Saturday, September 5, 2009

கேள்விக்கு பதிலேதய்யா....

பொங்கலுக்கு புது ஓலை, வாசலில் வண்டியில் வைத்து விற்பார்கள். ராஜவல்லிபுரமென்றால், பனை ஓலையும் மட்டையும் ஏகத்துக்கு வீட்டிலேயே கிடைக்கும்.பொங்கலுக்கு அடுப்புக் கட்டி பாட்டப்பத்திலிருந்தும், விளாகம் பச்சேரியிலிருந்தும் வண்டியில் கொண்டு வந்து விற்பார்கள். இதெல்லாமுமே காலையில் கொண்டு வருவர்கள்.பாட்டப்பத்து கட்டியென்றால் அச்சுவெல்லக் கட்டி போல இருக்கும். விளாகம் என்றால், உருளையாக இருக்கும்.எங்கள் வீட்டில் பாட்டப் பத்து கட்டியையே வாங்குவார்கள். தெருவில் அதற்கே கிராக்கியும் அதிகமிருக்கும். காலையிலேயே வாங்கினால்த் தான் நல்ல லடசணமான கட்டியாகப் பார்த்து வாங்க முடியும்.இல்லையென்றால், சிலது ஏறுக்கு மாறாக இருக்கும்,பானை வைக்க தோதுவாய் இருக்காது. ஏழு கட்டி வாங்குவார்கள். மூன்று பானை பொங்கலிடலாம்.சிறு வீட்டுப் பொங்கலுக்கு மூன்று சிறிய உருளைக் கட்டிகளை இலவசமாகத் தருவார்கள். அதுவும் காலையில் சீக்கிரம் வாங்கினால் மட்டுமே கிடைக்கும்.
ஒரு வருடம் சிறு வீட்டுப் பொங்கலுக்கு, நாமே கட்டி போட்டாலென்ன என்று போன வருடத்து கட்டியை உடைத்து,தண்ணீர் விட்டு குழைத்து, அச்சுக்கு சிறிய போணியொன்றைத் தேர்ந்தெடுத்து,புறவாசலில் வைத்து நானும் சில நண்பர்களும் மும்முரமாக ஈடு பட்டுக் கொண்டிருந்தோம்.வளவில் உள்ளவர்கள் எல்லாம், என்னடே பொங்கக் கட்டியா எங்க வீட்டுக்கு ஆர்டர் குடுத்தா கிடைக்குமா, என்று கேலியும் உற்சாகப் படுத்துதலுமாகக் கேட்டுப் போனார்கள். போணியில், பிசைந்த மண்ணை அடைத்து, கவிழ்த்தினால் பாதி மண், கட்டியாக விழுந்தது. மீதி போணியிலேயே ஒட்டிக் கொண்டது.
