Sunday, December 21, 2008

புற்றில் உறையும் பாம்புகள்......





தூத்துக்குடியில், வேலையில் சேர்ந்து ஒரு மாதம் போல் ஆகி விட்டது. சிறு வயதில் மூன்றோ நாலோ படிக்கிற போது பள்ளிக் கூடத்தில் உல்லாசப் பயணத்தின் போது வந்தது. அப்பாவிற்கு தனியே அனுப்ப பயம்.அப்பாவும் அம்மாவும் என்னுடனும் எனக்கு ஒரு வகுப்பு கூடப் படிக்கும் அக்காவுடனும் வந்திருந்தார்கள்.வீடு திரும்புகிறதிற்கு முந்தின சாயந்தரம் பீச்சில் விளையாடின நினைவு. முத்துச் சிப்பி வியாபாரம் படு சுறு சுறுப்பாக நடந்து கொண்டிருந்தது மீன் மாதிரி, முத்துச் சிப்பியை குவித்துப் போட்டு விற்றுக் கொண்டிருந்தர்கள். அப்பா நாலைந்து சிப்பிகள் வாங்கினார்.வாங்கின பின்பு, அறுத்துக் காண்பித்தார்கள். ஏதோ ஒன்றில் ஓமியோபதி மாத்திரை சைஸுக்கு ஒரு முத்து இருந்த நினைவு. அது கூட நல்ல முத்து இல்லை என்றார்கள். பீச்ச்சில் மாணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தோம். ஊளைக்காது சுந்தரம், மண்ணில் பெரிய குழியாகத் தோண்டி,காலைத் தொடை வரை புதைத்துக் கொள்வான். நன்றாக எல்லாரும், காலைச் சுற்றியுள்ள மணலைத் தட்டி கெட்டியாக்கிய பிறகு `ஜெய் சீத்தா’..என்று சத்தமிட்டபடியே காலை உருகி விடுவான். அப்போது `ஸ்ரீ ராம பக்த ஹனுமான்’ படம் வந்திருந்த நேரம்.இந்திப் படம். தமிழில் டப் செய்யபட்டு வந்தது. பஸ்ந்த் பிக்சர்ஸ், ஹோமி வாடியா தயாரிப்பு. பாபுபாய் மிஸ்திரி ஒளிப்பதிவு. தந்திரக் காட்சிகளுக்கு அப்போது அவர்தான் பிரபலம். அப்புறம் ரவிகாந்த் நிகாய்ச்.அதில் ஹனுமான் நெஞ்சைக் கிழித்து சீதாராமரைக் காண்பிக்கிற காட்சி பிரபலம்.அந்தப் பகுதி கலரில்.
அப்பாவும் அம்மாவும் இதேபோல் மணிமுத்தாறு அணைக்கு பள்ளிக்கூடத்தில் போன போது எங்களுடன் வந்தார்கள். அம்மா வெளியூரெல்லாம் போனதேயில்லை.பள்ளிக்கூட ஆசிரியர்களும் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். அவர்களுக்கு இது ஒரு வகையில் பிடித்தமானதாகக் கூட இருந்தது.அப்பா தாராளமாகச் செலவு செய்யக் கூடியவர் என்பது ஒரு காரணம்.அணைக் கட்டில் வேலை பார்க்கும் இஞ்சினியர் அப்பாவுக்குப் பழக்கம். அதனால் எல்லாப் பிள்ளைகளையும், கசிவு நீர் விழுந்து ஓடும் ஒரு குகை வழியாக அழைத்துச் சென்றது, இன்னும் கூட`அம்மாடியோவ்’ என்று சொல்ல வைக்கிற குளிராய் உணர்ந்த அனுபவம்.. ஊளைக்காது சுந்தரம் குகை நெடுகவும் அண்டாக் கா கசம்...என்று சொல்லிக் கொண்டே வந்தான்.குகையின் கடைசியில் அணையிலிருந்து கசியும் தண்ணீர் ஒரு சுவரை ஒட்டி அருவி மாதிரி.அகலமாக விழுந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும்தான் வாயடைத்து நின்றான்.
