம் பல ரசாயனங்களால் உருவாக்கப்படும் வேதியியல் கூடம். கண்ணுக்குத் தெரியாத அமிலமாகப் பாடல்கள் கலாப்ரியா உள்ளிட்ட அக்கால இளமையைக் கட்டமைத்துள்ளதைப் பல பக்கங்களில் காணலாம். நான் ஜிப்பா அணியத் தொடங்கும்போது என் மாமன், ‘என்ன மாப்பிளே, காதல் தோல்வியாஎன்றது இதற்கு மேலும் ஒரு உதாரணம். அந்தக் காலத்தில் ஜெமினி. காதல் சிக்கலுக்குள்ளாகும் போது, ஜிப்பா அணிவார். பல ஆண்டுகள் என் கனவில் பத்மினிதான் வந்து கொண்டிருந்தார். தனியாக வந்தார். அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை, ராமச்சந்திரன் என்றொரு டாக்டரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா போனார். அப்புறம் என் கனவுகளில் புருஷனோடு வந்தார் பத்மினி. இனி வேண்டாம்என்று நானே சொல்லி அனுப்பிவிட்டேன். பல இனிய தருணங்களைப் புருஷர்கள், கலாப்ரியாவுக்கும் கெடுத்தவர்களாக இருக்கிறார்கள். கதைகளாக உருவாக வேண்டிய பல அழகிய கணங்களை, வண்ணதாசன், வண்ணநிலவன் கதைகளில் காணப்படும் பல அற்புத தருணங்களைக் கலாப்ரியாவின் இந்தக் கட்டுரைகளில் காண முடிகிறது. ஒரு நல்ல அனுபவம். அக் காரணங்களாலேயே இக்கட்டுரைகள் கனவுத்தன்மை கொண்டவையாக பரிமளிக்கின்றன.
·
சில மாதத்துக்கு முன், நானும் தொ. பரமசிவமும், கிருஷியும் குறுக்குத் துறை முன் நின்றோம். புதுமைப்பித்தன் கதைகள் உலாவிய இடம்.
ஆறு சிதைந்து இருக்கிறது. தூரத்தில் ஒரு பிள்ளையார் கோவில், சோகமே வடிவாக. ஆறு வற்றிப்போவது. ஈரம் வற்றிப் போவது. ஒரு சமூகம் தன் நெஞ்சின் ஈரத்தை வற்றடித்துக் கொண்டால், எதைக் கொண்டு அதை ஈடு செய்ய முடியும். முடியாது. எனக்கு வருத்தம் மிகுந்தது. காவிரி இரு கரையும் புரள நடந்ததைக் கண்டவன் நான். இன்று தஞ்சைக்குப் போகும் போதெல்லாம் நெஞ்சில் ரத்தம் வடிகிறது. குறுக்குத் துறையிலும் அத்துன்பத்தை அனுபவித்தேன்.
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை. கலாப்ரியா, நேற்றிருந்தை எழுதி இருக்கிறார். ஒரு கவியின் இளம்பருவ வரலாறாக மட்டுமின்றி, ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய தென் மாவட்டத்து, தமிழக வரலாறாகவும், இது விரிகிறது. ஒரு காலகட்டத்து மனித மனத்தின் வரலாறாகவும் இது தனித்து நிற்கிறது. மனித மனதின் வரலாறாக இது இருப்பதாலேயே, ஈரம் முகந்த மேகமாக இது அழகாகக் கருத்திருக்கிறது. வானத்துக்கு அழகு செய்வது நிலவு என்று நினைப்பது தப்பு. உண்மையில் வானத்துக்கும் பூமிக்கும் அழகு சேர்ப்பது கருத்த கொண்டல்கள்தாம்.
கலாப்ரியா பொழிகிறார். நனைவோம்.
அன்புடன்.
பிரபஞ்சன்

Tuesday, October 25, 2011

நன்றி: ஓம் சக்தி தீபாவளி மலர்.

வழக்கொழிதல்..