பிள்ளையார் சதுர்த்திக்கு, அரசடிப் பாலம் வாய்க்கால் அருகே, களி மண்ணில் பிள்ளையார் சிலை செய்து விற்பார்கள். காலையிலேயே, ஒரு வண்டி களிமண்ணைக் கொண்டாந்து இறக்கி இருப்பார்கள்.அந்தக் களி மண்ணை எங்கிருந்து கொண்டு வருகிறார்கள் என்பது, எங்களுக்கு பெரிய அதிசயமாய் இருக்கும். ஒரு கல் கரம்பை இருக்காது. வழக்கமாக செய்து விற்க ஒரு வேளார் தான் வருவார். ஆள் ஒடிசலாய், வயிறு டொக்கு விழுந்து இருக்கும்.தார் பாய்ச்சிக் கட்டிய வேட்டி, பூணூல், ஒரு பலகை போட்டு உட்கார்ந்து வேக வேகமாகப் பிள்ளையார் செய்து கொண்டே இருப்பார்.லங்கோடு எதுவும் கட்டியிருக்கமாட்டார். விரை இரண்டும் பலகையை உரசிக் கொண்டே இருப்பது லேசான வேஷ்டி வழியேதெரியும். இதைப் பார்ப்பதும் சிரிப்பதும், ஒரு விளையாட்டு.பரமசிவன் பிள்ளை சார் போடுகிற புதிர்கள் ஞாவகத்துக்கு வரும்.ரசம் மணப்பதேன், ரத்தம் சொட்டுவதேன்? ரெண்டுக்கும் ஒரே விடை, யாராவது சொல்லுங்கலெ என்பார் வகுப்பில். எவனாவது ‘பெருங்காயத்தால்’ என்பான். யேய் சொல்லிட்டீங்களே,என்பார். எனக்கு அவர் போடுகிற இந்த விடுகதைகள் அவரது ‘நீதி போதனை வகுப்பில்‘ வழக்கமாகக் கேட்டவை தான். ஒரு கிளாஸில் அவர் கேட்டார். தச்சன் புடுக்கு தேய்வதேன், தாசி முலை பருப்பதேன்...?அவர் கேட்டதும் கிளாஸ்ஸே ஹேயென்று சிரித்தது.ஏல சிரிக்காதிங்கலே. நீங்கள்ளாம் படுக்காளிப் பயலுகள்ளே, என்றார். சொல்லிவிட்டு அமைதியாய் இருந்தார்.
சார் சார் விடை சொல்லுங்க சார் என்று கூச்சல்.. ஏல உங்களுக்கா தெரியாது, போங்கலே என்றார். தெரியாது சார் சொல்லுங்க சார் சொல்லுங்க சார், என்றோம். இன்னா இப்ப பாரு இவஞ் சொல்லீருவான் என்று கிளாஸ் லீடர் சம்முவத்தை எழுப்பி விட்டார். சம்முவம் இரண்டாவது வருடம் அதே வகுப்பில் படிக்கிறான். அவன் நாணிக் கோணி நின்றான். பாத்தியாலெ இவனுக்குத் தெரியும்லெ. ஏலெ, சொன்னாத்தான் உக்காரலாம், இல்லேன்னா நில்லு என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக் கொண்டார். கொஞ்ச நேரம் கழிச்சு கண்ணை முழிச்சு கேட்டார், ஏலெ சொன்னானாலே, மொத்த வகுப்புமே இல்ல சார், இல்ல சார் என்றது.சம்முவம் பட்டென்று ‘பல கை’ படுவதால் என்று சொன்னான். புரிந்தவர்கள் எல்லாம் பயங்கரமாக சிரித்தோம்.ஏல, கணபதியா பிள்ளை பையன் தானெ, வா நீ. ஒங்க ஐயாட்ட சொல்லுதேன்,நாளைக்கி போத்திக் கிளப்புக்கு வருவாருல்லா என்றார். சம்முவம் தலையைத் தொங்கப் போட்டபடி நின்றான்.சரி சரி வா அந்த வீசாறியெ எடுத்து வீசு, இங்க வந்து என்றார்.சம்முவம் அவர் நாற்காலிக்கு அருகில் நின்று கொண்டு விசிறியை வைத்து வீச ஆரம்பித்தான், சார் கண்ணை மூடி பொய்த் தூக்கம் ஆரம்பித்தார்
வேளார் ஒரு அகலச் சட்டியில் தண்ணீர் வைத்திருப்பார். வாங்குகிற காசை அதில் தான் போடுவார், மூங்கிலில் ஒரு கத்தி மாதிரி சிறிதாக வைத்திருப்பார். அதை அந்த தண்ணீரில் லேசாக முக்கி பிரபை மற்றும் பிள்ளையாரின் கிரீடங்களில் நுணுக்கமான கோடுகளிட்டு அழகாக்குவார்.காலையில் விலை சற்று அதிகமிருக்கும். நாம் கொண்டு போகிற பலகையில் பிள்ளையாரை வைத்து கொஞ்சம் களிமண்ணை அடியில் அண்டை கொடுத்தது போல் அப்பி வைப்பார். பிள்ளையார் சக்கென்று உட்கார்ந்து கொள்ளுவார்.இதுதான் சக்குப் பிள்ளையாரோ. ஏண்டா சக்குப் பிள்ளையார் மாதிரி உக்காந்திருக்கெ என்று பெருசுகள் கேலி செய்வது இதைத் தானோ என்று தோன்றும். இது தவிர ஒரு பித்தளை அச்சு வைத்திருப்பார்.அதில் எண்ணெய் தடவி, களி மண்ணை நன்றாக அமுக்கிச் செலுத்தி பலகையில் கவிழ்த்தி அச்சை உருகுவார். அந்தப் பிள்ளையார் ரொம்ப அழகாக இருக்கும்.அப்பா ஒரு வருடமாவது அதை வாங்கி வந்து பூஜை செய்ய மாட்டாரா என்றிருக்கும்.அப்பா, சாதாரணப் பிள்ளையாரை மட்டும் ஒரு வருடம் வாங்க சம்மதித்தார்.