அவன் பயப்படவே மாட்டான். ஸ்கூலுக்குப் பின்னால் ஓடும் வாய்க்காலில் ஒரு பாம்பைக் காண விட மாட்டான். கையாலேயே பிடித்து தலைக்கு மேலே கரகர வென்று சுற்றி தரையில் துவைப்பது போல் நாலு அடி அடித்து தூக்கி வீசுவான்.ஸ்கூலுக்குப் பின்னாலிருந்த ஒரு மாமரப் பொந்தில் பாம்பு ஒளிந்திருந்தது.வால் மட்டும் தெரிந்தது மாமரம் வாத்தியார்கள் உபயோகப் படுத்துகிற கக்கூஸ் பக்கத்தில் இருந்தது.அங்கே பையன்கள் போக மாட்டார்கள்.நாலாம் வகுப்பு கோயில் பிள்ளை சார் தான் அதைப் பார்த்தது.உடனேயே ஊளைக் காது சுந்தரத்தைக் கூப்பிடுலே என்று அங்கிருந்தே சத்தம் கொடுத்தார். அவன் காதிலிருந்து எப்போதும் ஊளை வடிந்துகொண்டே இருக்கும்.பஞ்சு வைத்துக் கொண்டு வரவிட்டால், அவன் கடைசியில் தனியாக உட்கார்ந்திருப்பான்.இல்லையென்றால் முட்டங்கால் போட்டு நிற்பான்.அன்றும் பஞ்சு வைத்துக் கொண்டு வராததால் முழங்காலில் நின்று கொண்டிருந்தான்.அவனை பாமப்டிக்க கூப்பிடுவதாகச் சொன்னதும் இதாண்டா சான்ஸுன்னு, கிளாஸ் சார் அனுமதிக்கு கூட காத்திராமல் ஓடினான். கொஞ்ச நேரத்தில் அநேமாக பள்ளிக் கூடமே, ரீசஸ் விட்டு அங்கே திரண்டு விட்டது மாமரத்தடியில். சுந்தரம் வாலைப் பிடித்து ரொம்ப நேரமாகப் போராடினாலும் அது வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இழுத்த்க் கொண்டிருந்தது. நல்ல முரடு.முதலி பிடித்த பிடியை அவன் விடவே இல்லை. ஊளை வழிந்து தோளுக்கே வந்து விட்டது. பெரும்பாலோர் அதைக் கவனிக்கவே இல்லை. ஒரு வழியாக பாம்பை இழுத்து விட்டான்.அது ரொம்பப் பெருசு...அவனை விட உயரம். தன் உயரத்துக்குப் பெரிசை தொட்ரக் கூடாதுல என்பான்.
``ஞாயித்துக்கிழமை பாம்பு” சாகாமப் போகாதும்பான்.அதாவது ஞாயித்துக் கிழமை ஒரு பாம்பு மனுஷங்க கண்ணில பட்டுட்டா அது தப்ப முடியாது. அடி பட்டுத் தப்பிபோன பாம்பு பழி வாங்காமப் போகாது என்று பாம்புக் கதைகள் நிறைய சொல்லுவான். மகாதேவி படத்துல வர்ற காமுகர் நெஞ்சில் நீதியில்லை(அவன் பாடறது பாம்புகர் நெஞ்சில் நீதியில்லை) பாட்டையும், கணவனே கண் கண்ட தெய்வம் படத்தையும் பத்தி கண் விரியப் பேசுவான் .மத்தப்படி அவன் கண் சற்று சிறிசாத்தான் இருக்கும்.