இனிப்பு அதிகமுண்ணும்

குழந்தையைத் திருத்த

அழைத்து வருகிறாள் தாய்

ஒரு தீர்க்கதரிசியிடம்


சிலர் கதையில் அது புத்தர்

சில சொல்லாடலில் அவர் முகம்மது நபி


அனைத்து இனைத்தவரையும்

ஆளுக்கொரு செம்பு நீர் குடத்துள்

அளந்து விடச் சொன்னவர் கேட்டார்

யார் கவிழ்த்த நீர் எதுவென

இனிக் கண்டுபிடிக்க முடியுமா


சிலருக்கு அவர் ராகவேந்திரர்

சில வழக்காறில் அவர் காந்தி


இனக்குழு அரசியலால்

இல்லாமலாகலாம் ஒரு மொழி


ஆனால் என்றும்

குழந்தைமை இனிப்புத் தின்னும்

தாய்மை கவலைப் படும்


நேற்றும் இன்றும்

நீருடன் நீர்

பேதமின்றிச் சேர

நிறமற்றிருக்கிறது நீர்.


வழக்கொழிந்த

மொழியில்க் கூட

வாழும் கதைகள்

-கலாப்ரியா

Thursday, June 23, 2011

முகவரி



கல்யாணி அண்ணன் வீட்டில் உட்கார்ந்து எல்லோரும் 88 சீட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். திடீரென்று யாருக்கோ அது போரடிக்க, கேரம் விளையாட முடிவெடுத்தார்கள்.எனக்கு கேரமும், கோலிக்காயும் சுத்தமாக
வராது.மற்றதெல்லாமும் நன்றாக வரும் என்று அரத்தமில்லை. கேரம் விளையாடுவதைச் சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களார்களில் ஒருவனாக இருந்தேன். திடீரென்று வண்ணதாசனின் அண்ணன் கணபதியண்ணன் சட்டை போட்டுக் கொண்டு கிளம்பினார்கள். அவர் எங்கள் விளையாட்டுக்களில் எல்லாம் கலந்து கொள்வதில்லை. அப்போது அவர் பி. படித்துக் கொண்டிருந்தார். “என்னாப்பா, ஒன்னைய ஆட்டைக்கி சேக்கலையா..” என்றார். நான் எழுந்து நின்றுஎனக்கு கேரம் தெரியாதுஎன்று அசடு வழிந்தேன்..” எங்கூட வாரியா என்றார்கள்.சரி என்று கிளம்பினேன், “ வீட்டுக்குப் போய் சட்டை போட்டுட்டு வாஎன்றார்கள். “யாரை, சின்னப்பயலையா கூட்டீட்டுப் போறீங்க.....” என்று யாரோ கிணடலடித்தார்கள்.நான் டிராயர் மட்டுமே போட்டிருந்ததேன். ஆறாம் வகுப்பு முழுப்பரீட்சை லீவு. என் வீடு ஏழு வீ டு தள்ளி யிருந்தது. அவரது வீடான அன்பகம். 21. E. என்றால் எங்கள் வீடு, குமரன் அகம் 28.வீட்டுக்குப் போகிற இடைவெளியில் அண்ணன் சொன்னார்கள்,” கீழ ரத வீதியில் தி.மு. அலுவலகம் என்றிருக்கிறதாமே, அதன் கீழ்த்தான் ஒருவரைப் பார்க்கப் போகிறோம், அவர்தினமலர்நாளிதழ் ஓவியர் அருணா என்றார்.
ஆமா, வீரன் வேலுத்தம்பி சித்திரக்கதைக்கெல்லாம் படம் எல்லாம் போடுறாரே அவரா என்றேன். ஆமா அவரேதான். என்றார். அவர் கார்ட்டுனும் போடுவார். தினமலர் அப்போது தென் மாவட்டங்களில் அதிகம் விற்பனையாகும் பத்திரிக்கை. தினத்தந்தி மதுரையிலிருந்து வந்து கொண்டிருந்தது, அதில் கன்னித்தீவு கிடத்தட்ட எண்ணூறுஅத்தியாயம்வந்திருந்தது. தினமலரில் தளவாய் வேலுத்தம்பி கதையான வீரன் வேலுத்தம்பி வந்து கொண்டிருந்தது.அதற்கு ஓவியர் அருணா.”ஏதோ இன்று பெரிய மனுஷ தரிசனம் போலிருக்கிறதுஎன்று நினைத்துக் கொண்டு வீட்டிற்குப்போய் சட்டையை மாட்டியபடியே வெளியே வந்தேன். அக்காவோ யாரோதொரை எங்க இன்னேரத்தில சட்டையை மாட்டீட்டிக் கிளம்புதாரு... என்றார்கள். “நான் கழக அலுவலகம் வரைக்கும் போய்விட்டு வாரேன்..” என்று நகர்ந்தேன்.அப்பாஏல...” என்று சத்தமிடுவது தெருவில் இறங்கி விட்ட பின் கேட்டது.