நான் போணியில் தடவ, அடுக்களைக்குள் எண்ணெய் எடுக்கப் போனேன். அம்மா எதுக்கு என்று கேட்டு விட்டு,ச்சீ மூதேவி நீங்க அடுப்புக் கட்டி போட்ட லச்சணம் போதும்.போடா என்று விரட்டி விட்டாள். நான் போணியில் தண்ணீரைத் தடவி ஒரு மாதிரியா அச்சுப் போட்டு விட்டேன்.வெற்றிகரமாக வெயிலில் காயவைத்துவிட்டு, கை கால் கழுவி மத்தியானச் சாப்பாட்டுக்கு உட்கார்ந்தேன். காலையில் ஆரம்பித்தது மத்தியானம் ஆகியிருந்தது.கையெல்லாம் செம்மண் காவி. நக இடுக்குகளில் கொஞ்சம் மண். மண் வாசனையோடு சாப்பிட்டு விட்டு அவசர அவசரமாக புறவாசல் ஓடினேன். அடுப்புக் கட்டிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சைசில், தரையோடு உட்கார்ந்திருந்தது. நிறையத் தண்ணி விட்டுட்டியோ அம்பி கோபாலா என்று பின் வீட்டுக் கார, சரக்கு மாஸ்டர் சுப்பிரமணிய ஐயர் கேட்டார். புள்ளையார் புடிக்க கொரங்காயிடுத்தாடா என்று சிரித்தார். போம்யா என்று கத்தி விட்டு ஓடி வந்தேன்.
அந்த வருடம் பொங்கலுக்கு முன்பே பதினோராம் தேதியே பணத்தோட்டம் வந்து விட்டிருந்தது.அதனால் பொங்கலன்று எங்கும் போகவில்லை. திடீரென்று பாச்சா, தெருவுக்கு வந்தான்.அவனை நான் தான் அழைத்திருந்தேன். ஆனால் மறந்து விட்டேன்.எனக்கு தெரு நண்பர்களுடன் இருக்கையில் ஸ்கூல் நண்பர்கள் வந்தால் பிடிக்காது.இவர்கள் ஏதாவது கேலி செய்தால் என்ன செய்வது, என்று பயமாயிருக்கும்.(பாச்சாவை யாருல இது வெள்ளைப் பாச்சா என்றார்கள்). நாளைக்கு கிளாஸ் போனால் அவர்கள் சண்டைக்கு வருவார்கள். பாச்சா வீடு பேட்டை ரோடில் இருந்தது.ஆறாம் வகுப்பிலிருந்தே பழக்கம். பேட்டை ரோடு அப்போதெல்லாம் அழகாயிருக்கும். ப்ரிட்டிஷ் காலத்து சிமெண்ட் ரோடு, வழு வழுவென்று இருக்கும்.அதிலும் கம்பாநதி மண்டபம் தாண்டி விட்டால், ரெண்டு புறமும் மரமும் வயலும் குளிர்ச்சியாக இருக்கும்.
