Tuesday, January 5, 2010

ஒரு தகவல்


அந்தி மழை.காம் இணைய இதழில் தொடராக வெளி வந்த என்னுடைய `நினைவின் தாழ்வாரங்கள்'-கட்டுரைகள், புத்தகமாக வெளி வந்துள்ளது.சந்தியா பதிப்பகம்,57.53ஆவது தெரு,9 வது அவென்யூ,அசோக் நகர், சென்னை-600 083: வெளியிட்டுள்ளார்கள்.(பக்கங்கள் -384, விலை-ரூ.225/-).சென்னை புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கும்.

ஓடும் நதி-13


கல்யாணங்கள், சடங்கு வைபவங்கள் அப்பொழுதெல்லாம் ஒருவாரம் நடக்குமாம். நெருங்கிய உறவினர்கள் ஒரு வாரத்துக்கு முன்பே வந்து விடுவார்கள்.கிராமம் என்றால் தெருவடைக்கப் பந்தல் போட்டு விடுவார்கள்.இரண்டு மூன்று மைல் தள்ளி இருக்கும் ரயில் நிலையத்திலிருந்து உறவினர்களை அழைத்து வர, வில் வண்டிகள் வந்த வண்ணமும் போன வண்ணமும் இருக்குமாம். மற்ற வீட்டு வண்டிகளைக் கூட கேட்டு வாங்கிக் கொள்வார்கள்.விருந்தாளிகளைத் தங்க வைப்பதற்கு பக்கத்து வீடுகளில் மராமத்து வேலைகளைக் கூடச் செய்வார்கள்.அதுவும் கல்யாணச் செலவோடு சேர்த்தி.
பெண்கள் வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள்.ஒரு அக்காவின் சடங்கு விசேஷத்திற்கு வந்திருந்த முத்தம்மா அத்தை; உளுந்தங்கழி கிண்டினர்களாம், கிண்டினார்களாம், அப்படிக் கிண்டினார்களாம். துணைக்கு வந்த வேலையாட்களையெல்லாம் கூட வேண்டாம் என்று சொல்லி விட்டு அத்தை அத்தனை நறுவிசாகவும், பக்குவமாகவும் செய்தார்களாம்.பார்த்த சனமெல்லாம் மூக்கில் விரல் வைக்காத குறையாம். கையிலெடுத்தால் கொஞ்சமாவது விரலில் ஒட்டவேண்டுமே,அப்படியொரு பக்குவம். எல்லோரும் ருசி பார்க்கிறேன், ருசி பார்க்கிறேன் என்று வீடு வீடாக விநியோகிக்கும் முன்பே சாப்பிட்டு அதிசயித்தார்களாம். ஊரே திருஷ்டி போட்டதில் அத்தையின் கை தும்பிக்கை போல் வீங்கி, அதற்கென்றே `பார்வை’ பார்க்கிற மருத்துவச்சி வந்து மந்திரித்து, உவலை கழித்து, பருத்திக் கொட்டை மிளகாய் வத்தல் இன்னோரன்ன திருஷ்டிக் கழிப்புச் சமான்களையெல்லாம் கோட்டை அடுப்பில் போட்டதும் விசேஷ வீடு முழுதும் கமறுதாம், கமறுதாம் அப்படிக் கமறுதாம்.”ஏயப்பா என்னா கந்தஷ்டி” (கண்திருஷ்டி)என்று ஊர் மறுபடி திருஷ்டி போடத் தொடங்கியதாம்.அத்தையை அப்போது ஒரே டாக்ஸி என்றிருந்த திரவியம் டிரைவரின் காரை அமர்த்தி தென்காசியில் கொண்டு விட்டு வந்தார்களாம், சடங்கு முடிந்ததும்.
இரண்டு வீடுகளுக்கு இடையே இருக்கும் காம்பவுண்ட் சுவரில் துருப்பிடித்த பூட்டு, கீல், தாழ்ப்பாளுடன் ஒரு நிலைக் கதவு இருக்கும். இல்லையென்றால் நிலை வாசலை பொய்ச் செங்கல் (சுடாத செங்கல்) வைத்து அடைத்திருப்பார்கள்.அதை எளிதாக இடித்து, திறந்து விடலாம். இப்படி வரிசையாக, நிறைய வீடுகளை இணைத்து சாப்பாட்டுப் பந்தி நடக்கும்.பந்தி பரிமாற மட்டும் ஆண்கள். மற்ற நேரம் அவர்கள் சீட்டுக்கச்சேரி, வெற்றிலை பாக்கு, அரட்டை ‘மற்ற’ பொழுது போக்கு. காலையில் ஆற்றுக்குளியல். சாயந்தரம் குளக்கரைக்கு ஒரு நடை நடந்து மாலைக் கடன்.அப்பாவு மாமா வீட்டுக் கல்யாணத்திற்கு வந்தவர்கள் நைனார் குளத்தையே நாறடித்து விட்டார்கள் என்று ஊரே கேலி பேசிற்றாம். இப்பொழுதென்றால் ஒரே கல்யாண மண்டபம், சாப்பாடு தொடங்கி எல்லாவற்றுக்கும் கேட்டரிங் சர்வீஸ் இருக்கிறது. முதல் பஸ்ஸில் வந்து விட்டு அடுத்த பஸ்ஸில் போய்விடலாம். இல்லையென்றால் சொந்தக் கார். இனிமேல்த்தான் நானோ வரப் போகிறதே. கார் நிறுத்தத்தான் இடம் வேண்டும்.