கீழரதவீதியில் அப்பர் கிளாப்டன் ஸ்கூலுக்கு அடுத்து வடபுறம்திராவிட முன்ன்ற்றக்கழக அலுவலகம்என்று மாடியில் ஒரு போர்டு தொங்கும். உண்மையில் அங்கு எதுவும் அலுவலகம் இயங்கியதா என்றெல்லாம் தெரியாது.அதற்குக் கீழே ஒரு பழைய இரும்புக் கடை. உண்டு. ஒரு வேளை அவர் கட்சிக்காரராக இருந்திருக்கலாம். அங்கே போனதும் கணபதியண்ணன், ”போ, போய்க் கேளு, ஆர்ட்டிஸ்ட் அருணா இருக்காரா என்றுஎன்றார். நான் ஒருவரிடம் போய்ஆர்ட்டிஸ்ட் அருணா இருக்காரா...” என்று கேட்டேன்.” நாந்தான் அருணா.. நீ யாருய்யா.. ”என்று அவர் கேட்கவும்.,அதே நேரத்தில்அவர்தான் அருணா..”என்று அண்ணான் சொல்லவும் சரியாய் இருந்தது.அதில்ஏய் என்னத்தையும் அதிகப் பிரசிங்கித்தனமா சொல்லிராதப்பா..” என்ற ஜாக்கிரதை தொனித்தது. நான் அப்போதெல்லாம் (இப்பவும்தான்) அப்படி.பி’’ தான்.அண்ணன் தன்னிடமுள்ள அவர் வரைந்த ஓவியங்களைக் கண்பித்துக் கொண்டிருந்தார். அவர்,சேவியர் கல்லூரி மேகசீனில் வரைந்திருந்த சரஸ்வதி கோட்டோவியமும் ஒன்று.அருணாஅதை வெகுவாகப் பாராட்டினார்.அதைத் தான் வைத்துக் கொள்ளலாமா என்றும் கேட்டார்.கணபதியண்ணன் மகிழ்ச்சியோடு சம்மத்தித்தார்.
அதில் ஒரு பாரதிதாசன் ஓவியமும் இருந்த நினைவு. அதையே நான் கோணல் மாணலாக வரைந்து ஸ்கூல் மேக்சீனுக்கு, பிற்காலத்தில்க் கொடுத்தேன்.ஸ்கூல் மேகசீனில் பாரதிதாசன் படத்தையெல்லாம் போடாத காலம் அது. இல்லையென்றாலும் போடக்கூடிய அளவு கொஞ்சங்கூட நன்றாகவும் இல்லை.அவர்கள் இருவரும் படத்தைப்ளாக்எடுப்பது எப்படி என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள்.” நீங்க இண்டியன் இங்கில் எதை வரைந்து எப்படிக் கசக்கிக் கொடுத்தாலும் அதை என்ன சைசில் வேண்டுமானாலும் ப்லாக் எடுத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் விளக்கிக் கொண்டிருந்தார்.நீங்கள் எந்த அளவிலிம் வரையலாம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.மறுநாள் நான் முதல் வேலையாக எட்டணாவுக்கு இண்டியன் இங்க் என்கிற ப்ளாக் இங்க் பாட்டில் ஒன்றும் தொட்டு எழுதுகிறநிப்பேனாக்கட்டையொன்றும் வாங்கினேன். அன்பகத்தில் ப்ளாக் இங்க் கேக்கும் உண்டு. கணபதியண்ணனும். கல்யாணியண்ணனும் ப்ரஷ்ஷை தண்ணீரில் முக்கி அதில்த் தோய்த்து அருமையாக வரைவார்கள். எனக்கு ஒரு நாளும் ப்ரஷ்ஷால் வரையவோ எழுதவோ வந்ததே இல்லை.அந்த வருட சரஸ்வதி பூஜையன்று வந்த தினமலரில் அருணா ஒருகருத்துப்படம்போட்டிருந்தார். ஒரு சரஸ்வதி படம் போட்டு. கிழேஇன்று நாடெங்கும் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள்”, என்றகருத்தையும்போட்டிருந்தார்கள்.அது அப்படியே கணபதியண்ணன் வரைந்த படம்.