சின்ன வயசில் புதிதாக பொங்கலுக்கு வருகிற ஓலையில், காற்றாடி செய்து அதைக் கையில் பிடித்தவாறே, பேட்டை ரோட்டில் ஓடுகிற சுகமே தனி.அப்போதெல்லாம் அவ்வளவு பஸ்கள் கிடையாது. ஒரே ஒரு ஏழாம் நம்பர் பஸ் ஓடும்.எட்டாம் நம்பர் குறுக்குத் துறைக்குப் போகும்.அது பெரும் பாலும் ஒரு லொட லொட பஸ். ஏழாம் நமபர் பேட்டை எட்டாம் நம்பர் ஓட்டை என்று ஸ்கூல் வழியாகப் போகும் எட்டாம் நம்பர் பஸ்ஸைக் கேலி செய்வோம்.காற்றாடி என்று இல்லை. வட்டு கிடைத்தாலும், சைக்கிள் ரிம், சைக்கிள் டயர், எல்லாம் வட்டுகள், அதை உருட்டிக் கொண்டே ஓடுவது, ஒரு விளையாட்டு. அதிலும்,ப்ளைமவுத் (ப்ளிமத்) காரே கிடைத்த மாதிரிதான்.அதில் சோடா பாட்டிலை மூடியிருக்கும் சிப்பியை தகடு போல் சப்பி, நடுவில் ஓட்டை போட்டு,(ப்ளைமவுத்) வட்டில் அடித்து விட்டால், வண்டி ஜல் ஜல் என்று ஓடும். அது மட்டுமல்ல அடுத்த தெருவுக்கெல்லாம் வட்டை ஓட்டிக் கொண்டு போனால் இந்த ‘சோடாச் சிப்பி’ லைசென்ஸ் இருக்க வேண்டும். இல்லையென்றால் வட்டை பிடுங்கி வைத்துக் கொள்ளுவார்கள், அந்தத் தெரு பையன்கள்.
அப்படி ஒரு வட்டு எனக்கு அபூர்வமாக கிடைத்தது.ஆனால் அதில் சோடாச் சிப்பி அலங்காரம் செய்ய வழியில்லை. கொஞ்சம் ஒல்லியான வட்டு. ரொம்ப ஆசையாய் பேட்டை ரோட்டில் ஓட்டிக் கொண்டு போனேன். தடி வீரன் கோயில் தெருப் பையன்கள் பிடித்துக் கொண்டார்கள். எங்கலே லைசென்ஸ் என்று.நான் படு வேகமாக ஓடி கம்பாநதி மண்டபத்தருகே நின்று மூச்சிரைக்க திரும்பிப் பார்த்தேன்.இன்னும் அவர்கள் அந்த தெரு முனையிலேயே நின்று கொண்டிருந்தார்கள்.சுற்றிக் கொண்டு, பழனித் தெரு வழியாகப் போனால் அது, இதை விட சண்டியர்கள் நிறைந்த தெரு.இன்னக்கி வட்டு அம்பேல் என்று நினைத்த போது, பாச்சா வீடு பேட்டை ரோட்டில் என்று சொன்ன நினைவு வந்தது.
கம்பாநதி மண்டபம் தாண்டி, போய்க் கொண்டிருந்தேன், வீடு எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை. வயலாக இருந்தது. வயலுக்குள் கொஞ்சம் தள்ளி வீடு மாதிரியும் இல்லாமல், மண்டபம் மாதிரியும் இல்லாமல், ஒரு பெரிய கட்டிடமாய் ஒன்று இருந்தது.அதை விட்டால் தூரத்தில் பேட்டை தர்ஹாப் பள்ளி வாசல் தான்.