நண்பனின் தங்கை கல்யாணம் ஒரு மண்டபத்தில் நடந்தது. அப்போது கூட கல்யாண மண்டபங்கள்,இரண்டோ மூன்றோதான் இருந்தது ஊரில்.விமரிசையான கல்யாணம். மொட்டை மாடியில் அமர்ந்து இரவு பூராவும் விழித்து வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். மண்டபத்தின் மேலும், எங்கள் மேலும் எதிர்த்தாற் போலிருந்த பெரிய சிறைச் சாலையின் `செர்ச் லைட்’ அவ்வப்போது விழுந்து, நகர்ந்து கொண்டிருந்தது.”ஏல ஒன்னயத்தான் தேடுதாங்கலே” என்று ஒருவருக்கொருவர் கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். அந்தப் பகுதி சிறைக் காவலர்களின் பரேட் மைதானம் தான்.அதன் நடுவில் ஒரு மேடை. மைதானத்தைச் சுற்றி வெறும் முள்வேலிதான். சிறை, நன்கு தள்ளி இருந்தது.மாடியிலேயே தூங்கி விட்டோம். காலையில் நான் எழுந்திருக்க சற்று நேரமாகி விட்டது.
மற்றவர்கள் காலைக் காபியெல்லாம் முடித்து விட்டிருந்தார்கள்.நான் காபி கேட்டு சமையல் ஆக்கு(ம்)பிறைக்குப் போனேன். நண்பரொருவர், சித்தப்பா என்றுதான் அழைப்போம்.ரொம்ப இளகிய சுபாவமும் அசட்டுத் தைரியமும் உள்ளவர். அவர், நாலைந்து இலைகளை விரித்து வைத்து ஒவ்வொன்றிலும் இட்லிகளைப் பிய்த்துப் போட்டு, அவற்றின் மேல் சாம்பாரும் சட்னியும் விட்டுக் கொண்டிருந்தார். தவசுப் பிள்ளை, ``என்ன செய்யறீங்கய்யா” என்று எரிச்சலாய்க் கேட்டுக் கொண்டிருந்தார். “நீ பேசாம இருய்யா, மகனே இதை பொட்லமாக் கட்டி எடுத்துட்டு வா, சத்தம் காட்டாதே” என்றார்.நானும் இரண்டு பொட்டலங்களை எடுத்துக் கொண்டு பின்னால் போனேன். மண்டபத்திலிருந்து சற்றுத் தள்ளி,சிறை வேலியை ஒட்டி ஒரு புதர். அதனருகே போனார். இரண்டு கைதிகள், கையெல்லாம் மண், படாரென்று வெளியே வந்து இட்லிப் பொட்டலத்தைப் பிடுங்காத குறையாய் வாங்கிக் கொண்டு தலை தெறிக்க ஓடிப் போய், மேடையருகே ஒளிந்து கொண்டு அவசர அவசரமாக தின்று கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்து இன்னும் இரண்டு கைதிகள் ஓடி வந்தார்கள்.
அதற்குள் விசிலூதிக் கொண்டு காவலர் ஓடி வந்தார்.இன்னும் இரண்டு பொட்டலம் அவசரமாய்க் கை மாறியது.வார்டன் பக்கத்தில் நெருங்கி விட்டார்.ஒருவன்மீது பலமான அடி விழுந்தது. இரண்டு பேரும், சிதையும் பொட்டலங்களை இறுகப் பற்றிய படி, அடியைப் பொருட் படுத்தாது ஒடினார்கள். வார்டன் என்னை நோக்கிச் சத்தம் போட்டார். அவரை எனக்கு அடையாளம் தெரிந்தது. ரவுடிப் பெருமாள் என்று எனக்கு ஒரு வகுப்பு மூத்தவன்.கடும் சேட்டைக்காரன்.”ஏய் நீயா, என்னத்தியும் தின்னு என்னமும் ஆச்சுன்னா எனக்கில்லா வேலை போயிரும், இது என்ன உங்க வீட்டுக் கல்யாணமா” என்றான். ”ஆமா சாப்பிட வாயேன்” என்றேன்.மத்தியானம் வரப் பாக்கேன் என்று கூறியபடியே, ஓடுங்கலே என்று அவர்களை விரட்டிக் கொண்டு சென்றான். ஓடினார்கள், இட்லியை இறுக்கிப் பிடித்தபடி. என்னால் ஜீரணிக்க முடியவில்லை, அது கவிதையில் வந்த பின்னும்

“ஜெயிலுக்குப் பொறத்தால
நடக்கிற கல்யாணங்களில்
தோட்ட வேலைக் கைதிகள் மாத்திரம்
வேலியருகே வந்து
இட்லியக் கெஞ்சி வாங்கி
மறைச்சபடி உள்ளே
ஓடற ஓட்டத்தை யாரால்
செமிக்க முடியும்.”

Visitors