Tuesday, March 24, 2009

கவி வரி மீறி....


`பதிவுகள்’கவிதைப் பட்டறை பற்றிய பிரஸ்தாபம் ஆரம்பித்ததும் அல்லது முன்னேற்பாடுகளைத் தொடங்கியதும் எப்படித்தான் தெரியுமோ, முதல் தொலை பேசி அழைப்பு அப்பாஸிடம் இருந்துதான் வரும். அண்ணாச்சி, கூட்டம் பிளான் பண்ணிருக்கீங்களாம்லா, பிரமாதமா செஞ்சுருவோம் அண்ணாச்சி,இந்தத் தடவை பேப்பர்களையெல்லாம் முதல்லயே வாங்கிருங்க அண்ணாச்சி, என்று குறைந்தது கால் மணி நேராமாவது பேசுவார்.பல யோசனைகளை சொல்லுவார்.ரெண்டு நாள் முன்னாலேயே வந்துருதேன் அண்ணாச்சி என்பார்.ஆனால் அன்று காலையில் தான் வருவார். எனக்கு பதட்டமும், நல்ல படியா நடக்கனுமே, எல்லாரும் வரணுமே என்கிற பயமும் தொற்றிக் கொள்ள ஆரம்பிக்கிற சமயத்தில் முருகேச பண்டியனும் அப்பாஸும் இணைந்துதான் அந்த பயத்தை திசை திருப்புவார்கள். அதற்குள் நிகழ்வுகள் தன் போக்கில் தொடங்கி விடும்.கடைசிப் பதிவுகளுக்கு (2007) மட்டும்தான் அவர் வரவில்லை.
அவர் பேச்சுகள் எதிராளியை சற்று திணற வைத்துவிடும். வார்த்தைகள் மீது அவருக்கு அதீத பிரமை இருந்தது என்று சொல்ல வேண்டும். பேச்சு, தொடர்பில்லாத மாதிரி இருக்கும்.கவிதையை விட கவிதையியலைக் கொண்டாடுபவர்.அவருடன் நன்கு பேசிப் பழகிவிட்ட எனக்கும் முருகேச பாண்டியன் போன்றவர்களுக்கும், அவரை நன்றாகவே புரிந்து கொள்ள முடியும்.விவாதத்தின் போக்கையே மாற்றி விடக் கூடிய ஒன்றிரண்டு வார்த்தைகளைச் சொல்லுவார்.`எழுத்தை வெறும் நிறமாக மட்டுமே பாருங்கங்கேன், அப்படி ஒரு டயலாக் வரட்டும்ங்கேன்....’ என்று சொல்லுவார்.அவ்வளவுதான் பேசிக் கொண்டிருப்பவன், ஒன்று நீண்ட மௌனத்திற்குள் போவான் அல்லது ஆமா என்று தலையை ஆட்டி விட்டு, தன் போக்கிலேயே பேசுவான்.
சொல் வழியானதுதான் சிந்தனை. ஆனால் அப்பாஸுக்கு அது பற்றி அப்ஸெஷனோ என்று எண்ணக் கூடிய அளவுக்கு அவர் யோசிப்பவர். அவரது கவிதைகள் அதிகமும், ஒரு கலைந்த மொழியாடலின் கட்டமைப்பாகவே இருக்கும்.வெவ்வேறு திசைகளிலிருந்து ஒரிடத்தில் குவிகிற ஒரு சார்பாக( mapping or functin) கவி வரிகளைப் படைப்பார். ஆனால் அது குவிகிற இடம் ஒரு கண்ணாடி போன்ற தளமாக இருக்கும். வந்த வேகத்தில் அவை பிரதிபலித்து பல பரிமாணம் கொண்டு விடும்.
இடையில்
வட்டமிட்டும் பறக்கிறது கழுகு.
கண்களில் தப்பித்திரியும்
வர்ணங்களோடு குஞ்சுகள்
பறத்தலுக்கும், இரை தேடலுக்கும்
இடையில் விழித்துக் கிடக்கிறது
வர்ணம் தெரிந்த அதிசய நான் ஒன்று.
(வயலட் நிற பூமி)

அப்பாஸ் ஐந்து தொகுதிகள் வரை வெளியிட்டிருக்கிறார்.எல்லாமே சற்று ஒல்லியான தொகுப்புகள்தான். ஆனால் விஷய கனம் மிக்கவை.அவர் தன் குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்திருப்பவர். நாங்கள் இரண்டு பேரும் அநியாயத்திற்கு குழந்தைகள் பற்றி ப்ரியத்தின் காரணமாகப் பயப்படுகிறவர்கள்.இந்த மனோவியாதி குறித்து மனதாரப் பங்கிட்டுக் கொண்டுமிருக்கிறோம்.(அப்படியும் வியாதி குறைந்த பாடில்லை)
தன் கடைசி நேரங்களில் அவரின் வழக்கத்திற்கு விரோதமாக அவர் தன் பேச்சுக்களை சுருக்கிக் கொண்டார் என்றே சொல்லவேண்டும்.கல கலப்பும் மர்மமுமான பல இரவுகளை மகிழ்ச்சியாக, நானும் அவரும் முருகேச பாண்டியனும் பூபதியும் கழித்திருக்கிறோம்.அவரது ஒரு கவிதை வரி எனக்கு நினைவுக்கு வருகிறது.அவர் பாஷையில் சொன்னால் பாட்டு வரி-அவர், கவிதை என்பதை விட பாட்டு என்றே எப்போதும் பேச்சில் குறிப்பிடுவார்

``யாவரையும் ஒரு நொடியில்
கடந்து செல்லும் வெள்ளைப் பறவை.
நான். நீ...’’

1 comment:

யாத்ரா said...

மனம் கனத்துப் போயிருக்கிறது, ஏன் இப்படியெல்லாம் ஆகிறது

Visitors