Saturday, September 27, 2008

ஒரு பத்தியில் எழுதுக

அழகான கையெழுத்தில் அந்தக் கேள்விகளுக்குப்பதில் எழுதி இருந்தேன். முதல்ப் பக்கத்தில் இரண்டு பதில்களும் புதிதாய் ஒரு டியூஷன் வாத்தியார் தயாரித்துக் கொடுத்தவை, அவரே நன்கு மனப்பாடம் செய்ய வைத்து எழுதிப் பார்த்ததுதான். நிறைய மார்க் (மதிப்பெண்) வரும் வி.எஸ். கிருஷ்ணனை இந்த முறை பீட் அடித்து விடலாம் என்று நினைத்திருந்தேன். பரீக்ஷை லீவு முடிஞ்சு முத நாள் பேப்பரைக் கொடுத்ததும் பார்த்தால் முதல்ப் பக்கம் முழுக்க சிவப்பு மையால் ஒரு குறுக்குக் கோடு மட்டும் போட்டு வைத்திருந்தது. மார்க் போடவே இல்லை. அது அரையாண்டுத் தேர்வு என்பதால் அடுத்த கிளாஸ் சார் தான் திருத்துவார். அதனால் கிளாஸ் வாத்தியார் மேல குத்தம் சொல்ல முடியாது . இருந்தாலும் அவர்ட்ட போய் கேட்டேன். ”ஏல பரமசிவம் பிள்ளை தான்ல்ல திருத்திருக்காரு போய் அவர்ட்ட கேட்டுட்டு வால” என்று அனுப்பினார். அவரை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் ரொம்ப சீனியர். அப்பாவுக்குக் கூட நல்ல நெருக்கம். அவர் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார்.. ஆங்கிலமும் சமூகவியலும் எடுப்பார்.பெரும்பாலும் கோபப் படாமல் வயசின் தன்மைக்கேற்ப சற்று நிதானமாகவே வகுப்புகளை நடத்துவார். எங்களுக்கு நீதி போதனை வகுப்புக்கு வருவார்.வெள்ளிக்கிழமை காலை கடைசி வகுப்பு. பசியும் தூக்கமுமாய்த்தான் அவர் வருவார்.
நாங்க அவரிடம் ஒவ்வொரு சமயமும் மாரல் கிளாஸில கதை கேட்டு தொந்தரவு பண்ணுவோம். ஏல சும்மாருங்கலே என்று தூங்கறதும் தெரியாம வகுப்பறையில் சத்தமும் கிளம்பிராமப் பாத்துகிறதில் கில்லாடி. நாங்க, சார் கதை சொல்லுங்க கதை சொல்லுங்க என்று நச்சரிப்போம்.ஏல பேசாம இருங்கலே....என்று சொல்லி விட்டு அசந்தாப்பல நாற்காலியில் சாய்ந்து கொள்ளுவார்.இல்லையென்றால் யார் கதை கேட்கிறோமோ அவனைப் பிடித்துக்கொள்ளுவார். ஏல நீ முதல்ல ஒரு கதை சொல்லுலெ என்பார் இல்லைன்னா நீ ஒரு பாட்டு படிலெ என்பார் அவன் நாணிக் கோணி உட்கார்ந்து விடுவான்.
