Tuesday, September 15, 2009

சம்மதமில்லையென்றால் ஏது வழக்கு....


தற்செயலாகத் தான் அது நடந்தது. என் ஆயுளில் நான் ஆலங்கட்டி மழையைப் பார்ப்பது அதுதான் முதல் தடவை.வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்தியானம். வீடு, ஓட்டு வெக்கையில் தகித்துக் கொண்டிருந்தது. அறை வீட்டில் சாமான்கள் ஒன்றும் இல்லை.எல்லாம் விற்றுத் தின்றாகி விட்டது.ஒன்றிரண்டு டிரங்குப் பெட்டிகள் இருந்ததன.ஒரு பழைய ஜாடி, பாரி கம்பெனி ஜாடி. முன்பு அதில் நல்லெண்ணை இருக்கும்.இப்போது ஒன்றும் இல்லை.அம்மாவுக்கு அதன் மேல் ஒரு பிரியம். காணாததற்கு, ஒரு முறை அபூர்வமாய் ஐ.எஸ். மாச்சாடோ பல்க்கிலிருந்து மண்ணெண்ணை கிடைத்து, அதை அதில் தான் நிரப்பி வைத்திருந்தோம்.நான் வேலைக்கு சேர்ந்த புதிது. நான் வேலை பார்த்த வங்கியில் கணக்கு வைத்திருந்த பெரிய மண்ணெண்ணை வியாபாரக் கடை அது. தற் செயலாக ஒரு ஃபோன் செய்தேன். ஒரு பெரிய பேரல் மண்னெண்ணை அனுப்பிவிட்டார்கள். அது வந்த பிறகு எனக்கு வேண்டாம், உனக்கு வேண்டாம், என்கிறார்கள். எங்களிடம் ஒரே ஒரு ஐந்து லிட்டர் டின் மட்டுமிருந்தது.பணமும் அவ்வளவாய் இல்லை. இருந்த பணத்திற்கு வாங்கி இந்த ஜாடியில் விட்டு வைத்தேன்.அம்மாவுக்கு அதில் சம்மதமே இல்லை. யாரிடம் கேட்டாலும், என்னடே நீ யாவாரம் பாக்கியா என்ன, என்று கேலி செய்தார்கள்.
பின் வீட்டு ரேவதி,என் பெயரைச் சொல்லி, அவங்க கஷ்டப் பட்டு கொண்டு வரச் சொல்லியிருக்காங்க, அன்னக்கில்லாம் தவியாத் தவிச்சவங்க இன்னக்கி வேண்டாம்ன்னு சாதாரணமாச் சொல்லுதீங்களே என்று சொல்லிக் கொண்டிருப்பது கேட்டது. அவள் அம்மாவைச் சத்தம் போட்டு பத்து லிட்டர் வாங்க வைத்தாள். அதற்குமே பணத்திற்கும்,பாத்திரத்திற்கும் கஷ்டப்பட வேண்டியதாய்த்தான் இருந்தது. மண்ணெண்ணை பேரலை மூன்று கால் சைக்கிளில் கொண்டு வந்தவன் ரொம்ப நல்ல மாதிரி, சார் ஏன் கஷ்டப் படுதீக, நானே ரெண்டு தெருவில் நல்ல விலைக்கி வித்துருவேன், என்றான்.நான் கடையில் சொல்லட்டுமா என்று கேட்டேன். நீங்களே எடுத்துக்கிட்டதாச் சொல்லுங்க, நான் பிறாமணக் குடித் தெருவில் பத்து நிமிஷத்தில் வித்துருவேன், எனக்கும் ரெண்டு காசு கிடச்ச மாதிரி ஆச்சு என்று போய் விட்டான்.நான் ரேவதியிடம் போய் நன்றி சொல்ல புறவாசல் போனேன்.பின் வீட்டு குச்சுகள் ஒன்றில் அவள் தன் அம்மாவுடன் வாடகைக்கு இருந்தாள்.ராஜபாளையத்தில் அவளது அப்பா மில்லில் வேலை செய்து வந்தார்.அவள் சர்வீஸ் கமிஷன் தேர்வில் பாஸ் செய்து, பாளையங்கோட்டையில் ஒரு அலுவலகத்தில் பணியற்றினாள்.இந்தப் பெண் பிள்ளைகள் எப்படி பாஸ் பண்ணி விடுகிறது என்று நினைத்திருக்கிறேன்.அவள் மட்டும் இல்லை இன்னொரு சிறிய வீட்டில், தேவியும் காளியம்மாளும் இருந்தார்கள். அவர்களும் அதே ஆஃபீஸ்தான், அதே ஊர்ப் பக்கம்தான். ரேவதி மூலமாகத்தான் அவர்கள் இங்கே குடி வந்தார்கள்.