பாம்பு பெரிசா இருந்தது. அவன் தலைக்கு மேல் தூக்கி சுத்த முடியாம கஷ்டப் பட்டான்.அவன் சுத்த ஆரம்பிச்சதுமே எல்லாரும் தள்ளிப் போங்கலே என்று நாலாப்பு கோயில் பிள்ளை சார் கத்த ஆரர்ம்பிச்சுட்டார்.சுந்தரம் பிடியை விட முடியாமலலும் கிறு கிறுவென சுத்த முடியாமலும் தெவங்குவது தெரிந்தது ஏல. விட்டுருல, விட்டுருல என்று சார்வாமார்களெல்லாம் கத்தினாங்க.எங்க விட? அது ஒரு நிமிஷத்துல அவன் கையைச் சுத்திக்கிட்டு.பள்ளிக் கூடத்தை பேட்டை ரோட்டில் இருந்து நன்றாகப் பார்க்கலாம். ரோடு சற்று உயரம். ஸ்கூல் சற்றுப் பள்ளத்திலிருக்கும். ரோட்டில் சனங்க வேற கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. சுந்தரம் `யய்யா யம்மா’ என்று கத்த ஆரம்பித்து விட்டான்.ஆனா கைய்ய மட்டும் நீட்டமா வச்சுருக்கான். பாமபு நெருக்கமா வயர் சுத்தின மாதிரி கையைச் சுத்தி தோள், அக்குள் வரைக்கும் சுத்தி நிக்கி.தண்ணிப் பாம்பு மாதிரி இல்லை.யாரோ எட்டடி விரிசுல்லா என்று சொல்வது கேட்டது.
எப்பவும் பெரிய கோயில் யானை பேட்டை ரோடு வழியாப் போச்சுன்னா ஸ்கூலில் நிற்கிற முள் முருங்கை(கல்யாண முருங்கை) மரத்தில இருந்து இலை பறிச்சு திங்காமப் போகாது. யானைக்கு அது ரொம்ப பிரியமாம். ரோட்டில இருந்தே எட்டிப் பறிச்சுரும். அநேகமா அது காலையில் ரீசஸ் விடற நேரத்துக்குத் தான் வரும். ஒண்ணுக்கு இருக்கப் போற நாங்க அதை ஒரு வேடிக்கையா அப்பப்ப பார்ப்போம்.அன்றும் யானை, குழை திங்க வந்தது. யானைக்காரர் மலையாளத்து ஆள். ஒல்லியோ ஒல்லியா இருப்பார் பெரிய வெள்ளை மீசை.சத்தம் நல்லாருக்கும். ``ச்சல், ஆனை, ஆனை, சலாம் அவ்டுதோ’’என்று சொன்ன பேச்சுக்கெல்லம் யானை ஒழுங்கா கேக்கும். பொதுவா அவர் யானை மேல் உக்காந்து வர மாட்டாரு.காதை லேசாகப் பிடித்தபடிபக்கத்திலேயே நடந்து வருவார். கையில் இரும்புப் பூண் போட்ட கனத்த பிரம்பு. இன்னொரு பாகன் தான் யானை மேல் உக்காந்திருப்பான்அவன் கால் ``சத்தியக் கயிற்றி’’னுள் நுழைந்த வண்ணம் இருக்கும். யானையின் கழுத்தைச் சுற்றி நாலைந்து வரியாகக் கட்டியிருப்பதுதான் சத்தியக் கயிறாம். அதுக்கு கட்டுப்பட்டுத்தான் யானை மனுஷங்க சொல்றதைக்கேக்குமாம். .யானை கோயில்ல நிக்கும் போது.. வடக்குப் பிரகாரத்துலதான் கட்ட்பட்டிருக்கும். அதான் அதுக்கு கொட்டாரம்.அந்த சமயங்களில் அவர் அருகில் சிக்குப் பலகையில் பெரிய புத்தகம் ஒன்னு இருக்கும், கிட்டத்தட்ட நியூஸ் பேப்பர் அளவு பெரிசு. அதில மலையாள மகாபாரதம் எழுதியிருக்கும்.(இதெல்லாம் பின்னால தெரிஞ்ச தகவல்)அதை சத்தம் போட்டு வாசிச்சிகிட்டு இருப்பார்.யாராவது கிழடு கட்டைகள் கேட்டுக் கொண்டிருக்கும்அவருக்கென்று ஒரு பெரிய பெட்டாப் பெட்டி இருக்கும்.