நான் கையில் பேப்பருடன் வகுப்பு வாசலில் நிற்பதைப் பர்த்ததும் உள்ளே கூப்பிட்டார்.நான் ”சார் இதுக்கு மார்க்கே போடலை” என்றதும் பேப்பரைத்தூக்கி மூஞ்சியில் விட்டெறிந்து விட்டு போயி உங்க வாத்தியாரையே கேளுல என்று சத்தம் போடவும் அந்த கிளாஸ் பசங்க சிரிக்கவும் சரியா இருந்தது.கேவலாமாப் போச்சு எனக்கு. ஏதோ கனவு கண்டா வெளில சொல்லக் கூடாதுங்கற மாதிரி கிளாஸ்ல வந்து உக்காந்துகிட்டேன். எங்க கிளாஸ் வாத்தியாரும் ஒன்னும் கேட்கலை.எனக்கு ஞாபகமே இல்லை, அன்னிக்கி வெள்ளிகிழமைன்னு. காலையில கடேசிப் பீரியடுக்கு பரமசிவம் பிள்ளை சார்வா வந்தாங்க.எனக்குன்னா எரிச்சலும் கோவமும். இன்ன மட்டும்ன்னு இல்ல.கிளாஸ் அமைதியாயிருந்தது....சார் கண்ணையும் தலையையும் அசைச்சு இந்தா அவனைப் பாருங்கல என்று என்னை நோக்கி சைகையாலேயே சொன்னார்.கிளாஸ் லேசாச் சிரிச்சுது. ஏல நீ இன்னக்கி ஒரு கதை சொல்லு இல்லேன்னா ஒரு பாட்டு பாடு என்றார்.எனக்கு அழுகை வராத குறைதான். பேசாம எந்திரிச்சு நின்னுகிட்டே இருந்தேன்.ஏல இங்கிலீஷ் பேப்பரை எடுத்துக் கிட்டு இங்க வாலேன்னார் நான் அருகே போனேன். ஏல என்னலே கேள்வியில கேட்டிருக்கு......ரைட் எ பேராக்ராஃப் அபௌட் ஸிட்னி கார்ட்டன்னு தானல கேட்டிருக்கு. நீ இரண்டா எழுதியிருக்கியல. அர்த்தமிருக்கால....அதான் ஒரே கோடா போட்டுட்டேன். முழுப் பரீக்ஷை வரைக்கும் இதை மறக்க மாட்டேல்லா என்றார். எனக்கு மன்சு சமாதனமாகலை... சரி போனாப் போது....அஞ்சு மார்க் வச்சுக்க அழகா வேற எழுதியிருக்கே என்று தடியான பிரெஸிடெண்ட் பேனாவை எடுத்து அஞ்சு அஞ்சும் பத்து மார்க் போட்டார். அப்பவும் வி எஸ்கிருஷ்ணனை பீட் பண்ண முடியல(அவனை யாருமே பீட் பண்ணலை 600 க்கு 516 மார்க் வாங்கியிருந்தான். நான் 378 மட்டும்)அதை இன்றும் மறக்கலை குழந்தைகளுக்கும் சொல்லுகிறேன் எ பேரக்ராஃப்ன்னா ஒரு பேராதான் எழுதனும்ன்னு.

ஞாவகமா அடுத்த பேராவுக்குப் போயிர்றேன்....இது வேற மாதிரி விஷயம்.....கொஞ்சம் உற்சாகம் வந்துது. ஏல இப்ப சுகமா இருக்கா என்றார்.பரமசிவம்பிள்ளை சார். கேட்ட உடனேயே இன்னொரு கேள்வி கேட்டார்உலகத்திலேயேஎதுசுகம்ல என்று.சரீ கதை ஏதோ ஆரம்பமாகப் போகுது என்று தோன்றி உற்சாகம் தொற்றத் தொடங்கியது வகுப்புக்குள். ராஜா கிருஷ்ண தேவராய மஹாராஜாவுக்கு இப்படி ஒரு கேள்வி தோனுச்சு.சபையோரைப் பார்த்துக் கேட்டார் ஆமா உலகத்திலேயே எது ரொம்ப சுகமான விஷயம்ன்னு ஒருத்தர் கடவுளை துதித்துக் கொண்டு இருப்பதே சுகம்ன்னார். அப்பாஜி ஏழையின் சிரிப்பு தான் சுகமான விஷயம்ன்னார்...இன்னொரு மந்திரி நல்ல காவியங்களைப் படிக்கிறது சுகம்ன்னார் இன்னொரு புலவர் நல்ல நிலாவில அழகான அப்ஸரஸ் கூட சப்ர மஞ்சக் கூடத்துல சயனம் பண்றது சுகமோ சுகம்ன்னார்.....தெனாலி ராமன் முறை வந்தது.......அவன் அமைதியாயிருந்தான்.....அவன் சத்தம் போடாம இருந்தா ஏதோ ...வில்லங்கமாச் சொல்லப் போறான்னு எல்லாருக்கும் தோனுச்சுல...அது மாதிரியிலே அவன், ராசா திரும்பத் திரும்ப கேட்டதும் சொன்னாம் பாரு. சபையே மூக்கைப் பொத்திக்கிட்டு.....