ரேவதி ஒல்லியாய் இருப்பாள்.தீர்க்கமான முகம்.நல்ல வெள்ளை நிறம். தலை முடி, அவ்வளவு இருக்காது.மார்பும் சிறியது.ரெடிமேட் பாடி அணியமாட்டாள். அவள் தங்கை தைத்ததைத் தான் அணிவாள்.அவள் தங்கை ஊரில் அப்பாவுடன் இருந்தாள்.புறவாசலில் ஒரு குளியலறை உண்டு.அங்கே உள்ள அடிபம்பை, முன் வாசல் உள்ள பம்புடன் இணைத்திருப்பார்கள். தண்ணீர் அடிக்க, சற்று சிரமமாய் இருக்கும்.பெரும்பாலும் ஆண்கள் எல்லாரும் முன் வாசல் பம்பில் குளிப்போம். அதற்கு மறைப்பெல்லாம் கிடையாது. உள்ளாடைக்கு மேல் துண்டு கட்டிக் கொண்டு குளிப்போம். தலை துவட்டுகிற போது ஜட்டி, அல்லது அண்டிராயர் மட்டும், அவசர அவசரமாக துவட்டுவேன். நான் குளிப்பது எப்போதும் எட்டேமுக்கால் வாக்கில் இருக்கும்.ரேவதி மற்றும் பெண்கள் குளிப்பது பாத் ரூமில்.ஆனால் அவர்கள் துணி துவைக்க முன் வாசல் பம்ப்பே வசதியாய் இருக்கும்.என் அண்ணன் குழந்தைகள் யாரிடமாவது, உங்க சித்தப்பா குளிச்சாச்சா என்று கேட்டுவிட்டு, ரேவதி ஒரு வாளி துணியோடு வருவாள்.என்னிடம் நேரடியாக எதுவும் பேசியதில்லை.நானும், பேசியதில்லை.வாடகை கொடுக்கும் போது மட்டும், அவங்க, உங்க சின்னமகன், இருக்காங்களா என்று அம்மாவிடம் கேட்பாள். பெரும்பாலும் காலை வேளையில்,நான் இருக்கும் சமயத்தில் தான் தருவாள். அவள் பழக்கமே,தேவிக்கும், காளியம்மாளுக்கும்.அம்மா அதை வாங்கி என்னிடம் கொடுத்து விடுவாள்.ஏதாவது செலவுக்கு, கேட்பதென்றால், தயக்கத்துடன் தான் கேட்பாள். சமயத்தில் ‘வள்’ளென்று விழுந்து விடுவேன். இப்போது, அம்மாவை வதைத்த, அந்தக் காலைப் பொழுதுகளைப் பற்றி நினைத்தால்,மனசு அப்படிக் கஷ்டப் படுகிறது. செகம் பூரா ஆளலாமே திரும்பி நல்லா சாகலேமே..என்ற ஒப்பாரி எவ்வளவு உன்னதமான வரிகளை உள்ளடக்கியது.
கோடை காலத்தில் இரவில் வீட்டிற்குள் படுக்க முடியது தார்சாலில்த் தான் படுப்பேன். காலையில் பெரும்பாலும் சீக்கிரம் எழுந்து விடுவேன்.ராத்திரிக் கச்சேரிகள் முடித்து, படிக்க சற்று நேரமாகி விட்டால் சற்று நேரமாகி விடும்.அநேகமாக தேவி, தினமும் தெருவில் விழும் ஆற்றுத் தண்ணீர் இரண்டு குடம், எடுப்பாள்.தேவி பொது நிறமாயிருப்பாள். சற்று பயந்த சுபாவம் போல் முகமிருக்கும். ஆனால் வீட்டுக்குள் கலகலப்பாய் இருப்பாள்.எப்பவாவது புறவாசல்ப் பக்கம் போனால், காளியம்மாளைக் கேலி செய்து கொண்டிருப்பாள். ஒரு நாள், அம்மனோ சாமியோவ்,அத்தையோ மாமியோ....காளிஅம்மன் பரம்பரைக்கு கல்யாணமா....என்று `நான்’ சினிமாப் பாட்டைப் பாடி கேலி செய்து கொண்டிருந்தாள்.என்னைக் கண்டதும் வீட்டிற்குள் ஓடி விட்டாள்.ரேவதியின் அம்மா, எப்போதும் போல் சளசளத்துக் கொண்டிருந்தாள், ஆம்மா தேவி, நீ வேணுன்னா பாத்துக்கிட்டெ இரு,காளிக்குத்தான் சீக்கிரம் கல்யாணம் தெகையும்...என்று.