அந்த வீடு மாதிரியான, வீட்டின் முன் நின்று எட்டிப் பார்த்தேன்.பாச்சா மாதிரியே வெள்ளைப் பாச்சாவாக ஒரு பெண், என்ன வேணும் என்றாள். நான் பாச்சா என்று இழுத்தேன்....இருக்கான், உள்ள வாப்பா என்றாள்.நான் வட்டோடு உள்ளே வருவதைப் பார்த்துச் சிரித்தாள்.அவன், பின்னால் வயல் வெளிகளில் நின்றிருந்தான், அவன் அப்பாவுடன்.அங்கிருந்து கையைக் காண்பித்தான். அருகே வரும்படி. வயல் மாதிரி இல்லை. திரடாக இருந்தது.நல்ல புல். ஒரு ஈச்சமரம் இருந்தது. ஒரு சமாதி, பார்க்க பயமாக இருந்தது. சமாதி சாய்ந்து இருந்தது.அருகே இருந்த ஒரு மரம், பூவரசா, மஞ்சணத்தியா நினைவில்லை,அதன் வேர் அதைச் சாய்த்திருக்கும். அவன் நின்ற இடத்திற்குப் போனேன், கையில் வட்டு.அவன் அப்பா வாயில் வெற்றிலை அதக்கி இருந்தார்.திரட்டுக்கு கொஞ்சம் தள்ளி வழுக்கு ஓடை ஓடிக் கொண்டிருந்தது.கொஞ்சம் மேடாக இருந்த இடத்தில் பெரிய பனை ஓலையில் சொளவு மாதிரிக் கிடந்தது.பாச்சா கையில், ஒரு கயறு கட்டிய வாளி.அவன் அப்பா ஓலையை எடுத்து பதனமாக தள்ளி வைத்து விட்டு, வாளியை வாங்கி இன்னும் கவனமாக ஓலைக்கடியிலிருந்த குழியொன்றில் இறக்கி தண்ணீர் சேந்தி, ஒரு குடத்தில் விட்டார்.குடிக்க இது தான், என்றார் அப்பா.
ஊத்துத் தண்ணி, என்றான் பாச்சா.நான் அருகே போனேன், மண்ணச் சரிச்சிராம பாருங்க தம்பி என்றார் அவன் அப்பா.நல்ல களிமண் பதமாக இருந்தது, அந்த இடம்.ஒரு அழகான ஊற்று.சுற்றி கரம்பை வெட்டி வைத்து புல் அழகாக, வட்டமாக வளர்ந்திருந்தது.ஒரு சேலைத் துணியை ஊற்றின் சுவரையொட்டி வைத்திருந்தது. ஈரத்தில் அது சுவற்றோடு ஒட்டியிருந்தது.பளிங்கு மாதிரி தண்ணீர் சேலைக்கு மேலாகக் கிடந்தது, இரண்டு வாளி முங்கும் அளவுக்கு. நான் இன்னும் அருகே போய் எட்டிப் பார்க்க முயன்ற போது பாச்சா தடுத்து விட்டான்.அப்பா சத்தம் போடும் என்று.அவனிடம் வட்டு பற்றிய பயத்தைச் சொன்னேன்.சரி இங்க இருக்கட்டும். நான் எங்க அப்பா யாவாரத்துக்குப் போகும் போது கொண்டு வந்து தாரேன் என்றான். அவன் அப்பா ஓம வாட்டர், பேனா மை என்று தயாரித்து விற்கிறார்.வீட்டுக்குள் வந்த போது, சுவர்களிலெல்லாம் கீறலாய் இருந்தது.இதுக்குள்ளதான் ஒரு பாம்பு போச்சு நேத்து, வெளியெவே வரலை என்றான் பாச்சா.அருகே பாட்டில்களை கழுவிக் கொண்டிருந்தாள் அந்த அம்மாள். இன்னொரு வயதான பெண், குழிஅம்மி மாதிரி ஒன்றில் எதையோ அரைத்துக் கொண்டிருந்தாள். அதே போல் எங்கள் வீட்டில் மருந்து அரைக்கும் குழி அம்மி ஒன்று உண்டு.வட்டைப் பிரிய மனமில்லாமல் வந்தேன். தடி வீரன் கோவில் தெரு முக்கில் எந்தப் பையன்களையும் காணும்.