அவன் சொன்னான் ராஜா, உலகத்திலேயே கொல்லைக்கிப் போறதுதான் சுகம் அப்படீன்னு...ராஜாவுக்கு கோவம் சண்டாளமா வந்துட்டு....இந்த மாதிரி பேசறத நீ விடவே மாட்டியா என்று சத்தம் போட்டார். இல்ல ராசா எனக்கு கொஞ்சம் அவகாசம் தாங்க...ன்னு சொல்லீட்டு சபையிடம் மன்னிப்பு கேட்டுட்டு பின்னாலயே நகர்ந்து வெளியே போய்ட்டான்.தெனாலி ராமன் பெரிய ஆளுலே....சபைக்கே வரலை கொஞ்ச நாளைக்கி. ராஜாவுக்கு தேட்டம் கொடுத்துட்டு ...அவனைக் கூட்டியாங்கலே என்று ஆணை போட்டார். அவனும் வந்தான்...வரும் போதே ரொம்ப வருத்தமாஇருக்கற மாதிரி முகத்தை வச்சுக்கிட்டான்....அதாம்ல்ல அவன் கெட்டிக்காரத்தனம்.
ராஜா, குசலமெல்லாம் விசாரிச்சாரு. இவனும் நல்லாப் பதிலெல்லாம் சொல்லிட்டு..ராஜாட்ட சொல்லுவான். ‘ராஜா இந்த ஏழை வீட்டுக்கு நாளைக்கி விருந்துக்கு வரனும் அப்பத்தான் எம்மேல உங்களுக்கு கோவம் இல்லேன்னு அர்த்தம்’ அப்படீன்னான் ராஜா உருகிப்போய் அப்படியேன்னார்.

மறு நாள் தட புடலா ஏற்பாடு நடக்கு.ராஜா கொடுத்த புதூ வீடு.மூனு மாடி வீடு.... மத்தியானம் ராஜா வந்து இற்ங்கினாரு.. பிரமாதமான சாப்பாடு...நல்லா சாப்பிட்டார். ராமன் கூட பேசிக் கொண்டிருந்தார்.. ராமன் சொன்னான் ராஜா ராஜாங்கம் ராஜாங்கம்ன்னு ஒரே வேலை உங்களுக்கு இன்னிக்கு கொஞ்சம் நல்லா ஓய்வெடுங்க...இதுவும் உங்க வீடுதானே மகாராஜா அப்படீன்னான்.ராஜாவும் சரீன்னார். ராஜாவை மூனாவது மாடிக்கு அழைத்துச் சென்றான்..ஒரு அறையில் நல்ல ஏற்பாடெல்லாம் பண்ணி தயாராய் இருந்தது... ராஜா கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போனார். இவன் நைசா வெளிய வந்து கதவைப் பூட்டி அங்கன காவலுக்கு இருந்தவங்க கிட்ட ராஜா நல்லா துங்கறதுக்காகவே இங்க வந்திருக்காரு..அவர தொந்தரவு பண்ணாதிங்க அவரா கூப்பிட்ட பிறகு என்னயக் கூப்பிடுங்க நன் வந்து திறக்கிறேன்....னு சொல்லீட்டு கிழே போய்ட்டான்..கொஞ்ச நேரம் ஆச்சு. ராஜாவுக்கு வயிறு கட முடாங்கு..சமாளிச்சுப் பாக்காரு முடியலை...தெனாலி ராமன் சாப்பாட்டில எல்லாத்திலையும் கொஞ்சம் கொஞ்சம் விளக்கெண்ணைய சேர்த்திருந்தான்..அதான் இப்ப வேலையக் காமிக்க ஆரம்பிச்சுது.ராஜா கதவைத்தட்டி காவக்காரனைக் கூப்பிட்டு கதவைத் திறங்கடா ன்னாரு..சாவி ராமன்ட்டல்லா இருக்கு...ஒரு ஆள் ஒடிப் போய் சொன்னான். ராமன் சௌகரியமா வாரான்.வந்து மெதுவா கதவைத் திறக்கான்...ராஜா பதட்டமா விஷயத்தச் சொல்லி கக்கூஸ் எங்கடாங்காரு .அப்படியா ராஜா வாங்க வாங்கன்னு கீழ கூட்டிட்டுப் போறான் அதுவும் சுத்திச் சுத்தி புறவாசலுக்கு கூட்டிட்டுப் போய் கக்கூஸில கொண்டு போய் விட்டான் ராஜா உள்ளே ஓடியே போய் சரியா தாழ்ப்பாள் கூடப் போடாம காரிய்த்தைக் கவனிக்காரு.ராமன் வெளியே இருந்து மெதுவாக் கேட்டான் ராஜா எப்படியிருக்கு..அப்படின்னு ராஜா சொன்னாரு ரொம்ப சொகமாருக்கப்பா அப்படீன்னு......கிளாஸ்ல் குபீர்ன்னு சிரிப்பு பக்கத்துக் கிளாஸெல்லாம் என்ன என்ன அப்படீன்னு கேக்கறமாதிரி ஆயிட்டு..நல்ல வேளை மதியம்ரீசஸுக்கு பெல் அடிச்ச்சுட்டு..