காளி அம்மாள் நல்ல கருப்பு. பல் சற்று எடுப்பாய் இருக்கும், ஆனால் சிரித்த முகம் போலிருக்கும், பற்கள் அவ்வளவு தெரியாது.மறைக்க முடியாத மார்பு. அற்புதமாகக் கோலம் போடுவாள். அழுத்தமான, தடிமனான கோடுகளாய் இருக்கும். குத்தாகக் கோலப் பொடியை அள்ளிக் கொள்ளுவாள்.மூன்று விரல் இடுக்கு வழியாகக் கோலப் பொடி வழியும். அழகாக அதை கண்ட்ரோல் செய்வாள்.நான்கு புறமும் ஒன்று போல் இருக்கும்.எந்த இடத்திற்கு எந்தக் கோலம் என்று கணக்காகப் போடுவாள்.இரண்டு மூன்று முறை அவள் கோலம் போடுவதை பார்த்துக் கொண்டிருந்தேன். எந்தக் கூச்சமும் இல்லாமல் கருமமே கண்ணாகப் போட்டுக் கொண்டிருந்தாள்.
விடியலில் வாசலில்
கோலமிடுவள்
நெஞ்சில் இரு
மஞ்சள் தாமரைகள் பூத்தன
சூரியனாய்ச் சுடும் முன் நிமிர்ந்தாள்
நான் சொன்னேன் –இனி
பெரிய கோலமாய்ப் போடப் பழகேன்...என்ற என் கவிதை வரி நினைவுக்கு வரும். ஆனால் இவை சற்று கருப்புத் தாமரைகள்.

ஒரு பொங்கலுக்கு, எங்கள் வீட்டில் ரெண்டு மாக்கோலம் போடுங்களேன் என்று விளையாட்டாகக் கேட்டு விட்டு வெளியே போய் விட்டேன், பாவம் அவர்கள் பொங்கலுக்கு ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தது தெரியாமல்.வெளியே போய் விட்டு வரும் போது, வீட்டின் பாட்டாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் காளியம்மாள். ரேவதி, தேவி, ரேவதியின் அம்மா, எல்லோரும் ஆச்சரியமாய் லயித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.புகையடித்துக் கறுத்துப் போன செங்கல்த் தரையில்,பளீஈரென்று மெழுகி, மூன்று கோலங்கள். இரண்டு புறமும் சுதர்சனச் சக்கரம் போல் இரண்டு கோலங்கள். நடுவில் ஒரு அன்னப் பறவை. சுற்றி, அப்படி யொரு அழகாய் பார்டர். ஏதோ கோயில் விதானத்தைப் பார்ப்பது போலிருந்தது.அடிப் பாவிகளா விளையாட்டாய்ச் சொன்னதற்கு இவ்வளவு சிரமமா, என்று தோன்றியது.ஐயய்யோ ஊருக்குப் போகலையா, நான் சும்மால்லா கேட்டேன், உங்களுக்கு எதுக்கு சிரமம், என்று குழறினேன்.மூன்று பெண்களையும் வீட்டுக்குள் பார்ப்பதே சந்தோஷமும் கூச்சமுமாய் இருந்தது. அதுக்கென்ன,``மச்சு நெல்லும் குறையக் கூடாது, மக்க மாரு முகமும் வாடக் கூடாதுன்னா முடியுமா’’ பொட்டப் புள்ளைங்க கோலம் போடறதா அதிசயம் என்று பாட்டி -ரேவதியின் அம்மா- சொன்னாள். எம்மா நீங்க வேற, அப்புறம அவங்க எங்க ரெண்டு பேரையும் போடச் சொல்லீறப் போறாங்க, எங்களுக்கு ஒத்தைக் கம்பி கூட இழுக்கத் தெரியாது என்று ரேவதி சிரித்துக் கொண்டே சொன்னாள்.ஆம்மா நீங்க ரெண்டு பேரும் ‘’தோளுக்கு மேல தொன்னூறு தொடச்சுப் பாத்தா ஒண்ணுமில்லை’’ன்ன்ன கதை மாதிரிப் பட்டவளுகல்லா.என்றாள், பாட்டி. இரண்டாம் கட்டிலிருந்து அம்மா எல்லாவற்றையும் அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள், சிரிக்கலாமா கூடாதா என்ற மாதிரியில்.மூன்று பெண்களும் சிரித்த படியே கிளம்பினார்கள்.காளியும் தேவியும் வாரோம் சார் என்றார்கள். ரேவதி, வர்ரேன்ங்க என்றாள்.