அவர்கள் வீட்டில் நான் கற்றுக் கொண்டவை எவ்வளவோ உண்டு. கணபதியண்ணன் மேஜைக்குள்ளும் சரி, கண்ணாடி ஸ்டாண்டிலும் சரி சாக்பீஸ் துண்டுகளுக்குப் பஞ்சமே இருக்காது. மாடியின் செங்கல் தரையிலும், முன் வெராந்தாவின் சிமெண்டுத்தரையிலும் கணப்தியண்ணன், விகடன், குமுதம் இதழ்களில் வருகிற படங்கள் வரைந்து தள்ளிக் கொண்டே இருப்பார்கள். அங்கே வாராத பத்திரிக்கைகளே கிடையாது.கண்ணன் என்றொரு பத்திரிக்கை, அதில் சுப்பு, ரமணி என்று ஒருவரே வரையும் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் வாண்டுமாமா, ’ஆர்.விஆகியோரின் சித்திரக்கதைகள், எல்லோருக்குமே, ரொம்பப் பிடிக்கும். விகடனில் அப்போது இதயனின் நடைபாதை என்றொரு தொடர் வந்து கொண்டிருந்தது.அதில் வருகிற கோபுலுவின் படங்களை அவர் அப்படியே எந்தச் சிரமுமில்லாமல் வரைவார். அவருக்கு குமுதத்தில் வருகிறவர்ணம்என்பவரின் வாஷ் டிராயிங் படங்கள் ரொம்பப் பிடிக்கும். அவருக்கு பாராட்டுக் கடிதங்கள் எழுதி பதிலெல்லாம் வரும். ஒரு போஸ்ட் கார்டில் வர்ணம் ஒரு பெண்ணின் தோள்ப்பட்டை வரையிலான படத்தை வரைந்து அனுப்பியிருந்தார். கணபதி என்கிற தன் பெயரைக்கூட அவர், ‘ ’வர்ணம்’, என்ன ஸ்டைலில் கையெழுத்துப் போடுவாரோ அதே போல், தன் படங்களின் கீழ்ப் போடுவார்.அவருக்கு சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்று பெரிய கனவு.ஏனோ அதை அவர்கள் வீட்டில் அனுமதிக்கவில்லை. லயோலாவில் எம். சேர்ந்து படித்தார். அவருக்கு பி.பி ஸ்ரீனிவாஸ் குரலின் மீது அப்படியொரு காதல். “அன்புமனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா....” பாட்டு, எதிர் வீட்டு வானொலியில் ஒலி பரப்பினால் மாடியின் வெளிப்புறத்திற்கு வந்து நின்று கேட்பார்.பாட்டு முடியும் வரை பேசவும் மாட்டார். பேச அனுமதிக்கவும் மாட்டார்.பாசமலர் படத்தில் வருகிறயார் யார் அவள் யாரோ.. “ பாட்டுக்காக என்னிடம் ஒரு அணா( ஆறு நயாபைசா) தந்து பாசமலர் பாட்டுப்புத்தகம் வாங்கி வரச் சொன்னார்.அப்போது பாடல்களில் ஹம்மிங் பிரபலமாகியிருந்த விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பொற்காலம்.ஓவியம் என்றில்லை அருமையான மரபுக் கவிஞர். நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஜிப்ரானை மொழி பெயர்த்திருக்கிறார்.சமீபத்தில் குறுந்தொகைப் பாடல்களை எளிமையான கவி வடிவத்தில் தந்திருக்கிறார்
அவருடன் லயோலாவில் படித்த நாக வேணுகோபாலன் என்றொரு நண்பரை சமீபத்தில் டில்லி தமிழ்ச்சங்க கருத்தரங்கு ஒன்றில் சந்தித்தேன். இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஒருவர் அவராகவே வந்து, ”உங்களின்நினைவின் தாழ்வாரங்கள்கட்டுரைகளை அந்திமழை ப்லாக்கில் படிக்கிறேன், ரொம்ப நன்றாக இருக்கிறது”, என்றார். ஒரு ரசிகரைச் சந்திக்கிற வழக்கமான கூச்சம் கலந்த சந்தோஷ ஆர்வத்துடன் மட்டுமே அவரை எதிர்கொண்டேன்.மிக ஒல்லியான உருவம். என்னை விட எட்டு வயது அதிகமிருக்கும்.ஃபுல் ஸூட்டிலிருந்தார்.”