Wednesday, June 18, 2008

அண்ணாச்சியோவ்,
வணக்கம்.எல்லாரும் ப்லாக் பத்தின்னு போற காலமாருக்கு இது.நம்மளும் ஒண்ணு ஆரமிச்சா என்னன்னு வா.மணிகண்டண்ட்ட சடவாரிக்கிட்ருந்தனா என் மகள் எதையோ குடஞ்சி ஒரு ப்லாக் உண்டாக்கி வச்சிருக்கா.இது யானையக் கட்டி தீனி போட்ட கதை மாதிரி இருக்கும் போல்ருக்கு.மணிகண்டன் வேற விரல் நுனி விபரீதம்ன்னு எழுதறார். சரி நாம நல்லதையே நெனப்போமே.பத்தொம்பது வருஷத்துக்கு முன்னால ப்ரமிள், எங்க வீட்டுக்கு வந்திருந்தார்.மூன்றாவது பதிவுகளுக்கு 1989 ல் வந்திருந்தார்.நாளைக்கி கூட்டம்ன்னா முத நா காலையிலேயே குற்றாலம் வந்துட்டார். அவர் வருவது முன்கூட்டியே தெரியும் ராஜ சுந்தர ராஜனும் நானும் முன்கூட்டியே தீர்மானிச்ச விஷயம் தான்.குற்றாலத்தில் என் மனைவி வீட்டுக்கு எதிர்த்த லாட்ஜில் தங்கி இருந்தார்.அது சுமாரான லாட்ஜ் தான் .காலையில் வந்து என் மைத்துனனிடம் விசாரித்திருக்கிறார்.அவர் இந்தலாட்ஜில் ரூம் ஏற்பாடு செய்து விட்டார்.சாயந்தரம் நான் மனைவி மகள் பாரதியெல்லாம் போனப்போதான் அவர் வந்து தங்கியிருக்கிற விஷய்ம் தெரிந்தது. அடடா இந்த லாட்ஜில் இருக்காரே என்று யோசித்த படியே போனேன். அவ்ர் அது பற்றி கொஞ்சங்கூட வருத்தமோ ஆவலாதியோ சொல்லலை.உற்சாகமா குற்றாலம் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார்.அதே நேரம் உமாபதியும் ராஜ மார்த்தாண்டனும் வந்தாங்க எல்லாரும் பேசிக் கொண்டிருந்த பின் நானும் ப்ரமிளும் வீட்டுக்கு சாப்பிடவந்தோம். நம்பியும் வந்திருந்தார்.நம்பி வழக்கம்போல் தனியே ”சாப்பிடப்” போய் விட்டார்.ப்ரமிள் அற்புதமாக என்னுடனும், மனைவி குழந்தையுடனும் பேசிக்கொண்டேசாப்பிட்டார் அவருக்கு தோசையும் சாம்பாரும் ரொம்ப பிடிச்சுப் போச்சு. ரொம்ப திருப்தியா சாப்பிட்டார்.வீடு ரொம்ப சின்ன வீடு .6க்கு4 அறைதான். நிறைய்ய விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்.கிரேக்கர்கள் எப்படி உலகை வென்று வந்து கொண்டிருந்தார்கள் என்று சொல்லிகொண்டிருந்தார்.அவங்க பயிற்சியை சாகற மாதிரி செய்வாங்க (deadly practice sportive battle) போரை விளையாட்டுப் போல செய்வாங்க என்று சொல்லிக்கொண்டிருந்தார். அங்கே சுவரில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு நாக பந்தன சித்திரகவியைப் பற்றி விரிவாகச் சொல்லிக் கொண்டு வந்தவர். என் மாமாவிடம் ஐயா மயூர பந்தன க் கவியும் இருக்கனுமே என்றார். மாமா அதை தேடிக் கொண்டு வந்து கொடுத்தார். மாமா ரொம்ப எளிமையானவர். சட்டை கூட போட மாட்டார். ப்ரமிளுக்கு அவரை ரொம்பப் பிடித்து விட்டது.நீண்ட நேரத்த்துக்குப் பின் என்னிடம் கேட்டார் இவ்வளவு நேரமாகியும் என்னிடம் நியுமராலஜி பற்றிக் கேட்காதது நீங்க தான் என்றார். நான் தயாராய் வைத்திருந்த மகளின் ஜாதக்த்தைக் கொடுத்தேன். சிரித்துக் கொண்டே தீவிடரமாக அதில் லயித்து
அதன் வித்தியாசமான அமைப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.நம்பியும் வந்து விட்டார். மகள் பெயரை எப்படி வைக்கலாம் என்று சொன்னார்.இன்று வரை அப்படித்தான் பாரதி எழுதுகிறாள்.என் பெயரினையும் kalapria என்று எழுதுங்கள் என்று சொன்னார்,சோமசுந்தரத்தை எப்படி எழுத் என்று கேட்டேன்.அதை யர்ருக்கய்யா தெரியப் போகுது.என்றார்,சிரித்தபடி.ஆனால் நான் கலாப்ரியா வை அவர் சொன்னமாதிரி எழுதியதில்லை. ஆனால் மெயில் i d க்கு முயற்சிக்கும் போது kalapria தான் கிடைத்தது.அதனாலதான் இந்த ப்லாக் கும் இப்படி அமஞ்சி போச்சு. இன்னக்கி கதை இம்புட்டோட நிக்கட்டும்.

4 comments:

ரௌத்ரன் said...

அளந்து அளந்து எழுதறீங்களே சார்...

ஜமாலன் said...

வணக்கம் சார்.

நான் ஜமாலன். என்னை நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை. ஆனால் உங்களது பாரதி நூற்றாண்டு அன்னம் நவகவிதை வரிசை “எட்டயபுரம்“ முதல் உங்களது தீவிர வாசகன். இத்தனை நாள் உங்கis பிளாக்கில் கவனிக்காமல் இருந்துள்ளேன் என்பது வருத்தத்திற்குரிய ஒன்றுதான். தோழர் பொதியின் பிளாக் வழியாக இங்கு வந்தேன். இங்கிருந்துதான் துவங்குகிறேன் உங்கள் பிளாக்கை வாசிக்க.

சரியாக 20 ஆண்டுகளக்கு முன்பே உங்களை தொடர்பு கொண்டிருந்திருக்க வேண்டும். ஒவ்வொருமுறை குற்றாலம் பட்டறைக்க பொதியுடன் கிளம்பி இதுவரை அதை பார்க்க வாய்ப்பில்லாமலே போய்விட்டது. எப்படியோ தகவல்சாலையில் உங்களை சந்திக்க வேண்டியிருந்திருக்கிறது.

மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று உங்கள் பதிவைப் பார்த்த தருணமும்.

நன்றி.

அன்புடன்
ஜமாலன்.

manjoorraja said...

இனிய வணக்கம். இன்றுதான் இந்தப் பதிவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரே மூச்சில் 2008ல் எழுதிய அனைத்து பதிவுகளையும் படித்துவிட்டேன். மிகவும் சுவையாக இருக்கிறது. நான் உங்கள் நண்பரின் (பாம்பாட்டி)நண்பன்.

மிகவும் மகிழ்ச்சி.

பெம்மு குட்டி said...
This comment has been removed by the author.

Visitors