பாச்சாவுக்கு பாயாசம், எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தேன். அம்மா பொங்கல்ச் சோறு சப்பிடுவானா என்று கேட்டாள். சரி என்று தலையாட்டினான். விரும்பிச் சாப்பிட்டான்.எங்கள் வீட்டில் பொங்கலுக்கு, படையல் சாப்பாடு. வீட்டின் இறந்து போன கன்னிப் பெண்களை நினைத்து செய்வது. பெரும்பாலான வீடுகளில் அதை ஆடி மாசம் தனியே செய்வார்கள்.புளிக்குழம்பும் அவியலும் கேட்டு வாங்கிச் சாப்பிட்டான், பாச்சா .மறு நாள் ஸ்கூலுக்கு வந்ததும், வீட்டில் சத்தம் போட்டதாகச் சொன்னான். ஏன் என்றேன், படைத்ததை சாப்பிடக் கூடாது என்றான்.
அடுத்து இரண்டு மூன்று வகுப்புகளுக்கு, அவன் என் பிரிவில் இல்லை.திரும்ப டென்த் படிக்கிற போது என்னுடன் D செக்‌ஷனுக்கு வந்தான்.அவன் கையெழுத்து நன்றாக இருக்கும். கிளாஸில் யாரும் நோட்ஸ் கொடுத்தால் வேகமாக எழுதி விடுவான்.நாங்கள் ஓரிரு வரிகளை விட்டு விட்டு, அப்புறம் அவன் நோட்டைப் பார்த்து எழுதுவோம்.
அந்த வருஷம் திருநாளுக்கு அவன் வீட்டிற்கு சாப்பிடக் கூப்பிட்டான். கரிக்காத் தோப்பு சக்கரியாவும் கூப்பிட்டான். அவன் வீட்டில் பிரியாணி. இவன் வீட்டில், நெய்ச் சோறாம். இதுதான் முகத்தில் அடிக்காது., எங்க வீட்டுக்கெ வாரும் என்றான்.சக்கரியா வீடு ரொம்பத் தூரம். பாச்சா வீட்டுக்கு வருவதாகச் சொன்னேன்.மத்தியானம் வாரும் என்றிருந்தான்.
நான் போன போது பாச்சா வீட்டில் இல்லை.அவன் பாட்டி மட்டும் இருந்தாள்.வீடு இப்போது சுத்தமாக இருந்தது. இப்போது சில மோட்டார் செட்டுகளும், குழாய்களும் கிடந்தன. அவனது அப்பா இப்போது பம்ப் செட் ரிப்பேர் பார்க்கிறார் என்று சொல்லியிருந்தான். வயல் எல்லாம் அப்போதுதான் அறுவடை முடிந்திருந்தது.பேட்டைக் குளம் வரை சைக்கிளில் போய் வரலாமா என்று நினைத்த போது,கையில் இலையோடு காதர் சைக்கிளில் வந்தான். என் சைக்கிள்.18’’ கட்டை சைக்கிள்.வாசலில் நிறுத்தியிருந்தேன்.வந்ததுமே சிரித்த படியே கேட்டான், சைக்கிளுக்கு லைசென்ஸ் வச்சுருக்கேரா என்று. உண்மையிலேயே சைக்கிளுக்கு முனிசிபாலிட்டியில் இரண்டு ரூபாய் கட்டி லைசென்ஸ் எடுக்க வேண்டும், அப்போது. நானும் சிரித்தேன். ஆமா இப்ப அந்த ஊத்து இருக்கா என்று. இல்லை இல்லை, அதெல்லாம் மூடியாச்சு,இப்ப தண்ணிக்கி ரொம்ப கஷ்டம். பின்புறம் போக முடியாது, சுவரு வச்சுட்டாங்க. பள்ளிவாசல் கிணற்றிலிருந்துதான் எடுக்கோம். அங்கயே ஒரு ஆத்தண்ணி பைப்பு இருக்கு அதிலிருந்து குடிக்க எடுத்துக்கிடுதோம் என்றான்.கொஞ்சம் இருக்கேரா அப்பாவைக் கூட்டீட்டு வ்ந்திருதேன், பக்கத்தில எங்கயோ போனாரு என்று சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.எனக்கு நல்ல பசியாய் இருந்தது.அந்த வீட்டிற்கு ஒரு வெளிச்சுவர்.அடுத்தாற் போல் காலி இடம் அதில் தான் பம்பு, குழாய் இத்யாதிகள் கிடந்தன.அதேபோல் காலி இடம் மூன்று புறமும் கிடந்தது.