அதில் யானைக்கு உரிய துணி முக படாம், நாமக்கட்டி, தொரட்டி எல்லாம் இருக்கும்.அதில் `யானை வாகடம்’ வச்சுருப்பார்.1970 வாக்கில் ஒரு தரம் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த நேரம்,தின்சரி கோயிலைச் சுத்தறதும் உண்டு.அதுவும் கூட்டம் எதுவில்லாமல் இருக்கிற அகாலமான நேரம் தான் பிடுக்கும். அப்ப சில சன்னதிகள் கிட்டப் போகவே பயமாயிருக்கும். கைலாசநாதர் சன்னதி நல்ல உயரத்தில் இருக்கும்.படியேறித்தான் போகவேண்டும். கீழே ராவணன் மலையை அசைக்கிற மாதிரி ஒரு சுதைச் சிற்பம்.அதில் கை நரம்பையே வீணை நரம்பாக்கி இசைக்கிற மாதிரி இருக்கும் ரொம்ப அழகான சிலை. அதற்கு மேல்த்தான் கைலாசநாதர். யாரும் அதிகம் போகாத சன்னதி. நான் சில சமயம் போவேன், சற்று பயத்தோடு.அப்போது யானைக்காரரும் அவர் பெட்டாப்பெட்டி சமாசாரங்களூம் அறிமுகம்.
யானைக்காரர் தான், தேரோட்டத்தின் போது தேரின் பின்னால் அமர்ந்து பெரிய முரசை அறைந்து கொண்டு வருவார்.அந்த ஒல்லியான தேகத்தில் அப்படி என்ன வலுவிருக்கும் என்று ஆச்ச்சரியமாக இருக்கும். அந்த முரசொலி கேட்டுத்தான் முன்னால் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள்.
சுந்தரம் பம்போடு போராடிக் கொண்டிருந்த போது யானைக் காரர் பள்ளிக் கூடத்துக்குள் வேகமாக வந்து சுந்தரம் அருகே போனார். அவர ரோட்டிலிருந்து அவ்வளவையும் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார்.வந்த வேகத்தில் மடியிலிருந்து நீளமான கத்தியை தோல் உறைக்குளிருந்து எடுத்து சுந்தரத்தின் கையைப் பிடித்து தோளிலிருந்து ஒரே கீறாகக் கீறினார். பாம்பு துண்டு துண்டாக கீழே விழுந்து துடிக்க ஆரம்பித்தது.சுந்தரத்தின் கை, வெள்ளைச் சட்டையெல்லாம் ரத்தம். அவன் மயங்கிக் கீழே விழுந்தான்.அவர் மேலும், அவரது மல்ச் சட்டையிலும் ரத்தம்.எனக்கு பயத்தில் அநேகமாக் மூத்திரம் கசிந்து விட்டது.அவர் வாய்க்காலில் இறங்கி கத்தி, மேல் காலெல்லாம் கழுவிக் கொண்டு வந்த வேகத்திலேயே யானையை நோக்கிப் போய் விட்டார்.கோயில் பிள்ளை சாருக்கு போன உயிர் திரும்பி வந்தது.சுந்தரத்தை டாக்டரிடம் தூக்கிப் போனார்கள்.கத்தி ஒன்றும் ஆழமாகப் படவில்லை.அதனால் ஏதோ ஒரு களிம்பைத் தடவிக்கொண்டு மறு நாளே ஸ்கூலுக்கு வந்து விட்டான். பனியன் மட்டும் போட்டிருந்தான், சீனிமிட்டாய்க் (ரோஸ்)கலர் பனியன்.அன்று அவன் பக்கத்தில் உட்கார எல்லாருக்கும் போட்டி.எங்க கிளாஸ் பால்த்துரை சார் மட்டும் ஏம்ல அவரு கூப்பிட்டாருன்னு போன, `ஏ’ கிளாஸ் சார்வான்னா கொம்பால முளைச்சிருக்கு. எங்க கிளாஸ் நாலாப்பு `பி’(நான்காம் வகுப்பு `பி’).