சாரை காலையில் புட்டாரத்தி அம்மன் கோயில்ல பாத்தா அப்படி உருக்கமா பாடி சாமி கும்பிடுவாரு.இந்த மனுஷனா இப்ப்டி கதையெல்லம் சொல்லுதாருன்னும் தோனும்.....அந்த பதினாறு வயசுகளில் அப்படி அழகான மனுஷர்களையும் இப்ப்டிக் கதைகளையும் கேட்டுத்தானோ என்னவோ
அதென் அசிங்கங்களுக்கான அழகான கவிதை....என்று எழுதினேனோ என்னவோ. யார் கண்டது.

Monday, September 22, 2008

அந்த வயதுக்கு அவ்வளவு விஷயங்கள் அதிகமோ அதிகம் என்று தோன்றுகிறது.ஆனாலும் முழுதுமாக வெம்பி விடாமல் எதோ (ஏதோ இல்லை) ஒரு சக்தி காப்பாற்றி வந்திருப்பதாகவே படுகிறது.சேர்மானம் சரியில்லாமல் கெட்டுப் போகாம அப்பப்ப ஒரு ராக்கெட் என்னிலிருந்து கழன்று சுமாரான சுற்று வட்டப் பாதையில் ஆளைக் கொண்டு செலுத்தியிருக்கிறது.ஆனலும் சில சங்கதிகளை நினைச்சுப் பார்த்தா வெட்கம் பிடுங்கித் திங்கத்தான் செய்யும். சங்கரநாராயணன், ஆள் நரம்பு மாதிரி இருப்பான்..நல்லாப் படிப்பான்.ஆனா அவனுக்கு எங்கே இருந்து விஷயங்கள் தெரியுமோ.... காலைலே பாடசாலைக்கு வந்ததுமே வாய்ப்பாடு கிளாஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால ரீசஸ் போக ரெண்டு பேரும் போகும் போது ஏதாவது ஆரம்பிச்சுருவான்.ஏல பொம்பளைங்க பழைய துணியெல்லாம் சதுரஞ் சதுரமா கிழிச்சு வச்சுருப்பாங்க தெரியுமால என்பான். விடை சொல்றதுக்கு முன்னால மணியடிச்சுரும்,,, வாய்ப்பாடு கிளாஸ் ஆரம்பிச்சுரும்.சீக்கிரம் போனா சின்ன வாய்ப்பாடா சொல்லி தப்பிச்சிரலாம். ஆறாம் வாய்ப்பாடு வரைக்கும் ரொம்பக் கஷ்டமில்லை பத்தாம் வாய்ப்பாடுன்னா ஈஸி. ஒரு நாள் பதிமூணாம் வாய்ப்பாடு சொல்லும்படியாயிட்டு.வாய்ப்பாடு சொல்றதுன்னா, மொத்த ஸ்கூலும் உக்காந்திருக்கும், நாம மட்டும் எந்திரிச்சி நின்னு ஒரு பதிமூனு பதிமூனுன்னு சொன்னா மத்த பிள்ளைகளெல்லாம் பின்னாலாயே சொல்லும். பத்து பதிமூனு நூத்தி முப்பது சொல்லியாச்சு....பதினோரு பதிமூனு......திக்க ஆரம்பிச்ச சமயம் சங்கர நாராயணன் காலுக்கு அருகிலிருந்து நூத்திநாப்பத்தி மூனு என்று சொல்லிக் கொடுத்தான். பிடிச்சது வினை.வாத்தியார் ஏல நீ சொல்லுலே இன்னமே என்று என்னை உட்கார வைத்து விட்டு அவனை எழுப்பி விட்டார்...காணாததுக்கு பத்து தடவை எழுதிட்டுவரணும்ன்னார் எனக்கு சிரிப்பாணிய அடக்க முடியல.கக்கா பிக்கான்னு சிரிக்கவும் வாத்தியார் நீ பதிமூனு தடவை எழுதிட்டு வாலேன்னார்.