ரொம்ப நன்றி....” என்று கொஞ்சம் மட்டுமே பேசினேன். அவர் என்னை விடுவதாயில்லை.”அது சரி, கலாப்ரியா,என்னை யார் என்று கேட்கமாட்டீர்களா....” என்று பதிலுக்குக் கூட காத்திராமல்,” நான் உங்க கணபதியண்ணனோட கிளாஸ்மேட், லயோலாவில் நாங்க இரண்டு ரெண்டு பேரும் ஒன்னாப் படிச்சோம், இந்தாங்க, நேற்று உங்களைப் பார்த்ததுமே ஒரு வேலை செஞ்சேன், அண்ணன், காலேஜ் மேகசீனில் எழுதிய ஒரு கட்டுரையின் நகலை ஜெராக்ஸ் பண்ணிக் கொண்டாந்திருக்கேன்”, என்று ஒரு ஜெராக்ஸ் பிரதியையும் ஒரு ஃபோட்டோவின் ஜெராக்ஸையும் தந்தார். “ நீங்க எப்ப கணப்தியண்ணனைப் பார்ப்பீங்களோ, அப்ப கொடுங்கஎன்றார்.அதைக் கொடுத்து விட்டு என்னைத்தன் சின்ன உருவத்தால் கட்டிப் பிடித்துக் கொண்டார். புகைப்படத்தில் அவர் ஒரு பத்தாம் வகுப்பு மாணவர் போல உயரமான கணபதியண்ணனின் அருகே நின்று கொண்டிருந்தார். ’ஆளுக்கொரு வீடுபடத்தின் அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா.....’பி.பி.ஸ்ரீனிவாஸ் பாட்டு, ஓவியம், கவிதை என்று நிறையப் பேசிக் கொண்டிருந்தார்.அவர் மீதான மரியாதையை அதிகப் படுத்திக் கொண்டே இருந்தார். ஊருக்குப் போன பின் முதல் வேலையாக இதைக் கணபதியண்ணனுக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.டில்லிக் குளிர் விட்டவுடன் அந்த யோசனையும் மறைந்து போயிற்று.
சென்ற வாரம் இன்னொரு பயணத்திற்காக, டில்லிக்கு கொண்டு சென்ற பெரிய சூட் கேஸை எடுத்த போது அதிலேயே தங்கி விட்ட அந்த ஜெராக்ஸ்`நகல் கண்ணில் பட்டது. பயணம் கிளம்புகிற அவசரம். இரண்டு வரி நலம் விசாரித்து, ஒரு கடிதம் எழுதி,ஜெராக்ஸை இணைத்து, நினைவில் இருந்த அவரது ஆதம்பாக்க முகவரியையும் வீட்டு ஃபோன் நம்பரையும் எழுதி, ஒரு நண்பரிடம் கொடுத்துஎப்பா இதை ஒட்டி கூரியரில் சேர்த்து விடு..” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.முந்தா நாள் கணபதியண்ணனிடமிருந்து கடிதம் வந்தது. ”வேணு தந்தவைகளை அனுப்பி வைத்தற்கு ரொம்ப சந்தோஷம். அந்தக் கட்டுரை என்னிடம் கூட இல்லை. நீ முகவரி சரியாக எழுதவில்லை, ஃபோனில் விசாரித்து, கொண்டு வந்து தந்தார்கள் அவர்களுக்குப் புண்ணியம் சேரட்டும்...”. என்று வழக்கம் போல இன்லண்ட் லெட்டரின் ஒரு இடத்தைக் கூட மிச்சம் வைக்காமல், எழுதி, ஒரு ஓரத்தில் வீட்டின் தெளிவான முழு முகவரியையும், செல் பேசி எண்ணையும், மெயில் முகவரியும் எழுதி இருந்தார்கள். தமிழ் பேசும் எந்த மூலையிலும் என் முகவரியைத் தெரிந்த ஒன்றிரண்டு பேராவது இருக்கிறார்கள்...என்றால் அதற்கு கணபதியண்ணன்தான் காரணம்.. அவருக்கு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஒத்தி வைப்பதில் நாம்தான் கில்லாடிகளாயிற்றே... ஆனால் காலக்கணக்கன் எதையும் ஒத்தி வைப்பதேயில்லை.
நேற்று மதியம் ஒரு ஃபோன்,. ”கணபதியண்ணன் மாரடைப்பில் திடீரென காலமானான், கோபால்..முக்கால் மணி நேரமாச்சாம்.... ” என்று கட்டுப்படுத்த முடியாத அழுகையுடனான குரலில் வண்ணதாசனிடமிருந்து.



Visitors