பாச்சா போனதும், வீட்டினுள் அந்த அம்மா வந்தாள்.கொஞ்சம் சங்கோஜத்துடன் வந்தாள்.என்னைக் கடந்து போய்,பக்கவாட்டு காலியிடத்தில் நின்று அவன் பாட்டியிடம் ஏதோ கேட்டாள்.அநேகமாய் தண்ணீர் கேட்டிருக்க வேண்டும்.அவள் சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள்.முடியாது போ, கண்ட இடத்தையும் நாற அடிக்காதெ, அந்தக் கரி முடிவான் எங்கயோ போய்ட்டான் போலருக்கு, நீயும் போறதுதானெ என்று சத்தம் போட்டாள். இன்னுமொரு பெண் குரல் கேட்டது.அதுவும் இவளை சத்தம் போட்டது. நான் என்ன வேலைக்காரியா, அப்படியே நில்லு, அவன் வந்து கழுவி விடுவான். என்று.. கொஞ்ச நேரத்தில் வார்த்தைகள் தடித்தது.நான் கிளம்பலாம் என்று நினைத்த சமயத்தில், அந்த அம்மாள், விறு விறுவென்று வந்தது, கூத்தியாளக் கூடவே வச்சுருக்காரு,நம்மளை அறுத்துவிடும்ன்னா கேக்காரா, நாமளும் புள்ளை படிப்பு முடியட்டுமேன்னு பாத்தா, குண்டி கழுவக் கூட விடமாட்டங்காளுக,தண்ணி சுமக்கறது பூரா நானு, பாக்கட்டுமே, 'பூ.. லை' ஊர் பூராவும்,என்று சொன்ன விருத்தியில், என் முன்னால் ஒரு தொட்டியில் கிடந்த அழுக்கு தண்ணீரை ஒரு செம்பில் கோதி, ரோட்டுக்கு வந்து கொஞ்சம் தள்ளி ஒரு மரத்தருகே போய், திரும்பிக் கொண்டு கழுவ ஆரம்பித்தாள். சைக்கிளை எடுக்க வந்தவனுக்கு அவளின் வெள்ளைப் பின்புறம் தெரிந்தது. தலையைக் கவிழ்ந்து கொண்டேன்.பாச்சாவின் ஏம் வந்துட்டேருவே நேற்று, என்ற மறு நாள்க் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.

2 comments:

rajasundararajan said...

Dear Kalapria,

Kaalil cheruppu uruvuvathu aen?
KannippeN thaLukki nadappathu aen?

Ans: kuththuvaar aRRu.

I learned this also, ofcourse, from a Thirunelveli boy.

- Rajasundararajan

kalapria said...

it is interesting again to hear from you. some relations ever inspires
-kalapria

Visitors