எல்லாரும் சிரிச்சாங்க. மூஞ்சி இஞ்சி தின்ன குரங்காயிட்டு எனக்கு. இப்ப நினைச்ச்சாலும் ஒரு மாதிரியா நளுக்குது. மீனாட்சி மட்டும் சிரிக்கவே இல்லை.இத்தனைக்கும் எப்பவும் சிரிச்ச முகம் அவளுக்கு அப்பவே மூக்குத்தி போட்டிருப்பா. நல்ல உயரமுங்கூட. நாராயணன் ரெண்டு மூனு நாள் பேசவே இல்லை....துணி விவகாரம் தெரிவது தள்ளிப்போனது. இப்பல்லாம் பத்தாம் வாய்ப்பாடு வரை தெரிஞ்சா போதுமே....இவ்வளவுக்கும் அப்போ நயா பைசா வந்தாச்சு.1957-ல் அது வந்த சமயம் தெப்பக் குளத்தெரு போத்தி டிரஷரியில் வேலை பார்த்தார், அப்பாவுக்கு சினேகிதம். நூறு, இரு நூறு ரூபாய்க்கு அப்பா புதூ சில்லரையா மாத்திட்டு வாந்தார். அப்பா வரும் வரை அன்றிரவு ரொம்ப நேரம் விழித்தே இருந்து விட்டு எப்படியோ தூங்கிப் போனேன். திடீர்ன்னு முழிச்சுப் பாத்தா எல்லாரும் பட்டாசலில் அமர்ந்து மஞ்சள் வெளிச்சத்தில் புது நாணயத்தை எண்ணியும் துழாவியும் பாத்துக்கிட்டுருக்காங்க...அம்மா மட்டும் தள்ளி இருந்து என்ன இது சல்லிய விட சிறுசால்ல இருக்கு என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்...அந்த மஞ்சள் வெளிச்சமும்..(அப்பல்லாம் டியூப் லைட் ஏது) செக்கச் சிவந்த ஒரு பைசாக்களும் தள்ளியே இருக்கிற அம்மாவும், நல்லா நினைவிருக்கு...அப்ப உள்ளது எதுதான் மறக்கும்....வகுப்பில் (மூனாம் வகுப்பு) சத்தம் கூடிப்போன ஒரு நாள் கடேசிப் பீரியடுல, சார், கிளாஸ்ஸையே மாத்தி விட்டார்..ஒரு ஆம்பிளப் பையன்..ஒரு பொம்பிளப் பிள்ளை..என்று உட்கார வைத்து விட்டார்...மீனாட்சிக்குப் பக்கத்தில் சங்கரநாராயணன். அவ உயரத்துக்கும் இவன் நறையான் மாதிரி இருக்கிறதுக்கும் ஏழாம் பொருத்தமாய் இருந்தது.மறு நாள் காலையில நாராயணன் சேக்கா போட்டு விட்டான். நைசா,”ஏடே மீனாக்ஷி பக்கத்துல நீ உக்காந்துக்கயேன் ”என்றான். தட்டமுடியவில்லை. எங்க மறுபடி பேசாம இருந்துருவானோன்னு பயம்தான்.ஆனாலும் வாத்தியார் என்னமுஞ் சொன்னா, என்ன செய்யறதுன்னும் யோசனைதான்.அவர் கண்டுக்கிடலை.மீனாட்சியும் ஒன்னும் சொல்லலை எனக்கும் அவ கிட்ட உட்கார்றது கூச்சமாய்த் தானிருந்தது.நானும் அவ அளவுக்கு உயரமானவனில்லை.மத்தியானம் பள்ளிக்கூடம் முடியப் போற நேரம். சங்கர நாராயணன் முகத்தை அஷ்ட கோணலா வச்சுகிட்டு எந்திரிச்சு சுட்டு விரலை கொஞ்சம் வளைச்சு சாரிடம் காமித்தான். அதுக்குள்ள மொத்த கிளாஸுமே கோரஸா சார் இவன் ஓன்னுக்கிருந்துட்டான் சார் என்று பாடியது..