Friday, November 5, 2010


வேற்றூர்ப் புழுதி

வழிப்போக்கனைப்

புரிந்து கொண்ட வெயில்

சற்றே மேகத்துள் மறைந்தது


ஊரொன்றை நெருங்கும்

ஒற்றைத் தடத்தின் ஓரம்

பசியாறிக் கொண்டிருந்த ஈக்கள்

சற்றுப் பொறேன்

புதுச்சீழ் அருந்திக் கொள்கிறோம்

என்று கால் புண்களின்

மேற்படர்ந்திருந்த தூசியை மீறி

விருப்பத்துடன் வந்தமர்ந்தன


தன் காலிப் பாத்திரத்தில்

புதிய ஊரின் கதைகளை

நிரப்பும் ஆவலில்

வேண்டுகோள் மறுத்து

வழி தொடர்ந்தான்


பசுவொன்று

மரத்தடியில் ஈன்ற தன்

புதிய கன்றினை

நக்கிக் கொண்டிருந்தது

“நல்லவேளை

ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமாய்

வீட்டில் குட்டி போடாமலிருந்ததே*

என்று மகிழ்ச்சி பகிரும்

ஒருவனைக் கண்டதும்

பாத்திரம் நிரப்பிக் கொண்டான்

நிழலில் அருகமர்ந்து


வழிப்போக்கனைப் புரிந்து

கொண்ட வெயில்

மேகம் நீங்கியது.

-கலாப்ரியா

* பசு, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கன்று போட்டால், வீட்டுக்கு நல்லதில்லை என்று அதை வெளியே (மேய்ச்சலுக்கு) அனுப்பி விடுவது இங்குள்ள நம்பிக்கை.

Thursday, November 4, 2010

நன்றி: ஓம் சக்தி தீபாவளி மலர்.


செய்தி

தொல்லியல்ச் சித்திரங்களின்றிப்

புதிதாய்ச் சொல்ல

எதுவுமிருக்கிறதா

இவ்வேளை உனக்கு.

தொடுவானில்

வெள்ளைமேகங்கள் தீட்டிய

’’வீடு திரும்பும்

ஆட்டு மந்தையொன்றை

மறக்க முடிகிறதா...

ஆயிரம் பிறை பார்த்தாலும்

சந்திர மதியின் ‘காணாத்தாலி

அரிச்சந்திர கதை கேட்கிற

எல்லோர் கண்ணுக்கும்

தெரியத்தானே செய்கிறது.

மேலாடை வீழ்ந்த தெடுவென்றான்

அவ்வளவில்

நாலாறு காதம் நடந்ததே...

நழுவிய படிமங்களை

எடுக்கும் முன் காலமும்

எங்கோ இழுத்து வந்து விடுகிறது

என்றாலும் எழுதிச் செல்கிறது

வாழ்க்கையை அர்ப்பணிப்பது

சேவை

சாவை அர்ப்பணிப்பது

செய்தி

-கலாப்ரியா

(காரைக்கால் ‘அம்மையாருக்கு’)

Visitors