அதே பகல் பதினோரு மணி ரீசஸ் விடற நேரம். யாரோ ஒரு பொம்பளைஆள் கிளாஸுக்கு வெளியே நிண்ணுக்கிட்டிருந்தது.பால்த்துரை சார் என்னம்மா வேணும்ன்னு கேட்டதுக்கு கூட பதில் சொல்லலை. என் பக்கத்திலிருந்த சங்கர நாராயணன் சொன்னான், அவனுக்கு சுந்தரம் தெருதான்.நாறாயணன்(இப்படித்தான் அவன் எழுதுவான்) பலே ஆசாமி. ஆள் தான் நரம்பு மாதிரி இருப்பான்.இது சுந்தரத்தோட அம்மா என்று மெதுவாகச் சொன்னான். அதற்குள் பெல் அடித்துவிட எல்லாரும் வெளியே வந்தோம். அந்த அம்மா சுந்தரத்தைக் கட்டிப் பிடிச்சு கண்ணீர் விட்டாள். ஒன்றுமே பேசிய மாதிரி தெரியவில்லை. சுந்தரம் முதலில் போ, போ என்று அவள் பிடியிலிருந்து நழுவி வந்தான்.யாரும் ஒண்ணுக்குப் போகாமல் அவர்கள் இருவரையுமே பார்த்துக் கொண்டிருந்தோம்.அப்புறம் அவள் தந்த காசை வாங்கிக் கொண்டான்.ஒரு சின்னப் பொட்டலமும் கொடுத்தாள். அப்பாட்ட சொல்லீராத என்று அவள் கெஞ்சினாள்.ரீஸஸ் முடிந்து பெல் அடித்தது.அவள் அழுத படியே நகர்ந்தாள். சத்தம் முழுமையாக ஓயாமல் கிளாஸ் ஆரம்பிச்சது.
சங்கரநாறாயணன் சொன்னான்.அவங்க அப்பா, அவனோட அம்மாவைத் தள்ளி வச்சிருக்காரு.ஏம்ல என்றேன்.அவளை ஒரு பெட்டிக் கடைக்காரன் கெடுத்துட்டாம்லாலே என்றான். எனக்கு புரிந்த மாதிரியும் இருந்தது புரியவும் இல்லை.சுந்தரத்தோட அப்பாவும் சின்னக் கடை வச்சிருக்காரு. அதில் இருந்துதான் சுந்தரம், எனக்கு மதுரைவீரன்-எம்ஜியார் பானுமதி- படமும் (நேரு படம் கேட்டு அது காலியாகி விட்டதென்று) நேருவும் புல்கானினும் கை குலுக்குகிற ஒரு படமும் அரையணாவுக்கு வாங்கித் தந்திருந்தான். முழுவதும் கேட்கும் முன் சத்தம் அடங்கி கிளாஸ் ஆரம்பித்து விட்டது.சுந்தரம் அருகில்தான் இருந்தான்.
பொட்டலத்தைப் பிரித்து தரையில் எதையோ தேய்த்துக் கொண்டிருந்தான்.அப்புறம் அதையே நெற்றியில் பூசிக் கொண்டான்.என்னிடமும் நாறாயணிடமும் ஏல பூசிக்கிடுங்கலே பாம்பு அண்டாது என்றான்.நான் லேசாகத் தொட்டு பூசிக் கொண்டேன். நான் கேட்கும் முன்னேயே சொன்னான். சங்கரன் கோயில் புத்து மருந்துல இது.

Visitors