அவன் பாவப்பட்ட பையன். டிராயர் விறைப்பான துணியில் இருக்காது,,ட்ராயர் சுத்தமா நனைஞ்சு வகுப்பறையில் தரையில் ஒரு செம்புத் தண்ணியக் கவுத்தமாதிரி ஓடுது. சார் ஏல ஏல ஒடுல என்றதும் அவன் ஓடவும் பள்ளிக் கூட மணி வீட்டுக்கு விடவும் சரியா இருந்தது. மத்தியானம் மொத்த கிளாசையும் மீனாட்சி கழுவி விட்டுக் கொண்டிருந்தாள்.பயலை ஆளையே காணும்.மீனாக்ஷி மத்தியானம் சொன்னாள், நல்ல வேளைப்பா நீ பக்கத்துல உக்காந்திருந்தே என்று. மறுநாள் அப்பா புதிதாய் எடுத்திருந்த ராஜா ராணி வேஷ்டியைச் சுற்றியிருந்த தங்கத்தாளை அவளுக்கு கொடுத்தேன்.முன்பே அவள் சசியிடம் கேட்டு ஏமாந்திருந்தாள்.
1976 பொங்கலுக்கு ஊரும் தெருவும் தயாராகிக் கொண்டிருந்த சமயம் என் துயரங்களுக்கும் 26 வயசு முடிந்து போன சமயம்.நடுப்பகல் கழிந்து ஒரு மணி வாக்கில் தெருவில் ஆள் அரவமே இல்லை ஒரு இண்டர்வியூவுக்கு கிளம்பி பாதித்தெரு வந்திருப்பேன் இடது புறமிருந்து தெருவில் இணையும் ஒரு சின்னச் சந்திலிருந்து மீனாட்சி வந்தாள்.கையில் பழைய சேலைத் துணியில் வெயில் சற்றும் தாக்கி விடாமல் சுற்றிய, செம்பஞ்சுக் குழம்பிட்ட மாதிரி கால்கள் மட்டும் லேசாக வெளித் தெரியும் தன் சிசுவுடன் வந்தாள். திடீரென்று என்னைப் பார்த்ததில் நாணம் முகம் முழுக்க ரத்தம் பாய்ச்ச, பழைய சிரிப்பு மின்னலாய் சுழித்தது....பத்தொன்பது வருடங்கழித்து பழைய குரல் கேட்டது. ”பொம்பளப்பிள்ளை” என்று நான் கேட்காமாலே சொல்லி பதிலுக்கு காத்திராமல் தன் அம்மாவுடன் கடந்துபோனாள்.அவள் அம்மாவும் ஆமாய்யா என்று சொல்லிப் போனாள்.மனசுக்குள் சொல்ல முடியாத சந்தோஷம். அந்த வேலை கிடைத்து இன்று ஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்.
அந்நியம்
அம்மாவின்
‘சகுனம் பார்த்துப் போ’
வாசல்ப் படியில் விட்டு விட்டு
தெருவுக்கு வந்த போது
நீ தங்கத் தாள் தந்து
வாத்சல்யம் கொட்டின
பால்ய கால ஸ்னேகிதி
பெயரிடப் படாத தன்
சிசுவுடன் எதிர்ப் படுவாள்
கண் முழுக்க
கானல்ப் பிரியம் குளமிடும்.
......................................................
.......................................................


(ஞான பீடம் –குறுங்காவியம்)
1976

Visitors