கோடைக்காக தாசாலில் நான் படுத்திருப்பேன். தேவி ஆத்தண்ணி எடுத்து வருபவள், அன்று விடிந்தும் தூங்கிக் கொண்டிருக்கும் என்னை எந்தக் கோலத்தில் பர்த்தாளோ, மறு நாளிலிருந்து, தண்ணீரெடுக்க நங்கையாரை வேலைக்கு வைத்துக் கொண்டாள்.நங்கையார்தான் கிண்டலாய்ச் சொன்னாள். நீங்க ஒங்க பாட்டுக்கு தூங்குங்க, எனக்கு மாசம் பத்து ரூவாயவது கெடைக்கும் என்று. எனக்கு அதிலிருந்து புறவாசல் பக்கம் போகவே கூச்சமாயிருந்தது.
அறை வீட்டில் படுத்திருந்தேன்.பின்னால் குச்சு வீட்டின் முன்ன்னால் ஒரு திண்ணை உண்டு, அதில் உட்கார்ந்து ரேவதி, காளியம்மா, தேவி, பாட்டியம்மா எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று மழை பட படவெனக் கொட்டியது. குச்சு வீட்டு தகரக் கூரையில் கணகணவென்று சத்தம் கேட்டது நான் அவசரமாக வெளியே வந்தேன். மழையோடு ஆலங்கட்டிகள், அரைக் கோலிக்காய் மாதிரி,திடமான நீர்க் குமிழி போல், விழுந்தது. நான் அது வரை பார்த்ததே இல்லை. ஆச்சரியத்தோடு மழையில் நனைந்து பொறுக்கினேன்.அதை எடுத்து ரேவதியிடம் ஏங்க இங்க பாருங்க ஐஸ் மழை என்று நீட்டினேன். பேச்சை விட்டு விட்டு, மார்ச் சேலை நழுவுவதையும் பொருட்படுத்தாமல் ஓடி வந்து, என் அதே ஆச்சரியத்தோடு கையை வேகமாக நீட்டினாள். அதற்குள கட்டிகள் கரையத் தொடங்கி, துகள் போல் ஆகியிருந்தது. அந்த வெண்ணிறக் கையில் குளிர்ச்சியான துகளை, நன்றாகத் தொட்டுக் கொடுக்கும் போதுதான் தொடுகை பற்றிய பிரக்ஞை வந்தது. அப்போது கூட ரேவதி குழந்தை போலத்தான் அதை வாங்கினாள்.காளியம்மாளும் முன்னால் வந்து ரேவதியின் கையிலிருந்ததை வாங்க முயற்சித்தாள். அது நீராகிப் போயிருந்தது.தேவி பாட்டியின் பின்னால் நின்றாள்.முகம் லேசான சிரிப்புடன் சலனமில்லாமல் இருந்தது.ஏங்க, வேற விழுந்தா எடுங்கங்க என்றாள். நான் பொறுக்கினேன். இப்பொழுது கட்டிகள் குறைந்து விட்டன.மழை வலுத்து விட்டது. ஒன்றிரண்டு கட்டிகளை எடுத்து ரேவதியின் கையில் கொடுத்தேன்.அதை அவள் காளியின் கையில் கொடுத்தாள். ரேவதியின் அம்மா,ஏய் இந்தா இவளே, பெரியவளே,இங்கிட்டு வா என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனாள்.அம்மா நனையாதடா, இந்த மழை உடலுக்காகாது என்றாள்.அதில் வேறு அர்த்தமுமிருந்த மாதிரி இருந்தது.
நான் உள்ளே வந்து தலை துவட்டிக் கொண்டிருந்தேன்.அறை வீட்டின் வலைச் சன்னல் வழியே பார்த்தேன்.தேவியும் காளியும் அமைதியாக திண்ணையில் அமர்ந்து, மழையை பார்த்துக் கொண்டே, பாட்டியம்மா சத்தம் போடுவதையும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த தம்பிக்கி கல்யாணம் வச்சாச்சுடி பெரியவளே, ஒனக்கு ஒரு இது வேண்டாமா, இப்படியா கையக்கைய நீட்டி வாங்குவ, அது என்ன நினைக்கும் என்று சொல்லுவது கேட்டது. எனக்கு கல்யாணம் முடிவாகியிருந்தது. சரிம்மா, விடும்மா, அவங்களுக்கு என்னைப் பத்தி தெரியும் எனக்கும் அவங்களைப் பத்தி தெரியும்., என்று சொல்லி விட்டு வெளியே வந்து மழையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.இப்ப ஐஸ் விழலைல்லெ என்று தேவியிடம் கேட்டாள்.அவள் பேசவில்லை.காளியம்மாள் ஜன்னலைப் பார்த்தாள். நான் விலகிக் கொண்டேன்.

Visitors